Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீசரின் நண்பன் கண்ணதாசன்...! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

Featured Replies

14720554_1158013460914013_75302413787327

 

காலம் அழிக்காத கவி வரிகளைத் தந்து, அனுபவ மொழிகளால் தமிழுக்கு அழகு சேர்த்த கவியரசர் கண்ணதாசனின் நினைவுதினம்.

"நான் மானிட இனத்தை ஆட்டிவைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாட்டில் வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. "

 

சீசரின் நண்பன் கண்ணதாசன்...! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

Kannadasan%20600_13297.jpg

 

‘‘யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாறநினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்’’ என்றவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய நினைவு தினம் இன்று.

‘‘ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி!’’

மருது பாண்டியர்கள் நீதி தவறாது ஆட்சி செய்த சிவகங்கைச் சீமையின் சிறுகூடல்பட்டியில் வசித்த சாத்தப்பன் - விசாலாட்சி என்ற தம்பதியருக்கு எட்டாவது மகனாய் பிறந்தவர் முத்து. அந்த முத்துதான் பின்னாளில் கண்ணதாசன் என்ற முத்தாய் ஜொலித்தார். பள்ளிக்கூடத்துக்கு மூன்று ரூபாய் கட்டமுடியாத நிலையில், பலமுறை வெளியே அனுப்பப்பட்டார். இறுதியில் ஏட்டுக் கல்வியை எட்டாம் வகுப்போடு நிறுத்திக்கொண்ட கண்ணதாசன், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் தலைமை ஆசிரியராய் இருந்த பள்ளியில் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி வீட்டுக்குச் சென்றுவிடுவார். ஏட்டுக்கல்விக்குத்தான் விடை கொடுத்தாரே தவிர, எழுதுவதற்கு விடை கொடுக்கவில்லை. தன் வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த பாப்பாத்தி ஊருணிக் கரையில் அமர்ந்து எதையாவது எழுதிக் கொண்டிருந்தார். வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டதோடு அதையும் பாடிக் கொண்டிருப்பார். இதைக் கேட்ட பக்கத்து வீட்டு ஆச்சி, ‘‘என்ன நம்ம முத்து பாட்டுல மொத ரெண்டு வரிகள மட்டுமே பாடிக்கிட்டே இருக்கான். முழுசும் பாட வராதா’’ என கவிஞரின் தாயாரிடம் கேட்க... அதற்கு அவர், ‘‘அடி போடி பைத்தியக்காரி... எம் மகன் ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி. அவனுக்கா தெரியாது’’ என்று அன்றே தன் மகனைப் புகழ் ஏணியில் ஏற்றிப் பெருமைப்படுத்தினார்.

‘‘இனி, மண்ணெண்ணெய் வாங்கிக் கட்டுபடியாகாது!’’

வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு, அரிக்கேன் விளக்கை எடுத்துத் தலையணைக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எதையாவது எழுதிக் கொண்டிருந்த கவிஞரைப் பார்த்து... அவரது அப்பா, ‘‘இனி, மண்ணெண்ணெய் வாங்கிக் கட்டுபடியாகாது’’ எனக் கோபப்படுவாராம். அப்போது எல்லாம், ‘‘அவனை எதுவும் சொல்ல வேண்டாம்’’ என்று அவரது அன்னை, தன் கணவரிடம் வேண்டுகோள் வைப்பாராம். தன் எழுத்துப் பயணத்துக்குத் தீனி போடுவதற்காக யாரிடமும் சொல்லாமல் திருச்சிக்குச் சென்றார்; பின் சென்னை சென்றார். அங்குதான் உறவினரின் உண்மை நிலையையும், சமூகப் பார்வையையும், கடற்கரைக் காதலையும் கற்றுக்கொண்டார். நகரம் என்றாலே நரக வேதனையை அனுபவிக்கும் மக்களிடையே எந்தவிதமான கடமையும் இல்லாமல் பசியுடனும், பட்டினியுடனும் நாட்களை நகர்த்தினார். திறமை மட்டும் இருந்தால் ஒருவரால் முன்னேற முடியாது. சந்தர்ப்பமும் நன்றாக அமைய வேண்டியது முக்கியம் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டார் கவிஞர். இடையிடையே விழிகளோடு முடிந்த முதல் காதலும், விடை இல்லாமல் போன இரண்டாம் காதலும் உண்டு. இளம் வயதில் நண்பர்கள் மூலம் விஷமாகும் மதுபானங்களின் பிடியிலும், விலை பேசும் மாதுக்களின் பிடியிலும் சிக்கிக்கொண்டார். காதல்தான் கைகூடவில்லை என்றாலும், கல்யாணத்தில் அவர் வெற்றிபெறத் தவறியதே இல்லை. வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும், சந்தித்த பிரச்னைகளையும் தன் அனுபவங்கள் மூலம் பாடல்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதியதால்தான் பின்னாளில் அவர், மிகச்சிறந்த கவிஞராக உருவாவததற்கு அடிகோலியது.

தன் மனதைத் தேற்றிக்கொள்ள,

‘கலங்காதிரு மனமே...
கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே...’

என்று நம்பிக்கையுடன் எழுதிய பல்லவிதான், ‘கன்னியின் காதலி’ படத்தில், இடம்பெற்ற அவரது முதல் பாடல். அன்று முதல் திரையுலகோடு இலக்கியத்தையும், அரசியலையும், வாழ்க்கையையும் தன்னோடு இணைத்துக்கொண்டு அதில் பயணிக்கலானார். ஜனனத்தையும், மரணத்தையும் தவிர, மனித வாழ்வில் எந்த முடிவும் பரிசீலனைக்குரியதே என்பதை அவர் எண்ணமாகக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த கனவுகளும் லட்சியங்களும் வாழ்வினோடும், மக்கள் நலனோடும் தொடர்புள்ளவையாய் இருந்தன. அதனால்தான் ஒரு பாடலில்,


‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’
- என்று எழுதினார்.

 

Kanna_14498.jpg

நம்பிக்கை எப்படிப்பட்டது?

நம்பிக்கை ஒன்றே வாழ்வின் அச்சாணி என்பதை, தன்னுடைய ‘எண்ணங்கள் ஆயிரம்’ என்ற தொகுப்பில் இடம்பெற்ற நம்பிக்கை என்ற கட்டுரை மூலம் உணர்த்தினார். அதில் இடம்பெற்ற சில வரிகள்: ‘‘நம்பிக்கை தரும் வெற்றிகளைவிடத் தோல்விகள் அதிகம். அந்தத் தோல்விகளும், வெற்றிகளே என்பது ஒருவனது நம்பிக்கை. நம்பிக்கையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் மிருகங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் சக்திக்கேற்பவே அவைகள் நம்பிக்கை வைக்கின்றன. நம்பிக்கை துளிர்விடும்போது அச்சம் அற்றுப்போகிறது. அச்சம் அற்றுப்போன இடத்தில், எது செய்தாலும் சரியே என்ற துணிவு வருகிறது. அந்தத் துணிவு, தோல்வியைக் கூட்டிவிடுகிறது. தோல்வி, நம்பிக்கையை சாக அடிக்கிறது. மனித மனம், பழைய நிலைக்குத் திரும்புகிறது. மனிதனது கடைசி நம்பிக்கை, மயானம். இந்த நம்பிக்கை மட்டும் தோல்வியடைந்ததே இல்லை’’.

நம்பிக்கைக்கு விதை விதைத்த கவிஞர், மக்கள் சும்மா இருந்தால் சோம்பேறிகள் ஆகிவிடக் கூடும் என்பதை தன் எழுத்துகளால் சுட்டுத் தள்ளினார். எண்ணும் உரிமை, எழுதும் உரிமை, ஏசும் உரிமை, பேசும் உரிமை என எல்லாம் பெற்றுக்கொண்ட மக்கள், உழைக்கும் உரிமையை மறந்துவிட்டனர். அதை, அவர்கள் துணிவுடன் போராட வேண்டும் என்பதை,
‘சும்மா இருப்பவன் சோம்பேறி அவனிடம்
சொர்க்கத்துக் கென்ன வேலை?
சுடுகின்ற கோடையிலே வளைகின்ற ஏழையால்
அமைந்ததே இன்பச் சோலை’
- என்கிற கவிதை மூலம் உணர்த்தினார்.

அடிப்படைத் தத்துவமான மக்கள் நலன் என்பது நிலையானது. ஆனால், அதை அடையும் வழியில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது, தலைவரும் தர்பாரும் மாறும் என்பதை,
‘தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்’
- என்னும் கவிதை மூலம் அடித்துச் சொன்னார்.

மக்களையும், மக்களாட்சியையும் பற்றிச் சிந்தித்த அவர், நாட்டின் சமூக அவலத்தை நினைத்து வேதனைப்பட்டார்.
‘மேட்டுக் குடி வாழ்க்கை
மென்மே லுயர்ந்து வர
நாட்டுக் குடி வாழ்க்கை
நடுத் தெருவில் நிற்பதனை
மாற்ற வேண்டும்’
என்று குரல்கொடுத்தார்.

‘‘இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்’’ என்று சொல்லும் கவிஞர், ‘‘பிறப்பிலிருந்து இறப்புவரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்? கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள். ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி. ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு. இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை’’ என்று நாம் வாழும் வாழ்க்கை இறைவனைச் சார்ந்தே இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இரவும் பகலும்போன்று வாழ்க்கையில் மாறிமாறி வரும் இன்பத்தையும் துன்பத்தையும் எப்படிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதையும் இறைவனிடம் கீழ்வரும் ஒரு கவிதை மூலம் வேண்டுகோளாய் வைக்கிறார்.
‘இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்!
நினைத்து வாட ஒன்று...
மறந்து வாழ ஒன்று!’

‘துன்பம் ஒரு சோதனை!’

இதனை மேலும் விரிவுபடுத்தி வாழ்க்கையில் மனிதன் எப்படியிருக்கிறான் என்பதை தன்னுடைய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் நூலில், ‘துன்பம் ஒரு சோதனை’ என்கிற கட்டுரையில் கவிஞர் இப்படிக் குறிப்பிட்டிருப்பார். ‘‘வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகின்றன. குளங்கள், கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள், வறண்டபின்தான் பசுமையடைகின்றன. மரங்கள், இலையுதிர்ந்து பின் துளிர்விடுகின்றன. இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான். நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை. முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தகட்டம் செலவு; முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தகட்டம் துன்பம். முதற்கட்டமே துன்பம் என்றால், அடுத்தகட்டம் இன்பம். இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன. எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை. அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை. பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது. இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதாரர் ஆனார் ஒருவர். ஆன மறுநாளே, அவரை ‘அரிசி சாப்பிடக் கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்’’ என்று ஒரு மனிதனின் வாழ்க்கையை அழகாகச் சொல்லியிருப்பார்.

பெண்களை உயர்வாகவே கருதினார்!

பெண்களைப் போதைப் பொருளாக மட்டுமே கண்ணதாசன் பார்த்தார் என்று குற்றஞ்சாட்டுபவர்கள் பலர் இருந்தாலும், பெண்களை என்றுமே அவர் உயர்வாகவே கருதினார். ‘பழைமையின் பெயரில் பொசுக்கும் பருவமும் பொய்யென அவள் கிடக்க வேண்டுமோ’ என்று பெண்களுக்கு ஆதரவாய் குரல்கொடுத்தார். பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கீழ்வரும் பாடலில் அழகாக உணர்த்தியிருப்பார்.
‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா...
உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்துவிடு!’

இதே பாடலில்தான் காதல் என்ற மந்திரச்சொல்லுக்கும் அழகான கருத்தைப் பதிவுசெய்திருப்பார். அந்தப் பாடல் வரிகள்,
‘காதல் என்பது தேன்கூடு - அதை
கட்டுவதென்றால் பெரும்பாடு...
காலம் நினைத்தால் கைகூடும் - அது
கனவாய்ப் போனால் மனம் வாடும்!’

மதுவைத் தொடாதவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

அதேபோல், கவிஞர் மதுக்கோப்பையுடனே காலங்கழித்தார் என்று சொல்பவர்களும் ஏராளம். ஆனால் அந்த, மதுவைத் தொடாதவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை, ‘‘மதுவைத் தொடாவிடில் சபைகள் மதிக்கும்; அதனால், பற்பல லாபம் உண்டாகும்; அதிக நாட்கள் உழைக்க வலுவிருக்கும்; அனைவரும் வணங்கும் நிலையிருக்கும்’’ என்று மிகவும் அழகாகத் தெளிவுபடுத்தினார்.

ss_14346.jpgஆறு மாதத்தில் தூங்கும் குழந்தையின் தூக்கமே சுகமான தூக்கம் என்று சொல்லும் கவிஞர், தூங்கும் அந்தக் குழந்தையைக்கூட எழுப்ப வேண்டாம் என்று குரல்கொடுக்கிறார்.
‘அவனை எழுப்பாதீர்;
அப்படியே தூங்கட்டும்
பூப்போலத் தூங்குகிறான்
பூமியிலே உள்ளதெலாம்
பார்க்காமல் தூங்குகிறான்’
என்று தன் பேரன் தூங்கியதைக் கண்டு அந்தப் பாடலை எழுதியிருப்பார் கவிஞர்.

‘சரித்திரம்’ என்னும் கட்டுரை!

வாழ்க்கையில் சரித்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை, தன்னுடைய ‘சரித்திரம்’ என்னும் கட்டுரையில் உண்மை சரித்திரத்தை உணர்த்தியிருப்பார். அந்தக் கட்டுரையில் இடம்பெற்ற சில வைரவரிகள்: ‘‘சரித்திர நதியின் ஓட்டத்தை நிறுத்தியவனும் இல்லை; திருந்தியவனும் இல்லை. அதன் இரண்டு கரைகளில் ஒன்று வெற்றி; மற்றொன்று தோல்வி! வெற்றிக் கரை, பசுமையாக இருக்கிறது. தோல்விக் கரை, சுடுகாடாகக் காட்சியளிக்கிறது. பசுமையான நிலப்பரப்பை விடச் சுடுகாட்டின் பரப்பளவே அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சுடுகாடு நிரம்பி வழிவதைப் பார்த்த பிறகும், அடுத்து வருகிறவன் தன்னுடைய பசுமை நிரந்தரமானது என்றே கருதுகிறான். அந்தச் சுடுகாட்டில் அலெக்சாண்டரைப் பார்த்தபிறகும், அகில ஐரோப்பாவுக்கும் முடிசூட்டிக்கொள்ள முயன்று, அங்கேயே போய்ச் சேர்ந்தான் நெப்போலியன். அந்த நெப்போலியனின் எலும்புக் கூடுகள் சாட்சி சொல்லியும்கூட, உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை வரவழைக்க முயன்று நெப்போலியனுக்குப் பக்கத்திலேயே படுக்கை விரித்துக்கொண்டான் ஹிட்லர். அந்த ஹிட்லரை எப்போதும் தனியாகவிடாத முசோலினி, அவனுக்கு முன்னாலேயே புறப்பட்டுப் போய் அவனுக்கு இடம் தேடிவைத்தான். அதோ, அந்தச் சுடுகாட்டில் பயங்கர ஜவான்கள். ஜார் பரம்பரைகள், லூயி வம்சாவளிகள் அனைவரும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிக் காலங்காலமாகச் சாட்சியங்கள் இருந்தும்கூட, கண்மூடித்தனமான அதிகாரவெறி இருந்துகொண்டே இருக்கிறதே. ஏன்? அதுதான் இறைவன் பூமிக்கு வழங்கிய தர்மம். அழிய வேண்டியவன், ஆடி முடித்துதான் அழிய வேண்டும் என்பது காலத்தின் விதி. பதவி என்னும் பச்சை மோகினியின் கரங்களில் பிடிபட்டவனிடமிருந்து அடக்கம் விடைபெற்றுக் கொள்கிறது. ஆணவம் தலை தூக்கி நிற்கிறது. வெற்றி வெற்றி என்று தொடர்ந்து வரவர தோல்வி என்பது தன் அகராதியிலேயே இல்லை என்ற துணிச்சல் வருகிறது. கண்ணுக்கு முன்னால் இருக்கும் பயங்கரப் படுகுழிகூடத் தனக்காகக் கட்டப்பட்ட நீச்சல் குளம்போல் தோன்றுகிறது. விழுந்த பிறகு, எலும்பு முறிந்த பின்தான் மாயை விலகுகிறது; மயக்கம் தெளிகிறது. ஒரு மனிதனின் கரங்களுக்குள் உலகத்தின் சுக துக்கங்கள் விளையாட இறைவன் ஒருபோதும் அனுமதித்தது இல்லை. அடித்த பந்து திரும்பி வந்து தாக்கும்போதுதான் இந்த உண்மை புலப்படுகிறது’’ என்று பல உண்மைகளை அதில் உணர்த்தியிருப்பார் கவிஞர்.

‘‘தன்னுடைய தோழன்’’ சீசர்!

Ceaser_13248.pngதன்னுடைய நண்பர்களிடம் நன்றியைக் காணாததால் விரக்தியடைந்த கவிஞர், ‘சீசர்’ என்ற ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்து வளர்த்தார். சோறு கொடுக்கும் கை மீளுமுன்பே வெடுக்கென கடிக்கும் மாந்தர்கள் வாழும் உலகிலே தன்னிடம் நன்றி உணர்வுடன் இருந்த சீசரை, ‘‘தன்னுடைய தோழன்’’ என்றார் கண்ணதாசன். ஆனால், அவருடைய நண்பர்கள்தான் நன்றியை மறந்தார்களே தவிர, அவர் மறக்கவில்லை. கண்ணதாசனுக்கு தக்கசமயத்தில் எல்லாம் உதவி செய்தவர் சின்னப்ப தேவர். கவிஞருடைய வீட்டுத் திருமணங்களில் எல்லாம் கலந்துகொண்டவர் அவர். அப்படி ஒரு நிகழ்வுக்கான செய்தியைக் கவிஞர் சொன்னபோது, ‘‘அந்த நாளில் ஊரில் நான் இருக்க மாட்டேன்’’ என்றாராம் சின்னப்பத் தேவர். உண்மையிலேயே கவிஞர் சொன்ன அந்தத் தேதியில் சின்னப்பத் தேவர் இறந்து விட்டார். அதனால், அந்தத் திருமண வரவேற்பையே நிறுத்தியதோடு தன் நன்றி மறவாமையையும் வெளிப்படுத்தினார்.

பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்!

ஒரு சமயம் அறிஞர் அண்ணா தனது கழக நண்பரிடம், ‘‘எங்கிருந்து வருகிறீர்கள்’’ என்று கேட்டார். அப்போது அவர், ‘‘நான் கருவூரிலிருந்து வருகிறேன்’’ என்றார். அதைக் கேட்ட அண்ணா, ‘‘எல்லோருமே கருவூரிலிருந்து சாவூருக்குப் போகிறவர்கள்தான்’’ என்றார். அருகில் இருந்த கண்ணதாசன், இந்த வார்த்தைகளைக் கேட்டு மிகவும் ரசித்தார். இதன் பிரதிபலிப்புதான், ‘காட்டு ரோஜா’ என்ற படத்தில், அவர் எழுதிய ‘எந்த ஊர் என்றவனே’ என்ற பாடல். இதில், உடலூர், உறவூர், கருவூர், மண்ணூர், கண்ணூர், கையூர், காலூர், காளையூர், வேலூர், விழியூர், காதலூர், கடலூர், பள்ளத்தூர், மேலூர், கீழூர், பாலூர் என்று பல ஊர்களைப் பற்றிப் பாடி மனித வாழ்க்கையின் தத்துவத்தை அந்தப் பாடல்மூலம் தெளிவுபடுத்தினார்.

தேசிய விருது பெற்ற பாடல்!

சமூகம், காதல், தத்துவம், தாலாட்டு, பக்தி எனப் பல பாடல்களை எழுதினார்.
‘ராமன் என்பது கங்கை நதி
அல்லா என்பது சிந்து நதி
யேசு என்பது பொன்னி நதி
நதிகள் பிறக்குமிடம் பலவாகும் - எல்லா
நதியும் கலக்குமிடம் கடலாகும்’
என்று ஒற்றுமையை உணர்த்தி எழுதப்பட்ட இந்தப் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. ‘சேரமான் காதலி’ என்னும் நாவல் அவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது. ‘அர்த்தமுள்ள இந்து மதம்’, ‘இயேசு காவியம்’ என மதம் பார்க்காத புகழ்மிக்க நூல்களை எழுதினார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசவைக் கவிஞரானார். இப்படி தன் எழுத்தாலும், புகழாலும் இந்த உலகில் இறுதிவரை கொடிகட்டிப் பறந்தார்.

 

இளைஞர்களுக்கு வேண்டுகோள்!

‘‘images_14205.jpgஅன்று எத்தனையோ புத்தகங்கள் எழுதக்கூடிய அளவுக்கு உடலில் வலுவிருந்தது; ஆற்றல் பொங்கி வழிந்தது. ஆனால், வெறும் ரத்தத் துடிப்புக்கு முதலிடம் கொடுத்து பொன்னான காலத்தை விரயமாக்கினேன். இன்று எத்தனையோ எழுத வேண்டும் என்று துடிக்கிறேன். அனுபவங்கள் பொங்கி வழிகின்றன. ஆனால், எனது பாழாய்ப்போன உடம்பு விட்டுக்கொடுக்க மறுக்கிறது. இளைஞனே என்னைப் பார்த்து விழித்துக்கொள். காலம் பொன்னானது. காலம் தாழ்த்தி உணர்ந்து கொள்ளாதே’’ என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முத்தை (கண்ணதாசனை), 1981-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி காலன் அபகரித்துக்கொண்டான்.

‘மூன்றாம் பிறை’ படத்தில் மனநிலை பிறழ்ந்த காதலிக்கு எழுதிய தாலாட்டான, கண்ணே கலைமானே என்ற பாடலோடு நிறைவுபெற்றது அவரது திரைப் பயணம். ஆம், நம்பிக்கையில் ஆரம்பித்து தாலாட்டில் முடிந்தது அவரது கலைப்பயணம். அனைத்துத் துறைகளிலும் பல நூல்களை எழுதியுள்ள கவிஞரிடம், ‘‘நீங்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை யாது’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நூலைப் பின்பற்றுங்கள். ஆனால், நூலாசிரியரைப் பின்பற்றாதீர்கள்’’ என்றாராம்.

பூமியிலே இப்போது நடக்கும் எதையும் அவர் பார்க்காமல் தூங்குகிறார்... ‘அவரை எழுப்பாதீர்... அப்படியே தூங்கட்டும்!’

 

 

 

 

தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு! கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள்

kannadasan_600_10517.jpg

"காலமெனும் ஆழியிலும் 
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!


கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும். 
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.

செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது. 

சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். 

Kannadasanbanner_main_09588.jpg

 

ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது. 

ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.   

கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17. 

பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.

 

கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது. 
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது. 
ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார்  இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர். 

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது. 

அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை. 
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின. 

”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன். 

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது. 
கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.   

 கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.

“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.  

கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை. 

ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.

”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.

இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம். 

”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.

காலமாகி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!

kannadasan_1436779883_09223.jpg



கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்


* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள். 

* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது  யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.

* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான். 

* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார். 

*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. 

* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

 

கண்ணதாசனின் தத்துவப்பாடல்களும் சிவாஜிகணேசனின் கதாவிலாஸமும்!

கண்ணதாசன்

அறிஞர் என்றால், அண்ணா 
கலைஞர் என்றால், கருணாநிதி 
கவிஞர் என்றால், கண்ணதாசன்' 

என்று சொல்வார்கள். இன்று கண்ணதாசன் நினைவு நாள். பூமிப்பந்தின் வரலாற்றில், தனது சொந்த வாழ்க்கையையே ஒரு பரிசோதனைக்களமாக்கி அதில் பலதரப்பட்ட அவதாரங்களையும் அதற்கேற்ற பலவிதமான வாழ்க்கையையும்  வாழ்ந்து பார்த்து, அதன் விளைவுகளை, அதன்  முடிவுகளை வெளிப்படையாக எல்லோருக்கும் கூறிய பெருமை ஒருவருக்கு, ஒரே ஒருவருக்கு உண்டு என்றால், அது கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு.

குழந்தையைப்போல் வெள்ளை உள்ளம் படைத்த அவர், மனிதனாக, ஞானியாக தன் வாழ்க்கையை  ஆய்ந்து, அதில் இறைவனின் பங்களிப்பையும் கலந்து  அவற்றைத் தன் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தினார். அதனால்தான் `வனவாசம்’என்னும் தனது சுயசரிதையின் முன்னுரையில், 'ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும் தலைவனுக்கும் கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமையவேண்டும் என்றால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல! ‘எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூலல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி' என்று குறிப்பிடுகின்றார். 

கண்ணதாசன், எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்படப் பாடலாசிரியர், கதை-வசனகர்த்தா, அரசியல் கட்சித் தலைவர், திரைப்படத் தயாரிப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இதில், பலவற்றில் வெற்றியையும் சிலவற்றில் தோல்வியையும், நிறைய நண்பர்களையும், நிறைய எதிரிகளையும் அவர் சந்தித்தார். இப்படிப் பலதரப்பட்ட முகங்களை அவர் கொண்டிருந்தாலும், திரைப்படப் பாடலாசிரியராகத்தான் அவர் பெரும் வெற்றி பெற்றுள்ளார். 

காலத்தால் அழியாத சாகா வரம் பெற்ற பாடல்களை வழங்கியதில், அவர் நேற்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் முடிசூடா மன்னனாக, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கவிஞராகத் திகழ்கிறார். வாழ்க்கைப் படிப்பினைகளை, தோல்விகளை, துன்பங்களை சிக்கல்களை தானே அனுபவித்ததால் நெருப்பில் புடம்போட்ட தங்கமாக மின்னும் ஞானத்தை அவருக்கு இணையாக இன்றளவும் எவரும் பெறவில்லை என்றே சொல்லலாம்.

55 வயது மட்டுமே வாழ்ந்த முத்தையா என்னும் கண்ணதாசனுக்கு கண்ணனின் மேல் அலாதிப் பிரியம். கண்ணனைப் பாடு பொருளாகக் கொண்டு சிலேடையுடன் சினிமா கதாபாத்திரங்களுக்கு எழுதிய பாடல்கள் எல்லாம் ஹிட் என்றாலும், 'வானம்பாடி' திரைப்படத்தில் அமைந்த இந்தப்  பாடலில்,

'கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலையிளங்காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே... கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்... கண்டவுடன் மாற்றம் கொண்டேன்' என்பவர், 'கண்ணன் முகம் கண்ட கண்கள், மன்னன் முகம் காண்பதில்லை...கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை' என மேலும் சொல்வது, ரொம்பவே சிறப்பு.

நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் திரைக் கதாபாத்திரங்களுக்கும் கண்ணதாசனின் சொந்த வாழ்வு அனுபவங்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பதுபோல் அவரது படத்தில் இடம் பெற்ற தத்துவப் பாடல்கள் அமைந்திருக்கும். அந்தப் பாடல்களுக்கான பின்னணி, கண்ணதாசன் வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்துடன் தொடர்புள்ளதாக இருக்கும். சிவாஜி கணேசன் நடிக்க, கண்ணதாசன் பாட்டெழுத, டி.எம்.சௌந்தர்ராஜன் பாட  எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்கவேண்டும். அதை இரவு நேரங்களில் கேட்க வேண்டும். இத்தனைக்கும் இந்தப் பாடல்களை எழுதும்போது கவிஞரின் வயது 35தான் என்பது மிகப்பெரிய ஆச்சர்யமான ஒன்றாகும்.  கண்ணதாசனின் தங்க வரிகளில் மின்னும் சில வைரங்கள்:

படம்: பார்த்தால் பசி தீரும்
'உள்ளம் என்பது ஆமை... அதில் உண்மை என்பது ஊமை...
சொல்லில் வருவது பாதி... நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி...
தெய்வம் என்றால் அது தெய்வம்... அது சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு... இல்லை என்றால் அது இல்லை'

படம்: பாவ மன்னிப்பு
'வந்தா நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை... 
வான்மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்  
பறவையைக் கண்டான்... விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான்... வானொலி படைத்தான்
எதனைக் கண்டான்... பணம்தனைப் படைத்தான்'

படம்: பாவ மன்னிப்பு
`எல்லோரும் கொண்டாடுவோம்... அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்...
நூறு வகைப் பறவை வரும்... கோடி வகைப் பூ மலரும்...
ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா...
கறுப்பில்ல வெளுப்பும் இல்லே... கனவுக்கு உருவமில்லே (2)
கடலுக்குள் பிரிவும் இல்லை.... கடவுளில் பேதமில்லை...
முதலுக்கு அன்னையென்போம்... முடிவுக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க் கூடுவோம்...’

படம்: ஆலயமணி
`சட்டி சுட்டதடா கை விட்டதடா! புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா!
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா! நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா! சட்டி சுட்டதடா கை விட்டதடா!
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா
ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா

படம்: ஆண்டவன் கட்டளை
ஆறு மனமே ஆறு அந்த  ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு 
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்’

படம்: குங்குமம்
`மயக்கம் எனது தாயகம், மௌனம் எனது தாய்மொழி 
கலக்கம் எனது காவியம், நான் கண்ணீர் வரைந்த ஓவியம் 
நானே எனக்குப் பகையானேன் - என்
நாடகத்தில் நான் திரை ஆனேன், தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது, விதியும் மதியும் வேறம்மா - அதன் 
விளக்கம் நான்தான் பாரம்மா, மதியில் வந்தவள் நீயம்மா - என் 
வழி மறைத்தாள் விதியம்மா’

படம்: நிச்சயதாம்பூலம்
'படைத்தானே, மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே 
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை 
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை’

படம்: புதிய பறவை
'எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? 
எங்கே மனிதன் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் 
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்... 
எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே...
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!’

படம்: பார் மகளே பார்
அவள் பறந்து போனாளே 
என்னை மறந்து போனாளே 
நான் பாக்கும்போது கண்களிரண்டைக்
கவர்ந்து போனாளே
அவள் எனக்கா மகளானாள்? நான்
அவளுக்கு மகனானேன் என்
உரிமைத் தாயல்லவா என்
உயிரை எடுத்துக்கொண்டாள்...

படம்: பாலும் பழமும்
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

படம்: வசந்தமாளிகை
கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ... 
விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ...
சொர்க்கமும் நரகமும் நம்வசமே - நான் 
சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே...
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே - இது
தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...’ 

படம்: அவன் தான் மனிதன்
'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
தந்தை தவறு செய்தான் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்துவிட்டோம் வெறும் பந்தம் வளர்த்துவிட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன... அவன் ஆட்சி நடக்கின்றது...’

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் திரைப்படத்துறை வாயிலாகவும் , அரசியல் ரீதியாகவும் தொடர்பிருந்தது. இருவருமே தி.மு.க-விலிருந்து காங்கிரஸுக்கு வந்தவர்கள். சிவாஜிகணேசன் ஏற்ற கதாபாத்திரங்களின் நகர்வுகளில்  கண்ணதாசனின் பாடல்கள் கதையம்சத்துடன் ரொம்பவே நெருக்கமாக ஒட்டி உறவாடியவை. குறிப்பாக `வசந்த மாளிகை’யில் சிவாஜி ஏற்ற ஆனந்த் கதாபாத்திரம் கண்ணதாசனின் குணங்களோடு ரொம்பவே நெருக்கமானவை. அதனால்தான் காலங்கள் மாறினாலும், தரம் மாறாத பாடல்களாக இன்னமும் இனிக்கின்றன.  

http://www.vikatan.com/news/cinema/69874-kaviyarasar-kannadasan-special.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.