Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி.டி.வி.தினகரனை ஏற்க மாட்டோம்! அதிரடியை கிளப்பும் ஜெ.அண்ணன் மகன் தீபக்

Featured Replies

டி.டி.வி.தினகரனை ஏற்க மாட்டோம்! அதிரடியை கிளப்பும் ஜெ.அண்ணன் மகன் தீபக்

Deepak_16257.jpg

டி.டி.வி.தினகரன் தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியிருப்பது அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தீபக் அளித்த பேட்டியில், ''ஜெயலலிதாவின் மரணத்தில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். விசாரணை கமிஷன் அமைத்தால் அனைத்தும் தெரியவரும். மருத்துவ சிகிச்சைகள் குறித்து பற்றி பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பவில்லை. ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்றுதான் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை கடன் வாங்கி கட்டுவோம். போயஸ் கார்டன் இல்லத்துக்கு உரிமையாளர்கள் நானும், தீபாவும் தான். தீபா அரசியல் பயணத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை.

பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வர வேண்டும். அவர் விரும்பினால் அவருக்கு தலைமை பொறுப்பு வழங்குவோம். அ.தி.மு.க எப்போதும் உடையாது. கட்சி தலைமை பொறுப்பை வகிக்க டி.டி.வி.தினகரனுக்கு தகுதியில்லை. அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர்கள் யாரும் தினகரனை ஏற்க மாட்டார்கள். பன்னீர்செல்வம் தலைமையை தொண்டர்கள் ஏற்பார்கள். கட்சி தலைமையை ஏற்க பன்னீர்செல்வத்துக்குதான் தகுதி உள்ளது. சசிகலாவை நான் எப்போதுமே ஆதரிப்பேன். சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களின் தலைமையை  ஏற்க மாட்டோம்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81799-we-do-not-support-ttv-dinakarans-super-position-in-admk-slams-jayalalithaas-nephew-deepak.html

  • தொடங்கியவர்

'பன்னீர்செல்வம் தலைமை தாங்கட்டும்!' - தீபக், திசை மாறிய பின்னணி

தீபக்

'ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணைக் கமிஷன் தேவை' என அதிர வைத்திருக்கிறார் தீபக். இதுநாள் வரையில் சசிகலா முகாமில் இருந்தவர், இப்படியொரு அணுகுண்டை வீசியதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் சசிகலா உறவுகள். 'ஒருவாரமாகவே தீபக்கோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. எதையும் ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை. பன்னீர்செல்வம் அணியின் தூண்டுதலின்பேரிலேயே இவ்வாறு பேசியிருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டங்களில், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை மருத்துவமனைக்குள் சசிகலா அனுமதிக்கவில்லை. ஆனால், தீபாவின் சகோதரர் தீபக் வருகைக்கு எந்த எதிர்ப்பையும் அவர்கள் காட்டவில்லை. '75 நாட்களில் 70 நாட்கள் வரையில் நான் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருந்தேன். சிகிச்சையில் எந்த மர்மங்களும் இல்லை. மருத்துவமனை வளாகத்திற்குள் அவர்(தீபா) தகராறு செய்வதை சசி அத்தை விரும்பவில்லை' என வெளிப்படையாகவே பேசினார் தீபக். ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளிலும் தீபக் முன்னிலைப்படுத்தப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்புகூட அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுடன் பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்தார். இந்நிலையில், இன்று மீடியாக்களிடம் பேசிய தீபக், ' டி.டி.வி.தினகரன் தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம். அ.தி.மு.க தொண்டர்களும் இதை ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.கவுக்குத் திரும்ப வேண்டும். கட்சித் தலைமையை ஏற்க அவருக்குத்தான் தகுதி உள்ளது' என அதிர வைத்திருக்கிறார். 

சசிகலா-டி.டி.வி.தினகரன்

' தீபக் திசைமாற என்ன காரணம்?' என அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். "இன்று நேற்றல்ல. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீபக்கிற்கு தேவையான வசதிகளை சசிகலா தரப்பினர் செய்து கொடுத்து வந்தனர். அவரை முழுதாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தனியார் கம்பெனியின் ஸ்கிராப் வருமானத்தில் மாதம்தோறும் தீபக்கிற்கு பங்கு போய்க் கொண்டிருந்தது. அவர்களது குடும்ப செலவுகளுக்கும் எந்தக் குறையும் வைக்கப்படவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே, அரசியல் சூழல்கள் மாற ஆரம்பித்துவிட்டன. ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீட்டிற்கு தீபாவும் தீபக்கும் உரிமை கோரத் தகுதியானவர்கள். அந்த அடிப்படையில் நீதிமன்றம் சென்றாலும் செல்லுபடியாகும். இதைக் கருத்தில் கொண்டு தீபக்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவரும், சில நிபந்தனைகளை கார்டனில் உள்ளவர்களுக்கு தெரிவித்தார்.

'சின்னம்மா சிறையில் இருக்கிறார். அவர் வந்ததும் பேசிக் கொள்வோம்' என்றெல்லாம் சசிகலா உறவினர்கள் சமாதானம் பேசியுள்ளனர். அதேவேளையில், தினகரனுடன் பல விஷயங்களில் முரண்பட்டார் தீபக். சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா சமாதியில் மாலை போடுவதற்கு தீபக் சென்றுள்ளார். அதுதொடர்பான செய்தி ஆளும்கட்சி டி.வியிலும் நமது எம்.ஜி.ஆரிலும் வெளியிடப்படவில்லை. என்னை வேண்டும் என்றே தினகரன் புறக்கணிக்கிறார். அவர்களுக்கு எதிராக நான் எதையுமே செய்ததில்லை. என்னை ஏன் எதிரியாகப் பார்க்க வேண்டும்?' என சண்டை போட்டிருக்கிறார். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த பிறகு, விவகாரம் இன்னும் பூதாகரமாக்கிவிட்டது. இதை அறிந்த சசிகலாவின் சகோதரர், 'அவர் எதையாவது பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்குள் சரிக்கட்டுங்கள்' எனப் பேசியிருக்கிறார். அவர் எடுத்த முயற்சியும் கைகூடவில்லை. நிலைமை கைமீறிப் போய்விட்டது. அவரது சூழலை பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்திக் கொண்டார் என கார்டனில் உள்ளவர்கள் நம்புகிறார்கள்" என்றார் விரிவாக. 

ஜெயலலிதா பிறந்தநாளில் நீதி கேட்டு நெடும் பயணம் செல்ல இருக்கிறார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். 'தீபாவை அடுத்து தீபக்கும் பயணத்தில் இணைவாரா?' எனக் கேள்வி எழுப்புகின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/81808-why-jayalalithaas-nephew-deepak-suddenly-supports-o-panneerselvam.html

  • தொடங்கியவர்
தினகரனுக்கு எதிராக தீபக்: இயக்குவது நடராஜனா திவாகரனா?
 
Tamil_News_large_1717673_318_219.jpg
 

 

 

 

 

 

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். அதனால்தான், ஜெயலலிதா மறைவுக்குப் பின் இறுதி சடங்குகளை செய்த போது, அவரையும் கூடவே வைத்துக் கொண்டார் சசிகலா.
 

 

முரண்பட்ட பேச்சு:

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக, பல தரப்பிலிருந்தும் கிளம்பியிருக்கும் சர்ச்சைகளை அமுக்கிப் போடும் விதமாக, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாட்களும், அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று திரும்பினேன். அங்கு, அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது என்றெல்லாம் சொல்லி வந்த தீபக், இப்போது, அதே ஜெயலலிதாவின் மறைவு தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என் கிறார்.அவரது முரண்பட்டப் பேச்சுக்களுக்கு பின்னணியில், வலுவான சக்திகள் இருப்பதாக, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.

அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: தினகரனையும் டாக்டர் வெங்கடேசையும் சசிகலா மீண்டும் கட்சியில் சேர்த்து பதவி கொடுத்தது, சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் சகோதரர் திவாகரன் ஆகியோருக்க பிடிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தினகரன், கட்சியின் துணைப் பொதுச் செயலராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு, தீபக்கை விட்டு, எதிர்க்க வைத்திருக்கின்றனர். நடராஜன், திவாகரன் ஆகிய இருவருக்குமே, தினகரனை பிடிக்கவில்லை என்பதால், இருவரில் ஒருவர்தான் தீபக்கை, தினகரனுக்கு எதிராக தூண்டி விட்டிருக்க வேண்டும்.தினகரனை மட்டும் எதிர்க்கும் தீபக், மற்ற யாரையுமே எதிர்க்கவில்லை. சசிகலாவை புகழ்கிறார்; பாராட்டுகிறார். ஆக, தீபக், யார் பேச்சுக் கேட்டு இயங்குகிறார் என்பது, எல்லோருக்கும் புரிந்து விட்டது.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் கூறின.

இது குறித்து பன்னீர்செல்வம் தரப்பினர் கூறியதாவது:
அதிமுகவை கைக்குள் கொண்டு வர திட்டமிடும் பன்னீரை தடுக்க வேண்டும். அல்லது, பன்னீரின் முயற்சி எடுபடாமல் போக வேண்டும் என்றால், அவர் மீண்டும் சசிகலா தரப்புக்கு திரும்புவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம், பன்னீர்செல்வம் செயல்பாடுகள் மீது சந்தேக வளையத்தை உருவாக்க வேண்டும் என்பது, சசிகலா தரப்பின் திட்டம். அதை தீபக்கை வைத்து முடித்துள்ளனர்.அதே போல, ஜெயலலிதா பிறந்த நாளில் பேரவை அல்லது கட்சி ஆரம்பிக்க தீபா முடிவெடுத்துள்ளார். அவரது அந்த முயற்சியும் தோல்வி அடைய வேண்டும் என்றால், அவரும், சசிகலா தரப்பில் உள்ள அவரது சகோதரர் தீபக்கும் ஒன்றாக இருப்பது போலவும், தீபாவின் அரசியல் பிரவேசம் பிடிக்கவில்லை என்பது போலவும் சொல்லி, தொண்டர்கள், பொதுமக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பலே திட்டத்துடன் , தீபக், தினகரனுக்கு எதிர்ப்பாக இருப்பது போல முடுக்கி விடப்பட்டுள்ளார்.இதெல்லாம் மக்களுக்கும்; தொண்டர்களுக்கும் நன்கு தெரியும். அதனால், சசிகலா தரப்பினரின் சூழ்ச்சி வேலை எடுபடாது.இவ்வாறு பன்னீர்செல்வம் தரப்பினர் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1717673

  • தொடங்கியவர்

தினகரனை வீழ்த்த தீபக்! நடராசனை வீழ்த்த ஜெயக்குமார்!

தீபக்

ப்போதும் சீனுக்கு வராத ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளில் அவர் இந்த வெடியைப் பற்ற வைத்திருக்கிறார்.

 "டி.டி.வி. தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஏற்க முடியாது. ஓ.பி.எஸ் மீண்டும் தாய்க் கழகத்துக்கே திரும்ப வேண்டும்." என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

''தீபாவை ஏற்க முடியாது, கட்சி உடையக் கூடாது, போயஸ்கார்டனுக்கு நானும்  தீபாவும்தான் உரிமை கொண்டாட முடியும்.'' என்றும் அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார் தீபக்.

மாலைப்பொழுதில் தீபக்  இப்படி  பேட்டி அளிப்பதற்கு முன்னால், அன்றைய தினம் காலைப் பொழுதில் என்ன நடந்தது? தீபக் பேட்டி அளித்த பின் அதற்கு எதிர்வினையாக அ.தி.மு.க-வில் நடந்தது என்ன? 

அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் பெயர்  அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியிருந்தாலும், பிப்ரவரி 23-ம் தேதிதான்  கட்சி அலுவலகத்துக்கு  வந்து பதவியேற்றுக் கொண்டார்  தினகரன்.  

தினகரனின் பதவியேற்பு நிகழ்ச்சி மிகவும் அமைதியாக நடந்துமுடிந்தது. ஆனாலும், அ.தி.மு.க-வின் அசைக்கமுடியாத சக்தி, இனி தினகரன்தான் என்பதை, அந்தப் பதவியேற்பு  நிகழ்ச்சி நிரூபித்தது. அவர் வரும் வழிப்பாதையில்,  சிறப்பான  வரவேற்பு கொடுக்கப்பட்டு, வழி நெடுக மலர்கள் தூவப்பட்டன. 

தினகரன் பதவியேற்பு வருகைக்காக கட்சித் தலைமை அலுவலகத்தில் காத்திருந்து வரவேற்றவர்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர். 

ஜெயலலிதா முதல்வராக இல்லாத காலத்திலும் 'கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு அம்மா' என்ற கோஷத்தை மட்டுமே கேட்டுப் பழகிய அவ்வை சண்முகம் சாலை முதல்முறையாக 'அண்ணன் தினகரன் வாழ்க, வருங்கால முதல்வர் வாழ்க!' என்ற கோஷத்தை இன்றுதான் கேட்டது.

அ.தி.மு.க. தலைமைக் கழக வாசலிலேயே அந்தக் கோஷத்தைக்  கேட்டபோதும், 'அப்படி கோஷங்கள் போடவேண்டாம்.' என்று  சொல்ல ஆள் இல்லாததால், கோஷம், கூடிக் கொண்டே போனது. 

"எடப்பாடியார்  முதல்வராக இருந்தாலும், கட்சியில் அண்ணன் தினகரனின் பதவிதான் பெரிது. இன்னும் ஒரு வாரத்தில் அண்ணன்தான்  பொதுச் செயலாளர். அடுத்தது  முதலமைச்சரும் ஆகிறார்." என்று தினகரன் ஆதரவாளர்களும் தங்கள் பங்குக்கு அங்கே  சொல்லிக் கொண்டிருந்தனர்.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக  பொறுப்பேற்ற கையோடு, செய்தியாளர்களைச் சந்தித்தார் தினகரன்.  "எப்போதும் மக்கள் எங்கள் பக்கம்தான். பாராளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க-வே  மகத்தான வெற்றி பெற்று சாதனை படைக்கும். எந்தக் கொம்பனாலும் அ.தி.மு.க-வை  அசைக்க முடியாது." என்றார்.  

'குடும்ப ஆட்சி நடக்கிறது என்ற  குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?' என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கொஞ்சமும் தாமதிக்காமல் பதிலளித்த தினகரன், "அண்ணா தி.மு.க என்பது  ஒன்றரைக் கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம். சசிகலா குடும்பத்தினர் ஆட்சி, அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று தி.மு.க-வினர் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். எந்தத் தனி நபரும், குடும்பமும் இங்கு அதிகாரம் செலுத்த முடியாது. அப்படி அதிகாரம் செலுத்தவும் விடமாட்டோம்." என்றும் சொன்னார்.

டி.டி.வி. தினகரனிடமிருந்து இப்படி ஒரு பதிலை நடராஜன் தரப்பு சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். "குடும்ப ஆட்சிதான் நடத்தினோம், இனியும் நடத்துவோம்." என்று தஞ்சாவூரில் ம.நடராசன் பேசிய  பேச்சுக்கு அவர் குடும்பத்தில் இருந்தே வந்த எதிர்ப்புக் குரலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது என்று  அ.தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பு எழுந்தது.

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபோதோ, சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வாகி இருந்தபோதோ 'குடும்ப ஆட்சி' குறித்த கேள்விக்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் மற்ற கேள்விகளை மட்டுமே எதிர்கொண்டார் சசிகலா.

டி.டி.வி. தினகரன், அடுத்து சொன்னதுதான் இன்னும் ஹைலைட்டான விஷயம். "கட்சிக்கு எனது பணி தேவை என்பதை அறிந்து மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.  இக்கட்டான  இந்த நேரத்தில் என்னை  அவர்கள்தான்  கட்சிக்குத் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்கள்." என்றதுதான் அது.

டி.டி.வி. தினகரன் காலையில் அளித்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கத்தான் தீபக்-கின் குரலாக மாலையில் வெளிப்பட்டார் ம.நடராசன் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

தீபக் பேட்டி வெளியான சில நிமிடங்களில் டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளரான தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கையில், ஓ.பி.எஸ் வகித்த நிதித்துறை அமைச்சர் பதவி கூடுதலாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி தினகரன் சொல்வதைத்தான் இப்போது கேட்டாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதில், ம.நடராசனின் எதிர் நடவடிக்கைகள் எந்த அளவு எடுபடும் என்பது போகப்போகத்தான் தெரியும்.!

http://www.vikatan.com/news/tamilnadu/81921-politics-between-jayalalithaas-family-and-mannargudi-family.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.