Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்!

Featured Replies

மிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்!

 

 

p44sss_1531847894.jpg

‘‘வருமானவரித் துறையின் மொத்த கவனமும் தமிழ்நாட்டின்மீதுதான் இருக்கிறது’’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார் கழுகார். ரெய்டு செய்திகளை அவரே கொட்டட்டும் என்று காத்திருந்தோம்.

‘‘2016 சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, இன்னும் தமிழகத்தைவிட்டு நகரவில்லை. அதன்பிறகு, சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, ஈ.டி.ஏ குழும அலுவலகங்களில் ரெய்டு, தமிழகத்தின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு, சசிகலா உறவினர்கள் வீடுகளில் ரெய்டு என்று சுழன்றடித்த வருமானவரித் துறையின் பார்வை, தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பியுள்ளது. கடந்த வாரம் அவருக்கு நெருக்கமான தொடர்புள்ள கிறிஸ்டி நிறுவனத்தில் ரெய்டு; இந்த வாரம் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என இருவருக்கும் நெருக்கமான தொடர்பில் உள்ள எஸ்.பி.கே நிறுவனத்தில் ரெய்டு நடக்கிறது.’’

‘‘எஸ்.பி.கே நிறுவனம் யாருக்குச் சொந்தமானது?’’

‘‘அருப்புக்கோட்டையின் பெரும்புள்ளி செய்யாத்துரை என்பவருக்குச் சொந்தமானதுதான் எஸ்.பி.கே குழுமம். செய்யாத்துரையின் மகன் நாகராஜன் எல்லா அரசியல் புள்ளிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். ரோடு கான்ட்ராக்ட் வேலைகள், ஸ்பின்னிங் மில் மற்றும் ஹோட்டல் தொழில்களை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் இந்த நிறுவனத்துடன் நெருக்கமாக இருந்தவர் ஓ.பி.எஸ். ஆனால், ரோடு கான்ட்ராக்ட் வேலைகளை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டியதால், அந்தத் துறை அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியுடனும் இந்த நிறுவனம் நெருக்கமானது. தி.மு.க தரப்பில் கடந்த மாதம் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், முதல்வர் எடப்பாடி கைவசம் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் ஊழல்கள் பட்டியலிடப்பட்டன. அந்தப் பட்டியலில் எஸ்.பி.கே நிறுவனமும் உள்ளது. தி.மு.க கொடுத்த புகாரில், வண்டலூர்-வாலாஜாபாத் இடையிலான ஆறு வழி சாலை திட்டத்துக்கான டெண்டரை எஸ்.பி.கே அண்ட் கம்பெனி எக்ஸ்பிரஸ்வே நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மாநிலச் சாலைகள் அனைத்தையும் பராமரிப்பதற்கான ரூ.2,000 கோடி ஒப்பந்தமும் அதே எஸ்.பி.கே அண்ட் கம்பெனி எக்ஸ்பிரஸ்வே நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.’’

p44a_1531847911.jpg

‘‘இதில் எடப்பாடி பழனிசாமியை எப்படி தொடர்புப்படுத்துகிறார்கள்?’’

‘‘எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன். இவரின் மனைவி திவ்யா. 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, எடப்பாடி பழனிசாமி கொடுத்திருந்த சொத்துப் பட்டியல்படி, அவர் குடும்பத்தில் அதிக வருமானம் உள்ளவராக, மருமகள் திவ்யாவே இருந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருக்கும் ஆண்டாள் பேப்பர் மில்ஸ் நிறுவனத்தின் பிரிவு இரண்டில் ரூ. 1.12 கோடி மதிப்புள்ள பங்குகள் திவ்யா பெயரில் உள்ளதாக எடப்பாடி தெரிவித்திருந்தார். இந்த ஆண்டாள் பேப்பர் மில்ஸ் இயக்குநர்களில் ஒருவர்தான் திவ்யாவின் அப்பா சுப்பிரமணியம். அதாவது, முதல்வரின் சம்பந்தி.’’

‘‘அதற்கும் இந்த ரெய்டுகளுக்கும் என்ன சம்பந்தம்?’’

‘‘அதைத்தான் சொல்லவருகிறேன். எஸ்.பி.கே அண்ட் கம்பெனி எக்ஸ்பிரஸ்வே என்று ஒரு நிறுவனம் இரண்டு டெண்டர்களை எடுத்திருக்கிறது இல்லையா? அந்த நிறுவனம் 2018 மார்ச் 12-ம் தேதிதான் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு இரண்டு இயக்குநர்கள். ஒருவர், இப்போது ரெய்டு நடக்கும் எஸ்.பி.கே குழுமத்தின் நாகராஜன். இன்னொருவர், முதல்வரின் சம்பந்தி சுப்பிரமணியம். மதுரை ரிங் ரோட்டை நான்குவழிப் பாதையாக மாற்றும் ரூ. 200 கோடி ஒப்பந்தம் ஸ்ரீபாலாஜி டோல்வேஸ் என்ற நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது. இதில் எஸ்.பி.கே குழுமத்தின் நாகராஜன், முதல்வரின் சம்பந்தி சுப்பிரமணியம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்கள்.’’

‘‘ஓஹோ! விஷயம் அப்படிப் போகிறதா?’’

‘‘இந்த ரெய்டுகள் இத்துடன் முடிந்துவிடாது என்று சொல்கிறார்கள். அடுத்த வாரம் இன்னொரு ரெய்டும் நடக்கப்போகிறது என்று சொல்கிறார்கள். பலரும் அமித் ஷாவின் சென்னை விசிட்டையும் இந்த ரெய்டுகளையும் முடிச்சுப்போட்டுப் பார்க்கிறார்கள். தமிழக நிர்வாகிகளை அமித் ஷா சந்திக்க வருவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே கிறிஸ்டி நிறுவன ரெய்டு ஆரம்பமாகிவிட்டது. அந்தச் சூழலில் சென்னையில் பேசிய அமித் ஷா, ‘இந்தியாவிலேயே ஊழல் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது’ என்றார். ‘தமிழகத்தில் ஊழல் இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும்’ என்று சபதம் போட்டார். அதைத் தொடர்ந்து, இந்த ரெய்டு நடக்கிறது. கவனித்துப் பார்த்தால், அரசு கான்ட்ராக்ட் எடுக்கும் நிறுவனங்களையே குறிவைத்து இங்கே ரெய்டுகள் நடப்பது புரியும்.’’

‘‘ஆமாம்.’’

‘‘ஓ.பி.எஸ் சொத்து விவகாரம் குறித்து தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி ஒரு வழக்கு போட்டிருக்கிறார். அந்த விவகாரமும் அடுத்து வருமானவரித் துறையால் கையில் எடுக்கப்படலாம். அ.தி.மு.க -வை தற்போது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் என்கிற இரட்டையர்களைக் காலிசெய்யும் வேலையில் இறங்கிவிட்டது பி.ஜே.பி. அதுதான் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் ரெய்டு. ‘இவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு, கொஞ்சம் க்ளீன் இமேஜ் உள்ள புதிய தலைமையை அ.தி.மு.க-வுக்குக் கொடுக்க வேண்டும். அது நடந்தால் மட்டுமே, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் பலனை முழுமையாக அறுவடை செய்ய முடியும்’ என்ற கணக்கிற்கு பி.ஜே.பி வந்துவிட்டது. அதன் முதல் படிதான், எடப்பாடி மற்றும் பன்னீருக்கு நெருக்கமான இடங்களில் நடைபெறும் வருமான வரித் துறையின் சோதனை.’’

p44b_1531847936.jpg

‘‘ஐ.டி ரெய்டுக்கும் அ.தி.மு.க தலைமை மாற்றத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது?’’

‘‘அதில்தான் பி.ஜே.பி-யின் தந்திரம் உள்ளது. டெல்லியில் நடைபெற்றுவரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குடன், ‘அ.தி.மு.க-வின் சட்டவிதிகள்படி பொதுச்செயலாளர் தேர்வு நடத்த வேண்டும்’ என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இதில் ‘அ.தி.மு.க-வுக்கு பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும்’ என்ற அறிவிப்பு நீதிமன்றம் மூலம் தேர்தல் ஆணையத்திற்குச் செல்லும் வாய்ப்புள்ளது. அதன்மூலம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அதேநேரம், ஆட்சியில் அதிகாரம் செலுத்திவரும் இருவருக்கும் ரெய்டு மூலம் கிலியையும் ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்கள். ஐ.டி ரெய்டுகள் மூலம் இறுக்கி, ஒரு க்ளைமாக்ஸை நோக்கிக்கொண்டு செல்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.’’

‘‘ஓஹோ.’’

‘‘இந்த இரண்டு நடந்தாலே அ.தி.மு.க-வின் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கிவிடும். இதுவரை பி.ஜே.பி-க்கு எதிர்வினை ஆற்றாமல் இருந்த அ.தி.மு.க தலைமை, இதையெல்லாம் தெரிந்துகொண்டுதான் இப்போது எதிர்த்து அடிக்கிறது. அணைகள் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்தார்கள். ‘பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைக்கக் கூடாது’ என்று பிரதமருக்கு எடப்பாடி கடிதம் எழுதினார். ‘நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாங்களே ஜெயிப்போம்’ என அ.தி.மு.க அமைச்சர்கள் பேசுகிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக, ‘அ.தி.மு.க-மீது குற்றச்சாட்டு கூறும் பி.ஜே.பி தலைமை வாயை அடக்க வேண்டும்’ என்று கூறினார்.’’

‘‘எடப்பாடியும் பன்னீரும் வேண்டாம் என்றால், யாரைத்தான் அ.தி.மு.க தலைமைக்குக் கொண்டுவரப்போகிறது பி.ஜே.பி?’’

‘‘அதற்கான பதிலைத்தான் ரஜினியே சொல்லியிருக்கிறாரே... ‘அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாகச் செயல்படுகிறார்’ என்று ரஜினி சொன்னதுதான் அதற்கான பதில்.’’

‘‘ரஜினிக்கு எப்படி இந்த விஷயம் போனதாம்?’’

‘‘பி.ஜே.பி-யின் டெல்லி வி.ஐ.பி ஒருவர் சமீபத்தில் சென்னை வந்துள்ளார். அவர் ரஜினியையும் சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பில், ‘இப்போதுள்ள அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் பி.ஜே.பி-க்கு பெரும் சரிவு ஏற்படும். எனவே, அதன் தலைமையில் மாற்றம் வேண்டும்’ என்று ரஜினியிடம் அவர் தெரிவித்துள்ளார். அந்தத் தலைமை செங்கோட்டையன் என்றும் அவர் ரஜினியிடம் கோடிட்டுக் காட்டினாராம். செங்கோட்டையன்மீது பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. கட்சியிலும் மிக சீனியர். அ.தி.மு.க தொண்டர்களிடமும் அவர் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். மேலும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் செங்கோட்டையன் தேர்வு நடந்துள்ளது. ஏற்கெனவே சொன்னதுபோல, ரஜினியின் மேற்பார்வையில் அ.தி.மு.க செயல்படுவதற்கான சூழ்நிலையை பி.ஜே.பி தலைமை உருவாக்கிவருகிறது. அதற்கு ரஜினியும் இசைந்து செல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்.’’

‘‘அ.தி.மு.க-மீது பி.ஜே.பி கோபத்தில் இருக்கிறது என்கிறீர்கள். ஆனால், மைத்ரேயன் பிரதமரைச் சந்தித்துள்ளாரே?’’

‘‘மைத்ரேயன் அரசியலைத் தாண்டி தனிப்பட்ட முறையில் பிரதமருடன் நல்ல உறவில் உள்ளார். ஜூலை 6-ம் தேதி மாலை பிரதமரை மைத்ரேயன் சந்தித்தார். தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் விவாதித்தார்கள். இந்த சந்திப்பு அ.தி.மு.க மேல்மட்டத்திற்கே லேட்டாகத்தான் தெரிந்துள்ளது. கிறிஸ்டி நிறுவனத்தில் ரெய்டு நடந்து முடிந்த நேரத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.’’

‘‘அதெல்லாம் இருக்கட்டும். ரெய்டில் என்ன கிடைத்ததாம்?’’

‘‘எஸ்.பி.கே குழுமத்தைத் தாண்டி சென்னை சேத்துப்பட்டில் ஜோஸ் என்பவர் வீட்டில் ரெய்டு நடந்தது. அதில், 75 கிலோ தங்கம் எடுக்கப்பட்டது. பாலவாக்கம் வி.ஜி.பி லே-அவுட்டில் சலீம் என்பவர் வீட்டில் நடந்த சோதனையில் பணம், நகை எதுவும் சிக்கவில்லை. மயிலாப்பூர் நாகராஜன், போயஸ் கார்டனில் தீபக் என்பவர் வீட்டில் ஆவணங்கள், ரொக்கமாகப் பணம் ஆகியவை சிக்கியுள்ளன. மொத்தமாக இந்த ரெய்டில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது. எத்தனை கோடி என்பது இங்கு பிரச்னை அல்ல; குறி யாருக்கு என்பதுதான் முக்கியம்.’’

‘‘அ.தி.மு.க-வுக்காக ஆரம்பிக்கப்படும் சேனலை முன்வைத்தும் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் மோதல் முற்றியுள்ளதாமே?’’

‘‘சசிகலா குடும்பத்தின் வசம் ஜெயா டி.வி இருப்பதால், இப்போது அந்தத் தொலைக்காட்சியில் அ.தி.மு.க பற்றிய செய்திகள் வருவது குறைந்துவிட்டது. இதையடுத்து, அ.தி.மு.க பற்றிய செய்திகளை வெளியிட, ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற பெயரில் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘நியூஸ் ஜெ’ என்ற பெயரில் தனி சேனல் ஆரம்பிக்கப்படுகிறது. ஆனால், இரண்டும் இப்போதுவரை கட்சி பெயருக்கு மாற்றப்படவில்லை. மாறாக, ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் கோவை சந்திரசேகர் என்பவர் பொறுப்பில் உள்ளது. அவர், அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர். அதுபோல, நியூஸ் ஜெ சேனலில் முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி ஆகியோரின் உறவினர்கள்தான் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால், நாளிதழ் மற்றும் சேனல் செலவுகளுக்கான பணத்தைக் கட்சியில் கேட்கிறார்கள். கட்சிப் பொருளாளராக உள்ள ஓ.பி.எஸ் அதைக் கொடுக்க மறுக்கிறார். ‘நாளிதழும் தொலைக்காட்சியும் கட்சியின் பெயருக்கு மாறட்டும். அதன்பிறகு, அவற்றின் செலவுகளைக் கட்சி பார்த்துக்கொள்ளும். இப்போது அவை கட்சிக்காரர்களின் உறவினர்கள் பெயர்களில்தான் உள்ளன. அதற்கான செலவை எல்லாம் கட்சி செய்ய முடியாது’ என்று ஓ.பி.எஸ் மறுத்துவிட்டாராம். இதில் ஈ.பி.எஸ் கூடாரம் வெறுப்பாகிப் போயிருக்கிறது. இந்நிலையில், டி.வி.சேனலைக் கவனிக்கும் பொறுப்பை சன் டி.வி-யின் நிர்வாகப் பொறுப்பு களைப் பார்த்துக்கொண்ட சக்சேனா வந்துள்ளார். அதுவும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது’’ என்ற கழுகார் பறந்தார்.

ஓவியம்: ஹாசிப்கான்
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், வி.ஸ்ரீனிவாசுலு, தே.அசோக்குமார், வெ.நரேஷ்குமார்


இளவரசன், ராஜசேகர்... ரஜினியின் புதிய ஹீரோக்கள்!

ஜினி மன்றத்தின் புதிய ஹீரோ, ராஜசேகர். இவரின் பூர்வீகம் தமிழகம் என்றாலும், மேற்கு வங்காளத்தில் போலீஸ் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். ரஜினியின் தீவிர ரசிகர். கடந்த சில வருடங்களாக ரஜினியுடன் தொடர்பில் இருக்கிறார். ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்குப் பிறகு, சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்தான் ராஜசேகரை நிர்வாகிகள் முதலில் பார்த்தனர். நடப்பதை உன்னிப்பாகக் கவனித்த ராஜசேகர், யாருடனும் அதிகம் பேசவில்லை. ஆனால், நிர்வாகிகளின் எண்ண ஓட்டத்தை நன்றாக நாடிபிடித்துப் பார்த்து அவ்வப்போது ரஜினியிடம் சொல்லிவந்தார். அந்தக் கூட்டங்களுக்குப் பிறகு ராஜசேகர், ராகவேந்திரா மண்டபம் பக்கமே தலைகாட்டவில்லை.

p44c_1531847685.jpg

படப்பிடிப்புக்காக ஜூலை 16-ம் தேதி டெல்லிக்கு ரஜினி கிளம்பும்முன், மன்றத்தின் அமைப்புச் செயலாளர் கடலூர் இளவரசன் மற்றும் ராஜசேகரை அழைத்துப் பேசினார். மீண்டும் மாவட்டச் செயலாளர்களைச் சென்னைக்கு அழைத்துக் கூட்டம் நடத்தும்படி சொல்லியிருக்கிறார். இந்தக் கூட்டங்களின்போது, டெல்லியிலிருந்தே வீடியோ கான்ஃபரன்ஸில் ரஜினி பேசுவார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரஜினி சென்னை திரும்புகிறார். அதன்பிறகு, புதிய நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறார். இதுவரை மன்ற நிர்வாகத்தைக் கவனித்துவந்த சுதாகரை இனி மண்டப நிர்வாகப் பணியை மட்டும் பார்க்கும்படி ரஜினி சொல்லிவிட்டாராம். மக்கள் மன்ற மாநிலப் பொறுப்பாளர் ராஜு மகாலிங்கம் கதி என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. மன்ற நிர்வாகத்தை இதுவரை கவனித்து வந்த ஏழு பேரை இனி வேலைக்கு வரவேண்டாம் என்று ரஜினி தரப்பில் சொல்லிவிட்டார்கள்.


எம்.ஜி.ஆர் மாநாட்டில் செங்கோட்டையன்!

எம்
.ஜி.ஆர் ரசிகர்களாக இருந்து, அதன்பின் அரசியலுக்கு வந்து, கல்வித் தந்தைகளாக ஆனவர்கள் இணைந்து ‘உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு’ நடத்தினர். ஜூலை 15-ம் தேதி நடைபெற்ற இந்த மாநாட்டை, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், மனிதநேயம் அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம், சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா, வி.ஐ.டி பல்கலைக்கழகம் வேந்தர் ஜி.விஸ்வநாதன், ஆர்.எம்.கே குழுமத்தின் முனிரத்தினம் போன்றவர்கள் சேர்ந்து நடத்திய இந்த விழாவுக்கு சர்ப்ரைஸ் வருகை, அமைச்சர் செங்கோட்டையன்.

p44d_1531847723.jpg

எல்லா அமைச்சர்களுக்கும் அழைப்பு தந்திருந்தாலும், செங்கோட்டையன் மட்டும் மாலை 5 மணிக்கு திடீரென வந்தார். கால் மணி நேரம் மட்டும் இருந்தவர், ஒரு நிமிடத்துக்கும் குறைவாகப் பேசிவிட்டுப் புறப்பட்டார். சொல்லிவைத்ததுபோல், அதே நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, செங்கோட்டையனைப் பாராட்டிப் பேசினார்.


டூர் போகும் எடப்பாடி, ஓ.பி.எஸ்!

ஜூ
லை 16-ம் தேதி அ.தி.மு.க-வின் எம்.பி-க்கள் கூட்டமும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்றன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் என்ன செய்ய வேண்டும் என எம்.பி-க்களுக்கு எடப்பாடியும் பன்னீரும் ஆலோசனை சொன்னார்கள். ‘‘எதையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் வேண்டாம், எதிர்க்கவும் வேண்டாம். பிரச்னைகள் அடிப்படையில் பேசுங்கள்’’ என எடப்பாடியும் பன்னீரும் ஆலோசனை சொன்னார்கள். குறிப்பாக, ஏழு மசோதாக்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.  அணைகள் பாதுகாப்பு மசோதாவையும், யு.ஜி.சி ஒழிப்பு மசோதாவையும் அ.தி.மு.க எதிர்க்கப் போகிறது. ‘‘தமிழக அரசைக் கேட்காமல் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு தரமாட்டோம்’’ என்று இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஜெயக்குமார் சொன்னது டெல்லிவரை கவனிக்கப்பட்டது.

p44e_1531847752.jpg

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் நியமனம் பற்றிப் பேசப்பட்டுள்ளது. தினகரன் அணிக்குத் தாவியவர்களின் இடங்கள், பல மாவட்டங்களில் காலியாகவே உள்ளன. புதிய நிர்வாகி களை நியமித்துவிட்டு, மாவட்டவாரியாக எடப்பாடியும் பன்னீரும் சுற்றுப்பயணம் செல்லப்போகிறார்களாம். ‘‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாங்களும் தயாராகிறோம்’’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.  

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.