Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரணி ஆளும் கணினி இசை ...

Featured Replies

  • தொடங்கியவர்

தரணி ஆளும் கணினி இசை 26: திரையில் வேரூன்றிய இசைமரபு!

 

 
06chrcjnattukkural

திரையிசை வழியே காலத்தால் அழியாத சீர்திருத்தக் கருத்துகள் மக்களைச் சென்று சேர்ந்திருக்கின்றன. வாழ்க்கை குறித்த அவநம்பிக்கை எழும்போது திரைப்பாடல் வரிகள் தட்டிக்கொடுத்து ஊக்கமூட்டும் மாயத்தைச் செய்திருக்கின்றன. கதாநாயகனின் ஹீரோயிசத்தைப் பேசும் புகழ்ச்சிப் பாடல்கள் கூடப் பார்வையாளனிடம் தலைமைப் பண்பை மறைமுகமாக ஊட்டக் கூடியவைதான். இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தாயை, தந்தையை, சகோதரியை, சகோதரனை, நண்பனைக் கொண்டாடும் பாடல்கள் உறவுகள் மீதான பிடிப்பை உருவாக்கியிருக்கின்றன.

கேட்கும் பார்க்கும் ரசிகரின் உள்ளத்தில் இன்னும் எத்தனையோ மாற்றங்களை உருவாக்கிவரும் திரையிசைப் பாடல்களில் நச்சுக் கருத்துகளும் இடம்பெற்றுவிடுவதும் இச்சையைத் தூண்டும் கொச்சைச் சொற்கள் வலிந்து திணிக்கப்படுவதும் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவைபோன்ற அபத்தங்களுக்கு பாடலாரியரை மட்டுமே குறைசொல்லமுடியாது. கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் இருக்கும் அவர்கள் காசுக்காக மாசுமிக்க வார்த்தைகளை எழுதுவதில்லை. தமிழ்க் கவிதை வரலாறும், திரையிசை வரலாறும் தெரியாத திடீர் ‘நட்சத்திர’க் கவிஞர்கள் வரிகளில் விஷத்தை விதைக்கிறார்கள். வணிகம் என்ற பெயரில் எத்தகைய பாடல் வரிகளை எழுதவேண்டும் என சில கற்றுக்குட்டி பாடலாசிரியர்களுக்கு உத்தரவிடவும் எழுதப்பட்ட வரிகளைச் சிரச்சேதம் செய்யவும் ஒரு கூட்டம் எல்லாக் காலத்திலும் சினிமாவில் இருந்து வந்திருக்கிறது.

 

இசையும் வரிகளும் நிரந்தரமானவை

ஆனால் தனியிசையில் இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் யாரும் உத்தரவிடமுடியாது. வரிகளும் இசையும் முழுமையான சுதந்திரம் கொண்டவை. இந்தியாவில் திரையிசையில் பாடலுக்கான சூழ்நிலை என்ற கட்டுக்கோப்பும் கட்டுப்பாடும் உண்டு. ஆனால் திரையில் இடம்பெறவே முடியாத சூழ்நிலைக்குக்கூட தனியிசையில் இடம் தரமுடியும். இன்று நல்ல டிஜிட்டல் கேமரா இருந்தால் போதும். உங்களிடம் நல்ல கதையும் காட்சிக் கற்பனையில் கைதேர்ந்தவராகவும் இருக்கவேண்டும். அப்படி இருந்துவிட்டால் நீங்கள் சிறந்த இண்டிபெண்டன் பிலிம்மேக்கராக புகழ்பெறமுடியும்.

அப்படித்தான் இண்டிப்பெண்டண்ட் இசையமைப்பாளரும். உங்களிடம் கவிதையும் பாடலும் எழுதும் திறமை இருக்கிறதா? திரையுலகில் பாடலாசிரியர் ஆகவேண்டும் என்று கோடம்பாக்கம் முழுவதும் அலைந்து திரிந்துகொண்டு இருக்கிறீர்களா? முதலில் அலைவதை நிறுத்துங்கள். ஒரு இண்டிபெண்டெண்ட் சினிமா இயக்குரைப்போல உங்கள் பாடல்களில் சிறந்தவற்றுக்கு இசையமைக்க ஒரு இசையமைப்பாளரைக் கண்டறியுங்கள். ஒரு தனியிசை ஆல்பம் உருவாக்குங்கள். அதைப் பிரபலப்படுத்துங்கள். திரையுலகம் உங்களைத் தேடி அழைத்துக்கொள்ளும்.

 

ரஹ்மானின் பாராட்டு

திரையிசையைத் தாண்டி தனிஇசையில் நான் தொடர்ந்து இயங்கி வருவதைப் பலரும் கவனித்து வந்திருக்கிறார்கள். முக்கியமாக தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ் அமைப்புகள். கவிக்கோ அப்துல் ரகுமானும் அப்படி கவனித்தே என்னை அழைத்தார். மொத்தம் பத்து கவிதைப் பாடல்களை அவர் எழுதியிருந்தார். அவற்றுக்கு விதவிதமாக இசையமைத்தேன். கவிக்கோ அவருக்குப் பிடித்த மெட்டுக்களைத் தேர்ந்தெடுத்தார். அது ‘மகரந்த மழை’ என்ற தலைப்பில் ஆல்பமாக வெளிவந்தது.

அந்த ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்து வாழ்த்திப்பேசினார் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் .“ கவிக்கோவின் கவிதைகளுக்கு இசையமைக்க வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை. ஆனால் தாஜ்நூர் முந்திக்கொண்டார்” என்று இரண்டே வரிகளில் வாழ்த்துக்கூறினார். இது எனக்கு ஆஸ்கர் கிடைத்த சந்தோஷத்தைத் தந்தது.

 

இரண்டு விதங்களில் திருக்குறள்.

எனது இசையமைப்பில் கடந்த ஆண்டு வெளியான மிக முக்கியமான தனியிசை ஆல்பம் ‘நாட்டுக்குறள்’. தமிழ் அறிஞரும் வரலாற்று ஆசிரியருமான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எட்டு திருக்குறள்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கிராமியப் பாடல் வடிவில் கவித்துவமிக்க வரிகளால் விரிவாக்கம் தந்து எழுதினார். நான் இசையமைத்தேன். மிக நல்ல வரவேற்பைப் பெற்றது ‘நாட்டுக்குறள்’. அந்த ஆல்பத்தின் தொடர்ச்சி இந்த ஆண்டு மேற்கத்திய இசை வடிவில் வெளிவர இருக்கிறது ‘நாட்டுக்குறள் இன்பத்துப் பாப்’.

தனியிசையில் இன்று ஒற்றைப் பாடல்களின் தேவை பெருகியிருக்கிறது. அன்றாட நாட்டு நடப்பில் முக்கியத்துவம் பெரும் நிகழ்ச்சிகள், போராட்டங்கள், முக்கிய சமூகப் பிரச்சினைகள் இவற்றுக்கு மக்கள் மத்தியில் மேலும் எழுற்சியை உருவாக்க ஒற்றைப் பாடல்கள் சிறந்த ஊடகம். உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டுப் பாடல்களை குறிப்பிடலாம். நம் காவிரியை மீட்க, காப்பர் தொழிற்சாலையை விரட்ட, மீத்தேனை மறுக்க என்று பாடல்களை உருவாக்கலாம். ஆனால் மக்களை போதையில் ஆழ்த்தும் சில பிற்போக்கான கேளிக்கைகளுக்கு வணிக ரீதியாக ஒற்றைப் பாடல்கள் உருவாக்கப்பட்டு அவை ‘அப்பீஸியல் கீத’ங்களாக பெயர் சூட்டப்படும் அவலம் நடக்கிறது.

அதிகாரபூர்வ கீதங்கள் நிரந்தரமான பாடல்களாக தலைமுறைகள் கடந்து இசைக்கப்படவேண்டும். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமையவிருக்கும் நிலையில், தமிழ் இருக்கைக்கான அதிகாரபூர்வ கீதத்துக்கு இசையமைக்கும் பணியை, தமிழ் இருக்கைக் குழு என்னிடம் அளித்தது. கவிஞர் பழனிபாரதியின் வரிகளில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரமும் நித்தியஸ்ரீ மகாதேவனும் இணைந்து பாடியே ‘தாயே தமிழே வணக்கம்… உன் உறவே உயிர்மெய் விளக்கம்’ என்ற பாடல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களைச் சென்று அடைந்ததில் மட்டுமல்ல, தமிழ் இருக்கை அமையவிருப்பது உறுதியானதிலும் அந்த கீதம் என்றைக்குமான உணர்வுபூர்வப் பாடலாக இருக்கும்.

 

திரையிசை மரபு

எனது தனியிசை முயற்சிகளில் இந்த ஆண்டு ‘தமிழ் பிள்ளை’ என்ற ஆல்பத்தை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன். மறைந்த புரட்சிப் பாவலர் இன்குலாப் உட்பட முன்னனி கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். சொந்த மண்ணையும் உறவுகளையும் பிரிந்து வளைகுடா நாடுகளுக்குச் சென்று மிகக்கடினமான பணிகளைச் செய்து பொருளீட்டும் தமிழ்ப்பிள்ளைகளின் வளைகுடா வாழ்க்கையில் இருக்கும் வலிமிகுந்த யதார்த்தம் இசையாகவும் வரிகளாகவும் ‘தமிழ் பிள்ளையையும் ஈர்க்கும். எனது தனிப்பட்ட இசை முயற்சிகள் பற்றி பகிரும் அதேநேரம், தனியிசை எனும் துறை, நம் திரையிசைக்கு இணையான அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று நினைக்கிறேன்.

அதற்குத் திரையிசையைப்போன்ற கவன ஈர்ப்பு மிக அவசியம். ஐரோப்பியர்கள் நமக்குக்கொடுத்த திரைப்படக் கலையில் காலந்தோறும் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மாற்றங்களை நாம் ஏற்றுக்கொண்டோம். அதேபோல் திரையிசையில் கணினி ஏற்படுத்திய தாக்கங்களையும் உள்வாங்கிக்கொண்டோம். ஆனால் நமக்கென்று திரையிசையில் ஒரு மரபை வேரூன்றச் செய்தோம். அதுதான் நம் இன்றைய திரையிசையில் அசைக்கமுடியாத பலமாக இருக்கிறது. அந்த மரபின் தொடர்ச்சியை நவீனத்துக்கு மத்தியிலும் நம்மால் முன்னெடுக்க முடியும்.. அது எப்படி என்பதை அடுத்தவராம் பகிர்கிறேன்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23445532.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தரணி ஆளும் கணினி இசை 27: கற்பனையைப் பின்தொடரும் மரபு!

 

 
13chrcjtajnoor%20spl

நமது சினிமா எல்லா வகையிலும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. கதை சொல்லும் விதம், காட்சியாக்கம், இசை, தொழில்நுட்பம், தயாரிப்பு, வெளியீடு எனப் பல அம்சங்களில் ஐரோப்பிய சினிமா உலகைப் பார்த்து நம்மை மாற்றிக்கொண்டிருக்கிறோம். அல்லது அங்கே காலம்தோறும் நிகழ்ந்து வந்த முன்னேற்றங்களை நாமும் எடுத்தாள்கிறோம். மாறாகக் குறைந்த எண்ணிக்கையில்தான் சிறந்த படங்களை நம்மால் உருவாக்க முடிந்திருக்கிறது.

ஆனால் ஐரோப்பியர்களைக் காட்டிலும் பலமடங்கு சிறந்த திரையிசையை நாம் உலகுக்குக் கொடுத்திருக்கிறோம். நம் அளவுக்கு திரையிசைப் பாடல்களில் எண்ணிக்கை அளவிலும் படைப்பு என்கிற அந்தஸ்தின் அருகிலும் சென்று சாதனைப் படைத்த சமூகம் இல்லை என்றுகூடக் கூறிவிடலாம். என்னதான் மேற்கத்திய வாத்தியங்களின் இசையை, பின்னணிக்கும் பாடல்களின் இசைக்கோவைக்கும் நாம் பயன்படுத்திக்கொண்டே வந்திருந்தாலும் நமது திரையிசையில் நீண்ட நெடிய இசைப் பாரம்பரியத்தின் தாக்கம் ஆழமாய் வேரூன்றிவிட்டது. அதன் விளைவாகவே நமது திரையிசை தனித்த இசை மரபுடையதாக நம்முடன் தொடர்ந்து ஊடாடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முழு முதற்காரணம் பாரம்பரிய இசையில் நமக்கிருந்த பரிச்சயமும் ரசனையும்தான்.

தமிழ்த் திரையிசையைப் பொறுத்தவரை கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.வியும் இசையமைத்த நூற்றுக்கணக்கான பாடல்களில் இசைக்கோவையிலும் பின்னணி இசையிலும் மேற்கத்திய இசையின் தாக்கம் இருந்தாலும், அவர்கள் அமைத்த மெட்டுக்களில் மரபின் தொடர்ச்சியும் குழைவும் தொடர்ந்து இழையோடிக்கொண்டிருப்பதைக் கேட்கமுடியும். அவர்களுக்குப்பிறகு இளையராஜாவிடம் கிராமியத்தின் தொடர்ச்சி இருந்தபோதும் பாரம்பரிய இசையின் பயிற்சியால் விளைந்த அவரது திரையிசையில், வெகுமக்கள் ரசிக்கும்விதமாக பாரம்பரிய இசை எளிமைப்படுத்தப்பட்டதில் இந்த மரபின் தொடர்ச்சி மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது என்றால் மிகையில்லை.

 

ரசனையால் காப்பாற்றப்படும் தொடர்ச்சி

என்னதான் நவீனத்துக்குள் நாம் வந்துவிட்டாலும் நமது கற்பனைதான் படைப்பின் ஆதார சுருதியாக இருக்கிறது. மெட்டுக்கான கற்பனை உருவாகும்போது இசையமைப்பாளரின் கற்பனையை பின் தொடரும் ஒன்றாகப் பாரம்பரிய இசையின் மரபுத் தொடர்ச்சி வந்து நின்றுவிடுகிறது. மரபார்ந்த பாரம்பரிய இசை நம் வழிபாட்டிலும், கூத்து, நடனம் ஆகியவற்றிலும் முக்கிய அங்கமாக இடம்பெற்றுவிட்டதால், சுவாசித்தலுக்கு அடுத்த இடத்தில் இசையை வைத்துக் கொண்டாடி வந்ததிருக்கும் இனக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

தொடக்கக் கால திரைப்படங்களில் 60 பாடல்கள் இருந்தன. அதன்பிறகு 30, பிறகு 10, தற்போது 5 பாடல்கள், அல்லது 2 பாடல்கள் என்று சுருக்கிக்கொண்டுவிட்டோம். திரைப்படம் ஒரு காட்சிக்கலை என்ற புரிதலை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டதால் விளைந்திருக்கும் மாற்றம் இது. என்றாலும் பாடல்களின் முக்கியத்துவத்தை இழக்க நமக்கு விருப்பம் இல்லை. அது தரும் உணர்ச்சித் தாக்கத்தையும் அதைத் தனியாய் கேட்டு, ஒரு பாடகனாய் மாறி அதைத் திரும்பத்திரும்ப முணுமுணுக்கவும் அல்லது வாய்திறந்து பாடும் ரசனையையும் எப்போதுமே நாம் இழக்க விரும்புவதில்லை. திரையிசைக்கும் தமிழ் அல்லது இந்திய ரசிகனுக்குமான இந்த உறவுதான் திரையிசையின் மரபுத் தொடர்ச்சியைக் காப்பாற்றி வருகிறது.

 

வாத்திய இசையில் மரபின் தொடர்ச்சி

திரையிசைக்குள் இன்று எத்தனையோ அந்நிய வாத்தியங்கள் வந்துவிட்டன. ஆனால் நம் மரபார்ந்த வாத்திய ஒலிகள் நமக்குக் கடத்தும் உணர்வுகள் பிரத்தியேகமானவை. புல்லாங்குழல் ஒலியைக் கேட்டால் ஒரு தமிழ் ரசிகன் உணரும் மரபார்ந்த உணர்ச்சியின் வழி, அவன் மனத்திரையில் ஒரு கிராமியக் காட்சி விரியலாம். கதாபாத்திரத்தின் குணாதிசயத்துக்கு ஏற்ப வாத்திய ஒலிகளைப் பயன்படுத்துவதன் மூலம், மரபின் தொடர்ச்சியை உணர்ந்து காட்சிகளை பார்வையாளர்களால் எளிதில் பின்தொடர முடிகிறது.

கதாநாயகன் வரும் காட்சியில் ஒரு குறிப்பிட்ட வாத்தியத்தின் இசையைப் பயன்படுத்துகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது காட்சியில் அவர் தோன்றும் முன்பே அந்த குறிப்பிட்ட வாத்தியத்தின் இசை பின்னணியில் ஒலித்தது என்றால், நாயகன் வரப்போகிறார் என்பதைப் பார்வையாளர்கள் தெரிந்துகொண்டு கைத்தட்டி ஆராவாரம் செய்யத்தொடங்கிவிடுகிறார்கள். கதாநாயகனுக்கு மட்டுமல்ல, ஆவியும் பேயும் வரும் காட்சிக்கும் அப்படித்தான்.

தவில், நாதஸ்வரம் ஆகியன மங்கள நிகழ்வுகளுக்கு, பறை வாத்தியம், இறப்பு, வெற்றி ஆகியவற்றுக்கு, மேட்டுக்குடி சமூகத்தின் துயரத்தையும் உற்சாகத்தையும் தொடர்புப்படுத்த வீணை, சாரங்கி என வாத்தியங்கள் தரும் மரபு உணர்ச்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். வயலின் என்றாலே சோக உணர்ச்சியை எளிதில் கடத்தும் கருவி என்று பதிவாகியிருந்த நம் தொடர்ச்சியில் அதைத் தற்போது மகிழ்ச்சியை உணரவைக்கவும் பயன்படுத்தமுடியும் என்று தற்கால இசையமைப்பாளர்கள் காட்டியிருக்கிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்புவரை நாயகன், நாயகியை மணப்பந்தலில் தாலி கட்டி, வாழ்க்கைத் துணை ஆக்கிக்கொள்வதுடன் சுபமாக படம் முடியும். அப்போது கடைசியாக ஒலிக்கும் இசையாகக் கெட்டிமேளம் இருந்தது. இப்படி மங்கள வாத்தியமாக ஒலித்துவந்த தவில், தற்போது குத்துப்பாடலுக்கான தாளக்கருவியாக மாறி நிற்பது, மரபின் தொடர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் மறுக்கமுடியாத திரிபு என்று கூறலாம்.

 

பாடல் வகைமையின் தொடர்ச்சி

சினிமா பேசத் தொடங்கியபின் கதாநாயகனை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்களும் சமூகக் கதைகளைக் கொண்ட குடும்பத் திரைப்படங்களும் பாடல் வகைமையில் மரபின் தொடர்ச்சியை திடமாக உருவாக்கி வந்திருக்கின்றன. தியாகராஜ பாகவதர் ‘ஹரிதாஸ்’ படத்தில் குதிரையில் சவாரி செய்தபடி ‘வாழ்விலே ஓர் திருநாள்’ என்று பாடிக்கொண்டு வரும் காட்சி, கதாநாயகன் அறிமுகத்தை ஒரு பாடலின் வழியாக வெற்றிகரமாக உணரச்செய்யமுடியும் என்ற மரபை உருவாக்கியது. கிண்டலும் கேலியும் வர்ணிப்புமாகத் தொடங்கிய அந்தப் பாடல்தான், பின்னால் கதாநாயக அறிமுகத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை ஊட்டும் தத்துவப் பாடலாகவும் துவளாதிருக்கத் தன்னம்பிக்கை தரும் பாடலாகவும் தன்னை உருமாற்றிக்கொண்டது.

எத்தனை உருமாறினாலும் அதில் கதாநாயகனின் சாகச குணத்தை, மெட்டுக்களின் வீச்சும் இசைக்கோவையில் இருக்கும் எழுச்சியும் உணரவைத்துவிடுகின்றன. இன்றைய முன்னணிக் கதாநாயகர்கள் தண்ணீர் பிரச்சினைக்காக போராடினாலும் அவர்களுக்கான அறிமுகப்பாடலும் சமூகப் பிரச்சினைக்குப் போராடிக்கொண்டே பகுதிநேரமாக நாயகியைக் காதலிக்கும்போது வர்ணிக்கும் டூயட் பாடலும் அறுபடாத தொடர்ச்சி கொண்டவை. நாயகன் மீது காதலாகி அவனுக்காக ஏங்கவும் உருகவும் செய்யும் நாயகியின் பாடலும் அப்படியே. இன்றைய மாண்டேஜ் பாடல்கள் கதையை நகர்த்தப் பயன்பட்டாலும் அவற்றில் மற்ற அனைத்துப் பாடல் வகையின் நிழலை நீங்கள் காணமுடியும். இன்றைய புதிய இசையமைப்பாளரின் கற்பனையை பின்தொடரும் இந்த தனித்த திரையிசை மரபை மீறி இன்று திரைப்படத்தின் விளம்பரத்துக்காகத் திரையில் இடம்பெறாத பல இசைப் பணிகளை ஓர் இசையமைப்பாளர் செய்யவேண்டியிருக்கிறது. அவை பற்றி அடுத்தவாரம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23521741.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தரணி ஆளும் கணினி இசை 28: எப்படி கேட்பது, எப்படி ரசிப்பது?

 

 
20chrcjmusic-lover-1

எத்தனை நவீன இசையமைப்பாளர் என்றாலும் அவரது கற்பனையைப் பின்தொடர்ந்து வருவதன் மூலம் தனது தனித்த மரபைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையிசை. இந்த மரபை மீறி, தாம் பணியாற்றும் திரைப்படத்தைப் பிரபலப்படுத்த திரையில் இடம்பெறாத பல இசைப் பணிகளைச் செய்கிறார் இன்றைய இசையமைப்பாளர். ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மோசன் போஸ்டராக வந்து மிரட்டுகிறது. அந்த மோசன் போஸ்டருக்கு அமைக்கப்படும் பின்னணி இசை சில நொடிகளே என்றாலும் அந்தப் படத்தின் மையத்தை அது தொட்டுக்காட்டிவிடுகிறது. அடுத்து டீஸர் இசை, பின்னர் புரமோ பாடலுக்கான இசை, அதன் பின்னர் மேக்கிங் வீடியோவுக்கான பாடலும் இசையும், இவை அனைத்துக்கும் உச்சமாக ட்ரைலர் இசை வரை இந்தப் பட்டியல் தொடர்கிறது. இந்த இசைவேலைகள் திரையில் இடம்பெறப்போவதில்லை. ஆனால், இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும் என்று ரசிகரைத் தூண்டி வசியம் செய்யும் இந்த இசைப்பணி. இதை ஊறுகாய் என்று ஒதுக்க முடியாது. எத்தனை ருசியான விருந்தாக இருந்தாலும் ஊறுகாய்க்கு இலையில் இடமிருக்கிறது. ஊறுகாய் என்பதே உணவை இன்னும் ருசியாக உண்ணுவதற்குத்தான். திரையில் இடம்பெறாத இந்த இசை, படம் குறித்து அழுத்தமான அறிமுகத்தைச் செய்துவிடுகிறது. ஆனால், இந்த இசையைப் படம் பார்க்கும் முன்பு ஊறுகாய்போல் தொட்டுக்கொள்ளும் ரசிகர் அதன்பிறகு திரையில் இடம்பெற்றுத் தன்னைக் கவர்ந்த பாடல்களை மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கிறார். தனது ரசனைப் பட்டியலில் அத்தகைய பாடல்களுக்குத் தன் இறுதி மூச்சு இருக்கும்வரை இடமளிக்கிறார். இப்படித் திரையிசையை வாழ்வின் ஒரு அங்கமாக்கிக்கொண்டதன் வழியாக வளர்ந்து திரண்டு நிற்கும் இசை ரசனை, இந்திய ரத்தத்தில் ஊறி நம் நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

ரசிப்பும் கேட்பும்

நமக்குப் பிடித்த ஒரு பாடல் நாசகாரமாக ஒலித்தால் காதுகளை மூடிக்கொள்கிறோம். திரையிசையை எப்படி ரசிப்பது என்று யாரும் நமக்குச் சொல்லித்தரத் தேவையில்லை. ஏனெனில், திரையிசை என்பதே எளிமைப்படுத்தப்பட்ட ஒரு ஜனநாயக இசை வடிவம். ஆனால், திரையிசையை எப்படிக் கேட்பது என்பதில் நமக்கு வழிகாட்டுதல்கள் தேவை. திரையிசை, வெகுஜனப்படுத்தப்பட்ட இசை இரண்டையும் தனியாக ரசிக்கும்போது அதன் இனிமையை அனுபவிக்கும் நாம், அதை மற்றவர்களும் கேட்கும்படி பரிந்துரைக்கிறோம். அதுவே கூட்டாக, கூட்டமாக ஒரு இசை நிகழ்ச்சியில் ரசிக்கையில் உங்களின் ‘நேயர் விரும்பம்’ நண்பர்களிடம் பகிரப்படுகிறது. நீங்கள் ரசிக்கும் பாடல் உங்கள் நண்பனுக்கோ தோழிக்கோ அவ்வளவாகப் பிடிக்காமல் போகலாம். இந்த இடத்தில்தான் மற்றவரின் ரசனையை மதித்தல் இசை ரசனையின் முக்கிய அம்சமாக மாறுகிறது. திரையிசையில் இருக்கும் தத்துவமும் உணர்ச்சிகளும் அரசியலும் நீங்கள் வாழும் நிலம், மொழி அதன் பண்பாடு ஆகியவற்றுடன் உங்களைத் தொடர்புபடுத்தும்போது அந்தப் பாடல் தரும் பரவசமும் பெருமிதமும் ரசனையின் உச்சமாக உங்களால் உணரப்படுகிறது. இத்தனை சிறப்பு மிக்க இசையை எப்படிக் கேட்பது?

நம் காதுகள் நுட்பமான தொழில்நுட்பத்தில் இயங்குபவை. சின்னச்சின்ன இசை ஒலிகளையும் துணுக்குகளையும் கூட நுட்பமாக உணர்ந்து ரசிக்கக் கூடியவை. இத்தனை நுணுக்கமான கேட்புத்திறன் கொண்ட செவிகளால் தரமான ஒலி எது என்பதைப் பகுத்துணர முடியும். இப்படித் தரமான ஒலியைப் பகுத்துணரும் ஆற்றல் கொண்ட நாம் அனைவருமே ஆடியோஃபைல் (Audiophile) வகை ரசிகர்கள்தாம். அதனால்தான் சிறந்த, தரமான ஒலிக் கருவிகளில் இசையைக் கேட்கும்போது நாம் அதன் வசமாகி நிற்கிறோம்.

 

எம்பி3 இல்லாமல் இசை இல்லை

இன்று நாம் கேட்கக்கூடிய அனைத்து வகையான இசைகளும் எம்பி3 வழியாகத்தான் பிளே ஆகிறது. இதில் எந்த ஃபைல் ஃபார்மேட் அளவில் பதிவுசெய்யப்பட்ட இசையை நாம் கேட்கிறோம் என்பது முக்கியமானது. ‘வேவ்’ ஃபார்மேட்டில் பதிவு செய்யப்பட்ட இசை எத்தனை தரம் குறைவான ஒலிக்கருவியில் கேட்டாலும் இனிமையாக ஒலிக்கும் என்ற எண்ணம் நம்மிடம் வேரூன்றிவிட்டது. எம்பி3-ல் 320 கேபிபிஎஸ் அளவில் பதிவுசெய்யப்படும் இசை, வேவ் ஃபார்மெட்டுக்கு இணையானது. ஐந்து நிமிடம் கொண்ட ஒரு பாடலை வேவ் ஃபார்மெட்டில் பதிவு செய்தால் 10 எம்பி அளவு எடுத்துக்கொள்கிறது என்றால், எம்பி3 அதில் பாதியாக 5 எம்பி அளவே எடுத்துக்கொள்ளும். இதனால் இசையை உங்கள் கையடக்கருவி, பெண் டிரைவ்கள் என எதிலும் சேமித்து வைத்துக்கேட்க முடியும். மின்னஞ்சல் வழியாக இசையை எளிதாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். நீங்கள் கேட்கும் எம்பி3 இசை தரமாக இல்லை என்று கருதினால் முதலில் எது எத்தனை கேபிபிஎஸ் அளவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். குறைந்தது 256 கேபிபிஎஸ் அளவில் பதிவுசெய்யப்பட்ட எம்3 இசையில், இசையமைப்பாளரால் ‘மாஸ்டரிங்’ செய்யப்பட்ட அனைந்து அம்சங்களையும் சேதாரம் இன்றிக் கேட்க முடியும்.

அதேபோல் ஒலிக்கருவிகள் கொண்டு திரையிசையை எந்த ஃபார்மேட் வழியாகக் கேட்கலாம் என்று வருகிறபோது ஸ்டீரியோ ஃபார்மேட்தான் உலகம் முழுவதும் இன்றும் சிறந்த ஒன்றாக நின்று நிலைபெற்றிருக்கிறது. காரணம் நம் இரு காதுகளைப் போல இரண்டு ஸ்பீக்கர்களின் வழியாக நாம் ஸ்டீரியோவில் நாம் கேட்கிறோம். இசையை ஸ்டீரியோவின் வழியே கேட்கும்போது சப்-வூப்பருடன் கூடிய 2.1 இன்று மிகப் பிரபலமான ஒலிக்கருவியாக உலகம் கொண்டாடிவருகிறது. ஆனால் 5.1, 7.1 தடங்களின் வழியே இசையை கேட்டு ரசிக்கலாமா? இசையைக் கேட்க, எவை சிறந்த ஒலிக்கருவிகள்,எது சிறந்த ஹெட்போன், எது சிறந்த ஆம்ப்ளிஃபையர்? எவ்வளவு வாட்ஸ் ஸ்பீக்கர் பயன்படுத்தலாம்? ஒரு சவுண்ட் சவுண்ட் ஸ்டுடியோ உணர்வை வீட்டில் பெற என்ன செய்வது?

அடுத்தவாரம் பகிர்கிறேன்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23611776.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தரணி ஆளும் கணினி இசை 29: காதுகளுக்கும் கருவிகளுக்கும் காதல்!

 

 
27chrcjhead%20phone%202

ஒரு ஆடியோவை அல்லது இசையைப் பதிவு செய்யவும் அதை ஒலிக்கவிட்டு கேட்டு இன்புறவும் (Record and play) இன்றைய டிஜிட்டல் சந்தையில் பல ஆடியோ ஃபார்மெட்டுகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த ஆடியோ ஃபார்மெட் எது என்று உங்களால் கூறமுடிமா தெரியவில்லை. காரணம் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவை எப்படி நாம் கொண்டாடுகிறோமோ அப்படித்தான் எம்பி3 ஃபார்மெட்டையும் கடந்த 25 ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறோம். எம்பி3 இத்தனை பிரபலமாக இருப்பதற்கான காரணத்தைக் கடந்த பல அத்தியாயங்களில் நான் விளக்கினேன். ஆனால் எம்பி3 மட்டும்தான் சிறந்ததா, வேறு சாய்ஸே கிடையாதா என்று கேட்டு என் மின்னஞ்சல் பெட்டியை நிறைத்துவிட்டீர்கள்.

 

ஒலிச்சேதாரமும் ஒலிமுழுமையும்

ஃப்ளாக் (FLAC), வேவ் (WAV), டபிள்யூ.எம்.ஏ (WMA), ஏஏசி (AAC), ஓஜிஜி (OGG) உட்பட பத்துக்கும் அதிகமான ஆடியோ ஃபாரமெட்டுகள் இருக்கின்றன. பயன்பாட்டின் அடிப்படையில் அல்லாமல் ஒலித் தரத்தின் அடிப்படையில் இந்த ஃபார்மெட்டுக்களை ஒலிச்சேதாராம் (Lossy) கொண்டவை, ஒலிமுழுமை (Lossless) கொண்டவை என்ற இரண்டு வகையாகப் பிரித்துவிடலாம். உங்களது மியூசிக் சிடியில் உள்ள பாடல் ட்ராக்குகள், கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போனில் தரவிறக்கி வைத்திருக்கும் ட்ராக்குகள், பென் ட்ரைவில் நீங்கள் சேமித்து வைத்திருப்பது என எந்தவொரு இசையை நீங்கள் பிளே செய்தாலும் ஆடியோவின் டேட்டாவும் ஒலித்தரமும் சேதாரம் இல்லாமல் ஒலித்தால் அதை லாஸ்லெஸ் ஃபார்மெட் என்று கூறிவிடலாம்.

லாஸி ஃபார்மெட்டைப் பொறுத்தவரை ஆடியோ பைலை நாம் எந்த அளவில் கம்ப்ரெஸ் செய்து பதிவு செய்து வைத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து சில ஒலிகளின் சேதாரத்தைத் தவிர்த்துவிடலாம்.

எம்பி3 மற்றும் டபிள்யூ.எம்.ஏ. இரண்டையும் லாஸி ஃபார்மெட் வகையில் வைத்திருக்கிறார்கள். அதேபோல ஃப்ளாக் மற்றும் வேவ் இரண்டும் லாஸ்லெஸ் ஃபார்மெட்டுகள் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இன்று பாப்புலராக இருக்கும் எம்பி3 ஒரு லாஸி ஃபார்மெட்தான் என்றாலும், அதில் பதிவுசெய்யப்படும் இசை ‘மாஸ்டரிங்’ செய்யப்பட்ட ஒரிஜினல் ஃபைலில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.அப்படியிருந்தால் ஒலிச்சேதாரம் என்பது மிக மிகக் குறைவாக இருக்கும். அதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

 

27chrcjsound%20bars%20spekers

சவுண்ட் பார் ஸ்பீக்கர்

ஆடியோவின் அளவு

அதேபோல லாஸ்லெஸ் ஃபார்மெட்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஃப்ளாக் மற்றும் வேவில் ஒலித்தரத்துக்கு ஏற்ப ஃபைல் சைஸும் பெரிதாக இருக்கும். பெரிய ஃபைல்கள் ரீடாகும்வரை காத்திருந்துதான் நமது இசைப் பசியை ஆற்றிக்கொள்ள முடியும். அதேபோல பெரிய ஃபைல்களை மின்னஞ்சல் வழியே பகிர்ந்துகொள்வதில் குறைந்தபட்ச அளவு என்ற சிக்கல் இருக்கிறது.

மின்னஞ்சல் வழியே நீங்கள் 25 எம்.பிக்குமேல் அனுப்ப முடியாது. அதிகமாகப் பகிர்ந்தாலும் ட்ரைவ் வழியே பகிரும்போது உங்கள் மின்னஞ்சலின் இலவச பயன்பாட்டு அளவை அது விரைவிலேயே தீர்த்துவிடலாம். இன்று இணையவேகம் அதிகமாகக் கிடைக்கிறது என்றாலும் மேலும் வேகமாகச் சென்றடைவதிலும் பெரிய ஃபைல்கள் பந்தயத்தில் தூங்கிவிடும் முயல்களை போன்றவை.

ஸ்மார்ட் போன்களில் பெரிய ஃபைல்களைத் தரவிறவிக்கும்போது எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் உங்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணலாம். தவிர பெரிய ஃபைல்களை, நமது கணினி மற்றும் கையடக்கக் கருவிகளில் சேமித்து வைக்க, இடம் ஒரு சவாலாக இருக்கும். இந்தப் பிரச்சினையை எம்பி3 மிக எளிதாகக் கடந்து வந்துவிட்டதால்தான் அது தன்னிகரற்ற ஆடியோ ஃபார்மெட்டாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. அப்படியானல் ஃபைலின் அளவைச் சிறிதாக்குவதைத் தவிர ஒலியின் தரத்துக்கு எம்பி3 முக்கியத்துவம் தருவதில்லையா என்று கேட்கலாம். அப்படிச் சொல்ல முடியாது.

ஃப்ளாக் ஃபார்மெட் ஒரு பாடலின் ஒரிஜினல் அளவைப் பாதியாகக் குறைக்கிறது. ஆனால் எம்பி3யில் ஒரிஜினல் அளவை ஒன்றில் ஐந்தாகவும் (one by fifth), ஒன்றில் பதினைந்தாகவும் (one by fifteen) கூடக் குறைக்க முடியும். இப்படி ஃபைலின் அளவைக் குறைத்துப் பதிவுசெய்தாலும் எம்பி3-ன் மேக்ஸிமம் பிட் ரேட்டாக (Number of bits per second in Data transfer) இருக்கும் 320 கேபிபிஎஸ்ஸுக்குக் குறையாமல் செய்துவிட்டால் ஒலித்தரத்தில் இருக்கும் சில சேதாரங்களை நாம் தவிர்த்துவிட முடியும்.

எம்பி3-க்குக் கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவுக்கு அது எல்லாச் சாதனங்களிலும் எளிதில் பிளே ஆவதும் முக்கியக் காரணம். ஃப்ளாக் ஃபார்மெட்டைப் பொறுத்தவரை அது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஓபன் சோர்ஸ் பிளேயர்தான் என்றாலும், அது ஆப்பிள் போன்களிலும் ஒருசில ஆண்ட்ராய்டு பதிப்பு போன்களிலுமே கிடைக்கிறது. அதே நேரம் ஃப்ளாக் ஃபார்மேட்டின் தரம் உயர்ந்தது என்பதில் ஐயமில்லை.

 

27chrcjblue%20tooth%20speakers

ப்ளூடூத் ஸ்பீக்கர்

இசைக்கு 2.1

திரையரங்குகளில் சரவுண்ட் சவுண்ட், அட்மாஸ் சவுண்ட் ஆகியவை ரசிகர்களுக்குத் திரை அனுபவத்தை முழுமையாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. 5.1, 7.1 ஆகிய தடங்களில் ஒரு திரைப்படத்தின் ஒலிகள் பிரிந்து ஒலிக்கின்றன. இந்த இரண்டுமே இசையைக் கேட்பதற்கான ஒலித் தடங்கள் அல்ல. இசையை 2.1 ஸ்பீக்கரில் கேட்பதே சரியானது; தரமானது. ஏனென்றால் பாடல் இசையானது மாஸ்டரிங் செய்யப்படும்போதே வாத்திய ஒலிகள் இடது, வலது ஸ்பீக்கர்களுக்குத்தான் பிரித்து அனுப்பப்படுகின்றன. புல்லாங்குழல் போன்ற சோலோ வாத்தியங்களை மோனோ ட்ராக்காகப் பதிவு செய்து ஸ்டீரியோவில் நடுவில் ஒலிக்கும்விதமாக ட்ராக் பிரிப்போம்.

இப்படிச் செய்யும்போது இடது, வலதுக்குச் சரிசமமாகப் பிரிந்து சென்றுவிடும். அதேபோல் குரலும் பெரும்பாலும் மோனோ ட்ராக்கில்தான் பதியப்படுகிறது. குறிப்பிட்ட சில பாடல்களுக்கு மட்டுமே குரலை டபுள் ட்ராக் எடுப்போம். ஆனால், ஹோம் தியேட்டர் ஒலி அமைப்புக்காக 5.1 மற்றும் 7.1 ஸ்பீக்கர்கள் சந்தையில் கிடைப்பதால் அவற்றையே பெரும்பாலான ரசிகர்கள் வாங்கிவந்து வீட்டில் பயன்படுத்துகிறார்கள். அப்படி ஏற்கெனவே வாங்கிவிட்டீர்கள் என்றால் இசையை மட்டும் கேட்க அதிலிருக்கும் ஸ்டீரியோ மோடை ஆன் செய்துகொள்ளுங்கள். அப்போது வேறுபாட்டை நீங்களே உணர்வீர்கள்.

 

ஸ்பீக்கரில் எல்லாம் அடக்கம்!

ஆம்ப்ளிபயர்களைத் தனியே உபயோகித்த காலம் தற்போது இல்லை. ஆம்ப்ளிபயர்களுடன் கூடிய ‘ஆக்டிவ்’ ஸ்பீக்கர்கள்தாம் சவுண்ட் ஸ்டூடியோக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நீங்களும் வாங்கிப் பயன்படுத்துங்கள். இன்று இடது, வலது மற்றும் சப் வூஃப்பருடன் கூடிய தரமான சவுண்ட் பார் ஸ்பீக்கர்களும் புக் ஷெல்ப் ஸ்பீக்கர்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தலாம்.

அதேபோல மேஜைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஆக்டிவ் ஸ்பீக்கர்களும் இசையை ரசிக்க உகந்தவை. இன்று ஸ்பீக்கர் சந்தையில் கிடைக்கும் ப்ளூ டூத் ஸ்பீக்கர்கள் கேபிளை மேலும் கீழும் இழுத்துக்கொண்டு அல்லல்பட வேண்டிய அவசியம் இல்லால் செய்துவிட்டன. இவற்றின் வழியாகவும் சேதாரம் இல்லாத ஸ்டீரியோ இசையைச் சிறப்பாகக் கேட்க முடியும்.

இப்படி இசையைப் பதிய, பரவலாக்க, கேட்க இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தத் தொழில்நுட்பத்தின் வழியே உங்களை வந்தடையும் இசையைப் படைக்கும் இசைக் கலைஞர்களை நாம் வேறுபாடுகளுக்குள் அடக்கலாமா? அடுத்த வாரம் பகிர்கிறேன்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23684415.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.