Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதி வேலையா ஜனநாயக உரிமையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சதி வேலையா ஜனநாயக உரிமையா?

[26 - March - 2007]

- நயன இரத்நாயகா-

ஒரு சிலர் மன்னர்களாகவும் வேறு சிலர் மகாராணிகளாகவும் வர முயற்சிக்கின்றனர் எனவும் இது பயங்கரமான சதி வேலை எனவும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். ஜனநாயக நாடொன்றில் வாழும் எந்தவொரு பிரஜைக்கும் அந்த நாட்டின் தலைவராகும் உரிமையுள்ளது. அது ஜனநாயக உரிமையாகும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 1999 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலையடுத்து பொது சன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்து அமைச்சராகப் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட பின்னர் அவரதும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் உறவினரான சாம் விஜேசிங்கவினது இல்லத்தில் கூடி ரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். அப்போதைய ஜனாதிபதியான சந்திரிகாவை ஜனாதிபதிப் பதவியிலிருந்தும் கட்சித் தலைவர் (தலைவி) பதவியிலிருந்தும் நீக்கி ஆட்சி அதிகாரத்தையும் கட்சியையும் கைப்பற்றுவது தொடர்பாகவே அந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் தவறேதுமில்லை. அது ஜனநாயக உரிமையாகும்.

மகிந்த ராஜபக்ஷ அந்த ஜனநாயக உரிமையை வென்றெடுக்க பல்வேறு தந்திரங்களைக் கையாண்டார். அவற்றுள் முதலாவது தந்திரம் ஜனாதிபதி சந்திரிகா மீதும் பொ.ஐ.முன்னணி மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் விதத்தில் அரச விரோத ஊடக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். ஜனாதிபதி சந்திரிகாவையும் பொ.ஐ.முன்னணி அரசையும் விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை கோழி கூவும் நேரத்தில் - அதிகாலையில் வீட்டிற்கு அழைத்துக் கதவுகளை மூடி ஜனாதிபதி சந்திரிகாவிற்கும் அவரது அரசிற்கும் எதிரான தகவல்களை வழங்கியது. ஜனாதிபதிக்கும் அவரது அரசிற்கும் நாட்டு மக்களிடையே அபகீர்த்தி உருவாக்குவதற்கேயாகும்.

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வந்து அவரது உதவி ஒத்தாசைகளுடன் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரங்களைக் கைப்பற்றுவதே மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தந்திரமாகும். இது தொடர்பாக மகிந்த வாரந்தோறும் ரணிலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதை அறிந்தவர்கள் அறிவர்.

அது மாத்திரமன்றி எஸ்.பி.திசாநாயக, ஜி.எல்.பீரிஸ் உட்பட்ட குழுவினர் பொ.ஐ.முன்னணி அரசிலிருந்து வெளியேறி - ஐ.தே.கட்சியில் இணைந்து பொ.ஐ.முன்னணி அரசை வீழ்த்தத் தயாரான வேளையில் எஸ்.பி.திசாநாயக மற்றும் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருடன் மகிந்த ராஜபக்ஷ நெருங்கிப் பழகினார் என்பது நாடறிந்த ரகசியமாகும்.

2001 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பொ.ஐ.முன்னணி அரசு வீழ்த்தப்பட்டு ஐ.தே.கட்சி அமைக்கப்பட்டவுடன் ஷ்ரீ.ல.சு.கட்சியின் தலைமைப் பதவி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாக எஸ்.பி.திசாநாயக தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து வெளியான சில நாட்களில் ஷ்ரீ.ல.சு.கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட ரத்னசிறி விக்கிரமநாயகவுக்கு எதிராக அக்கட்சிக்குள் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. இந்த விமர்சகர்களில் முக்கியமானவர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயாவார். இவர் எஸ்.பி.திசாநாயக மற்றும் ஜி.எல்.பீரிஸ் குழுவினருடன் ஐ.தே.கட்சியில் இணையத் தயாராகி - பின்னர் மனதை மாற்றிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் நீக்கப்பட வேண்டும் என ஐ.தே.கட்சி அரசு கொண்டுவந்த அரசமைப்புத் திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்ததுடன் ஐ.தே.க. அரசில் இணைந்து அமைச்சர் பதவியை ஏற்பது தொடர்பாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரத்னசிறி விக்கிரமநாயகாவை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்கு மகிந்த ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும் என்ற போராட்டத்தை சுதந்திரக் கட்சிக்குள் ஆரம்பித்தவரும் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயே ஆவார்.

மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதை சந்திரிகாவும் கட்சியிலுள்ள சந்திரிகா அனுதாபிகளும் ஜே.வி.பி.யினரும் எதிர்த்தனர். மகிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தால் அவர் ரணிலின் தாளத்திற்கேற்ப ஆடுவார் என்பதே அவர்களது குற்றச்சாட்டாகும்.

கட்சியின் தலைமைத்துவமும் கட்சி உறுப்பினர்களும் மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கூடாத எனக் குரலெழுப்பிய வேளையில் கட்சிக்குள் மகிந்தவுக்கு ஆதரவாகப் போராடிய ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கவனம் ஐ.தே.க.பக்கம் திரும்பியது.

எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக பாராளுமன்றச் சபாநாயகருக்குப் போதிய அதிகாரமுள்ளது. அவ்வேளையில் ரணில் தனிப்பட்ட விதத்தில் தலையிட்டு சபாநாயகரின் பாதுகாப்பை மகிந்தவுக்குப் பெற்றுக் கொடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் மகிந்தவுக்கு எதிராக ஷ்ரீ.ல.சு.கட்சிக்குள் அல்லது ஜே.வி.பி.க்குள் எதிர்ப்புகள் உருவானால் சபாநாயகர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த எதிர்ப்புகளை நிராகரிப்பார் என்பதற்காகவே ரணில் இந்த உதவியை மேற்கொண்டார்.

இதன் பின்னர் மகிந்த மக்கள் வழங்கிய ஆணையைக் காலால் உதைத்து - மக்கள் ஆணையால் உருவாக்கப்பட்ட அரசை (ஐ.தே.க.) ஜனாதிபதி சந்திரிகாவைக் கொண்டு கலைப்பித்து அதன் பின்னர் உருவாக்கப்பட்ட அரசில் பிரதமராவதற்கு உரிமை கோரியதானது ஒரு ஜனநாயக நாட்டில் பிரஜை ஒருவருக்கு உரிமை உள்ளது என்ற காரணத்தாலேயாகும்.

அதன் பின்னர் அவர் (மகிந்த) பிரதமராவதற்கு முயற்சி செய்தது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் சுதந்திரக் கட்சிசார்பில் ஜனாதிபதி வேட்பாளராவதற்கே ஆகும். அவ்வாறு தான் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக நியமிக்கப்பட்டால் 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்பதை உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதை மகிந்த அறிந்திருந்தார்.

அதற்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டால் சந்திரிகா நிறைவேற்றுப் பிரதமர் பதவியை ஏற்று நாட்டின் தலைவியாகவும் கட்சியின் தலைவியாகவும் நிரந்தரமான இடத்தைப் பிடிப்பார் என்ற அச்சம் மகிந்தவுக்கு இருந்தது.

எனவே, 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதைத் தடுப்பதற்கும் மகிந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுடன் தொடர்புகளை ஆரம்பித்தார்.

அதேபோலவே சந்திரிகாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து வந்த மங்கள சமரவீர மூலம் ஜனாதிபதி வேட்பாளராக தான் நியமனம் பெறுவதற்கான முயற்சிகளை மகிந்த மேற்கொண்டார். மகிந்தவை சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக்க மங்கள தயாரித்த திட்டம் வெற்றியளித்தது. ஜனாதிபதி வேட்பாளராக மகிந்தவை நியமிப்பதைத் தவிர சந்திரிகாவிற்கு மாற்று வழி ஏதும் இருக்கவில்லை.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றியடைந்த பின்னர் சந்திரிகா கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அதாவது தனக்கு எதிராகக் கட்சிக்குள் சதி வேலைகள் இடம்பெற்று வருகின்றன என சந்திரிகா தெரிவித்தார். சந்திரிகா தெரிவித்த அந்தக் கருத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று நினைத்துப் பார்ப்பது பெறுமதிமிக்கதாகும்.

சந்திரிகா அவ்வாறு கூப்பாடு போட்டாலும் அது சதி நடவடிக்கை அல்ல. நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு இருந்த உரிமையை நிலை நாட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளே அவையாகும். அது தொடர்பாக மகிந்த மேற்கொண்ட தந்திரோபாயங்களை சதி முயற்சிகள் என இனங்காண்பது தவறாகும். இவ்வாறான தந்திரங்களைக் கையாண்டு இந்நாட்டின் தலைவராக ரணிலுக்கும் சந்திரிகாவுக்கும் மங்களவுக்கும் உரிமையுள்ளது. இந்த உரிமையை மறுக்க எவருக்கும் உரிமையில்லை.

தோல்வியடைந்த அரசியல் வாதிகளும் ஓய்வு பெற்றவர்களும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரணில் தோற்றுப்போன அரசியல்வாதியாவார். அதேபோலவே மகிந்தவும் தோல்வியைத் தழுவிய அரசியல்வாதியாவார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மகிந்த படுதோல்வியைச் சந்தித்தவர். 1977 - 1989 க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் அவரால் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட முடியவில்லை. இருப்பினும், மகிந்த அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கவில்லை. அம்பாந்தோட்டை மக்கள் தன்னை நிராகரித்து விட்டார்கள் என்பதால் அவர் அம்பாந்தோட்டையை மறக்கவில்லை- கைவிடவில்லை. பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 1989 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு இன்று நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கிறார். தோல்வியைச் சந்தித்துள்ள ரணிலுக்கும் இந்த உரிமை இருக்க வேண்டும்.

அதேபோலவே ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவும் அரசியலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று அமெரிக்கா சென்று அங்கு வாழ்ந்து வந்தார். ஜனாதிபதியின் மற்றொரு சகோதரரான சோதாபாயவும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். இந்த இருவருக்கும் மீண்டும் நாடு திரும்பி அரசியலில் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடிக்க உரிமை உண்டு எனின் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற சந்திரிகாவுக்கும் அந்த உரிமை இருக்க வேண்டும்.

ஜனநாயக நாடொன்றில் எவராவது மன்னனாகவோ அல்லது மகாராணியாகவோ முயற்சிப்பது சதிவேலை அல்ல. மன்னர் ஆட்சி நிலவும் நாடுகளில் மட்டுமே இது சதி நடவடிக்கையாகும். காரணம் அந்த நாடுகளில் மன்னர்கள் பரம்பரையின் அடிப்படையிலேயே நியமனம் பெறுகிறார்கள். மன்னராட்சி நிலவும் நாடுகளில் மன்னனுக்குச் சவால் விட்டு அந்நாட்டு அரசியல் வழிமுறைகளுக்குப் புறம்பான விதத்தில் மன்னனாகவோ அல்லது மகாராணியாகவோ வர முயற்சிப்பதே சதி நடவடிக்கையாகும்.

எமது நாட்டில் தற்போது மன்னராட்சி நடைமுறையில்லை. அவ்வாறான முறையை உருவாக்க அரசாங்கம் முயற்சித்தால் அது இந்நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிரான பயங்கரமான சதிவேலையாகும்.

மூலம் - இருதின (18/03/2007)

தமிழில் - நேமிக்கா.

thinakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.