Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெலிக்கடை சிறைக்குள் நடந்தது என்ன?

Featured Replies

வெலிக்கடை சிறைக்குள் நடந்தது என்ன?

 

 
சிறைக்கைதிகளும் மனிதர்களே. அதனால்தான் அவர்களுக்கான தண்டனைகளும் சித்திரவதைகளாக இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு சலுகைகள் சிறைக்கூடங்களில் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், இலங்கையில் நடந்த மிகக் கொடுமையான சிறைச்சாலைக் கொலைச்சம்பவம் நம் அனைவரையும் பதற வைத்திருந்தது.
 
சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குற்றவாளிகளெனினும் அவர்களும் மனிதர்கள் என்றவகையில் நோக்கப்பட்டிருக்கலாம். 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி சிறைச்சாலை வளாகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 27 பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. ஆட்சியாளர்களின் வெறியாட்டத்துக்குள் சிக்கி அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டமை எவ்வளவு பெரிய கொடுமை.
 
இந்தப் படுகொலை இடம்பெற்று இம்மாதம் 9ஆம் திகதியுடன் 5 வருடங்கள் கடந்தபோதிலும் குற்றாவளிகளுக்குப் பயந்த அரசு இந்தச் சம்பவத்தை அப்படியே மூடிமறைக்கப்பார்க்கின்றது. ஆனால், இந்தப் படுகொலை தொடர்பில் அந்நேரத்தில் சிறைச்சாலையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் கண்ணூடே பார்த்தவரும் நேரடியான சாட்சியாளரும் சிறைக்கைதிகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் செயலாளருமான சுதேஷ்  நந்திமால் "சுடர் ஒளி|க்கு நேரடி வாக்குமூலத்தை  வழங்கியிருந்தார். 
 
அதன் முழு விவரம் வருமாறு:
 
வெலிக்கடை சிறைச்சாலையில் 2012.11.09ஆம் திகதி என்ன நடந்தது?
 
வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்றது கலவரம் அல்ல  திட்டமிட்ட படுகொலைகள். குறித்த தினத்தில் சிறைச்சாலை யில் இருந்த அனைவருமே இதற்கு சாட்சி. அன்றும் வழமையான ஒரு நாளாகவே இருந்துவந்திருந்தாலும், பகல் 12 மணிக்குப் பின்னர்  வெலிக்கடை சிறைச்சாலையின் வழமையான செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டிருந்ததை கொஞ்சம் கொஞ்சம் நாங்கள் உணரத் தொடங்கியிருந்தோம்.
 
திடீரென எங்கிருந்தோ வந்து எம்மை சூழ்ந்துகொள்ளும் கரும்மேகங்கள் போல, சில புதுமுகங்கள் எண்ணமுடியாத அளவில் வந்து குவிந்தன. விசேட அதிரடிப்படையினர் திடீரென அதுவும் இவ்வளவு பேர் சிறைச்சாலைக்குள் வருவதற்கு காரணம் என்ன? என நாங்கள் எங்களுக்குள்ளேயே யோசித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்குள் தோன்றிய விடைதெரியா அந்தக் கேள்விகளைப் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு அப்போது நேரம் இருக்கவில்லை. 
 
சிறைச்சாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் விசேட அதிரடிப்படையினரை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும், இவ்வாறு சிறைச்சாலையில் உங்களால் அத்து மீறி நுழைய முடியாது என்றும் தொடர்ந்து வாய்தர்க்கம் செய்துவந்திருந்தாலும்,  "கொலைப்பட்டினியில் இருக்கும் வேட்டை விலங்கு விதிமுறைகளை பார்த்தா வேட்டையாடப்போகும்| என்பதுபோல எதனையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகளை அலட்சியப்படுத்திவிட்டு அத்துமீறி உள்ளே நுழைந்து வேட்டையைத் தொடங்கினார்கள்.
 
வேட்டைக்காக  முதலில் குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்போரின் சிறை வளாகப்பகுதிக்குச் சென்ற அதிரடிப்படையினர், அங்கிருந்தவர்களை கடுமையாகத் தாக்கிக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு அந்தப் பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த ""ஐய்யோ அம்மா..., ""கடவுளே எங்களைக் காப்பாற்று..., ""நாங்க ஒண்ணுமே பண்ணலயே எதுக்கு இப்படி அடிக்கிறீங்க... இப்படியான விண்ணைப் பிளக்கும் கதறல்களே எங்களுக்கு அங்கு நடப்பதை எடுத்துரைத்தன.
 
சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் அளவாகவே தாக்கப்பட்டார்கள் என்பதற்கு மரணதண்டனை கைதிகள் மீதான தாக்குதலே சாட்சி. 
தற்போது மரணதண்டனை கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்துக்கு சென்றவர்கள், அவர்களைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் என்பதால், சந்தேக நபர்களைபோலல்லாமல் அவர்களும் துணிந்து பதில் தாக்குதல்கள் மேற்கொண்டனர். இதனைச் சிறிதளவேனும் எதிர்பார்த்திராத அதிரடிப்படையினருக்கு இந்தப் பதில் தாக்குதல் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
 
பதில் தாக்குதலால் வெறிபிடித்தவர்கள்போல நடந்துகொண்ட அதிரடிப்படையினர், பூட்டப்பட்ட சிறைக்கூடுகளில் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசினர். பொதுவெளியில் கண்ணீர்ப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டாலே தாங்கிக்கொள்ளமுடியாத வேதனை ஏற்படும். இவர்களோ பூட்டப்பட்ட சிறைச்சாலையின் கூடுகளுக்குள் கண்ணீர்ப் புகையை சமாளிக்கமுடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நிலைகுலைந்துபோனார்கள். சிறைக்குள் இருந்தால் சாவு சில விநாடிகளில் என உணர்ந்தவர்கள் சமாளிக்க முடியாமல் சிறைக்கூடுகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.
 
மூச்சுத்திணறலுக்குப் பயந்து கூடுகளை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தவர்களுக்கு இனி மூச்சுக்காற்றே நிற்கப்போகிறது என்பதை உணர்த்தும் சம்பவங்கள் வெளியில் அரங்கேறக் காத்திருக்கின்றன என்பதை மறந்து போனார்கள். கைதிகள் சிலர் அங்கிருந்த கற்கள் மற்றும் சிறிய சிறிய பொருட்களைக் கொண்டும்  பதில் தாக்குதல் மேற்கொண்டனர். பயிற்றுவிக்கப்பட்ட அதிரடிப்படையினர், துப்பாக்கி, பெரும்பான்மைப் பலம் போன்ற காரணங்களால் கைதிகளின் தாக்குதல் செல்லாக்காசாய் போனது.
 
வெறிபிடித்தவர்கள்போல நடந்துகொண்டிருந்த அதிரடிப்படையினரின் வெறியாட்டம் துப்பாக்கித் தாக்குதலாக மாறியது. மரணதண்டனை கைதிகள் தங்களுக்கு அதிரடிப்படையினர்தான் மரணதண்டனையை நிறைவேற்றப்போகிறார்களோ எனச் சிந்திக்கும் அளவுக்குத் தாக்குதல் தீவிரமடைந்தது. 
 
அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவரின் நிலைமை மோசமானது. இதனால் அங்கிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் உதவியுடன் கைதிகள் சிலர் அவரை வெளியில் தூக்கிச்சென்று மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரியின் ஓட்டோவில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல முற்பட்டனர். அவர் சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயல்வதாகக் கூறி குறித்த ஓட்டோவின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. குறித்த கைதி தப்பிக்கவேண்டிய தேவையே இருந்திருக்கவில்லை. இரண்டு நாட்களில் விடுதலையாகும் கைதி ஒருவருக்கு 
சிறைச்சாலையிலிருந்து தப்பித்து ஓடுவதற்கு அவசியம் இருக்காதே. சில மணிநேரங்கள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து முடிந்தது. உண்மையில் அது துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வாக இருந்திருக்கவேண்டும் என்பதை அன்று இரவு 11 மணிக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் எங்களுக்கு உணர்த்தின. 
 
எவரெல்லாம் கொல்லப்படவேண்டும் எனப் பட்டியலொன்றை எடுத்துக்கொண்டு அதிரடிப்படை யினரோடு தற்போது இராணுவத்தினரும் ஆயிரக்கணக்கில் அதுவும் இரவில் வந்திருந்ததால் எங்களது பயம் இரட்டிப்பாகியிருந்தது. என்னோடு இருந்த கலுதுசார என்பவரை அடித்து இழுத்துச்சென்றவர்கள் அவரையும் சுட்டுக்கொன்றார்கள். பின்னர் அதிகாலையில் என்னோடு இருந்த அமில என்பரையும் சுட்டுக்கொன்றார்கள். இவ்வாறு பட்டியலில் உள்ள பெயர்களைப் பார்த்து ஒவ்வொருவரையாய் தேடித்தேடி சுட்டுக்கொன்றார்கள். இவ்வாறு 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர். 
இது தொடர்பில் நான் 2013ஆம் ஆண்டு விடுதலைசெய்யப்பட்டபோது முறைப்பாடு செய்யப்போவதாகக் கூறினேன். எனினும், எனது சட்டத்தரணிகள் இது மஹிந்தவின் ஆட்சி என்பதால் உன்னையும் அவர்கள் சுட்டுக்கொல்வார்கள் எனக் கூறினர். உண்மையில் அந்தக் காலத்தில் வெலிக்கடை சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தக்கோரி முறைப்பாடு எதுவும் பதிவு செய்திருந்தால் நிச்சயம் தற்போது நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். 
 
நாட்கள் நகர்ந்தன 2015இல் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. நான் குற்றத்தடுப்புப் பிரிவில் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் கோரி முறைப்பாடொன்றை பதிவுசெய்திருந்தேன். 
 
நல்லாட்சியிலாவது நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
 
குறித்த படுகொலைகளின் நேரடி சாட்சி நான் என்பதால் இது தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் முறைப்பாடொன்றை பதிவுசெய்திருந்தேன். வெலிக்கடை சிறைச்சாலை மோதல் திட்டமிட்ட ஒன்று. இதற்குப் பின்னால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய  ராஜபக்ஷ இருக்கிறார் எனவும் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் தொடர்பில் ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டிருந்த மூவர் அடங்கிய குழு தெரிவித்திருந்தது.
 
அவருக்கு எதிராக இது வரையில் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனை வைத்து நல்லாட்சி அரசும் கடந்த அரசைப்போல "டீல்| போட பார்க்கிறது. இந்த அரசும் கோட்டாவுக்குப் பயந்துள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
 
சிறைக்கைதிகள் கூரையின் மேல் ஆயுதங்கள் தாங்கியிருக்கும் படங்கள் வெளியாகி இருக்கிறதே? அவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள் கிடைத்தன? 
 
அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் எனத் தெரிவித்தே சிலர் தங்களது பாதுகாப்புக்காக சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறினார்கள். அவர்களுக்கு வெளியிலிருந்தெல்லாம் ஆயுதங்கள் கிடைக்கவில்லை. துப்பாக்கித் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இராணுவத்திடமிருந்தது துப்பாக்கிகளை கைதிகள் சிலர் அபகரித்திருந்தனர்.
எனினும், அவ்வாறு கூரையின் மேல் ஆயுதங்களுடன் இருந்தவர்கள் எவரும் கலவரத்தில் கொல்லப்படவில்லை. மாறாக, அடையாளப்படுத்தப்பட்ட குறித்த சிலரே திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர்.
கோட்டாபயவுடன் நெருங்கிப் பழகிய மஞ்சுசிறி என்பவர்  கோட்டாபயவின் சில முக்கிய தகவல்களை வெளிப்படுத்தப் போகிறார் என்பதை அறிந்துகொண்ட அவர்,
மஞ்சுசிறியை கொலைசெய்யவே இந்த நாடகத்தை அரங்கேற்றினார்.
 
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தற்போதும் மனித உரிமைகள் மீறப்படுகின்றனவா?
 
சிறைச்சாலை என்ற பெயரில் சித்திரவதை முகாம்களையே இலங்கை அரசு நடத்திவருகின்றது. அப்படியான சித்திரவதைக்கூடங்களில் ஒன்றுதான்  வெலிக்கடை சிறைச்சாலையும்.
இலங்கையில் அதிகமான படுகொலைகள் இடம்பெற்ற சிறைச்சாலைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
 
கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி சிறைச்சாலை வளாகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 27 பேருமே இதற்கு சாட்சி.
 
நெல்சன் மண்டேலா, கைதிகளை எவ்வாறு நடத்தவேண்டும் என்று அவரது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். இதனை ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவமுள்ள நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. இதனை இலங்கையும் ஏற்றுக்கொண்டுள்ளபோதும் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை.வெலிக்கடை உள்ளிட்ட இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன.
 
8 அடி சிறைக்கூட்டில் 20 பேர் வரையிலானோர் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அவலம் இடம்பெறுகின்றது. வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை. முறையான மருத்தவ வசதிகள் கூட சிறைச்சாலைகளில் காணப்படுவதில்லை. சிறைச்சாலைகள் மூடப்படவேண்டியவை. வெளிநாடுகளில் பல சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன. ஆனால், இலங்கையில் புதிய சிறைச்சாலைகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு காலத்தில் நல்லெண்ண அடிப்படையில் கைதிகளை விடுதலைசெய்வதில் கூட மோசடி செய்யப்படுகிறது. ஜனாதிபதிக்குத் தேவையான சிலரே விடுதலை செய்யப்படுகிறார்கள். கடந்த ஆட்சிக்காலத்தில் இவ்வாறான மோசடிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. 
 
கொலை வழக்கில் தொடர்புடைய லிண்டன் அப்பு என்பவர் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலைசெய்யப்பட்டார்.அமைச்சர் ஒருவரின் மனைவியான மில்ரோய் பெர்னாண்டோ என்பவரும் கொலை வழக்கில் தொடர்புடையவர்தான். அவரும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டார். பொதுமன்னிப்பு வசதி படைத்த, தங்களுக்கு வேண்டியவர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது.
 
உங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்பது உண்மையா?
 
மொரட்டுவையில் அமைந்த எனது வீட்டின் மீது கடந்த செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நானும் எனது குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தோம். கடந்த மூன்று வருடங்களில் என் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நான்காவது சம்பவமாக இது உள்ளது. குற்றவாளிகளை தப்பிக்கவைக்க சாட்சியாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை தொடர்கிறது.
 
எனது குடும்பத்தாருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சியில் கூட எனக்குப் பாதுகாப்பு இல்லை என்பது உண்மையே. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அம்பை தண்டிப்பதைவிட அம்பை எய்தியவரையே தண்டிக்கவேண்டும். அம்பும், அம்பை எய்தியவர் யார் எனத் தெரிந்து பயந்து பின்வாங்குகிறது இந்த அரசு. சாட்சியாளர்களை அச்சுறுத்தி வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த படுகொலைகளை இந்த அரசும் மூடிமறைக்கப் பார்க்கிறது.
 
பா.நிரோஷ்

https://www.sudaroli.com/special-interviews/item/1545-2017-11-16-08-14-00

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.