Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சதி’கலா குடும்பச் சண்டை! - திவாகரன் Vs தினகரன்

Featured Replies

மிஸ்டர் கழுகு: ‘சதி’கலா குடும்பச் சண்டை! - திவாகரன் Vs தினகரன்

 

ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து பறந்து வந்தார் கழுகார். சிறகுகளில் இருந்து செய்திகள் சிதறுவதற்கு முன் அனல் கொட்டியது. ‘‘கோடை வெயிலை மிஞ்சுவதாக பிரசார அனல் இருக்கிறது. அந்தப் பிரசார அனலை மிஞ்சுவதாக இருக்கிறது, சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் அரசியல்” என்று பீடிகை போட்டார் கழுகார்.

‘‘அதை முதலில் சொல்லும்” என்றோம்.

‘‘அ.தி.மு.க-வை சசிகலா குடும்பம் கைப்பற்றி விட்டது என்று வெளியில் இருப்பவர்கள் மொத்தமாகச் சொன்னாலும் அதனை அந்தக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ‘கட்சியை தினகரன் கைப்பற்றிவிட்டார்’ என்றே பிரித்துச் சொல்கிறார்கள். ஜெயலலிதா இறந்ததும், கட்சி சசிகலா கைக்கு வந்தது. ‘கட்சி திவாகரனுக்கு, ஆட்சி நடராசனுக்கு’ என்று சசிகலா பங்கு பிரித்துக் கொடுத்ததை அப்போதே சொல்லி இருந்தேன். நீரும் அட்டைப் படமாக வெளியிட்டு இருந்தீர். தினகரன், போயஸ் கார்டன் வீட்டில் இருந்தும், டாக்டர் வெங்கடேஷ், தலைமைக் கழகத்திலிருந்தும் நிர்வாகத்தைக் கவனிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது. அடுத்த சில நாட்களில் மாமனும் மச்சானும் - அதாவது தினகரனும் வெங்கடேஷுமே அனைத்தையும் அபகரித்தார்கள். சித்தப்பா நடராசனையும் மாமா திவாகரனையும் ஓரம் கட்ட ஆரம்பித்தார் தினகரன். அடுத்தடுத்த நாட்களில் காட்சிகள் மாறின. சசிகலா சிறைக்குப் போனதால் அனைத்துக்கும் முழுப்பொறுப்பாக தினகரன் வந்தார். தன்னையும் வெங்கடேஷையும் மட்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்வதாக சசிகலாவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார் தினகரன். தனக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியையும் வாங்கிக்கொண்டார். இப்போது ஆர்.கே.நகர் வேட்பாளராகத் தன்னையே அறிவித்துக்கொண்டார்.”

p44.jpg

‘‘தினகரன் தேர்தலில் போட்டியிடுவதை சசிகலா குடும்பத்தினர் விரும்பவில்லையோ?”

‘‘சசிகலாவே விரும்பவில்லை என்றுதான் சொல்கிறார்கள். சசிகலாவை சிறையில் சந்தித்தபோது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி தினகரன் பேசினாராம். தேர்தலில் நிற்கும் தனது ஆசையையும் வெளிப்படுத்தினாராம். ‘இப்போதைக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம்’ என்று சசிகலா சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள். ஆனால், யார் பேச்சையும் கேட்கும் நிலைமையில் தினகரன் இல்லை. நடராசன் உடல்நலமில்லாததால் அமைதியாகி விட்டார். ‘கல்லீரலில் பிரச்னை. மனைவி சிறைக்குள் போனதால் இனிமேல் ஆக்டிவ் பாலிடிக்ஸ் வேண்டாம்’ என்று நடராசன் நினைப்பதாகச் சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், திவாகரன் அப்படி இருக்கப் போவதில்லை. சசிகலா, தனக்கு அடுத்த இடத்தை திவாகரனுக்குத்தான் தருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள், அவரின் ஆதரவாளர்கள். நடராசன் நடத்திய பொங்கல் விழாவில் திவாகரனும் மைக் பிடித்து மத்திய அரசுக்கு சவால் விட்டதற்கு இதுதான் காரணம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற அன்று, தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவை, தனது மகனோடு தனியாகச் சந்தித்து நட்பு ஆக்கிக்கொண்டதன் பின்னணியாக அரசியல் ஆசையைத்தான் சொல்கிறார்கள். இதனை தினகரன் ரசிக்கவில்லை!”

‘‘ஓஹோ!”

‘‘இவர்கள் இருவருக்குமான மோதல் வெளிப்படையாக வெடித்தது, திவாகரனின் சம்பந்தி ஜெயச்சந்திரன் விஷயத்தில். திவாகரனின் மகளை, ஜெயச்சந்திரனின் மகன் திருமணம் செய்துள்ளார். ஜெயலலிதா இறந்ததும், தனது சம்பந்திக்கு உளவுத்துறை நிர்வாகப் பிரிவு கூடுதல் எஸ்.பி பதவியை திவாகரன் வாங்கித் தந்தார். அப்போது முதலமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தார். இந்த நியமனத்தை  தினகரன் ரசிக்கவில்லை. ‘திவாகரனின் சம்பந்தியை உளவுத்துறையில் எப்படி போடலாம்?’ என்று சசிகலாவிடம் தினகரன் சண்டை போட்டதாகச் சொல்கிறார்கள்.  ‘ஜெயச்சந்திரனை டி.ஜி.பி ஆபீஸுக்கு கொண்டு வரலாமா என்றுதான் என்னிடம் திவாகரன் கேட்டார். உளவுத்துறை பொறுப்பு என்று சொல்லவில்லை’ என சசிகலா பதில் சொன்னாராம். ‘ஜெயச்சந்திரனை அந்த இடத்திலிருந்து மாற்றுங்கள்’ என்று தினகரன் சொல்ல, ‘உடனடியாக அப்படிச் செய்தால் ஏதாவது பிரச்னை வரும். அமைதியாக இரு’ என்று அமுக்கிவைத்தார் சசிகலா. இதுவே திவாகரன் - தினகரன் மோதலுக்கு அடித்தளம் அமைத்தது. காபந்து அரசின் முதல்வராக இருந்தபோது, ஜெயச்சந்திரனை கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக தூக்கி அடித்தார் பன்னீர்.”

‘‘ம்ம்..”

p44a.jpg‘‘பன்னீர் விலகி, சசிகலாவும் சிறைக்குப் போய், எடப்பாடி முதலமைச்சரானதும், இந்த நிலை மாறும் என எதிர்பார்த்தார் திவாகரன். ஆனால்,  கரூருக்கு மாற்றப்பட்டார் ஜெயச்சந்திரன். இப்படி ஒரே மாதத்தில் திவாகரனின் சம்பந்தி பந்தாடப்பட்டார். அதோடு, ‘அ.தி.மு.க.வில் இனி குடும்ப ஆதிக்கம் இருக்காது’ என்று தினகரன் பேட்டி அளித்தார். இன்னொரு டி.வி பேட்டியில், ‘நடராசன், மகாதேவன், திவாகரன் உள்ளிட்டோர் எப்போதுமே அ.தி.மு.க-வுக்குள் வரமாட்டார்கள்’ என்று சொன்னார். ‘எங்களை வரக்கூடாது என்று சொல்ல தினகரன் யார்?’ என்று கொந்தளிக்கிறார்கள் திவாகரனும் மகாதேவனும்!”

‘‘ம்!”

‘‘இந்தப் பஞ்சாயத்து, போயஸ் வீட்டில் பெரிதாக வெடித்திருக்கிறது. பெங்களூரில் தங்கியிருந்தபடி சசிகலாவுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்துவரும் இளவரசியின் மகன் விவேக்கை சென்னைக்கு வரவழைத்து விசாரணை நடந்தது. திவாகரனும் மகாதேவனும் இன்னும் பல சொந்தங்களோடு வந்து, ‘உண்மையில் தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட சசிகலா சம்மதம் சொன்னாரா? அந்த சந்திப்பில் சசிகலா வேறு என்ன சொன்னார்?’ என்றெல்லாம் விவேக்கிடம் விசாரித்தார்கள். ஆனால், விவேக் எதுவும் சொல்லவில்லை என்கிறார்கள்...”

‘‘ஓஹோ!”

‘‘திவாகரன்தான் ரொம்பவே கொந்தளித்தாராம். ‘எதுவாக இருந்தாலும் சசிகலா சொல்லட்டும். அவரே அமைதியாக இருக்கும்போது தினகரன் ஏன் தேவையில்லாமல் பேச வேண்டும். நாளையே சசிகலா துணைப்பொதுச்செயலாளர் பதவியை தினகரனிடம் இருந்து திரும்பப் பெறலாம். நான் கட்சிக்குள் வரமுடியாது எனச் சொல்வதற்கான அதிகாரம் தினகரனிடம் இல்லை. கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாதான் அந்த முடிவை எடுக்க முடியும்’ என அவர் எச்சரித்ததாக, அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ‘என் கட்டுப்பாட்டில் 20 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அப்புறம் இந்த அதிகாரம் எல்லாமே காணாமல் போய்விடும்’ என்று தினகரனுக்கு அவர் சவால் விட்டதாகப் பேச்சு. பல அமைச்சர்கள் இப்போது திவாகரனிடம் தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள். அவர்களை எல்லாம் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார் திவாகரன்.’’

‘‘திவாகரன் ஆட்களுக்கு செக் வைத்திருப்பாரே தினகரன்?”

‘‘அதுதான் இல்லை. ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட பலரையும் தினகரன் கட்சிக்குள் சேர்த்து வருகிறார் அல்லவா? அதில் தன்னுடைய ஆதரவாளர்களையும் நைசாக உள்ளே சேர்த்துவிட்டார் திவாகரன். சசிகலா வரை பரிந்துரை போய்தான் இவரது ஆட்கள் சேர்க்கப்பட்டார்களாம். ‘எதுவாக இருந்தாலும் நேரடியாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் சொல்ல வேண்டாம். என் மூலமாகச் சொல்லுங்கள்’ என்று தினகரன் சொன்னதையும் சசிகலா குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் ரசிக்கவில்லை. ‘தினகரன் வென்றால் கட்சியில் அவர் ஆதிக்கம் நிலைத்துவிடும். அடுத்து அவர் முதல்வர் ஆகிவிடுவார்’ என்று நினைக்கிறார்கள் இவர்கள். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்த மோதல் இன்னும் அதிகம் ஆகலாம்!” என்று மூச்சுவிட்ட கழுகாரிடம், ‘‘தீபா பேரவையில் நடக்கும் கலாட்டாக்களைப் பார்த்தீரா?” என்று கேட்டோம்!

சிரித்தபடியே ஆரம்பித்தார். ‘‘சீரியஸ் மோதல்களுக்கு நடுவே சிறுபிள்ளைகள் சண்டை நடக்கும்போது, ‘அந்தப் பக்கமாகப் போய் விளையாடுங்க’ என்று சொல்வது போலத்தான் தீபா - மாதவன் மோதலைச் சொல்ல வேண்டி உள்ளது. கணவன் - மனைவி சண்டை, அமைப்பை உடைத்து சந்தி சிரிக்க வைத்துவிட்டது.  ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ தொடங்கப்பட்டதில் இருந்து, குழப்பங்களுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமே இல்லை. முதலில், கட்சி நிர்வாகிகள் புதிய பட்டியலை தீபா வெளியிட்டார். ‘அவருக்கு வேண்டியவர்களும், அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைத்தவர்களும் மட்டுமே பொறுப்புகளில் இருக்கிறார்கள்’ என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி மற்றொரு நிர்வாகிகள் பட்டியலை தீபாவின் கணவர் மாதவன் வெளியிட்டதாகத் தகவல் பரவியது. இதனால் தீபாவுக்கும், மாதவனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாக, பலர் அங்கிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்துவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு, ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற மாதவன் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ‘தீபாவைச் சுற்றி அரசியல் சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதனால், நான் அந்த அமைப்பிலிருந்து வெளியேறி, விரைவில் புதிய கட்சியை ஆரம்பிப்பேன்’ என்றார். ‘தீபாவை முதலமைச்சர் ஆக்குவதற்காகத்தான் இந்தப் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளேன்’ என்றும் அதில் காமெடியைச் சேர்த்துள்ளார்!”

‘‘ஹா... ஹா... நம் மக்களுக்கு சுவாரஸ்யமாக பொழுது போகும் போலிருக்கிறதே!’’

‘‘ஆமாம்! ஆனால், இதை வெறுமனே காமெடியாகப் பார்க்க முடியாது. தீபாவை விட்டு மாதவன் ஏன் விலகினார் என்று கேட்டால், மாதவன் ஆட்கள் சொல்லும் காரணம் தலையைச் சுற்ற வைக்கிறது. ‘தீபாவைச் சுற்றி சசிகலா ஆட்கள்தான் இருக்கிறார்கள். நடராசன் சொல்லித்தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தீபா சேரவில்லை. நடராசன் - சசிகலா கட்டுப்பாட்டில்தான் தீபா இருக்கிறார். இது பிடிக்காமல்தான் மாதவன் வெளியேறினார்’ என்கிறார்கள் மாதவன் ஆட்கள். ஆனால், தீபா தரப்பு, ‘தீபாவின் கணவராக இருந்தாலும், மாதவனுக்கும் தீபா பேரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா தரப்பு எப்போதோ மாதவனை விலைக்கு வாங்கிவிட்டது’ என்று சொல்கிறது. விலை போனதாகச் சொல்வதை இரண்டு பேருமே மறுக்கிறார்கள். ஆனால், பணம் இதில் விளையாடி இருப்பது தெரிகிறது!”

‘‘கடைசியில் மாதவன் கட்சி ஆரம்பித்தாரா இல்லையா?”

‘‘இந்தப் பிரச்னைக்குப் பிறகு தீபா வீட்டுக்கு மாதவன் போகவில்லையாம். தன் நிர்வாகிகள் வீட்டிலும், பொது இடங்களிலும், கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார். முதலில் சி.ஐ.டி நகரில் உள்ள ஒரு நிர்வாகி வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக அறிவித்து, பின் 19-ம் தேதி ஞாயிறு அன்று மதுரவாயல் பாக்யலட்சுமி மகாலுக்கு அனைத்துத் தொண்டர்களையும் வரச் சொல்லி இருக்கிறார். அந்தப் பிளானும் கேன்சலாகி... அதற்கடுத்து, கோயம்பேடு, திருவொற்றியூர் எனத் தொண்டர்களை அலையவிட்டிருக்கிறார். கடைசியாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ‘இன்னும் சில தினங்களில் கட்சி ஆரம்பிக்கப்படும். தீபாவை முதல்வராக்குவதே என் கடமை. அதற்கு தீபா என் பக்கம் வரவேண்டும்’ என்றார், மாதவன். இதனால், அவரது ஆதரவாளர்கள் நொந்து போயிருக்கிறார்கள்!”

‘‘சேகர் ரெட்டியை அமலாக்கத் துறை கைது செய்திருக்கிறதே?”

‘‘சி.பி.ஐ வழக்கில் கைதாகியிருந்த சேகர் ரெட்டி, அதில் ஜாமீன் பெற்று வெளியில் வந்ததும் அமலாக்கத் துறை கைது செய்திருக்கிறது. சிறையில் இருந்தபோதே அவரைக் கைதுசெய்திருக்க முடியும். ஆனால், சிறையில் வைத்து முறையாக விசாரிக்க முடியாது என்று அமைதி காத்தார்களாம். வெளியில் வந்ததும் இப்படி, தான் கைதாகலாம் என்பது சேகர் ரெட்டிக்கும் தெரிந்திருக்கிறது. இந்தக் கைது ‘பன்னீருக்கு வைக்கப்பட்ட செக்’ என்கிறார்கள். உமது நிருபரை விசாரிக்கச் சொல்லும்’’ என்று ஒரு ‘லீட்’ கொடுத்துவிட்டுப் பறந்தார் கழுகார். 

அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி


p44b.jpg‘‘நான் ராஜினாமா செய்துவிடவா?’’

.தி.மு.க-வின் ஆட்சிமன்றக்குழு கூடி டி.டி.வி.தினகரனை வேட்பாளராக அறிவித்த நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்தார். இந்த அறிவிப்பை அவருக்குத் தெரியாமலே வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. ‘ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றால் நீங்கள் முதல்வராவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’ என்று தினகரனிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘நிச்சயம் இல்லை. இன்றைய முதல்வரின் செயல்பாடு மக்களால் பாராட்டப்படுகிறது. எனவே, அ.தி.மு.க அரசின், தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ என்றார்.

இந்நிலையில், சேலத்தில் இருந்த எடப்பாடி, அவசரமாக தினகரனுக்கு ஒரு தகவல் அனுப்பி இருக்கிறார். ‘‘இவர் இப்படித்தான் சொல்வார். அப்புறம் ஒருவர் ஒருவராக, ‘தினகரன் முதல்வராக வேண்டும்’ என ஆரம்பிப்பார்கள். ஆர்.கே. நகரிலேயே ‘முதல்வர் வேட்பாளர்’ என்று பிரசாரம் செய்வார்கள். எனக்கு சங்கடமாக இருக்கும். நான் இன்றைக்கே ராஜினாமா செய்துவிடுகிறேன். அவர் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடட்டும். எனக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று எடப்பாடி சொல்லி அனுப்பிய தகவல் வந்து சேர்ந்ததும் பதறிவிட்டார் தினகரன். ‘‘இன்னும் எஞ்சியிருக்கும் நான்கரை ஆண்டு காலத்துக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராகத் தொடர்வார்’’ என்று உடனடியாகச் சொன்னார் தினகரன்.

ஆனாலும், கொங்கு மண்டலம் கொந்தளிப்பில்தான் இருக்கிறது. கடந்த 18-ம் தேதி, அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க கோவை வந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரை வரவேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர்  p44aa.jpgஎஸ்.பி.வேலுமணியும், அவரின் ஆதரவாளர்களும் கொடுத்த பத்திரிகை விளம்பரங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் மட்டும் இருந்தன. சசிகலா, தினகரன் படங்கள் இல்லை.

சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டை கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலர் எடுத்துள்ளனர். ஒருவேளை தேர்தலில் தினகரன் ஜெயித்தால், எடப்பாடியின் முதல்வர் பதவி பறிபோகும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான், இப்போதிலிருந்து எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும், தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் ஒரு ரகசிய ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

வேலுமணியின் சிஷ்யர்களில் ஒருவரான சூலூர்     எம்.எல்.ஏ கனகராஜ், குவாரி விவகாரம் ஒன்றில் அதிருப்தியாகி அணி மாறப்போவதாக மீடியாக்களிடம் சொல்ல, தினகரன் தரப்பு அதிர்ந்துபோனது. அப்போதைக்கு சமாதானப்படுத்தினாலும், மதில் மேல் பூனையாகத்தான் கனகராஜ் இருக்கிறாராம். ஈரோட்டில் தோப்பு வெங்கடாசலம் நிலையும் கேள்விக்குறியாக இருக்கிறது. சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதால் ரொம்பவும் சுணங்கிப்போயிருக்கிறார். இவரை தினகரன் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்.


p44c.jpg

அப்போது ஏன் வரவில்லை?

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தம்பி நடனசிகாமணியின் மனைவி ராணிமல்லிகா மறைந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த விழுப்புரம் போயிருந்தார் ஸ்டாலின். இதே விழுப்புரம் நகர தி.மு.க செயலாளராக இருந்த செல்வராஜ், கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்த ஸ்டாலின் வரவில்லை. அது மட்டுமில்லை, செல்வராஜ் மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் நகரச் செயலாளர் பதவிக்கு இன்னும் வேறு யாரையும் நியமனம் செய்யவில்லை. இதையெல்லாம் சொல்லிக் குமுறுகிறார்கள் விழுப்புரம் தி.மு.க-வினர்.


p44d.jpg

குழப்பத்தில் உடைந்த கூட்டணி!

மீண்டும் ஒருமுறை உடைந்திருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஒருமித்த முடிவு எடுக்க முடியாததால் கூட்டணி உடைந்ததாகக் காரணம் சொல்லப்படுகிறது. போட்டியிடுவதில் உறுதியாக இருந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ‘ஸ்டாலின் கேட்டதால், தி.மு.க-வை ஆதரிக்கலாம்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சொல்லியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளோ, இந்த இரண்டு முடிவுகளையும் ஏற்கவில்லை. டி.டி.வி.தினகரன் சார்பில் திருமாவளவனிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், வெளிப்படையாக அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவிப்பதில் அவருக்குத் தயக்கம்.  அதனால், ‘போட்டியிடப் போவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை’ என்ற முடிவை திருமாவளவன் எடுத்து, தி.மு.க பக்கம் சாய இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் தடுத்து, அதே முடிவை எடுக்க வைத்தாராம்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.