Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் தலைவர் இவர்களில் எவருமே இல்லை! - இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?

Featured Replies

எங்கள் தலைவர் இவர்களில் எவருமே இல்லை! - இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?

அதிரடி சர்வே முடிவுகள்விகடன் டீம்படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கே.ரமேஷ் கந்தசாமி, தே.சிலம்பரசன், அ.குரூஸ்தனம்

 

p8.jpg

`யாரோ... ஏதோ ஆட்சி செய்கிறார்கள், என்னமோ பண்ணட்டும்!' என விலகி நின்று அரசியலை வேடிக்கை பார்த்த காலம் இல்லை இது. `எங்களுக்கும் அரசியல் தெரியும். நாங்கள் போராடத் தயார். எதிர்த்து நிற்போம்' என நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டார்கள் இளைஞர்கள். ஜல்லிக்கட்டுப் புரட்சி முதல் இப்போதைய நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம் வரை அனைத்தையும் முன்னெடுத்து, அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டுசெல்பவர்களும் இளைஞர்களே!

அதேசமயம், `எல்லாவற்றுக்கும் நாங்களேதான் போராட வேண்டும் எனில், எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு?' என்ற கோபமும் பெரும்பான்மையான இளைஞர்கள் மனதில் கொந்தளிக்கிறது.

தமிழக அரசியல் சூழலில் அண்மைக் காலமாக நடக்கும் எதையும், சாமான்யத் தமிழன் ரசிக்கவில்லை. மீத்தேன் திட்ட எதிர்ப்பு, குளிர்பானங்களுடன் பிணைந்திருக்கும் நீர் அரசியல், நீட் தேர்வு குறித்த சரியான விவாதங்கள் எனப் பெரும் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியதை எல்லாம், இளைஞர்கள் முன்னெடுக்கிறார்கள்.

8p2.jpg

உண்மையிலேயே நம் இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன, அவர்கள் இன்றைய அரசியல்வாதிகளை எப்படிப் பார்க்கிறார்கள், யாரைத் தலைவராக ஏற்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள, தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் மட்டுமே  சர்வே நடத்தினோம். 

‘இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?' என்ற தலைப்பில் ஏழு கேள்விகளை முன்வைத்தோம். மொத்தம் 11,472 இளைஞர்கள் இந்த சர்வேயில் கலந்துகொண்டார்கள். இதில் பெண்கள் 4,641 பேர். இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள்.

 சர்வே முடிவுகள் உண்மையிலேயே நம்முடைய அத்தனை தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிடும். ஆம், தற்போதைய அரசியல் தலைவர்கள் யார் மீதும் இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற குரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. அரசியல் நடவடிக்கை என்பது நேரடியாகக் கட்சி அரசியலில் ஈடுபடுவது மட்டுமே அல்ல. ஒரு பார்வையாளனாக இருந்து அழுத்தம் கொடுப்பதும்தான் என்ற தெளிவும், இன்றைய இளைஞர்களிடம் இருக்கிறது என்பதை சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 

8p3.jpg

சர்வேயில் கலந்துகொண்ட அரவிந்த் என்கிற இளைஞர், “நாங்கள் அரசுடன் உரையாட விரும்புகிறோம். அரசியல் கட்சிகளும் தலைவர்களும் திட்டங்கள், தமிழகத்தின் அடுத்தடுத்த இலக்குகள் குறித்து எல்லாம் இளைஞர்களோடு விவாதிக்க வேண்டும். ஆனால், இங்கே இருக்கும் தலைவர்களுக்குத் தங்களின் கட்சிப் பிரச்னைகளைத் தீர்க்கவே நேரம் சரியாக இருக்கிறது. இடதுசாரிகளும் காலத்துக்கு ஏற்றாற்போல நவீனமாகாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஓர் அரசியல் வெற்றிடம் இருக்கிறது” என்கிறார்.

``தமிழக அரசியல்வாதிகளில் யாரை நீங்கள் தலைவராக நினைக்கிறீர்கள்?’’ என்ற கேள்விக்கு 44.4 சதவிகிதம் பேர் ``யாருக்கும் ஆதரவு இல்லை’’ என்றே சொல்லியிருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இவருக்கு 16.75 சதவிகித இளைஞர்களின் ஆதரவு இருக்கிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க செயல்தலைவருமான மு.க.ஸ்டாலினோ மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இவருக்கு 12.91 சதவிகித இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது.

8p4.jpg

`` `நமக்கு நாமே’ என ஸ்டாலின் ஊர்ஊராகச் சென்று மக்களைச் சந்தித்தாலும், அவர் மக்கள் நம்பிக்கையைப் பெற இன்னும் உழைக்க வேண்டும்’’ என்கிறார்கள் இளைஞர்கள்.

``தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சிக்குள்ளும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் அவரை மீறித்தான் கட்சியின் மற்ற தலைவர்களும், கட்சிக்காரர்களும் செயல்படுகிறார்கள்'’ என்பது இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

8p5.jpg

பன்னீர்செல்வம் குறித்து பேசுகையில், ``அவர் தவறுகள் பல செய்திருக்கிறார். அ.தி.மு.க அரசின் தவறுகளில் அவருக்கும் பங்கு இருக்கிறது. முதலமைச்சர் பதவியைத் தன்னிடமிருந்து பறித்த பிறகே, சசிகலாவுக்கு எதிராகப் பொங்குகிறார் என்பதையெல்லாம் நாங்களும் புரிந்துவைத்திருக்கிறோம். அதேநேரம் மக்கள் எளிதாகச் சந்திக்கக்கூடிய மனிதராக இருக்கிறார். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு, பா.ஜ.க-வின் கைப்பிள்ளையாக இருக்கக் கூடாது’’ என்பது இளைஞர்களின் குரல்.

வாக்குவங்கி அரசியலைக் கடந்து, ஒருசமயம் நம்பிக்கையான களச்செயற்பாட்டாளராகப் பார்க்கப்பட்ட வைகோவின் இமேஜ் முற்றிலுமாகச் சரிந்திருக்கிறது. நாம் சந்தித்த 11,472 பேரில் 107 பேர் மட்டுமே வைகோவுக்கு ஆதரவு அளித்தார்கள்.

``ஒருகாலத்தில் எங்களின் பெரும் நம்பிக்கையாளராக வைகோ இருந்தார். ஆனால், இப்போது சசிகலாவுக்குத் துதிபாடுவது, மிகவும் உணர்ச்சிவயப்பட்டு மேடைகளிலும், மீடியாவிலும் முழங்குவது என தாம் எந்தத் திசையில் பயணிக்கிறோம் எனத் தெரியாமல் தடுமாறுகிறார். அவரும் குழம்பி, எங்களையும் குழப்புகிறார். அவர் வாக்குவங்கி அரசியலிலிருந்து வெளியேறி, முழுநேரக் களச் செயற்பாட்டாளராக மாற வேண்டும். இல்லை எனில், அரசியல் வரலாற்றிலிருந்து  தன் பங்களிப்புப் பக்கங்களைத் தானே கிழித்தவராக மாறிவிடுவார்” என்கிறார் கோவையைச் சேர்ந்த நவீன்.

சீமான் குறித்தும் இதேபோன்ற கருத்தைத்தான் இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். “சீமான் பல நேரங்களில் உணர்ச்சிவசப்படும் தலைவராக மட்டுமே இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. மக்கள் நலன்சார்ந்த விஷயங்களில் அவர் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டும்” என்கிறார் சேலம் சுந்தர்.

``அரசியல் என்பது தேர்தலில் போட்டியிடுவது மட்டுமே அல்ல என்பதை, யாராவது விஜயகாந்துக்கு உணர்த்துங்கள். அவர் தேர்தல்காலத் தலைவர்’’ என்பது விஜயகாந்த் குறித்த இளைஞர்களின் விமர்சனம்.

அன்புமணி தன்னை எல்லாருக்குமான தலைவராக முன்னிறுத்த பல முயற்சிகள் எடுத்தாலும், பெருவாரியான மக்கள் அவரை இன்னும் நம்பத் தயாராக இல்லை. தர்மபுரியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, ``பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாகி ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், அவர் இன்னும் நத்தம் காலனியின் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க வில்லை. அவரை எப்படி எல்லோருக்குமான தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

8p8.jpg

திருமாவளவனையும் எதிர்வினையாற்றும் தலைவராகத்தான் இளைஞர்கள் பார்க்கிறார்கள். “சமூகப் பிரச்னை எழும்போதெல்லாம் திருமாவளவனின் குரல் உரக்கக் கேட்கிறது. ஆனால், அது மட்டுமே ஒரு மக்கள் தலைவருக்குப் போதுமா? மாற்று அரசியல் கொள்கையையும், அதற்கான செயல்திட்டங்களையும் முன்வைத்து எங்களின் நம்பிக்கையைப் பெற வேண்டாமா?” எனக் கேட்கிறது இளைய தலைமுறை.

அண்மையில் எம்.ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடங்கிய தீபா குறித்து நம்மிடம் பேசிய இளைஞர்கள், “எந்த ஓர் இலக்கும் திட்டமும் இல்லாமல் இருக்கிறார் தீபா. எதுகுறித்து கேள்வி எழுப்பினாலும், `விரைவில் இது குறித்து விளக்கமான அறிக்கை வரும்' என்கிறார். அறிக்கையும் வரவில்லை. போராட்டக் களங்களிலும் தென்படுவது இல்லை. சுயநல அரசியலின் புதுவரவு தீபா. அவரைப் பொருட்படுத்த வேண்டியது இல்லை’’ என்கிறார்கள்.

அதேநேரம், தீபாவுக்கு இருக்கும் குறைந்தபட்ச ஆதரவுகூட தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. சசிகலா, டி.டி.வி.தினகரனையும் இளைஞர்கள் முழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள்.

8p6.jpg

8p7.jpg

8p9.jpg

8p10.jpg

`‘இளைஞர்கள் புதிதாக  ஒரு கட்சி தொடங்க அவசியம் இருக்கிறதா?’’ என்று நாம் முன்வைத்த கேள்விக்கு,  சென்னையைச் சேர்ந்த சிவக்குமார் அளித்த பதில் அவ்வளவு தெளிவு.

“புதிய கட்சி தேவைதான். அதேநேரம் இருக்கிற அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்காமல் நம் இளைஞர்கள் அதில் இணைந்து செயற்குழு, பொதுக்குழு அளவுக்கு முன்னேறி, அவற்றைக் கைப்பற்ற வேண்டும். மக்களுக்கான அறம்சார்ந்த கட்சிகளாக அவற்றை மாற்ற வேண்டும். இது நீண்டகாலச் செயல்திட்டம். ஆனால், அத்தியாவசியமான ஒன்று” என ஒரு திட்டத் தையும் முன்வைக்கிறார் சிவக்குமார்.

இளைஞர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். கட்சிகளும் தலைவர்களும் அவர்களின் கருத்துக்குச் செவிசாய்த்து, அவர்களுடன் உரையாடத் தயாராக வேண்டும். இல்லையென்றால், தலைவர்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். வெகுவிரைவில் அவர்கள் அரசியல் களத்திலிருந்து துடைத்தெறியப்படுவார்கள் என்பதைத்தான் இந்தச் சர்வே உணர்த்துகிறது!

http://www.vikatan.com/anandavikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.