Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தப்புவாரா? சிக்குவாரா? - தினகரனை திணறடிக்கும் வழக்குகள்!

Featured Replies

தப்புவாரா? சிக்குவாரா? - தினகரனை திணறடிக்கும் வழக்குகள்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

 

எம். ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க-வில் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்களுக்கும் ஊழல் வழக்குகளுக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் புதுத் தலைமையான சசிகலாவும் இதில் தப்பவில்லை. அவர், தண்டனைபெற்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டுக் கிடக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியை நடத்திக்கொண்டிருக்கும் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும்  ஊழல் வழக்கில் இருந்து தப்பவில்லை.

சசிகலா, சிறையில் இருக்கக் காரணமான சொத்துக் குவிப்பு வழக்குடன் தொடர்புடைய லண்டன் ஹோட்டல் வழக்கும், காஃபிபோசா சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளும் கால ஓட்டத்தில் நீர்த்துப்போயின. ஃபெரா சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகள்தான் தினகரனை இன்னும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மூன்று மகன்களில் ஒருவர்தான் டி.டி.வி.தினகரன். 1988 காலகட்டத்திலேயே போயஸ் கார்டனுக்குள் வந்துவிட்டார். ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற தினகரன், 1991-96-ல் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் கோலோச்சினார். அதனால், ஜெயலலிதாவின் வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகளின் மூளையாக அவர் செயல்பட்டார். ‘ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாள் பரிசாக மூன்று லட்சம் அமெரிக்க டாலர்கள் வந்தன; ஜெ.ஜெ டி.வி-க்கு அப்லிங்க் கருவிகள் வாங்கியது; லண்டனில் ஹோட்டல் வாங்கியது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் தினகரனின் ஆலோசனைப்படியே நடந்தன’ எனப் புகார்கள் எழுந்தன.

p2a.jpg

இங்கிலாந்து பார்க்லேஸ் வங்கி வழக்கு!

1995-96 காலகட்டத்தில், அங்கீகாரம் பெறாத ஒரு இந்திய முகவர் மூலம் ஒரு கோடியே  நான்கு லட்சத்து 93 ஆயிரத்து 313 ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இங்கிலாந்து பர்க்லேஸ் வங்கியில் வரவு வைக்கப்பட்டன. அது யாருடைய வங்கி விவரம் எனச் சோதித்தபோது, தினகரனின் விவரங்கள் வெளிவந்தன. ‘டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் விர்ஜின் இந்தியா’ எனும் இந்திய நிறுவனம்தான், இங்கிலாந்தில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் தினகரன் அக்கவுன்ட்டில் பணம் போட்டது. அந்த நிறுவனம் பற்றி விசாரித்தபோது, அது போலியான நிறுவனம் என்பது தெரியவந்தது. இதுபற்றி, அயல்நாட்டுப் பணப் பரிமாற்ற ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. தினகரன் கொடுத்த சில விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், 62 லட்சத்து 61 ஆயிரத்து 313 ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் தொகைக்கு முறையான கணக்கு வரவில்லை. அதனால், அந்தத்தொகையை மட்டும் கணக்கில் கொண்டு விசாரணை நடைபெற்றது. குற்றச்சாட்டு நிரூபணமானதால் 1998-ம் ஆண்டு தினகரனுக்கு அமலாக்கத் துறை 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து அயல்நாட்டுப் பணப் பரிமாற்ற ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் தினகரன் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த மேல்முறையீட்டு வாரியம், அபராதத் தொகையை 28 கோடி ரூபாயாகக் குறைத்து 2000-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், தினகரன் அதையும் செலுத்த முடியாது என்று சொல்லி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அளித்த தீர்ப்பில், ‘‘நான் இந்தியக் குடிமகன் இல்லை; வெளிநாட்டில் வாழும் இந்தியர் என தினகரன் கூறியதை ஏற்கமுடியாது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், ‘காஃபிபோசா’ சட்டத்தின் கீழ் தினகரன் மீது வழக்குப் பதிவுசெய்து, கைது செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணையின்போதும், தான் வெளிநாட்டில் வசிக்கிறேன் என்று கூறியவர், இந்தியாவில் பெரியகுளம் தொகுதியில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அந்தத் தேர்தல் தொடர்பான வழக்கு, இதே உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘தான் இந்தியக் குடிமகன்’ எனக் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். எனவே, அமலாக்கப் பிரிவு  விசாரணையில் குறுக்கிட விரும்பவில்லை. 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது சரியானதுதான்’’ என உத்தரவிட்டனர்.

திவால் வழக்கு

ஆனால், இந்த அமெரிக்க டாலர்கள் வரவு வைக்கப்பட்ட வழக்கில், 28 கோடி ரூபாய் அபராதத்தை தினகரன் இன்னும் செலுத்தவில்லை. மாறாக, நீதிமன்றத்தில் அப்பீல் செய்து இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான அமலாக்கத் துறை, ‘விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தாமல் தினகரன் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். எனவே, அவரை ‘திவாலானவர்’ என அறிவிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அது நிலுவையில் இருக்கிறது. 

பரணி பீச் ரிசார்ட்ஸ் வழக்கு!

பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனத்தில் சசிகலா பங்குதாரராக இருந்தார். இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா ராமசாமி, சசிகலாவின் தோழி சித்ரா என்பவருக்கு மூன்று கோடி ரூபாய் கடனாகக் கொடுத்தார். சித்ரா அந்தத் தொகையை, சசிகலாவின் கணக்குக்கு மாற்றினார். இதற்காக சசிகலாவிடம் இருந்து எந்த உறுதிமொழிப் பத்திரத்தையும் சித்ரா பெறவில்லை. 25 செக்குகளாக அந்தத் தொகையைக் கொடுத்த சித்ரா, அவற்றில் தலா 22 லட்ச ரூபாய்க்கான இரு செக்குகளை சுதாகரன் மற்றும் இளவரசி பெயர்களில் கொடுத்தார். மீதமுள்ள செக்குகள், பெயர் குறிப்பிடாமல் வழங்கப்பட்டுள்ளன. இதுபற்றி விசாரித்தபோது, ‘பரணி பீச் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனம் ஒரு லெட்டர்பேடு நிறுவனம்’ என்பது தெரியவந்தது. அதோடு, போயஸ் கார்டன் வீட்டுத் தொலைபேசி எண்ணிலிருந்து மலேசியா நாட்டின் பினாங்கு பகுதியிலுள்ள சுசீலா ராமசாமி வீட்டுக்குப் பல முறை பேசப்பட்டதும் தெரியவந்தது. மேலும், சசிகலாவுக்கு சித்ரா மூலம் சுசீலா கொடுத்த பணத்துக்கு எந்தவொரு முறையான அனுமதியும் பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை வழக்கு தொடுத்தது.

கீழ்நீதிமன்ற நீதிபதி தெட்சிணாமூர்த்தி, இந்த வழக்கில் இருந்து இவர்களை விடுதலை செய்தார். ஆனால், அதை எதிர்த்து அமலாக்கத் துறை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அப்பீல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், “ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இந்தப் பணம், சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளவரசி, தினகரன் பெயர்களிலும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தான் நிர்வாகப் பணியை மட்டும் கவனித்ததாகவும், அன்றாடப் பணிகளில் ஈடுபடவில்லை என்றும் சசிகலாவும் தினகரனும் சொல்லும் வாதம் ஏற்புடையதல்ல. அவர்கள் அன்றாடப் பணிகளில் பங்கு கொண்டதற்குத் தேவையான ஆவணங்கள் உள்ளன. அன்றாட நடவடிக்கைகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதனால் சசிகலா, தினகரன், இளவரசி, ஜெ.ஜெ.டிவி நிறுவனம் இந்த வழக்கைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

p2.jpg

காப்ஸ் கிராஃப்ட் ஹோட்டல் வழக்கு!

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தினகரனும் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். லண்டனில் உள்ள ‘காப்ஸ் கிராப்ட்’ ஹோட்டலை வாங்கி நடத்திய ஐந்து பேரில் தினகரனும் ஒரு பார்ட்னர். ‘ஜெயலலிதா சேர்த்த சொத்துகள் பட்டியலில் லண்டன் ஹோட்டலையும் சேர்க்கலாம்’ என விசாரணை அதிகாரி நல்லம நாயுடு சொன்ன யோசனையில்தான் ஹோட்டல் வழக்கையும் சேர்த்தார்கள். அதுபற்றி விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி, அருணாச்சலம் நியமிக்கப்பட்டார். அவர்கள் இது தொடர்பாக லண்டனில் போய், ‘காப்ஸ் கிராஃப்ட்’ ஹோட்டலின் பார்ட்னர்களில் ஒருவரான பரேஷ் கோச்சட்டாவிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘‘இந்த ஹோட்டலை தினகரன் உள்பட ஐந்து பேர் வாங்கி நடத்தினோம். அதன்பிறகு ஹோட்டலை முந்நூறு கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டோம்’’ என்றார். ‘‘விற்ற பணம் எங்கே?’’ எனக் கேட்டபோது ‘‘வங்கியில் இருக்கிறது’’ என்றார்.

உடனே, அதிகாரிகள் வங்கிக் கணக்கைச் சோதனையிட்டனர். அது ஒரு வங்கியில் இருந்து அடுத்த வங்கி, அடுத்ததில் இருந்து அடுத்தது என மாறி ஐந்தாவது வங்கியில் காணாமல் போய்விட்டது. அதுபற்றி மீண்டும் பரேஷ் கோச்சட்டாவிடம் விசாரணை நடத்தியபோது அவர் சொன்ன கதை த்ரில் காமெடி ரகம். “எங்களோடு பார்ட்னராக இருந்த ஐந்து பேரில் ஒருவர் கொரியாவைச் சேர்ந்தவர். அவர் எங்களுடைய ‘ஜாயின்ட் அக்கவுன்ட்டில் இருந்த பணத்தை, எப்படியோ மோசடி செய்து, மொத்தமாக எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்” என்றார்.

அதிர்ந்துபோன அதிகாரிகள், ‘தினகரன் மீது வலுவான ஆதாரங்கள் இல்லை. அதனால், அவரை இந்த வழக்கில் சேர்க்க முடியாது’ என்று சொல்லிவிட்டனர். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க,, அவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது. ஆனால்,  சொத்துக் குவிப்பு வழக்கோடு சேர்த்து இதையும் விசாரித்ததால், நான்கு ஆண்டுகள் தாமதம் ஆனது. இதனால், சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கு மாறிவிடும் என்பதை உணர்ந்த அரசுத் தரப்பு, தாமே முன்வந்து லண்டன் ஹோட்டல் வழக்கைத் திரும்பப் பெற்றது. ஆனால், ஜெயலலிதாவும் சசிகலாவும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டு வழக்குகளையும் சேர்த்துத்தான் நடத்தவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம், ‘லண்டன் வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்துவிட்டது. ஆனால், எப்போது வேண்டுமானாலும் அந்த வழக்கு, தூசுதட்டப்படலாம்.

ஜெ.ஜெ டி.வி வழக்கு!

ஜெயா தொலைக்காட்சி, முன்பு ஜெ.ஜெ. டி.வி-யாக இருந்தது. அதன் நிர்வாகப்பொறுப்பில் சசிகலா, அவருடைய அக்காள் வனிதாமணியின் மகன்கள் தினகரன், பாஸ்கரன் ஆகியோர் இருந்தனர். அப்போது, அந்த டி.வி-க்கு ‘அப்லிங்க்’ வசதிகளை ஏற்படுத்த, கருவிகளை வாடகைக்கு எடுத்தனர். அதற்காக ரிட்சாட், சுபிக்பேக் ஆகிய வெளிநாட்டு  நிறுவனங்களில் ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தனர். இதில் விதிமுறைகள் மீறப்பட்டதாகச் சொல்லி, அமலாக்கத் துறை வழக்குப் போட்டது. மேலும், அப்பூப்ஸ் என்ற நிறுவனத்துக்கு, 10.45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிங்கப்பூர் டாலர்களை மாற்றியது தொடர்பாகவும், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்குகளும் இன்னும் நிலுவையில் உள்ளன.

இவர்தான் அ.தி.மு.க-வைக் காப்பாற்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார்!

http://www.vikatan.com/juniorvikatan/2017-mar-05/investigation/129207-ttv-dinakaran-scam-cases-status.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.