Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பி.ஜே.பி. அரசு = ராம ராஜ்யம்!

Featured Replies

அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓர் ஆலயம் திறந்தனர். அந்தக் கோயிலின் பெயர், சதிமாதா மந்திர்.

எழுத்தறிவு எட்டாத ஒரு கிராமத்தில், நடுத்தர வயதுடைய ஓர் ஆடவர் இறந்தார். அவரது சடலம், மயானம் சென்றது. தீ மூட்டினர். அந்தத் தீயில், உயிரோடு அவருடைய மனைவியும் தீக்குளித்தாள். இல்லை. தள்ளப்பட்டாள். இதனை உடன்கட்டை ஏறுதல் என்றனர்.

ஆதிகாலம் தொட்டு வளர்ந்து வந்த இந்தக் கொடிய பழக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக ஆர்வலர்கள், அதற்காகப் போராடினர். எனவே, உடன் கட்டை ஏறும் ‘சதி’ பழக்கம், தடை செய்யப்பட்டது.

கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுகிறாள். மனைவி இறந்தால் கணவன் தீக்குளிக்கிறானா? இல்லை. அவன் இன்னொரு திருமணம் கூடச் செய்து கொள்ளலாம்.

கால மாற்றங்கள் துரிதகதியில் நடைபெறுகின்றன. எல்லா வகையிலும் பெண்ணடிமைத்தனம் ஒழிந்து வருகிறது. ஆனால், வசுந்தரா ராஜே என்ற பெண் முதல்வர், அரசாளும் ராஜஸ்தானில் பெண்ணடிமைத்தனத்திற்கு ஆலயம் எழுப்பப்படுகிறது. அந்த சதிமாதா மந்திர் நோக்கி, மக்கள் படை திரண்டு செல்கின்றனர். உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்திற்கு மீண்டும் முடிசூட்டப்படுகிறது.

பகவத் கீதை பிறந்ததற்குப் பின்னர் எழுதப்பட்ட சாஸ்திரங்கள்தான், ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஏற்றிப் போற்றுகின்றன. அதற்கு முந்தைய அதர்வ வேதம் என்ன சொல்கிறது? இளம் கைம்பெண்கள் மறுமணம் செய்து கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறது.

மன்னராட்சி மண்டலங்கள் நிறைந்தது ராஜஸ்தான். அந்தக் காலத்தில் மன்னர் இறந்தால், அவருடைய அந்தப்புர நாயகிகளும் எரியும் நெருப்பில் இறக்கப்பட்டனர். அந்தக் கால ஜோத்பூர் மன்னர் இறந்தபோது, 85 பெண்கள் உடன்கட்டை ஏறினர். ஆனால், இன்றைக்கு எந்த மன்னராவது இறந்தால், அவருடைய ஆசை நாயகிகள் உடன்கட்டை ஏறுகிறார்களா?

ஆனால், அதே ராஜஸ்தானில் நாகரிக வாடை வீசாத தொலைதூர கிராமத்தில், உயிரோடு எரிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு ஆலயம் எழுப்புகிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு சமூகசேவகி தாக்கப்பட்டார். குழந்தைத் திருமணங்கள் கூடாது என்று அவர் எடுத்துரைத்தார். ஒரு குழந்தைத் திருமணத்தைத் தடுக்க முயன்றார். அதுதான் அவர் செய்த குற்றம்.

பழைமை விரும்பிகள், அவரைத் தாக்கினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் கொடுமையை மறைக்க, மாநில அரசு எவ்வளவோ முயன்றது. ஆனால், உண்மை மைதானத்திற்கு வந்து விட்டது.

அந்தச் சமூக சேவகியைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று ஏடுகள் எழுதின. அரசில் எந்தச் சலனமும் இல்லை.

பெண்கள் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் லேசான அசைவுகள் தெரிந்தன.

‘‘குழந்தைத் திருமணம் என்பது பரம்பரையாக வருகின்ற பழக்கம். அந்தச் சம்பிரதாயத்தை விட்டு விடுங்கள் என்று நிர்ப்பந்திக்க முடியாது. படிப்படியாகத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

குழந்தைத் திருமணத்திற்கு இப்படி நியாயம் பேசியவர், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் பாபுலால் கவுர்தான். அதனால் தாக்கியவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகாரை காவல்துறை ஏற்கவில்லை. பெண்களின் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கு நகரும் என்று நம்பிக்கை இல்லை.

இந்த வாரம் ஒரிசாவிலிருந்து இன்னொரு செய்தி வந்திருக்கிறது. அங்கு கொடுமை கூத்தாடியிருக்கிறது.

உயர்ஜாதி வீட்டுத் திருமணம் என்றால் உள்ளூர் முடிதிருத்தும் தொழிலாளி வரவேண்டும். வாயிலில் அண்டா குண்டாக்களில் தண்ணீரை நிரப்பிக் காத்திருக்க வேண்டும்.

மணமகன் காலைக் கழுவ வேண்டும். மணமகள் காலைக் கழுவ வேண்டும். போதாது என்று மணவிழாவுக்கு வரும் அனைவரின் பாதார விந்தங்களையும் நீராட்ட வேண்டும்.

இந்தக் கேவலச் செயலை இனியும் செய்ய மாட்டோம் என்று இளைஞர்கள் துணிந்தனர். நாங்கள் முடிதிருத்தும் தொழில் செய்வதால்தானே இந்த இழிவான காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, குலத் தொழிலுக்கு முழுக்குப் போடுகிறோம் மாற்று வேலைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று மாநில அரசைக் கோரினர்.

பலமுறை படையெடுப்பிற்குப் பின்னர் அரசு, சிந்திக்கத் தொடங்கியது. ஆனால், உயர் ஜாதியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் குலத் தொழிலை வேறு யார் செய்வது? என்று வாதாடினர். ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை.

பூரி மாவட்டத்தில் புவனாபதி என்று ஒரு கிராமம். சென்ற மாதம் இங்கே ஒரு திருமணம் நடந்தது. கால் கழுவும் தொழிலைச் செய்ய சவரத் தொழிலாளி மறுத்தார். உருட்டல் மிரட்டல்களுக்கு அவர் அடி பணியவில்லை.

அந்தக் கிராமத்தில் நான்கு நாவிதர் குடும்பங்கள் உண்டு. அந்த நான்கு குடும்பங்களுமே உயர் ஜாதியினரின் கட்டளைகளை உடைத்தெறிந்தன.

உயர்ஜாதியினர் கூடினர். ‘பண்டைக் காலம் தொட்டு இருந்துவரும் பழக்கத்தை இவர்கள் எப்படி மாற்றலாம்? அபசாரம். அபசாரம்’ என்றனர்.

கல்யாண வீட்டிற்கு வந்து கால் கழுவி விட மறுத்த அந்த நாவித இளைஞனுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். ஆசார அனுஷ்டானங்களை அவன் மதிக்கவில்லையாம்.

அத்தோடு அவர்கள் நிற்கவில்லை. நான்கு நாவிதர் குடும்பங்களையும் ஊரிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டனர். அவர்களுக்கு இனி வேலை இல்லை. ஊர்க் குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது. கடைகளில் அவர்கள் உணவுப் பொருள்கள் வாங்க அனுமதியில்லை.

நெஞ்சைச் சுடும் இந்தச் செய்திகள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. சவரத் தொழிலாளர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர். ‘மாற்றுத் தொழிலுக்கு எப்போது ஏற்பாடு செய்வீர்கள்? நாங்கள் மானத்தோடு வாழ்வது எப்போது?’ என்று கேள்விக்கணைகள் தொடுத்தனர். ‘ஆகட்டும். பார்க்கலாம். ஆவன செய்வோம்’ என்றுதான் அப்போதும் பதில் வந்தது.

சனாதனிகளைப் பகைத்துக் கொள்ள அரசு தயாராக இல்லை.

இப்போது மாவட்டவாரியாக, மாநில ரீதியாக சவரத் தொழிலாளர்கள் சங்கம் கண்டுவிட்டனர்.

மாவட்டந்தோறும் நீதிமன்றங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் என்று முடிவு செய்து விட்டனர். இனி மரபு வழித் தொழிலை, குலத் தொழிலைச் செய்ய மாட்டோம் என்று உறுதி கொண்டு விட்டனர். அதனை உயர்ஜாதி ஆதிக்கச் சக்திகள் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றன. ஒரிசா அரசு, உறக்கத்தில் இருக்கிறது.

ராஜஸ்தானில் பி.ஜே.பி. அரசு _ அங்கே சதி மாதா ஆலயம் எழுப்புகிறது.

மத்தியப் பிரதேசத்தில் பி.ஜே.பி. அரசு _ அங்கே குழந்தைத் திருமணம் வேண்டாம் என்றால் அது சம்பிரதாயம் என்கிறது.

ஒரிசாவில் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி _ குலத் தொழிலைச் செய் என்று ஆதிக்க சக்திகள் மிரட்டுகின்றன.

இதோ, இப்போது இன்னொரு சேதி வருகிறது. குஜராத் நரேந்திர மோடி அரசு, பத்தாம் வகுப்பிற்கு சமூக விஞ்ஞானப் பாடப் புத்தகம் வெளியிட்டிருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு அந்தப் புத்தகம் ஓர் அபார காரணம் கூறியிருக்கிறது.

இளம் விதவைகள் மறுமணம் செய்ய அனுமதிக்கப்படுவதால்தான் மக்கள் தொகை பெருகுகிறது என்று அந்தப் பாடப் புத்தகம் கூறுகிறது.

மனு தர்ம காலத்திற்கு நாட்டை இழுத்துச் செல்ல இவர்கள் ஆசைப்படுகிறார்களா?

சரித்திரச் சக்கரத்தை பின்னோக்கி சுழற்றிப்

பார்க்கிறார்கள்.

நன்றி:-குமுதம் ரிப்போர்ட்டர் Aug 2005

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.