Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவும்.... அப்பமும்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்காவும்.... அப்பமும்...!
[ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 08:15.08 PM GMT ]
appam.jpg
இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க உயரதிகாரிகளுக்கு இப்போது அப்பம் ஒரு முக்கியமான உணவாக மாறிவிட்டது. 

இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த நிஷா பிஸ்வால், சமந்தா பவர், தோமஸ் சானொன் என்று முக்கியமான அமெரிக்க இராஜதந்திரிகள் அனைவருமே அப்பத்தைச் சுவைத்து விட்டுத் தான் சென்றனர்.

அதுமட்டுமன்றி, இதனை அப்பம் இராஜதந்திரம் என்றும் கூட, வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்பம் இராஜதந்திரம் என்ற பதம் இப்போது கொழும்பு இராஜதந்திர மட்டத்தில் மட்டுமன்றி, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வரை பிரபலமாகி விட்டது.

இந்த அப்பம் இராஜதந்திரம் இலங்கைக்கு அறிமுகமாகி ஒரு ஆண்டு தான் ஆகிறது.

ஆனால் அது அமெரிக்கா வரைக்கும் கொடி கட்டிப்பறக்கிறது என்பது தான் முக்கியமானது.

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க மஹிந்த ராஜபக் ஷ, தயாராகியிருந்த வேளையில் தான், மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு, எதிரணியின் பக்கம் தாவினார்.

கடைசியாக மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அப்பம் சாப்பிட்டு விட்டே அவர் எதிரணியுடன் இணைந்தார்.

அதற்குப் பின்னர், மஹிந்த ராஜபக் ஷ, பொது நிகழ்வுகளில் உரையாற்றிய போதெல்லாம், முதல் நாள் இரவு தன்னுடன் அப்பம் சாப்பிட்டு விட்டு சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டார் மைத்திரி என்று புலம்பித் திரிந்தார்.

அத்துடன் இனிமேல் தான் யாருக்கும் அப்பம் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் கூறி வந்தார்.

தமிழ்நாட்டில் பொதுவாக ஏமாற்றுவதற்கு, அல்வா கொடுப்பது என்ற பதம் பயன்படுத்தப்படுவது போலவே, கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களில் அப்பமும் ஒரு குறியீட்டுச் சொல்லாக மாறிவிட்டது.

இதனை ஒருவித இராஜதந்திரமாக, வெளிப்படுத்தும் போக்கு மேற்குலக இராஜதந்திரிகளிடம் காணப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேனவை அப்பத்துடன், எதிரணியின் பக்கம் ஓட வைப்பதில் மேற்குலகின் பங்கு கணிசமானது என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், மேற்குலக இராஜதந்திரிகள் இந்த அப்பம் இராஜதந்திரத்தைப் பற்றி அதிகளவில் சிலாகித்துக் கொள்வதில் ஆச்சரியமில்லை. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர், முதல் முறையாக தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் கொழும்பு வந்தார்.

அவருக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அளித்த இராப்போசன விருந்தில் அப்பம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. அதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் அண்மையில், இலங்கை வந்த போது அவருக்கு வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீர அளித்த விருந்திலும் அப்பம் முக்கிய இடத்தை வகித்திருந்தது.

அந்த விருந்தில் பங்கேற்ற அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் அதனைப் படம் பிடித்து, அப்பம் இராஜதந்திரம் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டார். கடந்தவாரம், இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் சானொனும் கொழும்பில் அப்பத்தை தவறவிடவில்லை.

அவர், தான் தங்கியிருந்த விடுதியில் அப்பம் சாப்பிடுவதை அதுல் கெசாப் படம் பிடித்து தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

ஆக, கொழும்பு வரும் அமெரிக்க உயர் இராஜதந்திரிகளுக்கு அப்பம் என்பது ஒரு முக்கியமான விடயமாக மாறியிருக்கிறது. அப்பம் மட்டுமன்றி, இலங்கையும் கூட அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு இப்போது முக்கியமானதாகவே மாறிவிட்டிருக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கான முக்கிய கருவியாக இலங்கையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது அமெரிக்கா. அதனால் தான் இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் ஈடுபாடுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகரித்திருக்கிறது.

ஜே.ஆர். ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்ததை விடவும் அதிகமான நெருக்கத்தை நோக்கி, இருதரப்பு உறவுகள் நகர ஆரம்பித்திருக்கின்றன.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் எந்தளவுக்கு அமெரிக்க - இலங்கை உறவுகள் முடங்கிப் போய்க் கிடந்தனவோ, அதைமுந்திக் கொண்டு செல்லும் வகையில், அமெரிக்கா வேகமாக நகரத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அமெரிக்காவின் உயர் மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு வந்து செல்வது வழக்கமான ஒன்றாகவே மாறியிருக்கிறது.

கடந்த ஒரு வருட காலத்துக்குள்  அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வந்து சென்றிருக்கிறார். ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் வந்து சென்றிருக்கிறார்.

ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி வந்திருக்கிறார். தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் மூன்று தடவைகள் வந்து சென்றிருக்கிறார். இவர்கள் தவிர, கடந்த வாரம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகரான தோமஸ் சானொனும் வந்து சென்றிருக்கிறார்.

தோமஸ் சானொன் இலங்கைக்கு வருகை தந்தது இதுதான் முதல் தடவை என்பதாலும், அவரது பெயர் அதிகளவில் இலங்கையில் பேசப்படவில்லை என்பதாலும் அவரது பயணத்தின் முக்கியத்துவத்தை பலரும் உணரவில்லை.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் ஆலோசகராகவும், இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளின் நிர்வாகியாகவும் இருப்பவர் அவர்.

வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலருக்கு ஆலோசனைகளை வழங்குவது, முக்கிய விவகாரங்களில் நேரடிப் பிரதிநிதியாக பேச்சுக்களில் பங்கேற்பது இவரது முக்கிய பொறுப்பாக இருந்து வருகிறது.

இப்போது அவர், அந்தப் பதவியில் இருந்து மேலும் உயரப் போகிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நான்காவது உயர்மட்டப் பதவியான- அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் பதவிக்கு தோமஸ் சானொனின் பெயர் கடந்த செப்டெம்பரில் முன்மொழியப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அவர் இந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார். அவர் பொறுப்பேற்கவுள்ள புதிய பதவி, அவரது இந்தப் பயணத்துக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. இலங்கையின் மீது அமெரிக்கா அதீத ஆர்வத்தைக் காட்டுவதற்கு, இலங்கையின் அமைவிடம் தான் முக்கிய காரணம். அதைவிட, சீனா அடுத்த காரணம்.

சீனாவை இந்தியப் பெருங்கடலில் பலவீனப்படுத்துவதற்கு இலங்கையைக் கருவியாக்க முனைகிறது அமெரிக்கா. அதேவேளை, இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதும், இதனை ஒரு அமைதியான பகுதியாக வரையறுத்துக் கொள்வதும், தான் அமெரிக்காவுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. அதற்காக இலங்கையுடன் பாதுகாப்பு உள்ளிட்ட எல்லா துறைகளிலும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா தயாராகியிருக்கிறது.

இலங்கை, அமெரிக்க உறவுகளை இன்னும் மேலே கொண்டு செல்வதற்கான கதவுகளை அமெரிக்கா மெல்ல மெல்லத் திறந்து விடுகிறது.

இது இலங்கையை தனது வட்டத்துக்குள் கொண்டு வருவதற்கான ஒரு நகர்வு தான்.

அதற்குத் தடையாக இருக்கும் காரணிகளைக் களையெடுப்பதிலும் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அமெரிக்கா அதிகம் இறுக்கத்தைக் காட்டுவது இதனால் தான்.

இந்த விடயங்களில் இலங்கையை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதொரு நிலைக்கு கொண்டு செல்ல வொஷிங்டன் முனைகிறது.

அதனால் தான் சமந்தா பவர் இலங்கை வந்திருந்த போது, ''இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்களில் உறவுகளை விரிவுபடுத்த எண்ணுகிறோம். ஆனால், எல்லாமே, மனித உரிமைகள், பொறுப்புக்கூறலில் உள்ள முன்னேற்றத்தைப் பொறுத்துத் தான் நடக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயங்களில், இலங்கை பெரியளவில் முன்னேற்றத்தை எட்டாவிட்டாலும் கூட, இலங்கையுடனான உறவுகளை அமெரிக்கா விரிவாக்கப் போவது உறுதி. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடக்கவுள்ள கூட்டுப் பேச்சுக்களில் இந்த உறவுகள் மேலும் உயர உயரக் கொண்டு செல்லப்படும். இதற்காகவே அமெரிக்க அதிகாரிகள் கொழும்பை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

இலங்கை வரும் அமெரிக்க அதிகாரிகள், அப்பத்தை விரும்பிச் சுவைக்கின்றனரோ இல்லையோ தெரியாது. ஆனால், அப்பம் இராஜதந்திரத்தை வைத்து இலங்கையை மடக்குவதற்கு முயற்சிக்கின்றனர் என்பது மட்டும் உண்மை.

srilanka_hopper.jpg

 

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.