Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசுக் கட்சியும் ஆள்பிடி அரசியலும்

Featured Replies

தமிழ் அரசுக் கட்சியும் ஆள்பிடி அரசியலும்
 

article_1455339754-sanjay.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், பலம் வாய்ந்த கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பாணியில், பிற கட்சிகளை நசுக்க முனைகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறது.

அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்தே, இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எபவினால், அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் தான் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்.

மாகாணசபை உறுப்பினராக இருந்த அவரை, கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியில் நிறுத்தியிருந்தது ஈ.பி.ஆர்.எல்.எப்.

வன்னி மாவட்டத்தில் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நால்வரில், சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிவமோகன் ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை சேர்ந்தவர்கள். மற்றைய மாவட்டங்களில், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் எவரும் தெரிவாகவில்லை.

நாடாளுமன்றத்தில், 16 உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கின்ற நிலையில், அதில் இரண்டு பேர் மட்டும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இப்போது சிவமோகன் தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதையடுத்து, சிவசக்தி ஆனந்தன் மட்டும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

ஏற்கெனவே, சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அவருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்க மறுக்கப்பட்ட விவகாரத்தால், தமிழ் அரசுக் கட்சிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கும் இடையில் வெளிப்படையான முறுகல்நிலை நீடித்து வருகிறது.

கூட்டமைப்பின் தலைமையை சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கமாக விமர்சிப்பதும், குற்றம்சாட்டுவதும் வழக்கமான நிகழ்வாகவே மாறியிருக்கிறது. தமிழ் மக்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியத்தை அளிக்கவுமில்லை. இந்தப் பின்னணியில், தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தில், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் பங்களித்திருந்தது.

தமிழ் மக்கள் பேரவை மாற்றுத் தலைமையை உருவாக்கும் முயற்சி என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த போது, அவ்வாறான நோக்கம் எதுவும் இல்லை என்றும், இது வெறும் மக்கள் அமைப்பே, இதற்கு அரசியல் நோக்கங்கள் கிடையாது என்றும் இணைத்தலைவரான முதலமைச்சர் மற்றும் ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், சுரேஷ் பிரேமச்சந்திரன் மட்டும், அவ்வாறு கூறவில்லை. தமிழ் மக்கள் பேரவை எதிர்காலத்தில், அரசியல் கட்சியாக மாற்றமடையலாம் என்றும், மாற்றுத் தலைமையாக உருவெடுக்கலாம் என்றும், கூறியிருந்தார்.

அதெல்லாம் சம்பந்தனின் கையிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், தமிழ் அரசுக் கட்சியின் ஆதிக்கத்தை உடைப்பதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்த முயற்சிகள் எதுவுமே வெற்றி பெறவில்லை. தமிழ் அரசுக் கட்சிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கும் இடையில், இந்த முட்டுப்பாடுகள் கடந்த பல ஆண்டுகளாகவே நீடித்து வந்தன.

வலி.கிழக்கு பிரதேசசபையில் தலைவராக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்தவரை, வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்து, ஈ.பி.டி.பியுடன் இணைந்து, தமிழ் அரசுக் கட்சியினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தனர். தமிழ் அரசுக் கட்சியின் அந்தச் செயற்பாடு கூட்டணி தர்மத்தை மீறியதாக இருந்தது. அதே குற்றச்சாட்டுத் தான் இப்போது மீண்டும் வந்திருக்கிறது.

அதாவது, கூட்டமைப்பில் உள்ள மற்றொரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை, தமிழ் அரசுக் கட்சி தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனை திட்டமிட்டு. வலிந்து இழுத்துக் கொண்டதா அல்லது, அவராகவே அதிருப்தியில் விலகிக் கொண்டாரா என்பது மற்றொரு விடயம்.

எவ்வாறாயினும், ஒரே அணியில் இருக்கின்ற இரண்டு கட்சிகளுக்கு இடையில், கட்சி தாவலை ஊக்குவிப்பதோ, அதனை அங்கிகரிப்பதோ கூட்டணி தர்மத்துக்கு முரணானது.

கூட்டமைப்பு வலுவானதாக இருக்க வேண்டுமாயின் அதில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான உறவுகள் சுமுகமானதாக இருக்க வேண்டும்.

எப்போதுமே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில், பிரச்சினைகள் தனியே பதவிப் போட்டியால் மட்டும் எழுவதில்லை. இதுபோன்ற கட்சி தாவல்களாலும் கூட ஏற்படுவது வழக்கம்.

தற்போதைய கூட்டு அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருந்தன என்பது பலருக்கும் நினைவிருக்கலாம். அதில் முக்கியமான விடயம், ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை, மற்றக் கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதேயாகும்.

அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு சில ஆசனங்களே தேவைப்படும் நிலையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தனது உறுப்பினர்களை இழுத்துக் கொள்ளும் என்ற கவலை சுதந்திரக் கட்சிக்கு இருந்தது.

ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது இந்த உத்தியைக் கையாண்டு தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் பெற்றுக் கொண்டார் என்பதால், சுதந்திரக் கட்சிக்கு அந்த அச்சம் வந்ததில் ஆச்சரியமில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, ஐக்கிய தேசியக் கட்சியை மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசையும், கூட உடைத்து சிலரைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டார்.

எதிரணியில் உள்ள கட்சிகளை உடைத்துப் பலவீனப்படுத்தி, தனது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்வதில் அவர் வெற்றிகரமாகவே செயற்பட்டிருந்தார். அதனால் தான், மஹிந்த ராஜபக்ஷ பாணியில், தமிழ் அரசுக் கட்சி செயற்படத் தொடங்கியுள்ளதான விமர்சனங்கள் தோன்றியிருக்கின்றன.

தமிழ் அரசுக் கட்சி, பங்களாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, தம்பக்கம் இழுத்துக் கொண்டது, கூட்டணி தர்மத்துக்கு ஒவ்வாத செயல் என்ற கருத்தில் எவருக்கும் கருத்து மாறுபாடு இருக்க முடியாது.

இந்த தவறான முன்னுதாரணம், வருங்காலத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கே கூட ஆபத்தானதாகவும் அமைய வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தமிழ் அரசுக் கட்சி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்களாக இருக்கின்ற வேறு பலரும் கூட, ஏனைய பங்காளிக் கட்சிகளின் வழியாக அரசியலுக்குள் நுழைந்தவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தமிழ் அரசுக் கட்சி முதன்மை இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக, ஆள்பிடி அரசியலை செய்ய முயன்றால், அது பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இன்னும் விரிசலையே ஏற்படுத்தும்.

அதேவேளை பங்காளிக் கட்சிகளும், எவ்வாறான தமிழ் அரசுக் கட்சியுடன் நடந்து கொண்டனஎன்பதையும் கவனத்தில் கொள்ளாமல் விட முடியாது.

உதாரணத்துக்கு, தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அரசியலுக்கு வந்து, வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக பதவி வகித்த, ந.அனந்தராஜ், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப்வினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் பொருளாளரான எவ்.எக்ஸ்.குலநாயகம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் பதவியை குறுக்கு வழியில் பெறுவதற்கு தடையாக இருந்ததால், நகரசபை நிர்வாகத்தை, கொண்டு நடத்த முடியாத நிலைக்கு உள்ளாக்கப்பட்டவர் தான் அனந்தராஜ்.

அந்தப் பிரச்சினைக்குத் தமிழ் அரசுக் கட்சி தீர்வு காணத் தவறியதால், கட்சியின் தலைமை மீது அதிருப்தியுற்றிருந்த அவரை, சுரேஷ் பிரேமச்சந்திரன் வேட்பாளராக நிறுத்தினார்.

பருத்தித்துறை தொகுதியைச் சேர்ந்த அனந்தராஜ், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினால், வேட்பாளராக நிறுத்தப்பட்டமைக்கு மற்றொரு காரணம், அதே தொகுதியைச் சேர்ந்த, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைத் தோற்கடிப்பது தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப்வின் அந்த வியூகம் முற்றாகவே சிதைந்து போனது. யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட, சுரேஷ் பிரேமச்சந்திரனும், அனந்தராஜும் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், சுமந்திரன் வெற்றி பெற்றார்.

இப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழ் அரசுக் கட்சியின் பக்கம் சாய்ந்து கொண்டதும், தம்மை அழிக்க அந்தக் கட்சி முனைவதாக ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றம்சாட்டுகிறது.

இந்தநிலைக்கு, இப்போது அடித்தளம் இடப்படவில்லை, ஏற்கெனவே பிரதேசசபை மட்டத்தில், மாகாணசபை மட்டத்தில் போடப்பட்ட விதை தான் இப்போது வினையாக வந்திருக்கிறது.

மாகாணசபைத் தேர்தலில், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது, சகோதரரான க.சர்வேஸ்வரனை அமைச்சராக்க முயன்றார்.

அந்தக் கட்டத்தில், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில், தெரிவான பொ.ஐங்கரநேசனை அமைச்சராக்கினார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.அப்போது, தமது கட்சிக்குத் தெரியாமலும், தமது அனுமதியைப் பெறாமலும் ஐங்கரநேசன் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதான குற்றச்சாட்டு ஈ.பி.ஆர்.எல்.எப்பினால் சுமத்தப்பட்டது.

தமிழ் அரசுக் கட்சி தார்மீக நெறிமுறைகளுக்கு அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனது நிலையைப் பலப்படுத்தி வருகிறது என்பது உண்மை.

அதற்காக பங்காளிக் கட்சிகள் நியாயபூர்வமாகவே நடந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறமுடியாது. இத்தகைய நிலைக்கு அவர்களும் காரணம் என்பதை ஏற்கத் தான் வேண்டும்.

- See more at: http://www.tamilmirror.lk/165945/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AE-#sthash.qlooTjCI.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.