Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற?

Featured Replies

நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற?

 

 
kadhir8

பரிமளா டீச்சரின் மனது  "திக்திக்' கென அடித்துக் கொண்டது. இன்று பள்ளிக்கூடத்தில் ரிசல்ட்.  தன்னிடம் ஒன்பதாவது படிக்கும் முத்துப்பிரியா பாஸ் பண்ணியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே  இருந்தாள்.
கடந்த ஒரு மாதமாக நடந்த சம்பவங்கள் பரிமளாவிற்கு ஞாபகம்  வந்து திகிலூட்டின.
கடந்த மாதம் நடந்த ரிசல்ட் கமிட்டி கூட்டத்திலேயே முத்துப்பிரியாவை பத்தாம் வகுப்பிற்கு பாஸ் போடக் கூடாது என்று தலைமையாசிரியரிடம் சொல்லி இருந்தாள் பரிமளா.
""சார் முத்துப்பிரியாவுக்கு எழுதப் படிக்கக்  கூட வரல சார்,  உருப்படியா ஒரு பாரா படிக்கத் தெரியாது சார். இவளை பத்தாம் வகுப்புக்கு பாஸ் போடறது நமக்குத் தான் சார் ஆபத்து. அப்புறம் பத்தாம் வகுப்புல சென்டம்  ரிசல்ட் வராது சார். என்னுடைய சர்வீஸ்ல இது நாள் வரைக்கும் பொதுத் தேர்வுல நூத்துக்கு நூறு ரிசல்ட் தான் கொடுத்து வந்திருக்கேன். முத்துப்பிரியா பத்தாம் வகுப்புக்கு வந்தா  என்னுடைய  சாதனையிலே ஒரு  கரும்புள்ளி விழுந்திடும் சார்.''
பரிமளா டீச்சர் சொல்வதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் சங்கரலிங்கம். இந்த ஆண்டுதான் இப்பள்ளிக்கு தலைமையாசிரியராகப் பொறுப்புக்கு  வந்திருந்தார்.

 


பரிமளா அந்தப் பள்ளியின் சீனியர் டீச்சர் என்பதால்  கூடுதலாகவே உரிமை எடுத்துக் கொண்டு  பேசினாள்.
""முத்துப்பிரியா மாதிரி முழு மக்குகளை ஃபெயில் பண்ணினாத்தான் நாம சென்டம் ரிசல்ட் வாங்க முடியும் சார். இல்லைன்னா இவளை மாதிரி மாணவிகள் நம்ம பள்ளிக் கூட மானத்தையே  வாங்கிடுவாங்க சார்.''
திரும்ப திரும்ப தலைமையாசிரியரிடம் சொல்லியிருந்தாள்  பரிமளா டீச்சர்.
பத்து வருடங்களுக்கு முன்பு இப்பள்ளியின் தமிழ் ஆசிரியையாகச் சேர்ந்தபோது அறிமுக வகுப்பையே அதிரடியாகத்தான்  ஆரம்பித்தாள் பரிமளா.
""மாணவர்களே! நல்லா கவனிச்சுக்குங்க. வகுப்புல நான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பேன். சரியா படிக்கலைன்னா அங்கயே அப்பவே அடிவிழும். என்னைப் பொருத்தவரை வகுப்புல படிக்கிற எல்லா மாணவர்களும்  நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கணும். அப்பதான் நீங்க பத்தாவதுக்குப் போக முடியும். வெறும் முப்பத்தைஞ்சு மார்க் எடுத்தா பத்தாது.  தமிழ்ல குறைஞ்சது  அறுபது மார்க் எடுக்கணும். அப்பதான் பாஸ் போடச் சொல்லுவேன்.  எனக்கு உங்களோட அடுத்த  வருஷ ரிசல்ட்,  அதான் பத்தாம் வகுப்பு ரிசல்ட் ரொம்ப முக்கியம்''  என்று மிரட்டும் தொனியில் பேசினாள் பரிமளா.
மாணவர்கள் முகம் அப்போதே வாடிப் போனது. அதற்குப் பிறகு தமிழ்ப் பாட வகுப்பு என்றாலே மாணவர்கள் அலறித் துடிப்பார்கள்.  கையில் ஒரு ஸ்கேலை வைத்துக் கொண்டு ஒழுங்காகப் படிக்காத மாணவர்களை  வெளுத்து வாங்கி விடுவாள் பரிமளா. அதோடு கடுமையாகத் திட்டுவாள்.
""நீயெல்லாம் வீட்டுலேயே கிடந்து   தொலைக்க வேண்டியது தானே,   இப்படி பள்ளிக்கூடத்துக்கு வந்து  என் உயிரை எடுக்கற?''
""என் மூஞ்சிலேயே முழிக்காத''

 


""நீ தேர்றது ரொம்ப கஷ்டம்''  என்று ஏதாவது ஒரு மொழியில் அர்ச்சனை நடந்து கொண்டே இருக்கும்.
இவளுடைய மிரட்டலுக்குப் பயந்தே பல மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து படித்து விடுவார்கள்.
""பரவால்ல டீச்சர். நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வுல உங்க பாடத்துல மட்டும் நிறைய மாணவர்கள் பாஸ் பண்ணியிருக்காங்க. வாழ்த்துகள்''  என்று சக ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். உச்சிக் குளிர்ந்து போவாள் பரிமளா.
பரிமளா டீச்சருக்கு பெரிய சவாலாக இருந்தாள் முத்துப்பிரியா. இவள்தான் நம்ம வகுப்பிலேயே நம்பர் ஒன் மாணவி என்று அடிக்கடி முத்துப்பிரியாவை அவமானப்படுத்துவாள் பரிமளா.
முத்துப்பிரியாவும் அதற்கு ஏற்ற மாதிரிதான் இருப்பாள். இரண்டு வரி கேள்வி பதில் கூட படித்து எழுதச் சிரமப்படுவாள்.
ஒருநாள் அப்படித்தான் வாழ்த்துப் பாடலை பார்க்காமல் எழுதிக்  காட்ட வேண்டும் என்று எல்லா மாணவர்களிடமும் சொன்னாள் பரிமளா.
எல்லா மாணவர்களும் நன்றாக எழுதிக் காட்டியிருந்தார்கள். முத்துப்பிரியாவின் நோட்டுப் புத்தகத்தை கிழித்து வீசினாள்.
""நாளைக்கு வர்றப்ப நூறு தடவை இம்போசிஷன் எழுதிட்டு வரணும்'' என்று கடுமையாக எச்சரித்தாள். 
மறுநாள் இம்போசிஷனைக் கூட ஒழுங்காக எழுதாமல் அரைகுறையாக எழுதிக் கொண்டு வந்து நின்றாள் முத்துப்பிரியா. 
""உன்னால   பார்த்துக் கூட எழுதிட்டு வர முடியாதா? ஏன் இப்படி என் பாவத்தைக் கொட்டிக்கற? போ, வெளியே போய் முட்டிக்கால் போடு''
தொண்டை வறண்டு போகும் அளவுக்கு கத்தினாள்  பரிமளா.

 


முத்துப்பிரியா வகுப்புக்கு வெளியே வந்து கைகளைக் கட்டிக் கொண்டு முட்டிக்கால் போட்டபடி நின்றாள். அவள் கண்களில் நீர் தாரைதாரையாக வழிந்தது.
அப்போதுதான் தலைமையாசிரியர் பரிமளாவைக் கூப்பிட்டு அனுப்பினார்.
""இங்க பாருங்க மேடம். எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. முத்துப்பிரியா சரியா படிக்கலைன்னா அந்த மாணவி மேல இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்க. அவள் பக்கத்துல  உட்காந்து தனியா சொல்லிக் கொடுங்க. அதை விட்டுட்டு எப்போதும் முத்துப்பிரியாவை முட்டிக்கால் போட சொல்றீங்க. தப்பில்லையா?  கொஞ்சம் உளவியல் பூர்வமா யோசிச்சுப் பாருங்க மேடம்.''
""சார் நான் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு பார்த்துட்டேன் சார், என்னால் அவளைப் படிக்க வைக்க முடியல சார். அவங்க பெற்றோரை வரச் சொல்லி பேசிப் பார்த்துட்டேன் சார். அவங்க ரெண்டு பேருமே படிக்காதவங்க சார். முத்துப்பிரியா எந்த வகுப்புல படிக்கறான்னு கூட தெரியல சார். இப்படிப்பட்ட மாணவிக்கு இதுக்கு மேல என்னால் சொல்லிக் கொடுக்க முடியாது சார். நீங்க வேணும்னா அவளுக்கு தனியா சொல்லிக் கொடுத்து  பாருங்க சார்''.
கோபமாக சவால் விடுவது போல பேசினாள் பரிமளா.
சங்கரலிங்கமும் முத்துப்பிரியாவுக்கு ஒரு  மாதம் வரைக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துப் பார்த்தார். முத்துப்பிரியாவிடம் எந்த  முன்னேற்றமும் கொண்டு வர முடியவில்லை.

 


பரிமளாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தலைமையாசிரியர் தன்னுடைய சவாலில்  தோற்றுப் போய்விட்டார் என்று சக ஆசிரியர்களிடம் கூறி சந்தோஷப் பட்டுக் கொண்டாள்.
""இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களே சார். முத்துப்பிரியாவை  திருத்த முடியாது சார். அவங்க அப்பா, அம்மாவோட  சேர்ந்து காய்கறி விக்கறதுக்குத் தான் அவ  லாயக்கு''.
பரிமளா டீச்சர் பேசுவதற்கு பேசாமல் அமைதியாக  இருந்தார் சங்கரலிங்கம்.
சவாலில் தோற்றுவிட்ட வருத்தம் தலைமையாசிரியருக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டாள் பரிமளா.
இப்படி ஒரு தோல்விக்குப் பிறகு முத்துப்பிரியாவை பாஸ் போடுவதற்குத் தலைமையாசிரியருக்கு தைரியம் வராது என்றும் நினைத்துக் கொண்டு இருந்தாள் பரிமளா.
""டீச்சர் விஷயம் தெரியுமா?'' உடன் வேலை  பார்க்கும் விஜயா டீச்சர் போன் போட்டு ஏதோ சஸ்பென்ஸ் வைத்தபடியே கேட்டாள்.
""தெரியாது டீச்சர். என்ன விஷயம்?'' என்று பரபரப்பாக கேட்டாள் பரிமளா.
""முத்துப்பிரியா பத்தாம் வகுப்புக்கு பாஸ் பண்ணிட்டாளாம் டீச்சர். என்ன நடக்குதுன்னே தெரியல டீச்சர்''.
நொந்து கொண்டே போனை வைத்து விட்டாள் விஜயா டீச்சர்.
விஜயா டீச்சர் சொன்னதைக் கேட்டு மயக்கமே வந்துவிட்டது பரிமளாவுக்கு.


பள்ளிக்கூடம்  மீண்டும்  திறந்ததும் முதல் வேலையாக தலைமையாசிரியரைப் போய்ப் பார்த்தாள் பரிமளா.
""இவ்வளவு சொல்லியும் முத்துப்பிரியாவை பாஸ் போட்டிருக்கீங்க சார். அவளை எப்படி சார் பொதுத் தேர்வுல பாஸ் பண்ண வைக்கறது. உங்ககிட்ட ஏதாவது சிறப்புத் திட்டங்கள் இருக்கா சார்''?
பரிமளாவின் முகத்தில் தோல்வியும் இயலாமையும்  கோபமும் நிறைந்து கிடந்தது.
""முதல்ல உக்காருங்க டீச்சர்'' தனக்கு முன்னால் இருந்த நாற்காலியைக் காட்டி உட்காரச் சொன்னார் சங்கரலிங்கம்.
பரிமளா உட்கார்ந்து கொண்டாள்.
""ஒரு மாணவியை  பரீட்சையில் பாஸ் பண்ண வைக்கறது மட்டும் நம்ம வேலையில்ல டீச்சர். அவங்க வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்துறதுக்கு வழிகாட்டணும். முத்துப்பிரியா மாதிரி மாணவிகளின் பின்னணியைக் கூர்ந்து கவனிச்சா அவ்வளவு பரிதாபமா இருக்கும். தெரியுமா டீச்சர்? அவங்க சரியா படிக்காம போறதுக்கு அவங்க பெற்றோரும் ஒருகாரணம். குடிகாரங்களா இருப்பாங்க.  ரொம்ப ஏழையா இருப்பாங்க. அதனால குழந்தைகளை வீட்டு வேலைக்கு அனுப்பிருவாங்க. வீட்டு வேலைக்குப் போற குழந்தைகளால படிக்க முடியாமப் போயிடும்.

 


அதுமட்டுமில்லாம முத்துப்பிரியா கற்றல் குறைபாடுடைய மாணவி.இதுமாதிரி மாணவிகளுக்கு பாஸ், ஃபெயில் என்பதைக் காட்டிலும் நல்ல வாழ்க்கை வாழ வழிகாட்டி உதவணும். முத்துப்பிரியா பொதுத்  தேர்வுல பாஸ் பண்ண மாட்டாள். எனக்கு நல்லாத் தெரியும். இந்தக் காரணத்துக்காக இவளை ஃபெயில் போட்டுட்டா என்ன நடக்கும்?
அவங்க அப்பா, அம்மா அவளை கூலி வேலைக்கு அனுப்பிடுவாங்க. அதுமட்டுமில்லாம சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சிருவாங்க.  அவங்க வாழ்க்கையே வீணா போயிடும். 
ஆனால் நாம இப்ப முத்துப்பிரியாவை பத்தாம் வகுப்புக்கு கொண்டு வந்திருக்கோம். இதனால எவ்வளவு நன்மை  நடக்கும் தெரியுமா டீச்சர்? இன்னும் ஒரு வருஷம் பள்ளிக்கூடம் படிப்பா. இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி கிடைக்கும். நீங்க சொன்ன மாதிரியே வங்கில கடன் வாங்கி காய்கறி கடை கூட வைக்கலாம். பத்தாம் வகுப்பு தோல்வி அடைஞ்சவங்களுக்கு அட்டெண்டர் வேலை கிடைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கு.
"".........''
"" ரொம்ப முக்கியமா  பத்தாம் வகுப்பு  பரிட்சை எழுதினாலே போதும்.  அது பாúஸா, ஃபெயிலோ அவங்களுக்குத் திருமண உதவித் தொகை கிடைக்கும். அந்த திருமண உதவித் தொகையைக் கூட ஒரு தொழிலில் முதலீடு செஞ்சு முத்துப்பிரியாவால  பிழைச்சுக்க முடியும். வாழ்க்கையும் வெற்றிகரமா ஓடிடும்.  இதுமாதிரியான  மாணவிகளோட  படிப்பு விஷயத்துல  நாம சட்டப்படி  நடந்துக்காம மனிதநேயத்தோட  நடந்துக்கணும் டீச்சர். இப்ப சொல்லுங்க டீச்சர். நான் முத்துப்பிரியாவை பாஸ் போட்டது சரியா?  தவறா?'' தலைமையாசிரியர் கேட்டார்.
பரிமளா தலையைக் குணிந்து  கொண்டாள். அவள் இதயத்தில் ஈரம் கசிந்து கண்களில்  வழிந்தது.

 


""நீங்க பண்ண வேண்டிய  வேலை ஒண்ணு இருக்கு டீச்சர்''  தலைமையாசிரியர் சொன்னார்.
"என்னசார்' என்பது போல தலைமையாசிரியரைப் பார்த்தாள் பரிமளா. 
""முதல்ல முத்துப்பிரியா பாஸ் பண்ணதுக்கு அவளுக்கு வாழ்த்து சொல்லுங்க. உன்னால ஒரு நல்ல வேலைக்குப் போயி சம்பாதிக்க முடியும். பத்தாம் வகுப்புல தோல்வி அடைஞ்சாக் கூட வேற வாய்ப்புகள் மூலமா சாதிக்க முடியும்னு சொல்லுங்க. அவளுக்கு  புது உலகம்  பிறக்கும்.''
""கண்டிப்பா செய்றேன் சார்''.  முற்றிலுமாக மாறியிருந்தாள் பரிமளா டீச்சர்.
அவள் சொல்லப் போகும் வார்த்தைகளில் முத்துப்பிரியாவின் ஒளிமயமான எதிர்காலம் ஒளிந்து கிடந்தது.

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/aug/27/நீயெல்லாம்-எதுக்கு-படிக்க-வர்ற-2988685.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.