Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உற்சவத்திற்கு வருவதைப்போல இலங்கையிலிருந்து ஜெனிவா வரும் சில தமிழர்கள் - ச.வி.கிருபாகரன்.

Featured Replies

(பிரான்ஸ் தமிழர் உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன், ஐரோப்பாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். கடந்த 25வருடங்களுக்கு மேலாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவங்களை உடைய கிருபாகரன் இலங்கை தமிழர் விடயத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் அண்மைக்கால நிலைப்பாடுகள் பற்றி வழங்கிய விசேட செவ்வி )

கேள்வி - கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்பது மாதங்கள் கடந்துள்ளன. இதில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

பதில் - எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் சர்வதேச சமூகத்திற்கு ஏதோ செய்கிறோம் என்பதை காட்டுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தந்திரமான வேலைத்திட்டங்களை செய்து வருகிறது. சர்வதேசத்தை மதிக்கிறோம், மனித உரிமை விடயத்தில் நேர்மையாக நடக்கிறோம் என இலங்கை அரசாங்கம் முன்னர் எப்படி மாயாஜால வேலைகளில் ஈடுபட்டதோ அதையே இப்பொழுதும் செய்கிறது. மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் அவசர அவசரமாக சில நல்லிணக்க குழு அது இது என எதையோ செய்து வருகிறது.

கேள்வி - இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகளை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என ஐ.நா.மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் உள்நாட்டு விசாரணை தான் என உறுதியாக கூறியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும்?

பதில் - இங்கு உள்ள சிக்கல் என்ன என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவும் சர்வதேச விசாரணை இல்லை, வெளிநாட்டு நீதிபதிகள் இங்கு வரமுடியாது என கூறிய உடன் பிரேரணையை கொண்டு வந்த அமெரிக்கா நாட்டின் தூதுவர் ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கூறியிருக்கிறார். பிரித்தானியாவும் நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என கூறியிருக்கிறது. ஆனால் சிங்கள இனவாதிகளை திருப்தி படுத்தும் வகையில் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறது. ஆகவே ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பெறுபேறுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் கடந்த காலங்களைப் போல சர்வதேசத்தை ஏமாற்றலாம் என இலங்கை நினைத்தால் அது பாதகமாகவே முடியும்.

கேள்வி - இந்த முறை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விடயம் ஏதாவது சேர்க்கப்பட்டிருக்கிறதா?

பதில் - ஐ.நா.மனித உரிமைப்பேரவையின் 32ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பாக தனியாக நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை, தனியாக நேரம் ஒதுக்கப்படவும் இல்லை. ஆனால் இலங்கை தொடர்பான விடயம் பேசப்படலாம். இந்த கூட்டத்தொடரின் ஆரம்ப உரையின் போது ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் அல் ஹசைன் சுருக்கமாக இலங்கை விவகாரம் பற்றி குறிப்பிடலாம். அது தவிர அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்படும் நேரத்திலும் இலங்கை விவகாரம் பேசப்படலாம்.

கேள்வி - இந்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாக இருக்கும் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இடைக்கால அறிக்கை ஒன்றை ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கை எவ்வாறு இருக்கும்?

பதில் - ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்க இருக்கும் வாய்மொழி மூல அறிக்கை தமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கை அமைச்சர்கள் சிலர் தொடர்ச்சியாக ஜெனிவாவுக்கு வந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைளாரையும் அதிகாரிகளையும் இராஜதந்திரிகளையும் சந்தித்து வருகிறார்கள். புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பின் குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தின் பின் அடிக்கடி இலங்கை அமைச்சர்கள் ஜெனிவா வருகிறார்கள். சந்திப்புக்கள் நடைபெறுகின்றன. இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என காட்டுவதற்காக இந்த சந்திப்புக்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் என சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் யாரும் செப்டம்பருக்கு பின்னர் ஜெனிவாவுக்கு வந்து ஐ.நா.மனித உரிமை ஆணையாளரை சந்திக்கவில்லை. எனவே இலங்கை மேற்கொண்டு வரும் பிரசாரங்களும் வேலைத்திட்டங்களும் வெற்றி பெறுமா என்பதை ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமான பின்னர்தான் அறிந்து கொள்ள முடியும்.

கேள்வி - கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செயலிழந்த ஒன்றாக மாறிவிடும் என கூறப்படுகிறதே?

பதில் - என்னைப் பொறுத்தவரை ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு போதும் செயலிழக்க மாட்டாது. ஆனால் இந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கொடுக்கப்பட்ட காலவரையறைகள் மனித உரிமை பேரவையினால் நீடிக்கப்படலாம். இறுதி அறிக்கை 34ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த இறுதி அறிக்கைக்கான காலக்கெடு கூட நீடிக்கப்படலாம். ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செயல் இழக்குமாக இருந்தால் முழு உலகமும் ஐ.நா.மனித உரிமை பேரவையை சந்தேகம் கொண்டு பார்க்க கூடிய நிலை ஏற்படும்.

கேள்வி - ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நல்லிணக்கம், காணாமல் போனோர் தொடர்பான சுயாதீன பணியகம், கலப்பு நீதிமன்றம் என மூன்று விடயங்கள் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தது. கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என இலங்கை அரசாங்கம் உறுதியாக கூறிவிட்டது. இதன் மூலம் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கமும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை அரசாங்கமே மீறியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற ரீதியில் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் - இலங்கை தொடர்பாக மஹிந்த ராஜபக்ச அரசாங்க காலங்களில் பிரேரணைகள் ஐ.நா.மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட போது அதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை காட்டியிருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி துணை நின்றது. நடைமுறைப்படுத்தமாட்டோம் என அவர்களால் நிராகரிக்க முடியாது. ஆனால் சில விடயங்களை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். கலப்பு நீதிமன்றத்தையோ அல்லது விசாரணைப்பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை இணைத்து கொள்வதற்கோ அவர்கள் இணங்க மறுக்கிறார்கள். வெளிநாட்டு நீதிபதிகள் இல்லையேல் நம்பத்தன்மையான விசாரணையோ நடுநிலையான தீர்ப்போ வராது என்பதை சர்வதேச நாடுகளுக்கு தெரியும். முக்கியமான பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்றவில்லை என்றால் இந்த விடயத்தை ஐ.நா.மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகள் கையில் எடுக்க கூடிய நிலை காணப்படுகிறது. அப்படியான ஓரு சந்தர்ப்பம் அடுத்த மார்ச் மாதம் 34ஆவது கூட்டத்தொடரின் பின்னர் தான் ஏற்படும். மார்ச் மாதத்தில் இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பாக ஓரு தீர்மானத்திற்கு வருவார்கள் என மனித உரிமை செயற்பாட்டளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கேள்வி - நல்லிணக்கம் தொடர்பாக 11பேர் கொண்ட விசேட செயலணி ஒன்றை இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த செயலணி நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறதா?

பதில் - நிச்சயமாக இல்லை, இலங்கையில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட செயலணிகள் ஆணைக்குழுக்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் கடந்த கால அனுபவங்களின் ஊடாக அறியக் கூடியதாக இருக்கிறது. இந்த செயலணி ஓர் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அதை பெற்றுக்கொள்ளும் அரசு அதனை கிடப்பில் போட்டு விடும். இந்த செயலணியில் உள்ள அங்கத்தவர்களின் முன்னைய செயற்பாடுகளையும் நாம் அறிவோம். அரசின் ஏமாற்று நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றியதால் தான் அவர்கள் சர்வதேசத்திடம் சென்றார்கள். நல்லிணக்கம், சமாதானம், அரசியல் தீர்வு என பல குழுக்களை நாம் கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். அவர்கள் எதனை சாதித்தார்கள். காணாமல் போனோர் தொடர்பான சுயாதீன பணியகம் ஒன்றை அமைக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது கூட அரசாங்கத்தின் ஏமாற்று வேலைதான். காணாமல் போனோர் தொடர்பாக சந்திரிக்கா அரசாங்க காலத்தில் கூட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை அறிக்கை கூட ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதனால் எந்த பிரயோசமும் ஏற்படவில்லையே. தற்போதும் காணாமல் போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன. இந்த ஆணைக்குழுக்களில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவை போன்ற ஒன்றுதான் தற்போதைய அரசாங்கம் அமைக்க இருக்கும் காணாமல் போனோர் தொடர்பான சுயாதீன பணியகமும் இருக்கும்.

கேள்வி - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என முன்னைய காலங்களில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ஐ.நா.மனித உரிமை பேரவையில் எடுத்த நிலைப்பாடு இப்போது முற்றாக மாறி இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் போக்கு காணப்படுவதாகவும் இதனால் எதிர்வரும் காலங்களில் தமிழர் விவகாரம் ஐ.நா.மனித உரிமை பேரவையில் பேசப்பட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. மனித உரிமை செயற்பாட்டில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் நீண்ட கால அனுபவம் கொண்ட நீங்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் - புதிய அரசாங்கத்தின் மீது மேற்குலக நாடுகள் சற்று நம்பிக்கை வைத்து செயல்படுகின்றன என கூறப்பட்டாலும் பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இலங்கையில் மனித உரிமை விடயங்கள் முன்னேற்றம் காணவேண்டும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அக்கறையோடு செயற்படுகின்றன. அமெரிக்கா கூட இந்த தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது . மகிந்த அரச காலத்தில் அமெரிக்கா சில விடயங்களை வெளிப்படையாக பேசியது. ஆனால் தற்போது வெளிப்படையாக பேசாவிட்டாலும் சட்டம் நீதி என்ற வகையில் மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதேவேளையில் இலங்கையின் பிரச்சாரத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.

கேள்வி - மகிந்த தலைமையிலான அரசாங்கத்தை மாற்றி தமக்கு சாதாகமான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகத்தான் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரத்தை அல்லது தமிழர் விவகாரத்தை கையில் எடுத்தன என்றும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டதால் இனிமேல் மேற்குலக நாடுகள் தமிழர் விவகாரத்தில் ஆர்வம் காட்டப்போவதில்லை என்றும் இலங்கை தமிழர் விவகாரம் சர்வதேச நாடுகள் மத்தியில் இனி பேச்சுப்பொருளாக இருக்காது என்றும் தமிழர் விவகாரம் இயற்கை மரணம் அடைந்த நிலைக்கு சென்று விடும் என்றும் கூறப்படுகிறதே?

பதில் - ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் நடந்த விடயங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் என்ற போராட்டத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மனித உரிமையை மதிக்கும் நாடுகளும் பின்வாங்கப்போவதில்லை.

கேள்வி - புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களிடையே உள்ள பலவீனமும் ஒற்றுமையீனமும் தான் சர்வதேச நாடுகள் ஈழத்தமிழர் விவகாரத்தில் அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில் - இந்த குற்றச்சாட்டை ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கோரும் ஐ.நா.வரை வருவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் காரணமாகும். இலங்கை அரச படைகள் மேற்கொண்ட இனப்படுகொலை போர்க்குற்றம் மனித உரிமை மீறல்களையும் அரசின் இனஅடக்குமுறையினால் தமிழர்கள் தமது உரிமைகளை இழந்தமை பற்றியும் தமிழர் அமைப்புக்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் சர்வதேசத்தில் ஓரு தாக்கத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. தற்போது தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை இன்றி இருப்பது தமிழர் தரப்பிற்கு பலவீனமான விடயம் தான். ஆகவே புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் பிரிந்து செயற்படாமல் ஒற்றுமையாக சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ் மக்களின் நிலைமைகள் நீண்டகாலத்திற்கு கவலைக்குரியதாகத்தான் இருக்கும்.

கேள்வி - அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து சில மாகாணசபை உறுப்பினர்கள் உற்சவத்திற்கு வருவதை போல ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்காக ஜெனிவாவிற்கு வருகிறார்கள், இவர்களின் வருகை தமிழர் தரப்பிற்கு ஏதாவது பலனை தந்திருக்கிறதா?

பதில் - ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டங்களுக்கு முன்னைய காலங்களில் இலங்கையிலிருந்து புகழ் பூத்த வழக்கறிஞர்களான சத்தியேந்திரா, குமார் பொன்னம்பலம், வணபிதா டானியல் தியாகராசா ஆகியோர் வருகை தந்தே இலங்கையில் தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளை புள்ளி விபரங்களுடனும் ஆதாரங்களுடனும் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் ஐ.நா.மனித உரிமை பேரவை அதிகாரிகளுக்கும் எடுத்துரைத்தனர். ஆனால் தற்போது துரதிஷ்டவசமாக இலங்கையிலிருந்து வருபவர்களில் பலருக்கு சட்டத்துறையிலோ மனித உரிமை விடயங்களிலோ ஒழுங்கான அறிவோ கிடையாது. குறிப்பாக இங்கு வரும் மாகாணசபை உறுப்பினர்கள் ஒருசிலர் இங்கு வருவதே ஓரு கேலிக்கூத்துத்தான். வெறும் புதினம் பார்ப்பதற்கே வருகின்றனர். இப்படியானவர்களை யார் அழைக்கிறார்கள் என்ன நோக்கத்திற்காக அழைக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். மக்களிடம் சேகரிக்கப்பட்ட பணத்தில் விமான சீட்டை பெற்று வரும் இவர்கள் ஒருதடவை வந்து நிலமையை புரிந்து கொண்டு அடுத்த தடைவை வராமல் இருப்பதே சிறந்ததாகும். ஐ.நா அதிகாரிகளை ஒழுங்காக சந்தித்து பேச முடியாதவர்களால் எதனைத்தான் சாதிக்க முடியும்.

கேள்வி - இலங்கை அரசாங்கம் ஐ.நா.தீர்மான விடயத்திலும் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்ற விடயங்களில் தாமத்தையும் அலட்சியப்போக்கையும் காட்டி வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை எதிர்த்து நின்றால் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேச முடியாது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு சர்வதேச நாடுகளை அணுகி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியுமே ஒழிய தற்போதைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது.

கேள்வி - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என குற்றம் சாட்டப்படுகிறதே?

பதில் - தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பிரித்தானியா, கனடா ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளில் மட்டும் தான் கிளைகள் காணப்படுகின்றன. ஏனைய நாடுகளில் அவர்களின் கிளைகளோ செயல்பாடுகளோ எதுவும் கிடையாது. கிளைகளை கொண்ட நாடுகளிலும் அவர்களின் அங்கத்தவர்கள் அனைவரும் வயோதிபர்களாகவே காணப்படுகின்றனர். ஆகவே புலம்பெயர் நாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயல்பாடுகளை முன்னெடுக்க கூடிய சூழ்நிலை கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் நாடுகளிலும் தமது செயற்பாட்டை விஸ்தரிக்க வேண்டுமாக இருந்தால் புலம்பெயர் நாடுகளில் இளைஞர்களை உள்வாங்கி பலப்படுத்த வேண்டும். ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி புலம்பெயர் நாடுகளில் பல இளைஞர்களின் ஆதரவை கொண்டுள்ளது இது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் சவாலாக உள்ளது.

கேள்வி - ஜெனிவாவில் தமிழர் தரப்பின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பாரக்கிறீர்கள்?

பதில் - தமிழர் தரப்பின் ஜெனிவா செயற்பாடுகள் சட்டத்துறைசார்ந்தவர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என விஸ்தரிக்கப்பட வேண்டும். முன்னரை போன்று விடயம் தெரிந்தவர்கள் வந்து ஐ.நா.அதிகாரிகளையும் இராஜதந்திரிகளையும் சந்திக்க வேண்டும். தமிழர் தரப்பின் எண்ணிக்கை முக்கியமல்ல, விடயம் தெரிந்தவர்கள் வருவதுதான் முக்கியம். சில அமைப்புக்கள் தாம் ஐ.நாவுக்கு வருவதாக இணையத்தளங்களிலும் முகநூல்களிலும் தான் பிரசாரம் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நன்மை?

கேள்வி - ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இம்முறை என்ன விடயங்கள் முக்கியமாக எந்த நாட்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறும் என எண்ணுகிறீர்கள்?

பதில் - இந்த முறையும் பலஸ்தீனம் தொடர்பாக முழுநாள் விவாதம் நடைபெறும். சுpரியா, சவுதிஅரேபியா, லிபியா, ஈராக், வடகொரியா, ஆகிய நாடுகளின் விடயங்களும் முக்கியத்துவம் பெறும்.

http://www.tamilwin.com/politics/01/107555

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.