Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலும் திறக்கப்பட்ட போர்முனை!

Featured Replies

வடக்கிலும் திறக்கப்பட்ட போர்முனை!

கிழக்கில் மையம் கொண்டிருந்த போர் முனைப்புகள் தற்போது வடக்கிலும் பரவியுள்ளன. கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக வெளியேற்றும் நடவடிக்கையெனக் கூறி படையினர் ஆரம்பித்த போர் வடக்கிலும் பரவியதன் மூலம் ஒரேநேரத்தில் படையினர் இரு பெரும் களங்களில் கடுமையான பதிலடியை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கிழக்கில் திருகோணமலையில் ஆரம்பமான படை நடவடிக்கை தற்போது மட்டக்களப்பு வரை விரிந்துள்ளது. திருமலையில் பல பகுதிகளையும் கைப்பற்றிய படையினர் மட்டக்களப்பை புலிகளிடமிருந்து முழுமையாக மீட்டு விடலாமெனக் கருதினர்.

திருகோணமலையில் புவியியல் நிலைமை பின்புற கள நிலைமை, விநியோக வசதிகளைக் கருத்தில் கொண்டு புலிகள் சில பிரதேசங்களிலிருந்து விலக வேண்டியிருந்தது. இந்த நிலை வாகரை வரை தொடர்ந்தது. இந்த நிலைமையை கருத்தில் கொண்ட அரசும் படைத் தரப்பும், மட்டக்களப்பிலும் புலிகள் பின்வாங்கிவிடுவார்களென நினைத்தன.

பாரிய படை நடவடிக்கைக்கு முன்பாக புலிகளின் பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை நடத்தி, மக்களை குழப்பமடைய வைத்து, சொந்த இடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அதன் மூலம் உளவியல் போரொன்றை தொடுத்த பின் புலிகளின் பகுதிகளினுள் பாரிய படைநகர்வுகளை மேற்கொள்வதே படையினரின் வாடிக்கையான நடவடிக்கையாகும்.

வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி சாதகமான களநிலையென்றாலும் சாதகமற்ற களநிலையென்றாலும் படையினர் கைக்கொள்ளும் யுத்த நடைமுறை இதுவாகும். இதனால், மக்கள் குடியிருப்புகளில் ஷெல்களும் பல்குழல் ரொக்கட்டுகளும் மழை போல் பொழிய, விமானங்களும் கடும் தாக்குதலைத் தொடுக்க மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

அரசையும் படையினரையும் பொறுத்தவரை, இன்று புலிகளுக்கெதிரான போரில் தங்கள் ஆட்பலத்தை விட ஆயுத பலத்தையே நம்பியிருக்கின்றன. நீண்ட தூர ஆட்லறி ஷெல்களும் பல்குழல் ரொக்கட்டுகளும் குண்டு வீச்சு விமானங்களுமே படையினரின் பிரதான போராயுதங்களாகும். இவை புலிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ மக்களை மிக மோசமாகப் பாதிக்கிறது.

இந்த நிலையில் தான் மட்டக்களப்பில் அண்மையில் பாரிய படைநகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது. குடும்பிமலையை (தொப்பிகல) கைப்பற்றுவதே படையினரின் பிரதான இலக்கெனக் கூறப்பட்டாலும் புலிகளின் பலம் குறித்து படையினர் நன்கறிந்துள்ளனர்.

இதனால் குடும்பிமலையையும் புலிகளின் மற்றொரு தளமான கொக்கட்டிச்சோலையையும் பிரித்து புலிகளின் பகுதிக்குள்ளேயே அவர்களது விநியோகங்களை முடக்கி அதன் பின் அவர்களது பகுதிகளுக்குள் செல்ல படையினர் திட்டமிட்டனர்.

இதனால் குடும்பிமலையையும் கொக்கட்டிச்சோலையையும் பிரிக்கும், மட்டக்களப்பு - பதுளை வீதியை (ஏ15) கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் பகுதிகளை இலகுவாகக் கைப்பற்றிவிட முடியுமென அரசும் படைத்தரப்பும் கருதின.

இதற்கேற்ப மட்டக்களப்பு- பதுளை வீதியை கைப்பற்றும் முயற்சி இரு முனைகளில் மேற்கொள்ளப்பட்டும் அது தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து, இந்த வீதியின் பக்கவாட்டிலும் சில படைநகர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனையும் புலிகள் முறியடித்து விடவே புலிகளின் பகுதிகளினுள் நுழையும் மாற்றுத் திட்டங்களை வகுப்பதில் படையினர் கவனம் செலுத்துகின்றனர்.

மட்டக்களப்பு நகரிலிருந்து புலிகளின் பகுதிகளை நோக்கி மிக உக்கிரமாக ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அதன் எதிர்ப்புறமாக, மட்டக்களப்பின் பின்புறமாக - அம்பாறை எல்லைப் பகுதியிலிருந்தும் புலிகளின் பகுதிக்குள் இதேபோன்ற கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

இவ்விரு தாக்குதல்களாலும் பொது மக்கள் புலிகளின் பகுதிகளிலிருந்து முழுமையாக வெளியேறிவிட தரைப்படைகள் பாரிய நகர்வில் ஈடுபட்டன. இந்த தரை நகர்வை முதலில் குறிப்பிட்ட தூரம் வரை அனுமதித்த புலிகள் அதன் பின்னர் கடும் பதிலடி தொடுத்தனர்.

புலிகளின் பகுதிக்குள் படையினர் குறிப்பிட்டளவு தூரம் முன்னேறிச் சென்றுவிட்டதால் புலிகளின் பகுதிகளினுள் ஷெல் மற்றும் ரொக்கட் தாக்குதல் நடத்துவதை மட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இந்த ஷெல் மற்றும் ரொக்கட்டுகள், முன்னேறிச் செல்லும் படையினருக்கு கூட பாதகமாகி விடக் கூடுமென்பதால் இந்தத் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய கட்டாய நிலைமை படையினருக்கேற்பட்டது.

இது புலிகளுக்கு வாய்ப்பாயிருந்தது. ஷெல் மற்றும் ரொக்கட் தாக்குதல் குறைவடைந்ததால் இரு தரப்பும் நேருக்கு நேர் சிறிய ரகத் துப்பாக்கிகளுடன் மோதும் நிலைமை ஏற்பட்டது. தங்கள் பகுதி களநிலைமை புலிகளுக்கு நன்கு தெரிந்திருந்ததால் புலிகளின் உக்கிர பதில் தாக்குதலில் படையினர் நிலை குலைந்து போனதுடன் தங்கள் படை நகர்வை இடைநிறுத்த வேண்டியிருந்தது.

புலிகளின் பகுதியை மட்டக்களப்பு - பதுளை வீதி ஊடறுத்துச் செல்வதால் வீதியின் இரு முனைகளிலிருந்தும் முன்னேற முற்பட்ட படையினரின் முயற்சியை புலிகள் முறியடிக்கவே, அம்பாறை புளுக்குணாவ முகாமிலிருந்து உன்னிச்சை ஊடாக, இந்த வீதியின் பக்கவாட்டை நோக்கி முன்னேறும் முயற்சிகளிலும் படையினர் ஈடுபட்டு அதுவும் தோல்வியில் முடிவடைந்தது.

இந்தப் படை நடவடிக்கையை அரசு ஆரம்பித்ததால், புலிகளின் பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு நகருக்கும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் வந்து சேர்ந்தனர். ஏற்கனவே மூதூர் கிழக்கு, கதிரவெளி மற்றும் வாகரை போன்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒரு இலட்சம் மக்களும், மட்டு நகரை அண்மித்த பகுதிகளிலேயே தஞ்சமடைந்ததால் மட்டக்களப்பு அகதிகள் நகரமாகியது.

இது சர்வதேச ரீதியிலும் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தவே மட்டு நகரிலுள்ள அகதிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டிய கட்டாய தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மூதூர் கிழக்கு மற்றும் வாகரையிலிருந்து வெளியேறிய மக்களை, அவர்களது விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை அரசுள்ளது. இது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அரசுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்த அகதிகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாக அனுப்ப முடியாத நிலை உருவாகியுள்ள நிலையில், மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறி தற்போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்துள்ள மக்களை எப்படிப் பராமரிப்பதெனத் தெரியாது அரசு தடுமாறுகிறது.

இவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கு உடனடியாக செல்ல அனுமதித்தால் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டியிருக்கும் அது இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அரசுக்கு பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக அப்புறப்படுத்தி அங்கு மாகாண சபைத் தேர்தலை அவசர அவசரமாக நடத்தும் அரசின் திட்டம் இதனால் தோல்வியடைந்துவிடும். அதேநேரம் மட்டக்களப்பில் அவசர அவசரமாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்வதும் உடனடியாகச் சாத்தியமற்றதென்பதை தற்போது அரசும் புரிந்து கொண்டுள்ளது.

மூதூர் கிழக்கு மற்றும் வாகரைப் பகுதிபோன்று மட்டக்களப்பிலிருந்து புலிகள் ஒரு போதும் வெளியேறப் போவதில்லை. திருகோணமலை, வாகரைப் பகுதியிலிருந்த பெருமளவு புலிகள் மட்டக்களப்பில் நிலைகொண்டிருப்பதால் பாரிய படைநகர்வின் போது புலிகளின் பதில் நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்குமென்பது உணரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் அண்மையில் படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்வு முயற்சியை புலிகள் முறியடித்துவிட்டதால் புலிகளின் பகுதிகளை நோக்கிய அடுத்த நகர்வுக்காக மாற்றுத் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதேநேரம் இடம்பெயர்ந்த அகதிகளை தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருப்பதால் மிகப்பெரும் மனிதாபிமானப் பிரச்சினை எழுந்து அது சர்வதேச ரீதியில் மோசமான நெருக்கடிகளை ஏற்படுத்துமென்பதால் மிக விரைவில் மட்டக்களப்பு தாக்குதலை முடித்துவிட வேண்டிய கட்டாய நிலையும் அரசுக்கேற்பட்டுள்ளது.

ஆனால் அங்கு களநிலையோ அரசு எதிர்பார்த்தது போலில்லை. திருமலை, மூதூர் கிழக்கு, கதிரவெளி, வாகரையென பல பகுதிகளிலுமிருந்து புலிகள் வெளியேறி மட்டக்களப்பில் ஒன்று கூடி மிகவும் வலுவாயிருக்கையில் புலிகள் விலகிய பகுதிகளிலெல்லாம் ஆயிரக் கணக்கில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதால் பாரிய படைநகர்வுக்காக கனரக ஆயுதங்களையே நம்பியிருக்கும் நிலை படையினருக்கேற்பட்டுள்ளது.

கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக வெளியேற்றுவதாகக் கூறி அகலக்கால் வைத்த படையினர் இன்று ஆழமறியாது காலை விட்டுவிட்டார்களோ என அரசில் ஒரு தரப்பு கவலை கொண்டுள்ளது. கிழக்கில் இவ்வாறு திண்டாடும் அரசு வடக்கிலும் பாரிய தாக்குதலுக்கு முயற்சிக்கிறது.

கிழக்கில் தாங்கள் பாரிய தாக்குதலைத் தொடுக்க, புலிகள் வடக்கில் பாரிய தாக்குதலைத் தொடுத்து விடலாமென்ற அச்சத்தால் வடக்கிலும் ஒரேநேரத்தில் பாரிய படை நகர்வு முயற்சியில் அரசு ஈடுபடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

கிழக்கைவிட வடக்கில் புலிகள் மிகவும் பலமாயிருப்பதை படைத் தரப்பே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் கிழக்கில் படையினர் தங்களின் முழுக் கவனத்தையும் திருப்பியிருக்கையில் புலிகள் வடக்கில் மிகப்பெரும் தாக்குதலொன்றைத் தொடுத்து படையினருக்கு பேரிழப்பை ஏற்படுத்திவிடுவார்களென அரசு அஞ்சுகிறது.

வடக்கு - கிழக்கை பிரித்து கிழக்கில் கருணா குழுவை வளர்த்து அங்கு தங்களுக்குச் சாதகமானதொரு கள நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அதனை நன்கு பயன்படுத்தி கிழக்கில் மாகாண சபைத் தேர்தலொன்றை நடத்தி தமிழரின் பலத்தை குறைத்துவிட வேண்டுமென்பதில் இனவாதிகள் தீவிர அக்கறை காட்டுவதால் மிக விரைவில் மட்டக்களப்பில் அடுத்த கட்ட படைநகர்வுகளை அரசு துரிதப்படுத்தும்.

அதற்கு முன், வடக்கில் புலிகள் பாரிய தாக்குதல்கள் நடத்துவதைத் தவிர்ப்பதற்காக வன்னியிலும் யாழ்.குடாவிலும் அரசு சிறு சிறு படை நகர்வுகளை மேற்கொண்டு வடக்கில் புலிகள் மேற்கொள்ளவிருக்கும் பாரிய பாய்ச்சல்களை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனொரு கட்டமாகவே கடந்த வியாழக்கிழமை மன்னாரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படை நகர்வொன்று மேற்கொள்ளப்பட்ட அதேநேரம், மறுநாள் வெள்ளிக்கிழமை ஓமந்தைக்கு கிழக்கே படைநகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் படை நகர்வுகள், இனி முகமாலைப் பகுதியிலும் வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில் பகுதியிலும் மணலாற்றுப் பகுதியிலும் மேற்கொள்ளப்படலாம். இவ்வாறான படை நகர்வுகளானது புலிகளின் பகுதிகளை கைப்பற்றும் நோக்கம் கொண்டதாயிராது. தங்கள் மீது பெரும் பாய்ச்சலுக்கு புலிகள் தயாராயிருக்கிறார்களா என்பதை அறியுமொரு நடவடிக்கையாகவும், அவ்வாறு வடக்கில் பாரிய தாக்குதலுக்கு புலிகள் தயாராயிருந்தால் அந்த ஏற்பாடுகளை குழப்புமொரு நடவடிக்கையாகவுமே அது இருக்கும்.

வவுனியா, மன்னார், மணலாறு, முல்லைத்தீவு, முகமாலை, வடமராட்சி கிழக்கு என வடக்கில் எல்லா முனைகளிலும் சிறுசிறு படைநகர்வுகளை மேற்கொண்டு புலிகளின் திட்டத்தை நாடி பிடித்தறியும் நடவடிக்கைகளே இவையென்பதுடன் கிழக்கில் புலிகளின் கவனத்தை திசை திருப்பவும் அரசு இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதாகவே கருதப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் மட்டக்களப்பை எப்படியாவது முழுமையாகப் பிடித்துவிட வேண்டுமென்பதில் அரசு தீவிர அக்கறை காட்டுகிறது. அதற்கான தருணத்தையும் எதிர்பார்த்திருக்கிறது. இதனால் மட்டக்களப்பை என்ன விலைகொடுத்தாவது கைப்பற்றிவிடும் நிலையில் வடக்கில் பெரும் விலைகொடுத்துவிடக் கூடாதென்பதிலும் மிகக் கவனமாயிருக்கிறது.

இதனால்தான் வடக்கில் கடற்புலிகளின் பாரிய அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக இந்திய கடற்படையை கூட்டுச் சேர்க்கும் திட்டத்தை இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்தியக் கடற்படையும் தனது திட்டத்திற்குள் சிக்கிவிட்டால் வடக்கில் பெரும் போர் வெடித்தால் இந்தியக் கடற்படை மூலம் கடற்புலிகளை சமாளித்துவிடவும் இலங்கை திட்டமிடுகிறது.

தமிழகத்திலிருந்து இதுவரை காலமும் இல்லாதளவுக்கு தற்போது ஏன் `போல்ஸ் குண்டுகள்' கடத்தப்பட வேண்டும்? போல்ஸ் குண்டுகளை அங்கிருந்து புலிகள் கடத்துவதை விட ஆயுதங்களைக் கடத்தலாமே? ஆனால், இதன் பின்னணியில் இருப்பது யாரென்பதை இந்திய அரசு கண்டறிய வேண்டும்.

தமிழகத்திலிருந்து அண்மைக் காலமாக இரும்புக் கட்டிகள் கடத்தப்படுவதாகக் கூறி இந்திய அரசின் கவனம் இவ்விடயத்தில் திசை திருப்பப்பட்ட அதேநேரம், அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் மீது மோசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால் தமிழக மீனவர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும் இருநாட்டு கடற்படையும் கூட்டு ரோந்தில் ஈடுபடவேண்டுமென வற்புறுத்திவரும் இலங்கை அரசு, அப்படிக்கூட்டு ரோந்து ஆரம்பமாகிவிட்டால் அதன் மூலம் கடற்புலிகளை இந்தியக் கடற்படையுடன் மோதவிடலாமென மனப்பால் குடிக்கிறது.

அதேநேரம், புலிகள் தமிழகத்தை தங்கள் ஆயுதக் கடத்தலுக்கான தளமாகப் பயன்படுத்துவதாகக் கூறி தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கான அனுதாபத்தையும் இல்லாது செய்துவிடும் முயற்சிகள் நடக்கின்றன.

இதன் மூலம், இலங்கையில் பாரிய படைநகர்வுகள் மூலம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகையில் தமிழகம் கொந்தளிப்பதை தடுத்துவிடலாமெனவும் திட்டம் போடப்பட்டிருக்கலாமெனக் கூறப்படுகிறது.

இவ்வாறு ஒரேநேரத்தில் பல காய்நகர்த்தல்களை மேற்கொண்டு பாரிய படை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகையில் சர்வதேச சமூகம் இதற்கு பூரண ஆதரவு வழங்குகிறது. அரசின் கையோங்கி புலிகள் பலவீனமடைந்திருப்பதாக கருதப்படுவதால் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சர்வதேச சமூகம் ஆதரவளிக்கிறது.

அதேநேரம், நாளை புலிகளின் கையோங்கி அரச படைகள் பலத்த தோல்விகளைச் சந்தித்தால் இந்தப் பிரச்சினையில் தலையிட எத்தனையோ நாடுகள் ஓடிவரும். யுத்தம் மூலம் ஒருபோதும் தீர்வைக் கண்டுவிட முடியாதென அந்த நாடுகளெல்லாம் அறிக்கை மேல் அறிக்கை விடும்.

தற்போது அரசு மேற்கொள்ளும் பாரிய படை நடவடிக்கையால் தமிழர்கள் மிகப் பெரும் அவலங்களைச் சந்திக்கையில் தொடர்ந்தும் மௌனம் சாதிக்கும் சர்வதேச சமூகம் இதுகுறித்து விரைவில் கவலை கொள்ளும்.

உலகின் கவலையும் கவனயீனமும் ஒருவரது பலத்தின் அடிப்படையிலேயே வருகிறதென்பதால் அந்தப் பலத்தை நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதென தமிழ் மக்கள் உணரத் தொடங்கிவிட்டதால் புலிகளும் இதனை நன்குணர்ந்திருப்பர்.

மூலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.