Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி

Featured Replies

மிஸ்டர் கழுகு: வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி

 
 

 

‘வெப்பக்காற்று அதிகரிக்கும், வெளியில் போக வேண்டாம்’ என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்த செவ்வாய்க்கிழமை.  காலையிலேயே சூரியன் தகித்துக் கொண்டிருக்க, கழுகார் உள்ளே நுழைந்தார். ஜில்லென மோர் கொடுத்து உபசரித்தோம். ஒரே மூச்சில் உறிஞ்சிக் குடித்தவர், ‘‘இந்த வெப்பக் காற்றைவிட பயங்கரமான பாலைவனப்புயல் சசிகலா குடும்பத்தில் வீசிக்கொண்டிருக்கிறது. 1996-2001 காலகட்டத்தில் அனுபவித்ததைவிட பல மடங்கு சிக்கல்களை அந்தக் குடும்பம் இப்போது சந்திக்கிறது. திடீர் திருப்பங்கள் தினம்தோறும் அரங்கேற்றமாகின்றன. ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலை வைத்து, சசிகலா குடும்பத்துக்கு எதிராக சென்னையில் போர் வியூகம் வகுக்கப்படுகிறது’’ என்றார்.

p44a.jpg

‘‘இந்தத் திருப்பங்களின் மையப்புள்ளியாக தினகரன்தானே இருக்கிறார்?” என்று கேட்டோம்.

‘‘ஆம்! டிசம்பர் 6-ம் தேதி ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. சசிகலா குடும்பம் மொத்தமும் அங்கே அணிவகுத்து நின்றது. ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த பிரதமர் நரேந்திர மோடி, சசிகலாவின் தலையில் கை வைத்தார். அப்போது தொடங்கியது சசிகலாவின் சரிவு. அ.தி.மு.க என்ற கட்சியும், அதன் தலைமையில் தமிழகத்தில் அமைந்துள்ள ஆட்சியும் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் போய்விடக்கூடாது என்று மோடி அரசாங்கம் ஒவ்வொரு காயாக நகர்த்தியது. சசிகலாவும் அவருடைய குடும்பமும் இதை கவனமாகவே எதிர்கொண்டாலும், கடந்த காலங்களில் அந்தக் குடும்பம் செய்த தவறுகள் அவர்களைவிடாமல் துரத்தின.

p44b.jpg

பன்னீர்செல்வத்தை வைத்து கட்சி இரண்டாக உடைந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றதால், சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது. அதன்பிறகு டி.டி.வி.தினகரன் வந்தார். தினகரனை எளிதாகச் சமாளித்து ஓடவிடலாம் என பி.ஜே.பி ஆரம்பத்தில் நினைத்தது. ஆனால், தினகரன் அவ்வளவு லேசுப்பட்ட ஆளாக இல்லை. ஏற்கெனவே காத்திருக்கும் ஃபெரா வழக்குகளோடு, ஆர்.கே. நகர் தேர்தல் களத்தில் பாயவிட்ட பணமும், அதை மையமாகவைத்து நிகழ்ந்த ரெய்டும், அவர் தலைக்கு மேலே புதிய கத்திகளாக இப்போது தொங்குகின்றன.”

‘‘போதாக்குறைக்கு டெல்லியில் புதிதாக ஒரு லஞ்ச வழக்கு பாய்ந்திருக்கிறதே?”

‘‘கடந்த வாரத்தில் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்தார். தமிழக விவகாரங்களை உன்னிப்பாகக் கவனித்து, பிரதமர் மோடியிடம் பேசுபவர் நாயுடுதான். அவர் தம்பிதுரையிடம் இந்தச் சந்திப்பில் தெளிவாக சில விஷயங்களைச் சொல்லி அனுப்பியதாகத் தெரிகிறது. ‘சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல், அ.தி.மு.க ஒரே கட்சியாக இணைந்து செயல்படுவதை பி.ஜே.பி விரும்புகிறது’ என்று சொன்ன வெங்கய்ய நாயுடு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி விளக்கினாராம். ரெய்டுக்கு முன்பும் ரெய்டின்போதும் கிடைத்த தகவல்கள் பற்றியும் நிறைய சொன்னாராம். இதன் பின்விளைவுகள் பற்றி வெங்கய்ய நாயுடு சொன்னதை, தம்பிதுரை அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டாராம். இதுபோன்ற தகவல்களை போனில் பேசுவது சிக்கல் என்பதால், திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தம்பிதுரை சந்தித்துப் பேசினார்.’’

‘‘ஓஹோ!”

‘‘இந்தச் சந்திப்புக்கு முன்பாகவே, டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் வெளியில் வந்துவிட்டது. ரூ.1.30 கோடி பணத்துடன் சுகேஷை கைதுசெய்தது டெல்லி போலீஸ். இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக இந்த சுகேஷ் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது. தினகரனும் சுகேஷும் போனில் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கிறது டெல்லி போலீஸ். ஆனால், தினகரன்  அதை மறுத்துள்ளார். சுகேஷ் சந்திரா ஏற்கெனவே பல மோசடி வழக்குகளில் கைதானவர். கருணாநிதியின் பேரன் என்று சொகுசு கார்களை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர். மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி என்று மோசடி செய்த வழக்கு ஒன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ளது. மேலும், கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுகேஷ் சந்திரா மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட ஓர் ஏமாற்றுப்பேர்வழியை நம்பி பேரம் பேசுவதற்கு தினகரன் ஏமாளி அல்ல. அதனால், இந்த விவகாரங்கள் எல்லாமே நம்ப முடியாதவை என்கின்றனர் தினகரன் தரப்பில்.’’

‘‘இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?”

‘‘பெயரைக் கெடுப்பது, தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது, சில நாள்கள் சிறையில் அடைத்து பல வருடங்களுக்கு வழக்கை இழுத்து தினகரனை முடக்குவதுதான் பி.ஜே.பி-யின் திட்டம். சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமியை வைத்து ஆட்சியையும் பன்னீர்செல்வத்தை வைத்து கட்சியையும் நடத்துவதுதான் பி.ஜே.பி-யின் திட்டம். அதற்கான பேச்சுவார்த்தைகள்தான் இப்போது நடந்துவருகின்றன.’’

‘‘அதாவது தினகரனை நீக்கிவிடுவார்கள் என்கிறீரா?”

‘‘அப்படித்தான் நிலைமைகள் போகின்றன. ஏப்ரல் 14-ம் தேதி தினகரன் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து உமது நிருபர் எழுதி இருப்பதைப் படித்தேன். பன்னீர் அணியையும் எடப்பாடி அணியையும் சேர்த்துவைக்க பலரும் முயற்சிசெய்கிறார்கள். ஆனால், அதில் சசிகலாவையும் தினகரனையும் சேர்த்துக்கொள்கிறார்களா என்பதுதான் இரண்டு தரப்பும் முடிவுக்கு வர முடியாத விஷயமாக இருக்கிறது!”

‘‘யார் யார் என்ன சொல்கிறார்கள்?”

‘‘தினகரனை முழுமையாக நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி தரப்பு சொல்கிறதாம். இந்த ஆபரேஷனே கொங்கு மண்டல சீனியர் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணியின் ‘வேட்டையாடு விளையாடு’தான். ‘சசிகலாவையும் தள்ளி வைத்துவிட்டு வாருங்கள்’ என்று பன்னீர் தரப்பு சொல்கிறதாம். இதுதான் இன்றைய சிக்கலுக்குக் காரணம். முதலமைச்சராக இருப்பதால், எடப்பாடியால் பல விஷயங்களில் நேரடியாக இறங்க முடியவில்லை. அதனால், அனைத்துக் காரியங்களையும் பார்க்கும் வேலையை வேலுமணி, தங்கமணியிடம் ஒப்படைத்துள்ளாராம். திங்கள்கிழமை இரவு, அமைச்சர் தங்கமணி வீட்டில் பெரும்பாலான அமைச்சர்கள் கூடிவிட்டார்கள். இவர்கள் அனைவருமே பன்னீர் அணியுடன் சேருவதுதான் நல்லது என்கிறார்கள்.”

p44c.jpg

‘‘இதனை தினகரன் ஏற்க மாட்டாரே?”

‘‘ஆமாம்! ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் தினகரனை வைத்துக்கொள்வது, இல்லாவிட்டால் தினகரனை நீக்கிவிடுவதுதான் இவர்களின் திட்டமாம். சசிகலாவைப் பார்க்க பெங்களூருக்கு தினகரன் சென்ற நேரமாகப் பார்த்து இப்படி ஒரு நடவடிக்கையில் அமைச்சர்கள் இறங்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? ‘என்ன ஆனாலும் பரவாயில்லை’ என்ற ரீதியில் அமைச்சர்கள் செயல்படத் தொடங்க விட்டார்கள் என்றுதானே அர்த்தம்!”

‘‘அதற்காக சசிகலாவை தள்ளிவைத்து விடுவார்களா?”

‘‘பன்னீர் தரப்பு சசிகலாவையும் நீக்கிவிட வேண்டும் என்கிறதாம். ஆனால் சீனியர் அமைச்சர்கள் சிலர், ‘தினகரன் வேண்டாம், சசிகலா இருக்கட்டும்’ என்கிறார்களாம். ‘அம்மா இடத்தில் சின்னம்மா பொதுச்செயலாளராக இருக்கட்டும். இத்தனை வருஷம் நமக்காகப் பாடுபட்டவர் அவர். சிறைக்குப் போய்விட்டார் என்பதற்காக அவரை ஒதுக்கி வைத்துவிட்டோம் என்று வந்துவிடக்கூடாது’ என்று ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் சொன்னார்களாம். ஆனால், இதை பன்னீர் ஏற்கவில்லை என்கிறார்கள்!”

‘‘இந்த இணைப்பு பன்னீருக்கு முழு சம்மதமா?”

‘‘ஆமாம்! திங்கள்கிழமை பெரியகுளம் சென்றார் பன்னீர். ‘இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது’ என்று சென்னை விமான நிலையத்தில் வைத்து பன்னீர் சொன்னார். அதே நாளில்தான் தினகரனிடம் பணம் வாங்கியதாக டெல்லியில் சுகேஷ் கைதானதும் நடந்தது. இது சம்பந்தமாக மதுரை விமானநிலையத்தில் பன்னீரிடம் கேட்டபோது, ‘எதையும் பணத்தைக் கொடுத்து வாங்கிவிட சசிகலா குடும்பத்தினர் நினைக்கிறார்கள்’ என்று சொல்லி இருக்கிறார். சசிகலா குடும்பத்தினர் மீதான கோபம் அவருக்கு அடங்கவில்லை என்று இதன் மூலமாகத் தெரிகிறது!”

‘‘அடுத்து என்ன நடக்கும்?”

‘‘விரைவில் தினகரனை கட்சியில் இருந்து நீக்கி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். அ.இ.அ.தி.மு.க அம்மா அணி-அ.இ.அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைந்து செயல்படும் என்று அறிவிக்கப்படலாம்.”

‘‘தினகரன் சும்மா இருப்பாரா?”

p44d.jpg

‘‘அது எப்படி இருப்பார்? அவர் தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு இந்த ஆட்சியைக் கலைத்துவிடுவார் என்று சொல்கிறார்கள். மகாதேவன் இறப்புக்கு மன்னார்குடி சென்ற தினகரன், ‘முதலமைச்சர் பதவி நம் குடும்பத்துக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆட்சியே நமக்குத் தேவையில்லை’ என்ற ரீதியில் சொன்னாராம்.”

‘‘தினகரன் பக்கம் எத்தனை பேர் வருவார்கள்?”

‘‘சுமார் 42 எம்.எல்.ஏ-க்கள் தன்னை முழுமை யாக ஆதரிப்பார்கள் என்று நினைக்கிறாராம். இது உண்மையானால் பன்னீர், எடப்பாடி சேர்ந்தாலும் ஆட்சி நிலைக்காது. ஆனால், ‘பதவி போனாலும் பரவாயில்லை என தினகரன் பின்னால் போகிற அளவுக்கு இங்கு விசுவாசிகள் யாருமில்லை’ என்கிறார்களாம் வேலுமணியும் தங்கமணியும்.”

‘‘சசிகலா ரியாக்‌ஷன் என்ன?”

‘‘அவருக்கு இது எதுவுமே பிடிக்கவில்லையாம். தினகரனை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று சொன்னவர் சசிகலா. அதனை மீறி அவர் போட்டியிட்டார். ‘கொஞ்ச காலம் காத்திரு’ என்று சசிகலா சொன்னார். தினகரன் கேட்கவில்லை. இந்த நிலையில் என்னென்னவோ நடந்துவிட்டன. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக சசிகலா முடிவெடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள். தனக்கு இனி அரசியல் வேண்டாம் என்றும் நினைக்கிறாராம். தேர்தல் கமிஷன் தனது பதவியைப் பறிப்பதற்கு முன்னதாக தானே விலகிவிடுவது நல்லது என்றும் அவர் நினைக்கிறாராம்!”

‘‘ஓஹோ!”

‘‘சசிகலா சிறைக்குப் போன பிறகு தினகரன் மட்டும் தனி ஆளாக ஆவர்த்தனம் செய்து கொண்டி ருக்கிறார். அவரது குடும்பத்தில் மற்றவர்கள் இதனை ரசிக்கவில்லை. நடராசனே ஒதுங்கி விட்டார். பிறகு என்ன மற்றவர்கள்? திவாகரன்தான் அடிபட்ட புலியாக உறுமிக்கொண்டிருக்கிறார். பன்னீர், எடப்பாடி அணியினருடன் தொடர்ந்து திவாகரன் பேசிக்கொண்டு இருக்கிறாராம். ‘எனக்குக் கட்சி உடையக்கூடாது... ஆட்சி நிலைக்க வேண்டும். அவ்வளவுதான். தினகரன் இருக்கணும்னோ, நான் வரணும்னோ எந்த எண்ணமும் எனக்கு இல்லை’ என்று சொல்லி வருகிறாராம் திவாகரன். இதை சசிகலாவிடமும் அவர் சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.”

p44.jpg

‘‘சிறையில் சசிகலாவை தினகரன் ஏன் சந்திக்க முடியவில்லை?”

‘‘17-ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தினகரன் சென்றார். ஆனால், சசிகலா தினகரனைச் சந்திக்கவில்லை. அவர் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. அவர், மிகவும் நொந்து போய் இருக்கிறார். தினகரன்தான் குடும்பத்துக்குள்ளும் பிரச்னைகளை ஏற்படுத்தி, கட்சிக்குள்ளும் மேலும் மேலும் சிக்கல்களை உண்டாக்குகிறார் என்று சசிகலா கருதுகிறார். அதனால், அவர் தினகரனைச் சந்திக்கவில்லை என்கிறார்கள் ஒரு தரப்பினர். ஆனால், ‘பார்வையாளர்கள் நேரம் முடிந்துவிட்டதால்தான் சின்னம்மா அண்ணனைச் சந்திக்கவில்லை. குறிப்பிட்ட தினங்களில்தான் சிறையில் இருப்பவர்களைச் சந்திக்க முடியும் என விதி இருக்கிறது. அண்ணன் மீண்டும் வந்து சந்திப்பார்’ என்று தினகரன் தரப்பில் சொன்னார்கள். தினகரன் அனைவராலும் தனிமைப்படுத்தப்படுவது தெரிகிறது!” என்றபடி எழுந்த கழுகாரிடம், அமித்ஷா வருகை குறித்து கேட்டோம்.

‘‘மே 10-ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். விரைவில், தேர்தல் வரப்போகும் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்தான் அமித்ஷாவின் சுற்றுப்பயணம் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென அதில் தமிழகமும் கேரளாவும் சேர்க்கப்பட்டு உள்ளன. பி.ஜே.பி தனது ஆபரேஷன்களை வெளிப் படையாக இனிதான் நடத்தப்போகிறது” என்றபடி பறந்தார்.

படம்: மீ.நிவேதன்

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்சி


‘முழு முயற்சி எடுக்கிறார் கலெக்டர்’

‘சிவகங்கை சீமை... கருவேல சர்ச்சை!’ எனும் தலைப்பில் கடந்த 2.4.17 இதழில், சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர் விழிக்கு எதிரான குற்றச் சாட்டுகள் குறித்து எழுதியிருந் தோம். இது தொடர்பாக,  சீமைக் கருவேல மரங்களை அழிப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவைக் கண்காணிக்கும் சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர் ஆணையர்களில் ஒருவரான எஸ்.காமேஸ்வரன், நமக்குக் கடிதம்  ஒன்றை அனுப்பியிருந்தார்.

 அதில், “படமாத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி நீதியரசர்கள் வந்தபோது, நல்லா குளம் அருகே வேம்பத்தூரைச் சேர்ந்த பசும்பொன் ராஜா என்பவர் நீதியரசர்களின் காரை மறித்து, தான் சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஏலம் எடுத்துள்ளதாகவும், கிராமத்தில் சிலர் இந்தப் பணிகளைச் செய்ய விடாமல் தடுப்பதாகவும் முறையிட்டார். அதற்கு நீதியரசர்கள் ‘கலெக்டரிடம் முறையிடுங்கள்’ என்றார்கள். இதுதான் நடந்தது. பசும்பொன் ராஜாவைக் கைது செய்யுமாறு கலெக்டர் சொன்னதாகவும், இதைக் கேட்ட நீதியரசர்கள் அவரைக் கண்டித்ததாகவும் கூறப்பட்டுள்ளது உண்மைக்கு மாறானது. கலெக்டர் மலர்விழி, சீமைக் கருவேல மரங்களை அழிக்க, முழு முயற்சி எடுத்து வருவதற்காக நீதியரசர்கள் அவரைப் பாராட்டினார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

“இனி நீங்கள் வேண்டாம்!” - தினகரனுக்கு எதிராக கத்தி தீட்டும் அமைச்சர்கள்!

 
 

 

சொந்தக் கட்சிக்காரர்களாலேயே இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார் தினகரன். அவரது தலை எப்போது வேண்டுமானாலும் உருளலாம்.

தினகரனை மையமாக வைத்து அ,தி.மு.க-வில் அனல் கிளம்பி உள்ளது. அவருக்கு எதிராக அமைச்சர்களே அணி திரள ஆரம்பித்துள்ளார்கள் என்பதுதான் அதிர்ச்சி கலந்த உண்மை.

p6a.jpg

‘‘பதவி விலகுங்கள்!”

அமைச்சர்கள் சிலர் இப்படிச் சொன்னதாக அ.தி.மு.க வட்டாரத்தில் செய்தி பரவிக் கிடக்கிறது.

‘‘உங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, உடனடியாக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுங்கள். இதுதான் பெரும்பாலான நிர்வாகிகளின் கோரிக்கை.”

- இப்படிச் சொன்னாராம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

“அம்மாவின் ஆட்சியையும் கட்சியையும் அவரது வழியில் நாங்கள் நடத்திக்கொள்கிறோம். பிரிந்து சென்றவர்களைச் சேர்த்து, அடுத்த கட்டமாக என்ன செய்யவேண்டும் என்று நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள்தான் இப்போதைக்கு பிரச்னை...”

- இப்படிச் சொன்னாராம் அமைச்சர் தங்கமணி.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தினகரன், “டெல்லி காவிகளின் காலில் விழச் சொல்கிறீர்களா? வேண்டுமானால் நீங்கள் காவி டிரஸ்ஸை போட்டுகிட்டு போயி அவுங்க காலில விழுங்க... எனக்கு அவசியமில்லை. நான் கட்சியை விட்டு விலகிடணும்னு நீங்கள் எதிர்பார்க்கிறீங்களா? ஓகே... நான் விலகிக்கொள்கிறேன். ஆறு மாதங்கள் பார்ப்பேன். ஆட்சிக்கு ஆபத்து என்றால்... வீடு தேடி வந்து காலரைப் பிடித்துத் தூக்கிக் கேள்வி கேட்பேன். நீங்கள் சம்மதிக்கிறீர்களா?” என்று சத்தம் போட்டாராம்.

கோபமாக அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் வெளியேற, சிலர் ஓடிவந்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால், அவர்கள் இறுக்கமான முகத்தோடு காரில் ஏறிக் கிளம்பிப் போய்விட்டார்கள். சில நிமிடங்களில் தினகரன் வெளியில் வந்து, ‘‘எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை’’ என சிரித்துக்கொண்டே பேட்டி கொடுத்தார்.

இதுபற்றி அமைச்சர்கள் வட்டாரத்தில் விசாரித்தால், ‘‘நீங்கள் கேள்விப்பட்ட அனைத்தும் உண்மைதான்.  இப்படி ஆக்ரோஷமான மோதல் காட்சிகள் சென்னை, அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், சித்திரை வருடப்பிறப்பு நாளன்று நடந்தன” என்கிறார்கள்.

p6b.jpg

‘‘பிரிந்தவர் கூடினால் போனது கிடைக்கும்!”

சசிகலா - பன்னீர்செல்வம் என்று அ,தி.மு.க இரண்டாகப் பிளவுபட்ட நிலையில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணிக்கு ‘தொப்பி’ சின்னமும் பன்னீர் அணிக்கு ‘இரட்டை மின்கம்பம்’ சின்னமும் தரப்பட்டன. சசிகலா அணியினர்  ‘அ.தி.மு.க அம்மா’ என்றும், பன்னீர் அணியினர் ‘அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இரண்டு அணியினரும் ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் இரட்டை இலையை மீட்க முடியும் என்பது இப்போதைய நிலை.

சசிகலா அணியில் இருக்கும் சிலர், ‘‘பன்னீரை இணைத்துக்கொண்டு கட்சியை ஒன்றுபடுத்தலாம்’’ என்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நேரத்திலேயே சொல்ல ஆரம்பித்தார்கள். தேர்தல் ரத்தாகி, தினகரனின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில், தங்களின் ஆசையை சிலர் இன்னும் வேகமாக வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

‘‘சசிகலா, தினகரன் ஆகிய இருவரையும் கழற்றிவிட்டு... இரண்டு கோஷ்டியினரும் கைகோக்க முடிவெடுத்துவிட்டனர். அடுத்த சில நாட்களில் கட்சியில் மிகப்பெரிய மாற்றம் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் க்ளைமாக்ஸை எட்டியுள்ளன. சென்னை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.கழக தலைமை அலுலவலகத்தில் திடீர் பிரஸ் மீட் நடத்தி, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் தினகரன் அதிரடியாக நீக்கப்பட்டதாக அறிவிப்பை வெளியிடத் தயாராகிவிட்டனர். இதற்கான பேச்சுவார்த்தைகளில் சீனியர் அமைச்சர்கள் மும்முரமாக இருக்கிறார்கள்” என்றும் பரபர தகவல்கள் உலவுகின்றன.

தினகரனின் எதிரிகள்!

ஆரம்பத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு வட்டாரத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் தினகரனுடன் அவ்வளவாக ஒட்டவில்லை. ‘‘முதன்முதலாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இதனைப் பெறுவதற்கு கவர்னரை மனமாற்றம் செய்ய நாம்தான் பெரிய இடத்துச் சம்மதம் வாங்கினோம். அன்று நாம் முயற்சி எடுக்கவில்லை என்றால் கவர்னர் இதற்குச் சம்மதித்திருக்க மாட்டார். ‘நீங்கள்தான் நிரந்தர முதல்வர்’ என்று சொல்லித்தான் எடப்பாடியை பதவி ஏற்க வைத்தார்கள். பன்னீரை அவமானப்படுத்தியது போல, இப்போது எடப்பாடியையும் அவமானப்படுத்த நினைக்கிறார்கள்” என்று சொல்லி வருகிறார்களாம் அவர்கள்.

கடந்த சில நாட்களாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளனர். ‘தினகரன் அவராகவே பதவி விலகவேண்டும்’ என்று அவரிடம் சொல்லும் பொறுப்பை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரிடம் ஒப்படைத்தனர் சீனியர்கள்.

கருத்து மோதல்களின் தொடக்கம்!

சித்திரை வருடப்பிறப்பு நாளான கடந்த வெள்ளியன்று, டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு சீனியர் அமைச்சர்கள் சென்றனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கலந்துகொள்ளவேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டார்களாம். அதனால், அவர் வரவில்லை. அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.பி-க்கள் தம்பிதுரை, வேணுகோபால் உள்ளிட்ட பலரும் விவாதத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தற்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலர், தங்களின் வெளிப்படையான கருத்துகளைத் தெரிவித்தனர். வேறு சிலர், தங்கள் ஆதரவை வேலுமணி தரப்பினருக்கு போனில் தெரிவித்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் தினகரனின் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்தார்களாம்!

‘‘நாங்கள் நிற்கச் சொன்னோமா?”

“எங்களைக் கேட்டா நீங்கள் தேர்தலில் போட்டியிட்டீர்கள்? ஆட்சிமன்றக்குழுவை நிர்பந்தப்படுத்தி நீங்களாகவே அறிவித்துக்கொண்டீர்கள். உங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் முடிந்த மறுநாளே... உங்களை முதல்வர் பதவியில் அமரவைக்க உங்களுடன் இருக்கும் சிலர் திட்ட மிட்டார்கள். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, அந்தத் திட்டத்தைக் கைவிட்டார்கள். இப்படிப் பட்டவர்கள் தான் உங்கள் பின்னணியில் இருக்கி றார்கள்” என்று அமைச்சர் வேலுமணி குரலை உயர்த்திப் பேசியிருக்கிறார். இதே நேரத்தில், அமைச்சர் ஜெயக்குமார், “விஜயபாஸ்கரை தவிர்த்திருக்கலாம். அவரால்தான் இத்தனை பிரச்னை” என்று சொல்ல... மீண்டும் வேலுமணி குறுக்கிட்டு, ‘‘அவருக்கு யார் இவ்வளவு அதிகாரம் கொடுத்தது? யாரு தைரியம் கொடுத்தது... நீங்கள்தானே?” என்று சீறியிருக்கிறார்.

“வருமானவரித் துறை ரெய்டில் சிக்கியதற்குக் காரணமே விஜயபாஸ்கரின் அனுபவம் இன்மைதான். தொகுதியில் பூத் செலவுக்களுக்குப் பணம் கொடுத்ததைக் கூட பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டார்கள். சில இடங்களில் பணத்தைப் பெற்றதற்கான கையெழுத்தையும் பெற்றுக் கொண்டார்கள். அவைதானே இப்போது சிக்கலில் மாட்டிவிட்டது. முதல்வர் எடப்பாடியார் கூட ஒரு கட்டத்தில், ‘ஏன் இப்படியெல்லாம் ஃபைல் போடுறீங்க’ என்று விஜயபாஸ்கரிடமே கண்டித்துப் பேசினார். இப்போது ஆட்சிக்கே அவமானம்” என்று சீனியர் அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.

p6c.jpg

‘‘இதுக்கெல்லாம் பயந்தா...”

ஆனால், இதையெல்லாம் தினகரன் ஏற்றுக்கொள்ளவில்லையாம். “நான்கூட கடந்த 23 வருடங்களாக ஃபெரா வழக்குகளைச் சந்தித்து வருகிறேன். தேர்தல்ல பணம் கொடுத்ததா சொல்ற இந்த சாதாரண கேஸ்களுக்குப் பயந்தால் நடக்குமா? இதற்காக, விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டியதில்லை” என்றாராம். அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம் தேர்தல் கமிஷனில் இருக்கிறது. அதை நாம் பெறுவது அவ்வளவு சுலபமில்லை போலிருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் பேச வேண்டும்” என்றாராம். தினகரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம்.

‘‘எனக்கு எதிராக அணி அமைக்கிறீர்களா?”

ஜெயக்குமாரிடம் அமைதிகாத்த தினகரன், அமைச்சர்கள் வேலுமணியையும், தங்கமணியையும் ஒரு பிடி பிடித்தாராம். ‘‘நீங்கள் யார் யாரிடம் எப்படி எப்படிப் பேசுகிறீர்கள் என்று எல்லாமே எனக்குத் தெரியும். எனக்கு எதிராக அணி அமைக்கிறீர்களா? வைத்திலிங்கத்திடம் போய் எனக்கு எதிராகப் பேசுகிறீர்கள். எம்.எல்.ஏ அருண்குமார் என்னை எதிர்த்துப் பேசியது... அமைச்சர் சி.வி.சண்முகம் எனக்கு எதிராகப் பேசியதன் பின்னணி எல்லாமே எனக்கும் தெரியும். இவ்வளவு பேசுகிற நீங்கள் இதுவரை ஏன் சின்னம்மாவைச் சிறையில் போய்ப் பார்க்கவில்லை?” என்று கோபமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு வேலுமணி, ‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் நீங்கள் சின்னம்மாவின் போட்டோவையோ, பெயரையோ போடவில்லையே... அது ஏன் என்று இப்போது சொல்லுங்கள்’’ என்று மடக்க... தினகரன் அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினாராம்.

கோள்மூட்டுவது யார்?

சரத்குமார் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஒப்புக் கொண்ட நாளன்று, அவர் தினகரனைப் பார்க்க வந்திருக்கிறார். அப்போது சோபாவில் தனியாக தினகரன் உட்கார்ந்திருந்தாராம். அருகில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மற்ற அமைச்சர்களும் அமர்ந்திருந்தார்களாம். இந்தக்காட்சி புகைப்படமாக வெளிவந்துவிட்டதாம். ‘கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து என்னென்னவோ கேட்கிறார்கள்’ என்கிற ரீதியில் வேலுமணி கமென்ட் அடித்தாராம். அங்கேயிருந்த தளவாய் சுந்தரம்,  இதை வேறு மாதிரி தினகரனிடம் போட்டுக்கொடுத்துவிட்டாராம். ‘நீங்க சி.எம். மாதிரி நடந்துக்கிறீங்கன்னு வேலுமணி சொல்லிச் சிரிக்கிறார்’ என்றாராம் தளவாய். டென்ஷனான தினகரன், வேலுமணியைக் காய்ச்சி எடுத்துவிட்டாராம். ‘‘இப்படித்தான் நாங்கள் சாதாரணமாகப் பேசிக்கொள்வதைத் திரித்துச் சொல்கிறார் தளவாய். தனது மாவட்டத்தில் ஒரு தொகுதியில்கூட கட்சியை ஜெயிக்க வைக்கமுடியாத நபர் அவர். இப்போது கட்சியைக் குழப்பி வருகிறார்’’ என்று பதிலுக்குப் பேசினாராம் வேலுமணி. இதற்கு தளவாய் பதில் பேச... ஒரே கூச்சல், குழப்பம்.

இந்தக் கூட்டத்தில் தினகரனுக்கும், வேலுமணிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்த நேரம் இது!

‘‘இது அம்மா கொடுத்த பதவி!’’

வேலுமணியின் முகத்தைப் பார்த்து, “தமிழக கவர்னர் என்னிடம் சொன்னார், தமிழக அமைச்சர்களில் நீங்கள்தான் ரொம்ப மோசம் என்று! நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும். வேண்டுமானால் நீங்கள் ராஜினாமா பண்ண வேண்டியதுதானே? உங்களைக் கட்டுப்படுத்துவதற்கு யாரும் இருக்ககூடாதுனு நினைக்கிறீங்க. அதெல்லாம் என்கிட்ட நடக்காது...” என்று தினகரன் சொன்னாராம். உடனே வேலுமணி, ‘‘இது அம்மா கொடுத்த பதவி. என்னை நீக்க உங்களால் முடியாது. எங்களுக்குக் கட்சிதான் முக்கியம். பதவி அல்ல’’ என்றாராம் காட்டமாக.

இதுபற்றி தினகரன் ஆதரவு பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். “கடந்த எட்டு மாதங்களாக கட்சிக்கு மாதம்தோறும் செலுத்தவேண்டிய நிதியை அமைச்சர்கள் யாரும் செலுத்தவில்லை. கூவாத்தூரில் எம்.எல்.ஏ-க்களுக்குச் செலவு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் செலவு... இரண்டுக்கும் யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள்? என்பது பற்றிய கணக்கு தினகரனிடம் இருக்கிறது. எட்டு மாத நிதிக்குக் கூட கணக்குக் கேட்கவில்லை. இனிவரும் காலத்தில் யாரும் ஊழல் செய்ய வேண்டாம். மக்களிடம் நல்ல பெயரை வாங்கவேண்டும். கட்சி நிதி கூட தேவையில்லை என்றுதான் தினகரன் பேச முயன்றார். வேலுமணிக்கு அது பிடிக்கவில்லை. அவரது மாவட்டத்தில் போலீஸ் மாறுதல் என்றால் கூட, அவரிடம் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்று நினைக்கிறார். கான்ட்ராக்ட், டெண்டர்கள் எல்லாம் அவரே முடிவுசெய்வார்.  யாரும் கேள்வியே கேட்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறார். இதை தினகரன் எதிர்க்கிறார். இதுதான் பிரச்னை. இதை மனதில் வைத்து போர்க்்கொடி தூக்கியிருக்கிறார் வேலுமணி” என்றார் அவர்.

திவாகரனின் வேண்டுகோள்!

தினகரனுக்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டுவது அனைத்தும் திவாகரன்தான் என்ற செய்தியும் உலவுகிறது. தஞ்சையில் மகாதேவன் இறந்த நாளன்று துக்கம் விசாரிக்க அமைச்சர்கள் பலர் போயிருந்தனர். அவர்களைப் பார்த்த திவாகரன், ‘‘எங்க குடும்பத்துல யாருக்கும் எந்தப் பதவியும் வேணாம். பிரிந்து கிடக்கும் நீங்க ஒண்ணா ஆகணும். ஆட்சியும் நாலு வருடம் நல்லபடியா நடக்கணும். கட்சி ஒற்றுமையா இருக்கணும். அதுக்கு முதல்ல வழி பண்ணுங்க’’ என்றாராம். . ஆனால், தினகரனின் ஆதரவாளர்களோ, ‘‘அண்ணனை கட்சிப்  பதவியிலிருந்து விலகவைக்க சதி நடக்குது. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், இந்த ஆட்சியே கவிழும். பொறுத்திருந்து பாருங்கள்’’ என்றார்கள்.

நேரடி மோதல் தொடங்கிவிட்டது. வெடிப்பு நிச்சயம்!

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.