Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறதா இரட்டை இலை?

Featured Replies

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறதா இரட்டை இலை?

   பன்னீர்செல்வம்       

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க பொதுச்செயலாளராக  சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல்ஆணையத்திடம் கொடுத்துள்ள புகார்தான் தமிழக அரசியலில் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது.'அ.தி.மு.க-வில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருப்பவரை மட்டுமே கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்க முடியும்' என்ற கட்சியின் விதிகளை ஓ.பி.எஸ். அணி தங்களின் புகார் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் புகாருக்கு பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, அந்த நோட்டீசை பெற்றுக்கொண்டார். எனினும் அந்த நோட்டீசுக்கு சசிகலா முதலில் பதில் அளிக்காமல், அவரால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி தினகரன் பதில் அளித்தார். அதில், "சசிகலாவை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளனர். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்தவித சட்டமீறலும் இல்லை. எனவே, சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஓ.பி.எஸ் அணிக்குச் செல்லுமா இரட்டைஇலை?

தினகரன் அனுப்பியிருந்த பதிலைத் தேர்தல் கமி‌ஷன் ஏற்கவில்லை. அ.தி.மு.க நிர்வாகிகளாக ஏற்கெனவே இருப்பவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததுடன், தினகரனின் பதிலை நிராகரித்து விட்டது. இதனால், சுதாரித்துக் கொண்ட சசிகலா தரப்பு, உடனடியாக 70 பக்கத்துக்கு பதில் மனு தயார் செய்து, சிறையில் உள்ள சசிகலா கையெழுத்திட்டு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தது. சசிகலாவின் பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருந்தார் என்ற தகவல் தற்போது கசியத் தொடங்கியுள்ளது."வி..கே. சசிகலாவாகிய நான், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சரியான வழிகாட்டுதல்படியே தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.  கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்தான் என்னைத் தேர்வு செய்தனர். 'என்னை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது' என்று புகார் கொடுத்தவர்கள்தான், கடந்த டிசம்பர் 29-ம் தேதி என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கு முன்மொழிந்தனர். தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதோடு, இந்திய அளவில் பலமான மூன்றாவது பெரிய கட்சியாகவும் இருக்கிறது. கட்சியை விட்டு வெளியேறியவர்களும், வெளியேற்றப்பட்டவர்களும் கட்சியை உடைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். அவர்கள்தான் இந்தப் புகாரை அளித்துள்ளனர் என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று சசிகலா தனது பதிலில் தெரிவித்துள்ளார். 

                                பன்னீர்செல்வம் - சசிகலா                                     

சசிகலா தரப்பு தெரிவித்துள்ள பதிலும், அ.தி.மு.க.-வின் விதிகளும் ஒன்றோடு ஒன்று பொருந்துகிறதா என்றால், அதுவும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள் மூத்த நிர்வாகிகள். "அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக தொடர்ந்து ஐந்தாண்டுகள்  இருந்துள்ள ஒருவர்தான், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு  போட்டியிட முடியும். அவரைத் தேர்வு செய்வது என்பது அடுத்தக்கட்ட நிலை" என்கிறது கட்சி விதி. கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, சசிகலாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி, அப்போது பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். சசிகலாவுடன் அவரது கணவர் நடராஜன், வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின்  உறவினர்கள் வி.என். திவாகரன், டி.டி.வி. தினகரன், பாஸ்கரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், அடையார் மோகன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் உள்ளிட்ட ஏராளமானோரை ஜெயலலிதா அப்போது கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. தன்னுடைய காலகட்டத்தில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இப்படிப் பலரை நீக்கியிருக்கிறார். 'செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கடிதம் கொடுத்ததால் மீண்டும் சிலரை, மன்னித்து தாயுள்ளத்தோடு கட்சியில் சேர்த்துக் கொண்டதாக' பின்னர் அறிவிப்பும் செய்திருக்கிறார். நீக்கப்பட்டவர்கள் மற்றும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டவர்கள் போன்றோர் விபரம் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் பிரசுரிக்கப்படுவது வழக்கம்.

2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சசிகலாவை நீக்கி எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக, 2012 மார்ச் 31-ம் தேதி அன்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையின் மூலம் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பார்த்தால், வரும் 31-ம் தேதி வந்தால்தான் சசிகலா கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடையும். 'சசிகலாவோடு சேர்த்து நீக்கப்பட்டவர்கள் மீதான நடவடிக்கை அப்படியே தொடர்கிறது, சசிகலாவை மட்டும்தான் கட்சியில் மீண்டும் சேர்த்துள்ளேன்' என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி பார்த்தால், தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட டி.டி.வி. தினகரன் இல்லை. இப்படிப்பட்ட குழப்பமான நிலையில்தான் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் அணி புகார் அளித்துள்ளது. அந்தப் புகாருக்கு டி.டி.வி. தினகரன் பதில் கொடுத்ததே தேர்தல் கமிஷனிடம் 'ட்ரையல்' பார்த்தது போன்றதுதான். தினகரன் அனுப்பிய பதிலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருந்தாலோ, பெற்றுக்கொண்டு மௌனமாக இருந்திருந்தாலோ சசிகலா நியமனம் செல்லும் என்பதை உறுதி செய்து கொண்டிருக்கலாம். ஆனால், "நாங்கள் சசிகலா பதிலைத்தான் கேட்டோம்" என்று தேர்தல் கமிஷன் அனுப்பிய பதில், டி.டி.வி. தினகரன் அனுப்பிய பதிலைவிட வேகமாக இருந்தது. தினகரனின் பதில் நிராகரிக்கப்பட்ட மறுநிமிடமே சசிகலா தரப்பினரின் சுதி குறையத் தொடங்கி விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அ.தி.மு.க. உள்கட்சி விதிகளின்படி, பொதுச்செயலாளரை தேர்வு செய்யவோ, நீக்கவோ அவைத் தலைவருக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது. அவைத் தலைவர் நினைத்தால், பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்தே இல்லாமல், ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பொதுச்செயலாளரை நீக்கி விடலாம். அப்படி ஒரு நீக்கம் எந்தக் காலத்திலும் நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் மிகவும் நம்பிக்கையானவர்களையே அவைத்தலைவர் பொறுப்பில் வைத்திருந்தார் ஜெயலலிதா. பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்படுவோர், அந்தப் பதவிக்கு வந்ததும், அவர் நினைத்தால், அவைத்தலைவரை மாற்றும் அதிகாரம் உண்டு. அதற்கு யார் கையெழுத்தும் தேவையில்லை. நாவலர் நெடுஞ்செழியன், புலவர் புலமைப்பித்தன் ஆகியோரைத் தொடர்ந்து மதுசூதனன்  அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் பொறுப்பை தற்போது வகித்து வருகிறார். மதுசூதனனையும் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளராக பதவியில் இருப்போர் நீக்கலாம், ஆனால் நீக்குகிறவர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளராக இருக்க வேண்டும். தமது நியமனத்தை நியாயப்படுத்தி சசிகலா தரப்பில் அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்துக்கு தேர்தல் கமிஷனில் இருந்து இன்னும் பதில் வரவில்லை. பதில் வர தாமதமாகிற காரணத்தாலேயே சசிகலா தரப்பு இதில் வெற்றி பெற்று விட்டதாகவோ, ஓ.பி.எஸ். தரப்பு தோற்று விட்டதாகவோ கருதமுடியாது. தேர்தல் ஆணையம், இதற்கான பதிலை எப்போது வேண்டுமானாலும் தரலாம். ஆனால், தமிழகத்தில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் கமிஷன் பதிலை அதிக நாளைக்கு தள்ளிப்போட முடியாது... சசிகலா மீது புகார் கொடுத்த ஓ.பி.எஸ்.  தரப்பிடம் இப்போது கட்சியின் சின்னமும், கட்சியும் இல்லை, புகாரில் சிக்கியிருக்கும் சசிகலா தரப்பில்தான் சின்னமும், கட்சியும் இருக்கிறது. கட்சியின் அவைத்தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் கூடி கட்சிக்கு புதிய நியமனப் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். அதேவேளையில், கட்சியின் பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி, வாக்களித்துதான் தேர்வு செய்ய முடியும். அந்த வாக்களிப்பில் முறைகேடு நடந்துள்ளது என்று பொதுக்குழுவில் வாக்களிக்கும் தகுதியுள்ள ஒருவர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தால் அந்த தேர்தல் செல்லாது என்று தேர்தல் கமிஷனால் அறிவிக்க முடியும்.


                                      பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி                     

ஏற்கெனவே, பொதுக்குழு உறுப்பினர்களை மிரட்டியும், கடத்தியும்தான் கையெழுத்து வாங்கி பொதுக்குழுவைக் கூட்டினார்கள் என்று சசிகலா தரப்பினர் மீது பல புகார்கள் தேர்தல் கமிஷனின் பார்வைக்குப் போயிருப்பதால், சசிகலா தரப்புக்கு நூறு சதவீத சிக்கல் உள்ளது. இந்த உள்கட்சி விவகாரம் தெரிந்த காரணத்தாலோ, என்னவோ மதுசூதனன் தரப்பினர் ஆர்.கே.நகரில் தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கி விட்டுள்ளனர். மிகவும் இக்கட்டான இந்த காலகட்டத்தில் ஓ.பி.எஸ். அணிக்கு, மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் திரும்ப ஆரம்பித்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, இரட்டை இலை சின்னம்  எந்த அணிக்கு கிடைக்கிறதோ அந்த அணிக்கு சின்னத்தோடு சேர்த்து கட்சியும் வந்து விடும்... ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கு இப்போதுள்ள  சட்ட சிக்கலை மொத்தமாகக் களைய மாதக்கணக்கில் ஆகலாம், ஆனால் அதற்கு இப்போது போதுமான அவகாசம் இல்லை. ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த இடைத்தேர்தலில் இரட்டை  இலை யாருக்கு என்று சொல்ல வேண்டிய கட்டாயம் தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டிருக்கிறது. "தேர்தலில் போட்டியிட சின்னம் கண்டிப்பாகத் தேவை. சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னத்தை தேர்தல் கமிஷனே ஒதுக்கி விடுவதால் அவர்களுக்கு அந்தக் கவலை இல்லை... கோடானகோடி தொண்டர்களை கையில் வைத்திருக்கும் ஒரு கட்சிக்கு, அதன் சின்னம்தான், தொண்டர்களின் வாக்குகளை உறுதி செய்கிறது. சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய, நடைமுறையில் இருக்கும் ஒரு கட்சியின் விதிமுறைகளே தேர்தல் கமிஷனால் பெரும்பாலும் பின்பற்றப்படும்" என்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள். அப்படி கட்சி விதிமுறைகள் பின்பற்றப்பட்டால், அது  சசிகலா தரப்புக்கு சாதகமான நிலையில் இல்லை என்பதே நடைமுறையில் உள்ள நிஜம்!

http://www.vikatan.com/news/tamilnadu/83624-o-panneerselvam-faction-may-get-aiadmk-party-symbol.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.