Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவிரமான அறுவைச் சிகிச்சைக்கு திமுக தயாராகித்தான் ஆக வேண்டும்: நாகநாதன் பேட்டி

Featured Replies

தீவிரமான அறுவைச் சிகிச்சைக்கு திமுக தயாராகித்தான் ஆக வேண்டும்: நாகநாதன் பேட்டி

 

 
karunaaJPG

திமுகவின் சித்தாந்தக் குரல்களில் முக்கியமானவர் நாகநாதன். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அரசியலமைப்புச் சட்டத்திலும் நிபுணத்துவம் உடையவர். பெரியார், அண்ணா, கருணாநிதி என்று திராவிட இயக்கத்தின் மூன்று பெரும் ஆளுமைகளுடனும் உறவில் இருந்தவர். குடும்பப் பின்னணி சார்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளையும் நெருக்கத்தில் பார்த்தவர்.

கருணாநிதியின் நடைப்பயிற்சி இணையுமான நாகநாதன், திமுக ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்தவர். வரலாற்றில் தொட்டு திராவிட இயக்கம், தமிழகம், இந்தியா செல்ல வேண்டிய பாதை என்றெல்லாம் பேசினார் நாகநாதன். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ நூலிலிருந்து…
 

தனிப்பட்ட வகையில் நீங்கள் முன்மாதிரியாக முன்னிறுத் தக் கூடிய அரசியலமைப்புச் சட்டம் எதுவாக இருக்கும்?

அமெரிக்காவினுடையது. அதன் அளவே கவரக் கூடியது. திருத்தங்கள், இணைப்புகள் எல்லாம் சேர்த்தே 74 பக்கங்கள்தான். மாகாணங்களுக்கு எவ்வளவு உரிமைகள்! ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சட்டம்! இவ்வளவு பெரிய அளவே நமக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன். உலகின் மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டத்தை ரஷ்யா கொண்டிருந்தது. 1991-ல் உடைந்து விட்டது. அடுத்த மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவினுடையது. பல்லாயிரக்கணக்கான பக்கங்கள். இந்த அபாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களை எப்படிப் பாதுகாத்து வருகிறது இந்திய அரசு? தண்டகாரண்யத்தின் நிலை என்ன? படைகளையும் கடுமையான சட்டங்களையும் கொண்டு எவ்வளவு நாள் மக்களை ஆள முடியும்? மக்கள் கேட்பது அதிகாரம். அதைக் கொடுத்தால் ஏன் பிரிவினை கேட்கப்போகிறார்கள்? நீங்கள் அதிகாரத்தை மறுக்கும்போதும், அவர்களைப் பாரபட்சமாக நடத்தும்போதும்தான் அவர்கள் சுதந்திரம் கேட்கிறார்கள்.

மாநிலங்கள் தங்களைச் சமமாக உணர வேண்டும் என்றால், எல்லோரையும் சமமாக நடத்தும் இடத்தில் இந்த ஒன்றிய அரசு தன்னை அமர்த்திக்கொள்ள வேண்டும் என்றால், ‘மத்தி யில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்று செயல்படத்தக்க அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வேண்டும்.

ஆனால், இந்திய அரசோ நேர் எதிரான பாதையில்தான் போகிறது. மாநிலங்களிடம் உள்ள வரிவிதிப்பு அதிகாரத்தையும் ‘பொதுச்சரக்கு மற்றும் சேவை வரி’ (ஜிஎஸ்டி) மூலமாக மறைமுகமாகப் பறித்துவிட்டவர்களை வேறு எப்படிப் பார்ப்பது?

திமுக முன்னிறுத்தும் பல விஷயங்கள் தேசிய விவகாரங்கள். ஆனால், ஏன் அவை தேசிய அளவில் அவ்வளவு முக்கியத்துவத்தைப் பெறவில்லை?

சமூக நீதி கவனம் பெற்றது. விளைவாகவே இன்றைக்கு தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் குழு ஆணையத்தை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பிரதமருக்கு அனுப்பினார் கருணாநிதி. காஷ்மீர், பஞ்சாப், வங்கம், அஸாம் வரை குரல்கள் ஒலித்தன. என்ன பிரச்சினை என்றால், சாதியிலிருந்து விடுபட நினைக்கும் மனம்தான் எல்லா இடங்களிலும் சமத்துவத்தை இங்கே விரும்பும்.

வெறுமனே காங்கிரஸ், பாஜக அல்லாத இயக்கம் அல்லது மாநிலக் கட்சி என்பதாலேயே அவர்கள் சித்தாந்தம் மாறிவிடுவதில்லையே? உதாரணமாக, இந்தி ஆதிக்க விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சிக்கும் பாஜகவுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஆம்ஆத்மி கட்சிக்கு இதுகுறித்தெல்லாம் என்ன பார்வை இருக்கிறது? ஆக, இங்கே இப்படியான கருத்தாக்கங்களை தேசிய அளவில் ஒரு தொடர் விவாதமாகக் கொண்டுசெல்வதே சவால்.

அப்புறம் டெல்லி - அது காங்கிரஸோ, பாஜகவோ - உண்டாக்கும் எதிர்வினைகள். திமுக பிளவைச் சந்திக்க 1971-ல் மாநில சுயாட்சி கோரிக்கையை அது உரக்கப் பேசியது ஒரு காரணம் என்பதை ஊர் அறியும். தமிழர் பிரச்சினைகளில் உறுதியாக நின்றதாலேயே கருணாநிதி ஆட்சி இரு முறை கலைக்கப்பட்டது.

இதையெல்லாம் விடுங்கள். மாநிலங்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்வதை டெல்லி விரும்புகிறதா? கிடையாது என்கிறேன். 2015-ல் மாநிலங்களிடை மன்றம் கூட்டப்பட்டது 10 வருஷ இடைவெளிக்குப் பிறகு. அடுத்த கூட்டம் எப்போது நடக்கும்? தெரியாது! 1956-ல் மாநிலச் சீரமைப்பு மசோதா வந்தபோது, ஸோனல் கவுன்சில் கூட்டம் என்று ஒன்றைக் கூட்டினார்கள். நன்றாகச் சென்றுகொண்டிருந்தது.

பிறகு மத்திய அரசு அதில் தலையிட்டது. இன்று செயலற்றதாகிவிட்டது. மாநிலங்களைச் சந்தேகக் கண்ணோட்டத்திலேயே டெல்லி பார்ப்பதை ஒரு இழிவாகவே கருதுகிறேன். அதன் தடைகளை மீறி தமிழ்நாடு பேசும் விஷயங்கள் தேசிய விவாதம் ஆகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. அதேபோல, அவை எளிதானதும் இல்லை.

பெரியார், அண்ணா, கருணாநிதி மூன்று பேரிடமுமே பழகியிருக்கிறீர்கள். ஒப்பிட முடியுமா?

பெரியார் இறுகப் பிடிப்பார். அண்ணா விட்டுப் பிடிப்பார். கருணாநிதி சில இடங்களில் பெரியார் மாதிரியும் சில இடங்களில் அண்ணா மாதிரியும் இருப்பார். அவர் பெரியார், அண்ணாவின் கலவை. அந்தந்தக் காலகட்டங்கள் ஊடாகவே மூவரையும் ஒப்பிட வேண்டும். அப்படிப் பார்த்தால் மூவரும் அவரவர் காலகட்டங்களுக்கான காரியங்களைச் செய்திருக்கிறார்கள். எதற்கும் அஞ்சாத துணிச்சலும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை அணுகும், அரவணைக்கும் குணமும் கருணாநிதியிடம் எனக்குப் பிடித்தமானவை. இவையும் திராவிட இயக்க மரபின் தொடர்ச்சிதான்.

bookjpg

நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் எல்லாம் எவ்வளவு உறுதியாக நின்றார்! அதேபோலத் தான் அரவணைப்பும். பல முறை அவரிடம் கருத்து வேறு பட்டிருக்கிறேன். சண்டை போட்டிருக்கேன். “கட்சிக்குள் என்னோடு சண்டை போடுபவர்கள் இருவர். ஒருவர் மாறன், இன்னொருவர் நாகநாதன்” என்றே சொல்லியிருக்கிறார். காலையில் கடுமையான விவாதம் நடந்திருக்கும்.

இரவு தொலைபேசியில் அழைப்பார். “நாகநாதன், என்ன கோச்சுக்கிட்டியா? உன் கருத்தை நீ சொன்னய்யா, சரியாக்கூட இருக்கலாம். என் கருத்தை நான் சொன்னேன். பேசுவோம். நாளைக்குக் காலையில வாக்கிங் வராம இருந்திடாத!” என்பார். அவர் அதிகாரத்தின் எவ்வளவு உயரத்தில் இருக்கும்போதும் இந்தத் தன்மையை இழந்ததில்லை.

நெருக்கடி நிலையின்போது திமுகவுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற சூழல் இருந்தது. கருணாநிதி, நெடுஞ்செழியன், நான் மூவரும் பீச்சில் உட்கார்ந்திருக்கிறோம். நெடுஞ்செழியன் சொன்னார், “தடை செஞ்சா என்ன? வேற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கிடுவோம்! அதற்கு ஏன் கவலைப்படுறீங்க?” அதற்கு கருணாநிதி சொன்னார், “அப்படியில்ல நாவலர், திராவிட முன்னேற்றக் கழகம்கிறது அண்ணா தொடங்கியது. அண்ணாவோட உயிர் அதில் இருக்குது. அப்படியே தடை விதிச்சாக்கூட கட்சியைக் கொஞ்ச நாளைக்குத் தள்ளி வெச்சி நடத்தலாம்.

எம்ஜிஆர் ஒரு கட்சியை வெச்சிருக்கார்ல! அதுலேயும் அண்ணாவும் திமுகவும் இருக்கு. நாம அதைப் பார்த்து ஆறுதல் அடைஞ்சுக்குவோம்! ஆனா, திமுக திரும்ப முளைக்கும் நாவலர்!” எதற்காகச் சொல்கிறேன் என்றால், அதிமுகவைப் போட்டியாகப் பார்த்தாரே அன்றி அது இல்லாமல் போக வேண்டும் என்று அல்ல. இவையெல்லாம்தான் திராவிட இயக்கம் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய பண்புகள் என்று நினைக்கிறேன்.

திராவிடக் கட்சிகள் இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய குற்றச்சாட்டு ஊழல். அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

திருவாரூரில் சாம்பசிவம் என்று ஒரு செல்வந்தர் இருந்தார். பங்களா வீடு. வாசலில் புலியைக் கட்டிப்போட்டிருப்பார்கள். பிரமுகர்கள் யார் வந்தாலும் தன்னுடைய வீட்டில் தங்க வைப்பதை ஒரு கௌரவமாகக் கருதினார். நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கி.ஆ.பெ.விசுவநாதம் அவரது வீட்டில் தங்கியிருந்தபோது, அவரைப் பார்ப்பதற்காகக் கருணாநிதி சென்றிருக்கிறார்.

ள்ளை ஜிப்பா. கீழ்ப்பாய்ச்சி வேஷ்டிக்கட்டு. சந்தனம், ஜவ்வாது மணம். அவர் வந்த தோரணையைப் பார்த்து ‘அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால், இவ்வளவு படாடோபம் வேண்டுமா’ என்று மிரண்டுவிட்டாராம் கருணாநிதி. அடுத்த ஒரு மாதத்தில் திருவாரூருக்கு அண்ணா வந்திருக்கிறார். திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ராமன் வீட்டில் தங்கியிருக்கிறார். அப்போதுதான் அண்ணாவை முதல் முறை சந்திக்கிறார் கருணாநிதி.

மூக்குப்பொடி கறை படிந்த வேட்டி, சட்டை. எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் படித்துக்கொண்டிருந்தாராம். என்னுடைய அத்தானும்கூடச் சொல்லியிருக் கிறார். திருச்சிக்கு வந்திருந்தபோது சத்திரத்தில் ஒரு கிழிந்த பாயில், மேல் சட்டையைத் தலைக்குச் சுருட்டி வைத்துக்கொண்டு அண்ணா படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்ததை.

எவ்வளவு பெரிய பேச்சாளர்! சித்தாந்தி! அவர் அளவுக்க எளிமை தமிழ்நாட்டில் யாரிடமும் கிடையாது. நீதிக் கட்சிகளின் முன்னோடிகள் ஆகட்டும்... பெரியார் ஆகட்டும் தன்னுடைய சொத்துகளை அழித்துப் பொதுச் சமூகத்தை வளர்த்தவர்கள். அவர்கள் வழிவந்த கட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. பெரியார் பொது ஒழுக்கத்தை ரொம்பவும் மதிப்பார். கூட்டத்தில் கடவுள் வாழ்த்து என்று சொன்னதும் எழுந்து நின்றுவிடுவார். அப்புறம் அதே கூட்டத்தில் “கடவுள் இல்லை” என்றும் பேசுவார். “பொது ஒழுக்கம் சமூகத்தால் கட்டப்பட்டது; அதைச் சிதைப்பது நம் வேலை இல்லை!” என்பார். எனக்கு அதில் பெரிய நம்பிக்கை உண்டு. ஏனென்றால், அதுதான் உங்களுக்கு ஒரு தார்மிகத் தகுதியையும் பலத்தையும் தருகிறது.

நான் கடைப்பிடித்த நேர்மை காரணமாக என் வாழ்க்கை யின் பெரும் பகுதியை ஒண்டிக்குடித்தனத்தில்தான் கழித்தேன். திட்டக் குழுத் துணைத் தலைவராக இருந்த போதுகூட வாடகை வீட்டில்தான் இருந்தேன். போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்றேன். அரசு காரையும் சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியதே இல்லை. இப்போதுள்ள வீட்டின் மேல் இன்னும் ரூ.10 லட்சம் கடன் இருக் கிறது. எதற்காக இவ்வளவையும் சொல்கிறேன் என்றால், நானும் திராவிட இயக்கத்திலிருந்து வந்தவன்தான். ஊழல் எதிர்ப்பாளிதான்.

ஆனால், ஒரு அரசியல் கட்சியையோ தலைவரையோ பார்த்து இதேபோல எளிமையாக, ஊழலுக்கு எதிராக இருந்துவிட முடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு அரசியல் கட்சி அல்லது தலைவர் சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை. இன்றைக்கு எந்த அரசியல் இயக்கத்தில் ஊழல் இல்லை? நீங்கள் டெல்லியில் நடக்கும் ஊழலின் சிறு முனையைக் கூட மாநிலங்களில் பார்க்க முடியாது.

ராணுவ பேரங்களில் எவ்வளவு புரளும் என்பதை டெல்லியில் இருந்தால் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் பொதுவெளிக்கு வரும் ஊழல்களில் பெரும்பாலானவை ஏன் கீழ்நிலைச் சமூகங் களையும் மாநிலக் கட்சிகளையும் மட்டுமே குறிவைக்கின்றன? தேசியக் கட்சிகளைச் சேர்ந்த ஆதிக்கச் சாதிக் காரர்கள் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? அமைப்புரீதியாகவே இங்கே ஊழல் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்ற உண்மைக்கு நாம் முகம் கொடுக்காமல் இதை விவாதிக்க முடியாது!

திராவிடக் கட்சிகளில் தலித்துகள், முஸ்லிம்களின் பங்கேற்பு குறைந்துவருகிறது. திராவிடக் கட்சிகள் இடைநிலைச் சாதிகளின் கட்சிகள் ஆகிவருகின்றன என்கிற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதல்லவா?

பழைய தமிழ் உணர்வு மீட்டெடுக்கப்பட வேண்டும். சாதி உணர்வு, மத உணர்வு இவையெல்லாம் சமூகத்தில் தூண்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். அரசியல் களத்தில் தமிழ் உணர்வு உயிர்ப்போடு இருந்தால்தான் அவற்றை எதிர்கொள்ள முடியும். தலித்துகள் அதிகாரத்துக்கு வருவதற்காக திமுகவில் ஒதுக்கீடே கொண்டுவந்தார் கருணாநிதி. அந்த அக்கறை மாவட்டச் செயலர்கள் முதல் வட்டச் செயலர்கள் வரை சென்றடைய வேண்டும். சித்தாந்தரீதியாகக் கட்சியைப் பலப்படுத்துவதே அதற்கான ஒரே வழி.

ஆனால், சித்தாந்தரீதியாக இன்று பெரும் சரிவை திமுக சந்தித்திருக்கிறது. அண்ணாவுக்குப் பின் கட்சியைச் சித்தாந்தரீதியில் வளர்த்தெடுக்கத் தவறிவிட்டதன் விளைவு என்று இதைச் சொல்லலாமா?

ஒரு பெரிய சரிவு நடந்திருக்கிறது. அது உண்மை. மாறனின் மரணம் மேலும் ஒரு கடுமையான பின்னடைவு ஆகிவிட்டது. ஒரு தீவிரமான அறுவைச் சிகிச்சைக்கு திமுக தயாராகித்தான் ஆக வேண்டும். இளைஞர்கள் பங்கேற்பு கட்சியில் போதுமான அளவுக்கு இல்லை என்பது அதைத்தானே காட்டுகிறது. தாங்கள் எங்கிருந்து வந்தோம், தங்களுடைய பலம் என்ன, தங்களுடைய சாதனைகள் என்ன என்பதெல்லாமே தெரியாத இடத்தில் கட்சியில் இன்று பலர் இருக்கிறார்களே! ஸ்டாலினிடம் இதைத்தான் வலியுறுத்தியிருக்கிறேன்.

மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அவரும் கட்சியைச் சித்தாந்தத் தளத்தில் வளர்த்தெடுப்பதில் பெரும் ஆர்வத்தோடு இருக்கிறார். சித்தாந்தரீதியாக திமுக பெறப்போகும் பலத்தில்தான் அதன் வளர்ச்சியும் எதிர்காலமும் இருக்கிறது. திமுக அப்படிப் பெறப்போகும் சித்தாந்த பலமே இந்தியாவையும் தூக்கி நிறுத்தும்!

சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/opinion/columns/article20008602.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.