Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்படும் பரிதாபம்

Featured Replies

“என்ன செய்யப்போறோம்னு தெரியலை!”


`கருத்தரித்தபோது ஒரு சம்பா, பாலூட்டுகையில் ஒரு சம்பா, உடல் மெலிவுக்கு ஒன்று, உடல் சோர்வுக்கு மற்றொன்று, பஞ்சத்துக்கு ஒன்று, புயலுக்கு இன்னொன்று’ என, நம் தமிழ்நாட்டிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ரகங்கள் இருந்தன. வீரிய ஒட்டு ரகங்களின் வரவால் அத்தனையும் வழக்கொழிந்து, 30-40 புதிய ரகங்களை மட்டுமே இன்று நாம் நம் மண்ணில் கொண்டிருக்கிறோம்.
தமிழ் மருத்துவத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடித் தேடி மீட்டெடுக்கும் பணியை, பிறப்பின் கடமையாகச் செய்துவருபவர்களில் ஒருவர் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த `நெல்' ஜெயராமன். தன் ஒற்றை சைக்கிளில் வீதிவீதியாகத் திரிந்து, பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்கும் வேலையை மேற்கொள்பவர் `வேளாண் போராளி' ஜெயராமன்.
`FEDCOT' எனும் நுகர்வோர் அமைப்பை நிறுவி, `எந்த உணவில் எல்லாம் கலப்படம் இருக்கிறது, நுகர்வோர் எப்படியெல்லாம் விழித்தெழ வேண்டும்?’ எனச் செயல்பட்டவர்.
சோறுடைத்த சோழநாட்டு நெற்களம், உரங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் விஷமேற்றப்படுவதைக் கண்டு, மனம் வெதும்பினார். இப்படி, நெற்களத்தில் விஷ வித்துகள் நிறைவதற்குக் காரணம், பாரம்பர்ய நெல் இனங்களை நாம் இழந்ததுதான் என்பதை நம்மாழ்வார் ஐயாவுடன் இணைந்து பணியாற்றுகையில் புரிந்துகொண்டார். அப்போது முதல், பாரம்பர்ய நெல் விதைகளை மீட்டெடுப்பதையே தன் முதன்மைப் பணியாகக் கொண்டு திட்டமிட்டுக் களம் இறங்கினார்.
`உங்களுக்கு ஒரு கிலோ பாரம்பர்ய விதை நெல் வேணுமா... வாங்க வந்து வாங்கிட்டுப் போங்க. பணம் வேண்டாம். அதுக்குப் பதிலாக இரண்டு கிலோ பாரம்பர்ய விதை நெல் விளைஞ்சதும் திருப்பித் தாங்க. இதுதான் ஒப்பந்தம்’ என, கடந்த பல ஆண்டுகளாகப் பாரம்பர்ய ரகங்களைத் தமிழகமெங்கும் விதைக்க வித்திட்டவர்களில் ஒருவர் ஜெயராமன்.
தன் பெயரையே `நெல்' ஜெயராமன் என கெசட்டில் மாற்றிக்கொண்ட அந்த விதை நாயகனுக்கு, பாரம்பர்ய விதைகளைக் காப்பாற்றியதற்காக தேசிய விருதும் மாநில விருதும் கிடைத்தன. 2006-ம் ஆண்டு ஆதிரெங்கத்தில் தொடங்கி ஆண்டுதோறும் நெல் திருவிழாவை நடத்தி, படித்த இளைஞர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாரம்பர்ய நெல்விதைகளைக் காப்பதன் அவசியத்தைக் கடத்திவருகிறார்.
கடந்த மாதத்தில், ஒருநாள் இப்படி விதைக்கான ஒரு பயணத்தின்போதுதான், அவருக்குச் சிறுநீர்ப்பாதையில் வலியெடுத்தது. மருத்துவ மனைக்குச் சென்றபோது, இயற்கை தன் கோரமுகத்தைக் காட்டியது.
ஆம், `நெல்' ஜெயராமன் இப்போது கொடிய புற்றுநோயின் பிடியில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மிச்சம் இருக்கும் பாரம்பர்ய நெல் ரகங்களையும் தேடிப்பிடித்து, அடுத்த தலைமுறைக்கு, பல மருத்துவக் குணம்கொண்ட அரிசி இனங்களை அடையாளம் காட்டிய அந்த உள்ளத்துக்கு, இன்று மருத்துவம் செய்யக்கூட வசதி இல்லை.
நெல் ஜெயராமன், இப்போதும் அழவோ அசரவோ இல்லை. ``வைகாசியில் நெல் திருவிழா நடத்தணும். வருஷாவருஷம் எண்ணிக்கை அதிகமாகுது. கடந்த வருஷமே 5,000 பேர் வந்து பாரம்பர்ய நெல் வாங்கிட்டுப் போனாங்க. இந்த வருஷம் அதையும் தாண்டும். ஆடிக்குள்ள வைத்தியத்தை முடிச்சுடணும். புதுசா இன்னும் 15 ரகங்கள் இருக்கு. நாற்றங்காலிடணும்...'' எனப் பேசிக்கொண்டிருக்கிறார். சென்னையின் உயர்ந்த மருத்துவமனையின் நிழலில், ஓரமாகக் குவித்துவைக்கப்பட்டிருக்கும் மணலில் அவரது ஒன்பது வயது பாலகன் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறான்.
``எங்ககிட்ட இருந்த நெல்லை எல்லாம் வித்து, 95,000 ரூவாதான் வந்துச்சு. ஆனா, இங்கே சிகிச்சைக்கான செலவு 10 லட்சம் ரூபாயைத் தாண்டுங்கிறாங்க. என்ன செய்யப்போறோம்னு தெரியலை'’ என்கிறார் அங்கன்வாடியில் ஊழியராகப் பணிபுரியும் ஜெயராமனின் மனைவி.
வெடித்து வெம்பி நிற்கும் தமிழ் மண்ணில் `ஜெயராமன்' என்கிற இன்னொரு பாரம்பர்ய நெல், தண்ணீருக்காகக் காத்திருக்கிறது.
- மருத்துவர் கு.சிவராமன்


ஆனந்தவிகடன், 08.03.2017

169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்படும் பரிதாபம்

நெல் ஜெயராமன்

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்.

1,000 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது. காலனி ஆதிக்க காலம் தொடங்கியதில் இருந்து, நமது பாரம்பரிய நெல் வகைகள் படிப் படியாக மறைந்தன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப் போற்றப்பட்ட நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த ‘நெல்’ ஜெயராமன், பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பணியைத் தொடங்கினார்.

அச்சக தொழிலாளி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலை செய்தார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003-ல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார். அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதுமுதல் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நெல் ஜெயராமன் தொடங்கினார். இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில், நெல் ஜெயராமனால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாரம்பரிய நெல் மையம், இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த ஆய்வு மையமாக திகழ்கிறது.

பாரம்பரிய நெல் திருவிழா

ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்துகிறார். தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்கின்றனர். இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் 2 கிலோ பாரம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து, அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச் செய்ய வேண்டும். மீண்டும் அடுத்த ஆண்டு நெல் திரு விழாவுக்கு வரும்போது 4 கிலோ விதையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளால் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், தற்போது தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு நெல் திருவிழாவில் 4,500 பேர் பங்கேற்றனர். தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றது இத்திருவிழாவின் வெற்றியை பறைசாற்றியது.

ஜெயராமனின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு - பாரம்பரிய அறிவுக்கான விருதையும், SRISTI அமைப்பின் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான SRISTI சம்மான் விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கவுரவித்துள்ளது. கொடுத்த பணியை சிறப்பாகச் செய்ததால், ஜெயராமனாக இருந்த அவருக்கு ‘நெல்’ ஜெயராமன் என பெயர் சூட்டினார் நம்மாழ்வார்.

புற்றுநோய் பாதிப்பு

இத்தகைய உன்னதமான பணிகளைச் செய்துவரும் ‘நெல்’ ஜெயராமன், தற்போது கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வரும் மே மாதம் நடக்கவுள்ள நெல் திருவிழாவுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, புற்றுநோய் பாதிப்பு குறித்து தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நண்பர்களின் உதவியோடு தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது சிகிச்சைக்காக அடுத்த சில வாரங்களுக்கு மட்டும் ரூ.15 லட்சத்துக்கு மேல் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும், உடல்நல பாதிப்பை பொருட்படுத்தாமல், நலம் விசாரிக்க வரும் நண்பர்களிடம் எப்போதும்போல, பாரம்பரிய நெல் வகைகளை பரவலாக்குவதற்கான அடுத்தகட்ட பணிகள் பற்றி உற்சாகமாகப் பேசி வருகிறார் ‘நெல்’ ஜெயராமன்.

தொடர்புக்கு: 9952787998

http://tamil.thehindu.com/tamilnadu/169-பாரம்பரிய-நெல்-ரகங்களை-மீட்ட-சாதனை-மனிதர்-நெல்-ஜெயராமன்-புற்றுநோயால்-அவதிப்படும்-பரிதாபம்/article9559929.ece

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.