Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையிலேயே எனக்கு நடிக்கத் தெரியாது! - ஓ.பி.எஸ்|பிரத்தியேக நேர்காணல்

Featured Replies

உண்மையிலேயே எனக்கு நடிக்கத் தெரியாது! - ஓ.பி.எஸ்|பிரத்தியேக நேர்காணல்

 

 

  • தொடங்கியவர்

“உண்மையிலேயே எனக்கு நடிக்கத் தெரியாது!”

எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் - படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

 

106p1.jpg

``எம்.ஜி.ஆர் திரைத் துறையில் கால் நூற்றாண்டு காலம் காலூன்றி பெற்ற தலைவர் பட்டத்தை, கருணாநிதி இருபது ஆண்டுகள் காத்திருந்து பெற்ற தலைவர் பட்டத்தை, நாற்பது நிமிடங்கள் ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்து ஒரு தலைவராக உருவாகிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்'' என்று சிலாகிக்கிறார்கள் தொண்டர்கள்.

பரபரப்பாக இருந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்தோம்.

``குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறது தமிழக அரசியல். இந்தச் சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``ஜல்லிக்கட்டுப் பிரச்னைக்குப் பிறகு, தமிழகத்தில் புதிய எழுச்சி உருவாகியுள்ளது. தமிழகத்தில் இனி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த ஆட்சி தூய்மையானதாக இருக்க வேண்டும்; ஊழல் இல்லாத ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்கள், மாணவர்கள், பெண்களிடையே ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.

1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்துக்குப் பின்னால் மாணவர் களும் இளைஞர்களும் தன்னார்வத்தோடு அரசியலில் ஈடுபாடு காட்டாத நிலை இருந்தது. ஆனால், இப்போது அந்த எண்ணம் மாறி, அரசியலில் தன்னார்வத்தோடு ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இது சமுதாயத்தில் ஏற்பட்ட ஒரு மறுமலர்ச்சி என்றுகூடச் சொல்லலாம்.”


`` `உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் என் பின்னால் இருக்கிறார்கள்' என்கிறீர்கள். ஆனால், 122 சட்டமன்ற உறுப்பினர்களே உங்கள் பின்னால் இல்லையே?”

``அம்மா முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுதான் வாக்கு கேட்டோம். அம்மா முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுதான் எங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டார்கள். அம்மா இல்லாத அசாதாரணமான சூழ்நிலையில் அம்மா எந்த நோக்கத்துக்காக இந்த இயக்கத்தை வளர்த்தார்களோ, எந்த நோக்கத்தோடு ஆட்சியை நிறுவினார்களோ, அதிலிருந்து மாறுபட்டுச் செல்லும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களும் சசிகலாவுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. கட்டாயத்தின் பேரில் அங்கு இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில்தான் அந்த 122 எம்.எல்.ஏ-க்களும் இருக்கிறார்கள். அவர்களும் மனம் திருந்துவதற்கு உரிய காலம் வரும் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால், மக்களும் கட்சியினரும் ஒரு பக்கமும், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னொரு பக்கமும் இருக்கின்ற சூழ்நிலை தற்போது நிலவுகிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதே அல்ல.’’

``சட்டமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டதால்தான் உங்களுக்கு ஆதரவு கிடைக்காமல்போனது என்கிறீர்களா?’’

 ``அங்கு இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், அச்சுறுத்தலோடுதான் இப்போதும் இருக்கிறார்கள். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது சபாநாயகரிடம் `இவர்கள் பத்து நாள்களுக்கு மேல் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு, அங்கிருந்து நேராகச் சட்ட மன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். அவர்களை, தொகுதிக்கு முதலில் அனுப்பி... மக்கள் மனநிலை என்ன என்று அறிந்து வரட்டும். அதன் பிறகு சட்டமன்றத்தைக் கூட்டுங்கள்’ என்று சொன்னேன். அதற்கு, சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். ரகசிய வாக்கெடுப்புக்கும் மறுத்துவிட்டார். ஜனநாயகத்தையே படுகொலை செய்துவிட்டார்.”

``33 ஆண்டுகள், சசிகலாதானே ஜெயலலிதாவின் நிழலாக இருந்தார். எதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா இருக்கிறார் எனக் குற்றம்சாட்டுகிறீர்கள்?’’

``அம்மா அவர்கள் சசிகலாவை உதவியாளராகத்தான் வைத்திருந்தாரே தவிர, எந்தப் பொறுப்பிலும் உட்காரவைக்கவில்லை. எம்.எல்.ஏ., எம்.பி என எந்தப் பதவியையும் அம்மா கொடுக்கவில்லை. அந்த எண்ணம் அம்மாவுக்கு இருந்திருந்தால், எங்களிடமும் சொல்லியிருப்பார்; அவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்து உட்காரவைத்திருப்பார். அம்மாவே அவரை முன்னிறுத்தவில்லை. ஆனால், அவர் இப்போது கட்சியைக் கைப்பற்ற நினைப்பது அம்மாவுக்குச் செய்யும் துரோகம்.”

``ஒட்டுமொத்த அ.தி.மு.க-வும் உங்கள் பின்னால் வந்துவிடும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறதா?”

“இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் கட்சியும் ஆட்சியும் மக்கள் இயக்கமாகத்தான் இருக்க வேண்டும். தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் அது சென்றுவிடக் கூடாது என்ற அம்மாவின் நோக்கம் கேள்விக் குறியாகியுள்ளது. ஒரு குடும்பத்துக்குள் கட்சியும், அந்தக் குடும்பத்தின் ஆதிக்கத்தில் ஆட்சியும் இருக்கும் சூழல் இருக்கிறது. அதற்காக 122 ஓட்டுகள்தான் அவர்களுக்கு இருக்கின்றன. லட்சக்கணக்கான தொண்டர்களும், கோடிக்கணக்கான வாக்காளர்களும் அம்மாவின் நோக்கத்தை நிறைவேற்ற மனஉறுதியோடு இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்., கட்சி தொடங்கியபோதுகூட ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டும்தான் அவரோடு இருந்தார். ஆனால், அதற்குப் பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் எம்.ஜி.ஆர் மகத்தான வெற்றிபெற்றார். அதே வரலாறு இப்போதும் திரும்பியுள்ளது. இப்போது சட்டமன்றத் தேர்தல் வைத்தால், மக்கள் செல்வாக்கு யாருக்கு எனத் தெரிந்துவிடும். அதற்கு அவர்கள் தயாரா? இதைச் சவாலாகவே கேட்கிறேன்.''

``நீங்கள் அரசியல் படிக்கட்டுகளில் உயர உறுதுணையாக இருந்த டி.டி.வி.தினகரன்தானே இப்போது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்? அவரை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு என்ன தயக்கம்?”

``கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்துதான் அம்மாவின் நன்மதிப்பைப் பெற்று இந்த இடத்துக்கு வந்துள்ளேன். தலைமைமீது கொண்ட விசுவாசம், உண்மை, உழைப்புதான் அடுத்தடுத்த இடங்களுக்கு என்னைக் கொண்டு சென்றன. `சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்பட இவர்கள் குடும்பத்தினர் துரோகம் செய்தார்கள்' எனக் குற்றம்சாட்டித்தான் ஒட்டுமொத்தக் குடும்பத்தையுமே கட்சியைவிட்டு நீக்கினார் அம்மா. அதன் பிறகு, யாரையும் கட்சியில் சேர்க்கவில்லை. சசிகலாவே வீட்டுக்குள் வருவதற்கு மட்டும்தான் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். கட்சிக்குள் அவருக்கோ, அவர் குடும்பத்தினருக்கோ எந்தப் பதவியும் தரவில்லை. அம்மாவுக்கு விருப்பம் இல்லாததை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?”

``சசிகலாவை முதலமைச்சர் ஆக்குவதற்கு எதிர்ப்புக் காட்டும் நீங்கள்தானே அவரை முன்னின்று பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்தீர்கள்?''

``அம்மா காலமானதும் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அப்போது பத்திரிகைகளிலும் பொதுச்செயலாளர் தேர்வுகுறித்து விரும்பத்தகாத சில செய்திகள் வந்துகொண்டிருந்தன. அதனால், தற்காலிகப் பொதுச்செயலாளராக ஒருவரை உட்காரவைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு அவரை முன்மொழிந்தோம். ஆனால், பதவியில் உட்கார்ந்த பிறகு முதலமைச்சர் பதவிக்குக் குறிவைத்து எனக்கு நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்தார். முதலமைச்சர் பதவிக்குரிய மரியாதையைச் சிதைக்கும் செயல்களைச் செயற்கையாக உருவாக்கினார். முதலமைச்சர் பதவிக்கு அவர் வர நினைத்தபோதுதான் மக்கள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டது; எதிர்ப்புக் கிளம்பியது.”

 

106p2.jpg

“ `மக்கள் எங்கள் பக்கம்' என்று நீங்களும் சொல்கிறீர்கள், சசிகலா தரப்பும் சொல்கிறதே?''

``சசிகலாவுக்கு எதிராக, பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் இருக்கிறார்கள். நான் முதலமைச்சராகப் பதவியில் இருந்தபோதே எனக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவைப் பெற்றிருக்க முடியும். முதலமைச்சர் பதவியில் அதிகாரத்தில் இருந்துகொண்டு அதைச் செய்வது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. அதை நான் விரும்பவில்லை. அம்மா விரும்பிய ஆட்சி நடைபெற வேண்டும்; கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால், அதற்கு நேர்மாறாக ஒரு குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்து நிறுத்தத்தான் இந்த நல்ல முடிவு எடுத்தோம். உள்ளாட்சித் தேர்தலில் எல்லாம் தெரிந்துவிடும்.”

`` `10 சதவிகிதம்தான் சசிகலாவைப் பற்றி சொல்லியுள்ளேன். 90 சதவிகிதம் மீதி இருக்கிறது' என்கிறீர்கள். அந்த 90 சதவிகிதத்தை எப்போது சொல்வீர்கள்?”

``அது என்னோடு புதைந்துபோகட்டும். அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை.''

`` `ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தில் சசிகலா இருக்கிறார்' என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளதே... உண்மையாகவே நடந்தது என்ன?”

``மக்களுக்கு இருக்கும் சந்தேகம் எனக்கும் இருக்கிறது. அது நிவர்த்தியாக வேண்டும் என்றுதான் `விசாரணை கமிஷன் அமைப்போம்' எனச் சொன்னோம். ஒரு தலைவரின் மரணம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். இது தொடர்பாக எங்கள் எம்.பி-க்கள்கூட ஜனாதிபதியைச் சந்தித்து மனு கொடுக்கத் தீர்மானித்துள்ளோம். அதில், மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.”

 ``சசிகலா குடும்பத்தைச் சேராத எடப்பாடி பழனிசாமிதான் இப்போது முதலமைச்சர். அவரை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவது ஏன்?’’

``எடப்பாடி பழனிசாமி, யாருடைய தேர்வு என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவரைவிட சீனியர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கும்போது, இவரை முதலமைச்சராக்கி இருக்கிறார்கள்.”

`` அ.தி.மு.க-வின் புதிய துணைப் பொதுச்செயலாளர் `நீங்கள் கட்சிக்குள் மீண்டும் வரவேண்டும்' என அழைப்புவிடுத்துள்ளாரே?”

`` `குடும்ப ஆதிக்கம் என்ற நிலையிலிருந்து அவர்கள் மாறுபட்டு இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்துவோம்; எந்த ஒரு குடும்பத்தின் தலையீடும் இதில் இருக்காது' எனச் சொல்லியிருந்தால், அதற்குரிய கருத்துப் பரிமாற்றங்கள் நடத்திருக்கும். சமீபத்திய சட்டமன்றம் கூடுவதற்கு முன்பே கருத்துப் பரிமாற்றம் நடந்திருக்கும். ஆனால், அதை அவர்கள் தவிர்த்தார்கள். அந்த மாதிரி மீண்டும் ஒரு சூழ்நிலை வந்தால், அது இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கு செய்யும் நன்றியாகத்தான் இருக்கும். அப்படிச் செய்யவில்லை என்றால், அதுதான் மிகப்பெரிய துரோகம்.''

106p3.jpg

``சசிகலா குடும்பம்போல்தான் உங்கள் குடும்பத்தினரின் பதவிகளையும் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா பறித்தாரே?”

``எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரையும் அம்மா கட்சியிலிருந்து நீக்கவில்லை. பொறுப்பில் இருந்து எனது மகனை அம்மா எடுத்தார்கள். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதற்குள், நிறைய விஷயங்கள் புதைந்துகிடக்கின்றன.”

`` `உங்கள் குடும்பத்தினர்கூட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார்கள்' என்கிற குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே?’’

‘`எனது மகன் கட்சிப் பொறுப்பில் இருந்தபோது, ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குக்கூட அவன் போன் போட்டுப் பேசியதில்லை; அரசு நிர்வாகத்தில் தலையிட்டதில்லை. அம்மா என்ன நினைக்கிறார்களோ, அப்படித்தான் நாங்கள் செயல்பட்டோம்; அம்மா சொன்ன வேலையைத்தான் செய்தோம். வேறு எந்த வேலையும் எங்களுக்குத் தெரியாது.’’

`` `குற்றவாளி எனத் தீர்ப்பு சொல்லப்பட்ட ஜெயலலிதா படங்களை அகற்ற வேண்டும்' என, ஸ்டாலின் புகார் அளித்துள்ளாரே?’’

``தி.மு.க-வினர் அவ்வப்போது தங்கள் மன அழுக்கை வெளிக்காட்ட, நாகரிகமற்றப் பேச்சால், நாட்டு மக்களை வதைத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள், பொது வாழ்வில் நாணயமற்றவர்கள்; மக்களால் தூக்கி எறியப்பட்டவர்கள். தனக்கென வாழாது, மக்களுக்காகவே வாழ்ந்து, மக்கள் மனதிலே நிறைந்த அம்மாவைப் பற்றி கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல், காழ்ப்புஉணர்ச்சியோடு விமர்சனம் செய்வது துரதிர்ஷ்டவசமானது.

காமராஜர், இந்திரா காந்தி, ராஜாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரையும் நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்தவர்கள். அது இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தி.மு.க எவ்வளவு முயற்சி செய்தாலும், அவதூறு பரப்பினாலும் அம்மாவின் புகழை மக்கள் மனதிலிருந்து அழிக்க முடியாது.’’

`` `ஸ்டாலினும்-ஓ.பி.எஸ்-ஸும் நாடகமாடுகிறார்கள்' என்று வைகோ சொல்கிறாரே?”

“அவர் ஏன் அப்படிச் சொன்னார் எனத் தெரியவில்லை. உண்மையிலேயே எனக்கு நடிக்கத் தெரியாது. சிறுவயதிலிருந்து நான் இதுவரை எந்த நாடகத்திலும் நடித்ததும் இல்லை.”

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.