Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா, தினகரனுக்கு அடுத்தடுத்த சிக்கல்கள்! மன்னார்குடி குடும்பத்தில் மயான அமைதி #VikatanExclusive

Featured Replies

சசிகலா, தினகரனுக்கு அடுத்தடுத்த சிக்கல்கள்! மன்னார்குடி குடும்பத்தில் மயான அமைதி #VikatanExclusive

sasikala_new_1a_16468.jpg

சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அடுத்தடுத்த சிக்கலை ஏற்படுத்த பன்னீர்செல்வம் அணி பரபரப்பாக இயங்கி வருகிறது. தேர்தல் ஆணையம் மூலம் குடைச்சலை கொடுக்க பன்னீர்செல்வம் அணி, சசிகலா புஷ்பா ஆகியோர் கொடுத்த புகார்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மன்னார்குடி குடும்பத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்ம யுத்தத்தை தொடங்கி இருப்பதாக சொல்லும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் சசிகலா தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மர்ம மரணம், சசிகலா, டி.டி.வி. தினகரன் நியமனம் ஆகியவை தொடர்பாக பேசத் தொடங்கிய பன்னீர்செல்வம் அணி, அதையே பிரசாரமாக்கி விட்டது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக சசிகலா புஷ்பா எம்.பி.யும் செயல்பட்டு வருகிறார். தேர்தல் ஆணையத்திடமிருந்து சசிகலாவுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸிக்கு சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பதில் அளித்திருந்தார். சசிகலாவின் நியமனமே செல்லாது என்று சொல்லும் பன்னீர்செல்வம் அணியினர், டி.டி.வி. தினகரன் பதிலை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியதால் சசிகலாவிடம் மீண்டும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் சசிகலா அணியினர் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனையில், தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்க வேண்டிய பதில் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விவாதிக்கப்பட்டது. ஆலோசனை அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா விளக்கம் அளிக்க உள்ளார். அதில், சசிகலாவின் நியமனத்துக்கான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் அ.தி.மு.க. விதியில் 5 ஆண்டுகள் என்ற நிபந்தனை பொதுச் செயலாளர் நியமனத்துக்குச் செல்லாது என்றும் குறிப்பிடவுள்ளனர்களாம்.

தேர்தல் விவகாரத்துக்கு பதில் அளித்தாலும் அடுத்தடுத்து சசிகலாவுக்கும். தினகரனுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பன்னீர்செல்வம் அணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த முக்கியமான நபர்கள் இன்னமும் பன்னீர்செல்வத்தின் அணியுடன் நெருக்கமாக இருக்கின்றனர். அவர்களது ஆலோசனையின்படி சசிகலா, டி.டி.வி.தினகரனின் பலம், பலவீனத்தை கொண்டு அவர்களுக்கு செக் வைக்கப்படுகிறது. தொடர்ந்து பன்னீர்செல்வம் அணியினரின் நடவடிக்கைகள் மற்றும் குடும்ப உறவுகளின் விரிசல் காரணமாக அந்த தரப்பில் மயான அமைதி நிலவுகிறது. குறிப்பாக சென்னையின் முக்கியமான பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாங்க சசிகலா தரப்பு ஆர்வம் காட்டியது. அந்த வீட்டின் உரிமையாளர், இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் மூலம் சசிகலா தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்த பன்னீர்செல்வத்தின் அணியினர் முயற்சிப்பதாக ஒரு தகவல் உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் நினைத்ததை சாதிக்க முடியவில்லை என்ற நிலையில் பா.ஜ.க. தரப்பு இருந்தாலும் பன்னீர்செல்வத்திடம் அடுத்த திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளது. இதன் வெளிப்பாடே பன்னீர்செல்வம் அணியினர் ஜெயலலிதாவின் அப்போலோ மரணத்தை கையில் எடுத்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணையும் அவர்கள் கேட்கத் தொடங்கி உள்ளனர். அப்போலோ மூலம் சசிகலாவுக்கு செக் வைத்து விடலாம் என்று பன்னீர்செல்வம் அணியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசு மூலம் அப்போலோவுக்குள் நுழைய பன்னீர்செல்வம் அணி முடிவு செய்துள்ளது.  இவையெல்லாம் சசிகலாவைச் சுற்றி பன்னீர்செல்வம் அணியினர் விரிக்கும் வலையாகவே கருதுகின்றனர் மன்னார்குடி குடும்பத்தினர்.

ttv_dinakaran_1_16292.jpg

இந்த சூழ்நிலையில்தான் மன்னார்குடி குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட விரிசல் தீபக் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. டி.டி.வி.தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைச் சொன்ன தீபக், பெங்களூருக்கு சென்று வந்தபிறகு அமைதியாகி விட்டார். மன்னார் குடும்பத்தினரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். டி.டி.வி.தினகரன், திவாகரன், எம்.நடராஜன், டாக்டர் வெங்கடேஷ் என அனைவரிடமும் அந்த நபர் தூது சென்றுள்ளார். அப்போது நடந்த பேச்சுவார்த்தை ஓரளவு சுமூக நிலையை எட்டினாலும் முற்றிலும் தீர்வு எட்டப்படவில்லை. அதையும் கையில் எடுத்துள்ளது பன்னீர்செல்வம் அணி.  இதற்கிடையில் சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும்பட்சத்தில் அவரால் நியமிக்கப்பட்டவர்கள், நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியலும் செல்லாது. அதை அடிப்படையாகக் கொண்டு பன்னீர்செல்வத்தின் அணியினர் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில் ஜெயலலிதாவே கட்சியில் எந்த பதவிகளையும் கொடுக்காமல் வைத்திருந்த சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுப்படுவதைதான் நாங்கள் எதிர்க்கிறோம். சசிகலாவின் வழிநடத்தலில் அ.தி.மு.க. செயல்பட்டால் நிச்சயம் ஒன்றரைக் கோடி தொண்டர்களும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கூவத்தூரில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்களிடம் நாங்கள் பேசினோம். அவர்கள் இரட்டை இலை யாரிடம் இருக்கிறதோ அங்கே ஆதரவளிப்போம் என்று தெரிவித்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை செயல்பட்டாலும் அங்குள்ளவர்களும் அதிருப்தியில் இருப்பது மட்டும் உண்மை. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தினகரன் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. உள்ளது. இது பலருக்குப் பிடிக்கவில்லை. வேறுவழியின்றி அமைதியாக இருக்கின்றனர். மக்களை சந்திக்கச் சென்ற எங்களுக்கு சசிகலா தரப்பிலிருந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். எங்களது தர்ம யுத்தம் நிச்சயம் வெற்றி பெறும். வரும் பட்ஜெட் கூட்டத்தில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் நிச்சயம் பதில் அளிக்க முடியாது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் நிகழ்ந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். சசிகலாவை எதிர்த்ததால் பா.ஜ.க., தி.மு.க.வுக்கு சாதகமாக இருப்பதாக அவர்கள் சொல்கின்றனர். இதில் எந்தவித முகாந்திரமும் இல்லை. நாங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் இதுபோன்று பேசுகின்றனர். மக்கள் ஆதரவும், கட்சியினரின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது" என்றனர்.

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், "தேர்தல் ஆணையத்துக்கு விரைவில் பதில் அளிக்கவுள்ளோம். எங்களது விளக்கத்தை நிச்சயம் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளும். எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றி வருகிறோம். தி.மு.க., பா.ஜ.க.வுடன் சேர்ந்து கொண்டு இந்த ஆட்சியை கலைக்க பன்னீர்செல்வம் தரப்பினர் முயற்சி செய்தனர். ஆனால் ஜெயலலிதாவின் விசுவாசிகளும், ராணுவ கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்ட இந்த கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களை வெற்றிப் பெற வைத்து விட்டனர். பன்னீர்செல்வம் அணிக்கு சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். ஏற்கெனவே வருமானவரித்துறை சோதனை என்ற பெயரில் எங்களுக்கு மறைமுகமாக நெருக்கடியை கொடுத்தனர். ஆனால் அவர்களின் திட்டம் தமிழகத்தில் நடக்கவில்லை. அ.தி.மு.க.விடம் 50 எம்.பி.க்கள் இருப்பதை பா.ஜ.க. அரசு மறந்து விட்டது. எங்களாலும் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுக்க முடியும். ஆனால் அதுபோன்ற வேலைகளில் அ.தி.மு.க. எம்.பி.க்கள். ஈடுபட மாட்டார்கள். ஜெயலலிதாவுக்குப் பின்னால் அ.தி.மு.க அழிந்து விடும் என்று சிலர் மனப்பால் குடித்தனர். அவர்களுக்கு எல்லாம் சிறந்த பாடம் கற்பிப்போம்" என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/82701-sasikala-dinakaran-face-loads-of-issues-mannargudi-family-remains-silent.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.