Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வழக்குகளுக்கு வெடி... தேர்தலுக்கு ரெடி! - தினகரன் மாஸ்டர் பிளான்

Featured Replies

வழக்குகளுக்கு வெடி... தேர்தலுக்கு ரெடி! - தினகரன் மாஸ்டர் பிளான்

1097_thumb.jpg

 

 

 

தினகரன் அணி எம்.எல்.ஏ-க்களின் நீதிமன்றப் போராட்டங்கள், ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஓர் இடத்தில்போய் முட்டிக்கொள்ள... கிட்டத்தட்ட விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டார் தினகரன். அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிருப்தி ஏற்பட, கொஞ்சம் ஆடித்தான் போனார். தன் தளபதியாக தினகரன் நினைத்துக்கொண்டிருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெளிப்படையாகவே எதிர்ப்பைக் காட்ட ஆரம்பிக்க, மிகவும் நெருக்கடியான நிலைக்கு உள்ளானார். இந்நிலையில், தினகரன் தரப்பில் தற்போது திடீர் உற்சாகம் தென்பட ஆரம்பித்துள்ளது. ‘‘ஏதாவது ஓர் அதிரடி ஆட்டம் ஆடியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் சிக்கிக்கொண்டுவிட்ட தினகரன், தற்போது ஒரு மாஸ்டர் பிளானுடன் ரெடியாகிவிட்டார்’’ என்று தெம்பாகக் கூற ஆரம்பித்துள்ளனர் அவரின் ஆதரவாளர்கள்.

18 எம்.எல்.ஏ-க்கள் பதவிநீக்க வழக்கில், உச்ச நீதிமன்றத்திலிருந்து தினகரன் தரப்புக்குச் சாதகமான தீர்ப்புதான் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதியாக, சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி விமலா, தினகரன் தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றப்பட்டு, நீதிபதி சத்யநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இவர் வழங்கப்போகும் தீர்ப்புப் பாதமாக வந்தால்கூட, மேற்கொண்டு சட்டப்போராட்டத்தில் இறங்காமல், காலியாக இருக்கும் அந்த 18 தொகுதிகளிலும் தேர்தலை எதிர்கொள்வதுதான் தினகரனின் திட்டம். கூடவே நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பணிகளை எதிர்கொள்ளும் வகையில், தமிழகம் முழுக்கத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தினகரன் கூடாரத்தின் உற்சாகத்தைக் கூட்டியுள்ளது! 

p3b_1530255365.jpg

உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன்?

இதுகுறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியனிடம் பேசினோம். அவர், “சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தாமதம் செய்யப்படுவதாகக் கருதினோம். வழக்கை விசாரிக்க மூன்று மாதங்கள் மட்டும் எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், தீர்ப்பைச் சொல்ல நான்கு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது. அப்படி வந்த தீர்ப்பும் ஒரு முடிவான தீர்ப்பாக இல்லாமல், மாறுபட்ட தீர்ப்பாக இருந்தது. அதன்பிறகு, மூன்றாவது நீதிபதியை நியமிக்க ஒரு வாரத்துக்கு மேல் ஆனது. இப்படியே போனால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல் வரும்வரை முடிவே வராது என்று நினைத்தோம். 18 தொகுதிகளிலும் சேர்த்து, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அந்தத் தொகுதிகளின் பிரச்னைகளைக் கவனிக்க எம்.எல்.ஏ-க்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இந்த வழக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடனும்தான்,உச்ச நீதிமன்றத்தை அணுகினோம்.

உச்ச நீதிமன்றம், மிகச் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றம் நியமித்த மூன்றாவது நீதிபதியை மாற்றியது ஒரு சிறப்பான அத்தியாயம் என்றால், மூன்றாவது நீதிபதியாக யார் விசாரிக்க வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றமே தீர்மானித்திருப்பது நீதித்துறை வரலாற்றில் முதன்முறை என்றுதான் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த உத்தரவால் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி அளிக்கப்போகும் தீர்ப்பு, எங்களுக்குப் பாதகமாக இருந்தால், மேற்கொண்டு சட்டப்போராட்டம் நடத்தப்போவதில்லை. காலியாக உள்ள 18 தொகுதிகளில் உடடினயாகத் தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம். அதில் காலதாமதம்  ஏற்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்” என்று சொன்னார்.

p3a_1530255392.jpg

மாஸ்டர் பிளான்!

18 எம்.எல்.ஏ-க்கள் தொகுதியில் தேர்தல் என்றாலும் சரி... நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி... அதைச் சந்திக்கும் அளவுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறார் தினகரன். ஏனென்றால், தினகரனின் டெல்லி சோர்ஸ் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய தகவலும் அங்கிருந்து வந்ததாம். அதனால்தான், வழக்கு வாய்தாக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தல் வேலைகளைப் பார்ப்போம் என்று சுறுசுறுப்பாகி உள்ளாராம் தினகரன். புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டார். மூன்று அல்லது நான்கு தொகுதிகளுக்கு தலா ஒரு சீனியரை மேற்பார்வை செய்யும் பொறுப்பிலும் ஆட்களை நியமித்துவிட்டார். சந்தடியில்லாமல் தேர்தல் வேலை தொடங்கிவிட்டது. இந்தப் பணியில், தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்துள்ளார் தினகரன். அவர்களும் உற்சாகத்துடன் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இந்த 18 பேரின் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தால், அதன் மூலமாக வழக்கு விசாரணையில் பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர்கள் சொன்னதால், அவர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்காமல் அடக்கியே வாசிக்கிறாராம் தினகரன்.

எடப்பாடி டெபாசிட் காலி!

தினகரனின் மாஸ்டர் பிளான்களில் மற்றொன்று... வரும் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவரது சொந்தத் தொகுதியிலேயே மண்ணைக் கவ்வ வைப்பதுதான். எடப்பாடியின் சொந்த ஊராட்சியான நெடுங்குளத்திலேயே தினகரனின் ஆட்கள் களமிறங்கியுள்ளனர். இதுபற்றி அறிந்துகொள்வதற்காக எடப்பாடி பகுதியில் விசிட் அடித்தோம். திரும்பிய பக்கமெல்லாம், ‘மாற்றம் தேவை... தமிழகம் தலைநிமிர்ந்திட உறுப்பினராவீர். -எடப்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை இயக்கம்’ என்கிற ஸ்டிக்கர்களும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. மொபைல் போன் வாங்குவதற்காக வீதிகளில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய குடைகள் போல, ஆங்காங்கே குடைகளை அமைத்துப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் வேலை ஜரூராக நடந்துகொண்டிருந்தது.

எடப்பாடியில் இந்த வேலைகளை ஒருங்கிணைத்துக்கொண்டிருப்பவர், தினகரன் கட்சியைச் சேர்ந்த தாம்பரம் நாராயணன். ஏற்கெனவே, ஜனதா தளம் கட்சியின் இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர், காங்கிரஸ் கட்சியில் மாநிலப் பொதுச்செயலாளர் ஆகிய பதவிகளை வகித்த தாம்பரம் நாராயணனிடம் பேசியபோது, ‘‘2016-ல் அ.தி.மு.க-வில் இணைந்தேன். இப்போது, அ.ம.மு.க-வில் அம்மா பேரவையின் மாநிலத் துணைச் செயலாளராக உள்ளேன். உறுப்பினர் சேர்க்கைப் பணிக்காக 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி தொகுதிக்கு நான் பொறுப்பாளர். நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, ஊராட்சி கிளைகளில் உள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் என அனைத்துப் புள்ளிவிவரங்களையும் திரட்டியுள்ளோம். அனைத்து ஒன்றியங்களிலும் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து, ‘தன்னம்பிக்கைக் கூட்டம்’ நடத்தியுள்ளோம். நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்களின் புகைப்படங்களுடன் பட்டிதொட்டியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டி, நோட்டீஸ்களை விநியோகித்துள்ளோம்.

p3_1530255352.jpg

உள்ளூர் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்கிறார்கள். கிராமம் கிராமமாகச் சென்று முகாம்கள் அமைத்துப் பணியாற்றுகிறோம். வீடு வீடாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கிறோம். மக்களுடன் உரையாடி, அவர்களை எங்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கிறோம். அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும் பணி, இரவு 10 மணி வரை தொடர்கிறது. குக்கிராமங்கள், பஸ் நிலையங்கள், சந்தைகள், நூலகங்கள், கல்லூரிகள் என எதையும் நாங்கள் விட்டுவைக்கவில்லை. மூன்று வாரங்களில் 40 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டோம். விரைவில் எடப்பாடி தொகுதியில் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் காலி’’ என்று சொன்னார் உறுதியான குரலில்.

தினகரன் தரப்பின் இந்த அதிரடி வேலைகளை முறியடிக்கும் வகையில், அரசாங்க பலத்தை எதிரிகள்மீது பிரயோகப்படுத்த ஆரம்பித்துள்ளதாம் எடப்பாடி தரப்பு. ஆளுங்கட்சியாயிற்றே... முதலமைச்சர் தொகுதியாயிற்றே என்று சொல்லி தினகரன் பக்கம் வருவதற்கு ஆரம்பத்தில் பலரும் தயங்கியுள்ளனர். அதையெல்லாம் உடைத்து, பலரையும் சேர்த்துள்ளது தினகரன் தரப்பு. அப்படி வந்தவர்களை இப்போது மிரட்டி, மறுபடியும் அ.தி.மு.க-வுக்கேக் கொண்டு செல்லும் வேலைகள் நடக்கின்றனவாம். ‘‘மாதேஷ் என்பவர் எடப்பாடி நெடுஞ்சாலையில் தாபா கடை வைத்திருந்தார். இவர், எங்கள் தரப்புக்கு உறுப்பினர் சேர்க்கையில் கடுமையாக வேலை செய்துள்ளார். மிரட்டிப் பார்த்தும் பணியாததால், அதிகாரிகளை வைத்து அவரது கடையை மூட வைத்துவிட்டார்கள். ஆனாலும், எங்கள் பக்கம்தான் நிற்கிறார் மாதேஷ். இதுபோல பல கதைகள் இருக்கின்றன’’ என்று சொல்லும் தாம்பரம் நாராயணன்,‘‘ஆர்.கே. நகர் தொகுதியில் அண்ணன் காட்டிய அதே அதிரடியை, தமிழகம் முழுக்கவே காட்டப்போகிறோம். எடப்பாடியில் புறப்பட்ட இந்தப் புயல், 234 தொகுதிகளிலும் விரைவில் சுழன்றடிக்கும்’’ என்று குஷியுடன் சொன்னார்.

ஆனானப்பட்ட சசிகலாவுக்கே டேக்கா கொடுத்தவர்; டெல்லியையே கன்ஃப்யூஸ் செய்து தன்பக்கம் திருப்பியவர் என்ற பெருமைகளைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, அத்தனை எளிதில் வீழ்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.