Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் ஆணையத்துக்கு, சசிகலா அளித்த 70 பக்க அடடே விளக்கம்

Featured Replies

தேர்தல் ஆணையத்துக்கு, சசிகலா அளித்த 70 பக்க அடடே விளக்கம்

sasikala_new_2a_10116.jpg

சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி பன்னீர்செல்வம் அணியினர் கொடுத்த புகார் மனுவுக்கு, சசிகலா இன்று தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளார். 70 பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். பின்னர், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மவுன தியானம் செய்தார். சுமார் 40 நிமிட தியானத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் விஸ்வரூபம் தமிழக அரசியலில் மட்டுமின்றி, அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சியடைய வைத்தது.

இதையடுத்து, பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அணி உருவானது. இந்த அணியில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், மைத்ரேயன் எம்பி, எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் மற்றும் பி.ஹெச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் சேர்ந்தனர். மேலும் அ.தி.மு.க தொண்டர்களின் ஆதரவையும் பெற்றார் பன்னீர்செல்வம்.

இதனிடையே, அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் அணியினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் பதில் அளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்தநிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை உறுதியானது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார்.

சிறை செல்வதற்கு முன்னதாக டி.டி.வி.தினகரனை, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தார். இதையடுத்து, சசிகலாவுக்கு பதில் டி.டி.வி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்தார். அவரது பதிலை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக 70 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சசிகலாவின் வழக்கறிஞர்கள் ராகேஷ் சர்மா, பரணிகுமார் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்பித்தனர். அதில், கட்சியின் பொதுக்குழுதான் என்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. பொதுக்குழு தேர்வு செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை. கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே பொதுச் செயலாளர் நியமனம் நடந்துள்ளது. புகார் தெரிவித்தோர் எல்லாம் என்னைத் தேர்வு செய்ய முன்மொழிந்தவர்கள். அவைத் தலைவராக இருந்த மதுசூதனனின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/83229-sasikala-writes-reply-letter-to-election-commission-about-admk-general-secretary-appointment.html

  • தொடங்கியவர்

அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில்

 

 
சசிகலா | கோப்புப் படம்.
சசிகலா | கோப்புப் படம்.
 
 

அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

70 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை சசிகலாவின் வழக்கறிஞர்கள் ராகேஷ் சர்மா, பரணி குமார் ஆகிய இருவரும் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர்.

தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், ''கட்சியின் பொதுக்குழுதான் என்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. அதிமுக தேர்தல் விதிகளுக்கு உட்பட்டே அனைத்து நியமனங்களும் நடைபெற்றுள்ளன. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் ஒப்புதலும் பெறப்பட்டது.

புகார் தெரிவித்தோர் எல்லாம் என்னை தேர்வு செய்ய முன்மொழிந்தவர்கள். எனவே அதிமுக பொதுச் செயலாளர் நியமனத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை'' என்று சசிகலா பதில் அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட பதில் கடிதத்தில் சசிகலாவின் கையொப்பம் இடம்பெற்றிருந்தது.

பின்னணி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். ஜெயலலிதா காலமான அன்றே முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், பிப்ரவரி 5-ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராகும் முயற்சியை எடுத்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 7-ம் தேதி அதிமுக தலைமையை ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தார். அடுத்தநாள் அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அப்போதே, பொருளாளர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதன்பின், அவைத் தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம் பக்கம் வந்தார். அவரையும் கட்சியை விட்டு சசிகலா நீக்கினார். அப்போது, சசிகலா தன்னை நீக்கும் முன் தான் அவரை நீக்கிவிட்டதாக மதுசூதனன் தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுகவின் சட்ட விதிகளை காரணம் காட்டி, சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மதுசூதனன் கடிதம் எழுதினார்.

கடந்த 14-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் சசிகலா சிறைக்கு சென்றார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பியான வி.மைத்ரேயன் தலைமையில் 11 எம்பிக்கள் கொண்ட குழுவினர் கடந்த 16-ம் தேதி டெல்லியில், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புகாருக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சசிகலா இப்போது இருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸுக்கான பதிலை அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் தினகரன் அனுப்பினார். அந்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று அறிவித்தது.

நோட்டீஸுக்கு சசிகலாதான் பதிலளிக்க வேண்டும். வரும் 10-ம் தேதிக்குள் சசிகலா கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் அனுப்பியுள்ளார்.

70 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சசிகலாவின் வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர்.

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-பொதுச்-செயலாளர்-நியமன-விவகாரம்-தேர்தல்-ஆணையத்துக்கு-சசிகலா-பதில்/article9578908.ece?homepage=true

  • தொடங்கியவர்

' வில்லங்கத்தைப் போக்குமா வீடியோ ஆதாரம்?!'  -ஆணையத்தை எதிர்நோக்கும் சசிகலா

சசிகலா

' அ.தி.மு.க பொதுச் செயலாளராக கட்சி விதிகளின்படியே தேர்வு செய்யப்பட்டேன்' என தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா. ' பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் தருவதற்கு வாய்ப்பில்லை. சசிகலாவால் நீக்கப்பட்டவர்களின் பதவிகளும் பறிபோக வாய்ப்பில்லை' என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருகிறார் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. ' எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் நியமனம் நடக்கவில்லை. தொடர்ந்து ஐந்தாண்டுகள் உறுப்பினராக உள்ளவர்கள்தான், பதவிக்குப் போட்டியிட முடியும். தவிர, அ.தி.மு.கவின் உறுப்பினர் அட்டைகூட சசிகலாவிடம் இல்லை. அவரைக் கட்சியில் சேர்த்த ஜெயலலிதா, அடையாள அட்டையைக் கொடுக்கவில்லை. அப்படி ஏதேனும் உறுப்பினர் அட்டையை அவர் காண்பித்தால், அதன் உண்மைத்தன்மை பற்றி பரிசீலிக்க வேண்டும். அதில் குற்றம் இருந்தால் டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆணையத்தின் சார்பில் புகார் கொடுக்க வேண்டும்' என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார் சசிகலா புஷ்பா. அதேநேரம், பன்னீர்செல்வம் அணியில் இருந்து மைத்ரேயன் உள்ளிட்டவர்களும் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். இதற்கு விளக்கம் அளித்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடிதம் அனுப்பியிருந்தார். இதை ஏற்காத ஆணையம், ' மார்ச் 10-ம் தேதிக்குள் பொதுச் செயலாளர் சசிகலா பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதனையடுத்து, சசிகலாவை நேரில் சந்தித்து, அவரிடம் கடிதம் பெற்று அனுப்பியுள்ளனர் அ.தி.மு.க தலைமைக் கழக வழக்கறிஞர்கள். அந்தக் கடிதத்தில், ' கட்சியின் பொதுக்குழுதான் என்னைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே பொதுச் செயலாளர் நியமனம் நடந்துள்ளது. புகார் தெரிவித்தோர் எல்லாம் என்னைத் தேர்வு செய்ய முன்மொழிந்தவர்கள். இந்த நியமனத்துக்கு அவைத் தலைவராக இருந்த மதுசூதனனின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஓ.பன்னீர்செல்வம்' இந்தப் பதிலை ஆணையம் ஏற்குமா?' என அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். " சசிகலாவை பொதுச் செயலாளராக முன்னிறுத்தியதே அவைத்தலைவர் மதுசூதனனும் ஓ.பன்னீர்செல்வமும்தான். வானகரத்தில் நடந்த பொதுக்குழு நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகளை ஆணையத்தின் கவனத்திற்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா போட்டியின்றித்தான் தேர்வு செய்யப்பட்டார். ' கட்சி விதிகளின்படி மாவட்ட அளவில் ஏன் தேர்தல் நடத்தவில்லை?' என யாரும் கேள்வி கேட்டதில்லை. இப்படித்தான் ஆறு முறையும் பொதுச் செயலாளராக தேர்வானார் ஜெயலலிதா. கட்சியின் பொதுக்குழு கூடி அவரை முன்மொழியும். இதுகுறித்த தகவலை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு நிர்வாகிகள் கடிதம் மூலம் தெரிவிப்பார்கள். தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொள்ளும். அதே வழிமுறைதான் சசிகலா நியமனத்திலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அவைத் தலைவரால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. இந்த நியமனம் எப்படிச் செல்லாமல் போகும்? தேர்வு செய்தவர்களே புகார் சொல்வதை ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதைத்தான் கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறோம். விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்" என்றார் உறுதியாக. 

" ஜெயலலிதாவுக்குப் பொருந்திய காரணிகள் எதுவும் சசிகலாவுக்குப் பொருந்துவதற்கு வாய்ப்பில்லை. அண்ணா தி.மு.கவின் அனைத்துத் தொண்டர்களாலும் மதிக்கப்பட்டவர் ஜெயலலிதா. பதவியைக் குறுக்கு வழியில் பெறுவதற்காக நிர்வாகிகளை பயன்படுத்திக் கொண்டார் சசிகலா. அந்த நேரத்தில் ஏதோ ஒரு நிர்பந்தத்தில்தான் சசிகலாவை நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். கட்சித் தேர்தல் என்று வந்துவிட்டால், அடிமட்டத் தொண்டர்களால் நிராகரிக்கப்படுவோம் என்பதை உணர்ந்துதான், பொதுக்குழு உறுப்பினர்கள் வழியாக பதவிக்கு வந்தார். அதேநாளில், 'பொதுச் செயலாளர் தேர்தலுக்கு வேட்புமனு வழங்க வேண்டும்' என சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன் வந்தபோது, அ.தி.மு.க நிர்வாகிகளால் தாக்கப்பட்டார். இதுகுறித்த செய்திகளும் வெளியானது. கட்சிப் பதவிக்கு போட்டி என்று வரும்போது வேட்புமனுத் தாக்கல் செய்து முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் கட்சி விதி. இந்த விதிகள் எதுவும் சசிகலா விஷயத்தில் கடைபிடிக்கப்படவில்லை. எனவே, ஜெயலலிதா இருந்தபோது கட்சிப் பதவியில் யார் யார் இருந்தார்களோ, அவர்களது பதவி அப்படியே தொடர்கிறது. அவைத்தலைவராக மதுசூதனனும் பொருளாளராக பன்னீர்செல்வமும் இன்னமும் கட்சிப் பதவியில் தொடர்கின்றனர். ஐந்தாண்டுகளாக கட்சியின் உறுப்பினராகவே இல்லாத சசிகலா, பொதுச் செயலாளர் பதவிக்கும் தகுதியற்றவர். எனவே, அவருடைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறோம். சசிகலா அளித்த விளக்கத்தை ஆணையம் ஏற்றுக் கொள்ளாது. விரைவில் கட்சித் தேர்தல் நடத்தப்படும் என நம்புகிறோம்" என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 

'டி.டி.வி தினகரன் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகியாக இல்லை' என அவரது விளக்கத்தை நிராகரித்த தேர்தல் ஆணையம், ' சசிகலா பதவிக்கு என்ன காரணம் சொல்லப் போகிறது?' என ஆவலோடு காத்திருக்கிறார்கள் பன்னீர்செல்வம் அணியினர். 

http://www.vikatan.com/news/tamilnadu/83269-will-video-evidence-make-the-issue-to-sort-out-sasikala-plans-to-submit-them-during-commission.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.