Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வடக்கு – கிழக்கில் கிளர்ச்சி வெடிக்கும்’: இது தேர்தலுக்கான கோசமா….?

Featured Replies

‘வடக்கு – கிழக்கில் கிளர்ச்சி வெடிக்கும்’: இது தேர்தலுக்கான கோசமா….?

 

‘வடக்கு – கிழக்கில் கிளர்ச்சி வெடிக்கும்’: இது தேர்தலுக்கான கோசமா….?

நரேன்-

இலங்கைத் தீவு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே மிதவாத தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ் தேசிய அரசியல் பல்வேறு முரண்பாடுகளையும், பிளவுகளையும் சந்தித்து இருந்தது. ஜனநாயக ரீதியாக மிதவாத தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களையும், உரிமைக்கான குரல்களையும் தென்னிலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிராதான கட்சிகளும் புரிந்து கொள்ளாமையின் விளைவு இளைஞர்கள் ஆயுதமேந்த நிர்பந்திக்கப்பட்டனர். மிதவாத தமிழ் தலைமைகளும் அதற்கு துணை போயின. தனித் தமிழீழ கோரிக்கையை முன்னுறுத்தியும், உரிமையை வலியுறுத்தியும் பல ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் தோற்றம் பெற்ற போதும் அவை கூட ஒற்றுமையாக செயற்பட முடியாத நிலை உருவாகியிருந்தது. தமிழ் தேசிய அரசியலில் கூட்டுக்களும், பிளவுகளும் காலம் காலமாக ஏற்பட்டு வந்ததொன்றே. இந்தநிலையில் வடக்கு, கிழக்கை மையப்படுத்திய தமிழ் தேசிய அரசியலில் அண்மைக்காலமாக பேசப்பட்டு வந்த மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனைகள் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தீவிரம் பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தானாகவே விழுந்தது. இருப்பினும் 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையிலேயே கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டு பலர் வெளியேறி இருந்தனர். விடுதலைப் புலிகளால் கட்சி சாராத அடிப்படையில் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் சம்மந்தன் தரப்பால் ஓரங்கட்டப்பட்டனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கொள்கை முரண்பாட்டின் அடிப்படையில் வெளியேறியது. இந்த சம்பவங்கள் நடந்து 7 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒரு பின்னடைவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து நிற்கின்றது.

2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதில் தமிழர் விடுதலைக் கூட்டனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எப்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளே அங்கத்துவம் வகித்திருந்தன. தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவர் ஆனந்த சங்கரியின் உதயசூரியன் சின்னத்திலேயே கூட்டமைப்பு முதல் தேர்தலை எதிர்கொண்டும் இருந்தது. ஆனால் ஆனந்த சங்கரியுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து 2004 ஆம் ஆண்டே தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் தூசி தட்டி எடுக்கப்பட்டு தமிழ் மக்களின் ஒற்றுமைக்கான ஒரு சின்னமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனாலும் அந்த ஒற்றுமை என்பது இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டனி உள்வாங்கப்பட்டதுடன், புளொட் அமைப்பும் உள்வாங்கப்பட்டது. ஆனாலும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலுடன் தமிழர் விடுதலைக் கூட்டனி மீண்டும் கூட்டமைப்புக்கள் இருந்து மாயமாகியது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய நான்கு கட்சிகளின் கூட்டாக செயற்பட்டு வந்தது. கூட்டமைப்புக்கான சின்னத்தை வழங்கி, தலைமையையும் பெற்றிருந்த தமிழரசுக் கட்சி அதில் தம்மை முதன்மைப்படுத்தி தமது கட்சியை வளர்த்துக் கொண்டது. இதனால் இன்று கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கட்சி என்கின்ற ஒரு மனநிலை பலரிடம் உருவாகி இருப்பதையும் காணமுடிகிறது.

ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் மனிதவுரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கைக்கு ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கமும் இணை அணுசரனை வழங்கி அதனை நிறைவேற்றியிருந்த போதும் அதனை நடைமுறைப்படுத்தாது மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கியமை மற்றும் தமிழ் மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளி கொண்டுவரப்படுகின்ற புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குகின்றமை என பல்வேறு வழிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் தமிழரசுக் கட்சி தமக்கு ஆணை வழங்கிய மக்களது கருத்துக்களையும், பங்காளிக் கட்சிகளினது கருத்துக்களையும் உள்வாங்காது தன்னிச்சையாக, செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியிருக்கின்றது. தொடர்ந்தும் ஆதரவு வழங்கியும் வருகிறது. 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்திற்காக தமிழ் மக்களிடம் வாக்கு கேட்ட கூட்டமைப்பு அதன் பின் எதிர்க்கட்சி தலமையை பெற்றதுடன், மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் பங்காளிகளாக இணக்க அரசியல் செய்து வருகின்றது. இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் இருந்த அழுத்தங்கள் குறைவடைவதற்கு உடந்தையாக செயற்பட்ட கூட்டமைப்பு தலைமை அந்த நல்லெண்ண செயற்பாட்டை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களின் அவசிய பிரச்சனைகளை தீர்க்கத் தவறியுள்ள நிலையில், அவர்களை நம்பியுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றியுள்ளது. மாறாக அரசிடம் இருந்து தமக்கான சலுகைகளையே பெற்றிருக்கின்றது.

கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வீதியோரங்களில் மழை, வெயில் பாராது தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன என நீதி கோரியும், தமது சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கரிசனையாக செயற்பட்டிருக்கவில்லை. அரசாங்கத்திற்கும் இது தொடர்பில் உரிய அழுத்தங்களை கொடுக்க அது தவறியிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலமையின் தற்போதைய நகர்வானது அவர்களால் காலம், காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முரணானது ஆகும். இதனால் அதிருப்தியடைந்துள்ள தமிழ் தேசிய இனம் இன்று மாற்றுத் தலைமை பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளது.

இலங்கைத்தீவு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்த நாட்டில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்களே தமிழ் – சிங்கள மக்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்திருந்தன. 1920 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மனிங் அரசியலமைப்பு தொடக்கம் தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு வரையிலான எல்லா அரசியல் அமைப்புக்களும் தமிழ் மக்களது அபிலாசைகளை புரிந்து கொள்ளாது இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களை மையப்படுத்தி கொண்டுவரப்பட்டவையாகும். சுதந்திரத்திற்கு பின்னரான இரு அரசியலமைப்பும் இந்த நிலையை மேலும் வலுப்படுத்தி பௌத்த சிங்கள அடிப்படை வாதக் கருக்களை உள்வாங்கி தமிழ்மக்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்வதற்கு வழிவகுத்தது. இதன் விளைவே இந்த நாட்டில் ஆயுதப்போராட்டம் தீவிரம் பெற வழிவகுத்தது.

ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனமுரண்பாடு ஏற்படாத வகையில் நீண்டகாலமாக புரையேதடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக அதாவது மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கை இடம்பெற்று இடைக்கால அறிக்கையும் வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கை தொடர்பான விவாதங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் அந்த அறிகையிலோ அல்லது விவாதத்தின் போதோ தமிழ் மக்களது அபிலாசைகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

‘பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்கவும், ஒற்றையாட்சியின் கீழ் பேரினவாதத்துக்கு தொடர்ந்து இடமளிக்கவும், வடக்கு – கிழக்கை இணைக்காது விடவும், தாயகத்தில் தன்னாட்சி கோரிக்கைகளை கைவிடவும் இன்றைய தமிழ்த் தலைமைத்துவம் தயார் என்று கூறி நடந்துகொள்வதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்படப்பார்க்கிறது. அத்துடன் வலிந்து தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தை தான்தோன்றித்தனமாக கைவிட தமிழ்த் தலைவர்கள் முன்வந்தமையும் பிளவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எது நோக்கி பயணிக்கின்றது என்ற கேள்வியையும், சந்தேகத்தையும் இது ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது தேர்தல் ஒன்றுவரவுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மீண்டும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா என்ற கேள்வி பலரிடமும் ஏற்பட்டுள்ளது. பல தடவை அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் என எச்சரித்த தமிழரசுக் கட்சித் தலைவர் அரசின் செயற்பாடுகளுக்கு துணை போயுள்ள நிலையிலும், இடைக்கால அறிக்கையை ஆதரிக்கும் நிலையிலும், ‘ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தா விடின் அரசுக்கு எதிராக வடக்கு- கிழக்கில் கிளர்ச்சி வெடிக்கும் எனவும், ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றவில்லையெனில் தமிழரின் நம்பிக்கையும் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் மைத்திரி அரசு இழக்கும் நிலை ஏற்படும் எனவும், ஜனநாயக பாதையில் இருந்து விலகி கிளர்சி ஏற்பட வாய்புண்டு எனவும், ஆகவே வடக்கு- கிழக்கு மக்களை மீண்டும் கிளர்சிக்குள் தள்ளவிட வேண்டாம்’ எனவும் தெரிவித்துள்ளார். அவர் முன்னர் கூறிய போராட்டங்களில் எத்தனை போராட்டங்கள் வெடித்தன என்பது குறித்து சிந்தித்து பார்ப்பதன் மூலம் தேர்தல் நோக்கிய அவர்களின் நகர்வு புரியும். இத்தகைய தமிழ் தேசிய உணர்சியூட்டும் வெற்றுக் கோசங்கள் இனிவரும் காலங்களிலும் தேர்தல்களில் வாக்குகளை சேகரித்து தரும் என கருதுவது என்பது பகல் கனவாகவே இருக்கும். ஏனெனில் மக்கள் தற்போது அரசியல் ரீதியாக விழிப்படைந்து விட்டார்கள். அதனை தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாட்டையும், அரச நிகழ்ச்சி நிரலுடன் இணைந்து செல்லும் போக்கையும் கடுமையாக விமர்சித்து வந்த ஈபிஆர்எல்எப் தற்போது இடைக்கால அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பு தலைமையின் முடிவாலும், தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாலும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ் தேசிய மக்கள் முன்னனியாக செயற்பட்டு வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியுடன் ஈபிஆர்எல்எப் இணைந்து புதிய கூட்டனி ஒன்றை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் அதிருப்தியாளர்கள் சிலர் இணைந்து கட்சியின் உபதலைவர்களின் ஒருவரான பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் ஜனநாயக தமிழரசுக் கட்சி என்கின்ற ஒரு அணியை உருவாக்கி, அந்த அணியும் புதிய கூட்டனியில் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய புதிய கூட்டனிக்கு தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு வழங்கவுள்ளது. ஆனாலும் அதன் இணைத்தலைவர் ஆன முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இது தொடர்பில் முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிகிறது. பல்வேறு தரப்புக்களில் இருந்தும் கூட்டமைப்புக்கு போட்டியாக புதிய அணியை உருவாக்க வேண்டாம் எனவும், கூட்டமைப்பு பிழையாக செல்கிறது. அதனால் புதிய அணிக்கு முதலமைச்சரை தலமையேற்குமாறும் இரு வேறுபட்ட வகையில் அழுத்தம் வந்து கொண்டு இருப்பதால் அவர் முடிவெடுக்க முடியாது தடுமாறியிருப்பது தெரிகிறது. ஆனாலும், அவர் பாதிக்கப்பட்ட மக்கள் நலன்சார்ந்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தை காலம் ஏற்படுத்தியுள்ளது. தன்னை நம்பியுள்ள மக்களுக்கு அவர் என்ன சொல்லப் போகின்றார் என்ற கேள்வி இன்று பலரிடமும் எழுந்திருக்கின்றது.

மக்கள் இயக்கமாக செயற்படப்போவதாக தெரிவித்து வரும் தமிழ் மக்கள் பேரவையும், அதன் பின்னால் அதனை நம்பியுள்ள மக்களுக்கு எத்கைய தலைமை சரியானது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் இயக்கங்கள் மக்களை அரசியல் ரீதியில் விழிப்பூட்டி அவர்களை சரியான அரசியல் பாதையில் அதாவது சரியான அரசியல் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயற்பட வழிகாட்ட வேண்டுமே தவிர, மக்களை குழப்புவதாக செயற்படக்கூடாது. இதனால் தமிழ் மக்கள் பேரவை முதலில் தெளிவானதொரு அரசியல் முடிவுக்கு வரவேண்டும். இதுவே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வை தீர்மானிக்கும். இதனை தமிழ் மக்கள் பேரவையும் புரிந்து கொள்ள வேண்டும்.

எது எப்படியோ, வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியப் கூட்டமைப்புக்கு போட்டியாக மாற்று அணி ஒன்று களமிறங்கவுள்ளது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சாவலாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தலைமை மீது ஏற்பட்டிருக்கின்ற அதிருப்தி நிலை புதிய அணிக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்தகையதொரு வாய்ப்பை தமிழ் தேசிய சிந்தனையும், தமிழ் மக்களது அபிலாசைகளை முன்னுறுத்தியும் நகரும் தலைமைகள் எவ்வாறு தக்க வைக்கப் போகின்றார்கள் என்பதையும், தமது கூட்டை எவ்வாறு பலப்படுத்தப் போகின்றார்கள் என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையிலான கொள்கை நோக்கிய நகர்வா அல்லது ஒற்றுமை என்ற பேரில் தேர்தலுக்கான கூட்டா என்பதை வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் தீர்மானிக்க வேண்டும். மக்களும் தமக்காக குரல் கொடுக்கின்ற உண்மையான அரசியல்வாதிகள் யார் என்பதை இனங்கான வேண்டும். அவையே அடுத்து வரும் அரசியல் கூட்டுக்களையும், தமிழ் மக்களின் இருப்பையும் தீர்மானிக்கும். மக்கள் விழிப்படையாத வரை ஆரோக்கியமான அரசியல் நகர்வை எப்போதும் கட்டியெழுப்ப முடியாது. இவற்றையே பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்ட வரலாறுகள் உணர்த்தி நிற்கின்றன.

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-கிழக்கில்-கிளர்ச/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.