Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தண்டனை!

Featured Replies

 
 
 
 
 
 
 
 
தண்டனை!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1535703282.jpeg
 
 

''அந்தப் புள்ளைங்க ஏதாவது செய்துகிட்டா, நீங்கதான் பொறுப்பேத்துக்கணும்; என்னையெல்லாம் இதுல சம்பந்தப்படுத்தக் கூடாது...'' என்றார், கடுமையாக, தலைமை ஆசிரியை.
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அது; அன்று மாதாந்திர தேர்வு, நடந்து கொண்டிருந்தது.
யாஸ்மினுக்கு வகுப்பு இல்லை என்பதால், ஆசிரியர் ஓய்வு அறையில் உட்கார்ந்து, தன் குறிப்பேட்டில், எழுதிக் கொண்டிருந்தாள்.
அப்போது, உதவி தலைமை ஆசிரியையும், அறிவியல் ஆசிரியையும், யாஸ்மினை தேடி வந்தனர்.
'இந்த அநியாயத்தக் கேளுங்க மிஸ்...' என்றபடி உதவி தலைமை ஆசிரியை, யாஸ்மினின் கவனத்தை கலைத்தாள். அவளும் புத்தகத்தை மூடி வைத்து, 'என்னாச்சுங்க மிஸ்...' என்றாள்.
வாசலை நோக்கி, 'ஏய்... இங்க வாங்கடி...' என்று அதிகாரமாய் குரல் கொடுக்கவும், அதுவரை மறைந்து நின்றிருந்த அம்ருதா பேகமும், மீனலோசினியும் தயங்கியபடி உள்ளே வந்தனர்.


அன்றைய தேர்வு முடிந்து விட்டதால், ஆசிரியை ஓய்வு அறைக்கு வெளியே கும்பலாக நின்று, உள்ளே நடப்பதை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர், மாணவியர்.
'என்னாச்சு மிஸ்...' என்றாள், யாஸ்மின்.
'ரெண்டு பேரும், பேப்பரை மாத்தி காப்பி அடிச்சிருக்காங்க... அறிவியல் மிஸ் கையும் களவுமாப் பிடிச்சிட்டாங்க... நீங்க தானே இங்களுக்கு கிளாஸ் டீச்சர்... அதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தோம்...' என்றாள், உதவி தலைமை ஆசிரியை.
அறிவியல் ஆசிரியை, தன் கையில் இருந்த மாணவியரின் பரீட்சை பேப்பரை யாஸ்மினிடம் ஒப்படைத்து, ஒதுங்கி நின்றாள். ஏற்கனவே, யாஸ்மினுக்கும், அந்த ஆசிரியைக்கும் ஆகாது.
இரண்டு பேப்பரையும் புரட்டிப் பார்த்த யாஸ்மின், இரண்டிலும் ஒரே மாதிரியான பதில்களே எழுதப்பட்டிருப்பதை அறிந்தாள்.
அம்ருதா பேகம் நன்றாக படிப்பாள். அவளிடம் பேப்பர் வாங்கி, மீனலோசினி எழுதியிருக்கிறாள் என்பது அப்பட்டமாகவே தெரிந்தது.
'காப்பி அடிச்சீங்களா?' என்றாள் யாஸ்மின், இருவரையும் கோபமாய் பார்த்தபடி!
பதில் சொல்லாமல், தலையை கவிழ்ந்தபடி நின்றிருந்தனர்.
'சொல்லுங்கடி... காப்பி அடிச்சீங்களா, இல்லயா?'
'இது என்ன கேள்வி மிஸ்... நான் தான் கையும் களவுமா புடிச்சிட்டு வந்திருக்கேனே... அப்ப, நீங்க, என்ன நம்பலயா?' என்று யாஸ்மினை உசுப்பேற்றினாள், அறிவியல் ஆசிரியை.


'நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க; நான் தான் விசாரிச்சுட்டு இருக்கேன்ல...' என்றவள், இருவரின் தலைமுடிகளை பிடித்து, முகத்தை நிமிர்த்தி, இருவர் கன்னங்களிலும், 'பளார்' என அறைந்து, 'ஏண்டி என் உயிரை வாங்குறீங்க... என்னதான் நடந்துச்சுன்னு உண்மைய சொல்லித் தொலையுங்களேன்டி...' என்று சீறினாள்.
அப்போதும் எதுவும் பேசாமல் அழுதுகொண்டே இருந்தாள், அம்ருதாபேகம். மீனலோசினி தான், 'நான் காப்பி அடிக்கல மிஸ்; நான் எழுதுன ஆன்சர் எல்லாம் சரியான்னு அம்ருதா பேப்பர வாங்கி, 'செக்' பண்ணிட்டு இருந்தேன்...' என்றாள்.
'எப்படி பொய் பேசுறா பாருங்க மிஸ்... அவ, அம்ருதாவோட பேப்பரப் பாத்து எழுதறத, நானே என் கண்ணால பார்த்தேன்...' என்றாள், அறிவியல் ஆசிரியை.
'சரி நீ காப்பி அடிக்கலன்னு நான் நம்புறேன்; அத நிரூபிக்க, நீ பதில் எழுதி இருக்குற ஏதாவது ஒரு அஞ்சு மார்க் கேள்விக்கான பதில, இப்ப என்கிட்ட ஒப்பிச்சுரு போதும்...' என்றாள் யாஸ்மின்.
அமைதியாக ஆசிரியையே வெறித்தபடி நின்றிருந்தாள், மீனலோசினி.
'ஒப்பிக்க முடியலன்னா கூட பரவாயில்ல... இப்ப, இங்கேயே உட்கார்ந்து, அந்த கேள்விக்கான பதிலை எழுதி காட்டிடு; விட்டுடுறேன்...' என்றவள், தன் குறிப்பேட்டிலிருந்து ஒரு காகிதத்தை கிழித்து அவளிடம் கொடுத்தாள்.
பேப்பரை வாங்கிய மீனலோசினி, எதுவும் எழுதாமல், யாஸ்மினையே பார்த்தபடி இருந்தாள்.
'இந்த காப்பி அடிக்கிற புத்தி தானே, நாளைக்கு, 'பப்ளிக் எக்ஸாம்' எழுதுறப்பையும் வரும்... அங்க, காப்பி அடிச்சு மாட்டிக்கிட்டா, மூணு வருஷத்துக்கு பரீட்சையே எழுத முடியாதுன்னு உங்களுக்கு தெரியாதா...' என்றாள், இருவரிடமும் பொதுவாய்!
அப்புறம் அம்ருதாவிடம், 'நீ, நல்லா படிக்கிற பொண்ணு... நீயே இப்படி பண்ணலாமா... காப்பி அடிக்கிறவள விட, காப்பி அடிக்க பேப்பர் கொடுக்கிறது தான் பெரிய தப்பு; ரெண்டு பேரும் தப்பை ஒத்துக்கறீங்களா?' என்றாள்.
எதுவும் பேசாமல் அழுது கொண்டிருந்தனர்.


'ரெண்டு பேரையும், ஹெச்.எம்., கிட்ட கூட்டிட்டு போயிடலாம் மிஸ்...' என்றாள் யாஸ்மின், உதவி தலைமை ஆசிரியையிடம்!
'அவங்க, சி.இ.ஓ., ஆபீசுக்கு மீட்டிங் போயிருக்காங்களே...' என்றாள், உதவி தலைமை ஆசிரியை.
'ரெண்டு பேரும், 'இனிமே காப்பி அடிக்க மாட்டோம்'ன்னு மன்னிப்பு கடிதம் எழுதி குடுத்துட்டு வகுப்புக்கு போங்க... நாளைக்கு உங்க பேரன்ட்ஸ கூட்டிக்கிட்டு வந்தாதான் பரீட்சை எழுத விடுவோம்...' என்றாள், யாஸ்மின்.
இருவரும் அழுதுகொண்டே யாஸ்மின் கொடுத்த காகிதத்தில், 'இனிமேல் காப்பி அடிக்க மாட்டோம்; மன்னித்துக் கொள்ளுங்கள் மிஸ்...' என்று எழுதி, கையெழுத்து போட்டுக் கொடுத்தனர்.
யாஸ்மினுக்கு, அப்போது இது பெரிய பிரச்னையாக வெடிக்கப் போகிறது என்று தெரிந்திருக்கவில்லை.
மதிய உணவிற்கு பின் அவளுடைய வகுப்பிற்கு போனபோது, அம்ருதா பேகமும், மீனலோசினியும் வகுப்பில் இல்லை.
மாணவியரிடம் விசாரித்தபோது, 'அவங்க ரெண்டு பேரும் மத்தியானம் சாப்பிடவே இல்ல மிஸ்... அழுதுகிட்டே இருந்தாங்க. அப்புறம் ஸ்கூலுல இருந்து கிளம்பி போயிட்டாங்க...' என்றாள், ஒருத்தி.
'நீங்க, அவங்க ரெண்டு பேரையும், 'பேரன்ட்ஸ கூட்டிக்கிட்டு வந்தா தான் பரீட்சை எழுத விடுவோம்'ன்னு சொன்னீங்கள்ல மிஸ்... ரெண்டு பேரோட அம்மாவும் ரொம்ப கோவக்காரங்க; ஸ்கூலுக்கு வந்துட்டா ஒருநாள் கூலி போயிடுமேன்னு ரெண்டு பேரையும் அடி பின்னி எடுத்துருவாங்க...' என்றாள் இன்னொருத்தி.
யாஸ்மினுக்கு சிலீரென்று இருந்தது. 'ரெண்டு பேருக்கும் அப்பா இல்லயா?' என்று கேட்டாள்.
'இல்ல மிஸ்... அம்ருதாவோட அப்பா, அவங்க அம்மாவ, 'தலாக்' சொல்லிட்டு, வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு; மீனலோசினியோட அப்பா இறந்து போயிட்டாரு...' என்றாள் மற்றொரு மாணவி.
அம்ருதாபேகத்தின் அம்மாவை ஒரு தடவை பார்த்திருக்கிறாள், யாஸ்மின். அவளுடைய ஏழ்மையான தோற்றம் கண்ணில் நிழலாடியது.
ஒருநாள், வகுப்பறையில் மயங்கி விழுந்து விட்டாள் அம்ருதா. ஏனென்று விசாரித்தபோது, முதல் நாள் இரவிலும், காலையிலும் அவள் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை என்பது தெரிந்தது.


யாஸ்மின் எப்போதுமே அவளுடைய வகுப்பு பிள்ளைகளிடம் சொல்வாள்... 'தயவுசெஞ்சு யாரும் மதியம் பட்டினி கெடக்காதீங்க... கிராமத்துலருந்து வர்ற மாணவிங்க, காலையில சாப்பிட்டும், சாப்பிடாமயும் வருவீங்க. அதனால, வெட்கப்படாம சத்துணவுல போய் சாப்பிட்டுக்குங்க... சின்ன பிள்ளைங்க மட்டும் தான், சத்துணவுல சாப்பிடணும்ன்னு இல்ல; யாரு வேணும்னாலும் சாப்பிடலாம். நானும், தலைமை ஆசிரியையும், சத்துணவு போடுறவங்ககிட்ட, யாரு வந்து சாப்பாடு கேட்டாலும் கொடுக்க சொல்லியிருக்கோம்...' என்பாள்.
ஆனாலும், பெரிய பிள்ளைகள், தங்களின் ஏழ்மை எல்லாருக்கும் தெரிந்து விடும் என்று சத்துணவு வாங்கி சாப்பிட வெட்கப்படுவர். அன்றைக்கும், யாஸ்மின், அம்ருதாவை கடிந்து, அவளை சத்துணவில் போய் சாப்பிட்டு வரும்படி சொன்னாள்.
'வேணாம் மிஸ்... எங்க அம்மாவுக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாங்க...' என்று சொல்லி, பிடிவாதமாக அங்கு போக மறுத்தாள். ஆனால், அம்ருதாவை வலுக்கட்டாயமாக இழுத்துப் போய் அவளை சாப்பிட வைத்து, அழைத்து வந்தாள், யாஸ்மின்.
மறுநாள், அம்ருதாவின் அம்மா, பள்ளிக்கு வந்து, 'என் பொண்ண வலுக்கட்டாயமா சாப்பிட வைச்சு, அசிங்கப்படுத்திட்டீங்க...' என்று சண்டை போட்டாள்.
'பசியோட எப்படிம்மா பிள்ளை வகுப்புல உட்கார்ந்து பாடம் கேட்கும்; அதான் சாப்பிட வச்சேன்...' என்று அவளை சமாதானப்படுத்தினாள், யாஸ்மின்.
ஆனாலும், கோபம் குறையாமலேயே பேச, 'தப்பு தான்ம்மா; உங்ககிட்டயும், உங்க பொண்ணுகிட்டயும் மன்னிப்பு கேட்டுக் கிறேன்ம்மா...' என்று கை குவிக்கவும், அடுத்தநொடி, உடைந்து அழ ஆரம்பித்த அம்ருதாவின் அம்மா, 'நீங்க எதுக்கு டீச்சர் மன்னிப்பு கேட்கணும்... என் புள்ள மேல உள்ள கரிசனத்துல தான சாப்பிட வச்சுருக்கீங்க. இதைப் போய் பெரிசுபடுத்தி, நான் இங்க வந்தது தான் தப்பு...' என்றவள், மகளிடம், 'இனிமே பசிச்சா சாப்பிட்டுக்க தாயி... நம்மள மாதிரி ஏழைங்களுக்கு, அன்னம் தான் அல்லா...' என்று சொல்லிப் போனாள்.


அம்ருதா பேகமும், மீனலோசினியும் பள்ளியில் இல்லைஎன்ற தகவல், பள்ளி முழுவதும் பரவி விட்டது. தலைமை ஆசிரியை பள்ளிக்கு வந்ததுமே, யாஸ்மினை அழைப்பதாக அலுவலக பையன் கூறவே, அவசரமாக தலைமையாசிரியையின் அறைக்கு சென்றாள், யாஸ்மின்.
அங்கு, ஏற்கனவே எல்லா ஆசிரியர்களும் குழுமி இருந்தனர். எல்லாரும் யாஸ்மினையே குற்றம் சாட்டினர்; அவள் சொன்ன விளக்கத்தை கேட்க யாரும் தயாரில்லை.
''நான் வர்றதுக்குள்ள உங்களுக்கு என்ன அவசரம்... வயசுக்கு வந்த புள்ளைங்கள எதுக்கு கை நீட்டி அடிச்சீங்க... பிள்ளைங்க என்ன தப்பு பண்ணினாலும், அவங்கள அடிக்கக் கூடாதுன்னு, ஜி.ஓ.,வே இருக்குன்னு தெரியாதா...'' என்று எகிறிய தலைமை ஆசிரியை, ''நம்மள சுத்தி எவ்வளவு விஷயங்கள் நடக்குது... டீச்சர் திட்டுனதால மாணவியர் தற்கொலைன்னு தினந்தினம் செய்திகள் வந்துகிட்டு இருக்கு... இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட, பெற்றோர்கள கூட்டிகிட்டு வரணும்ன்னு ஒரு டீச்சர் சொன்னதால, நான்கு மாணவிக, கிணத்துல விழுந்து செத்துப் போயிட்டாங்க.
''ஒரு காலேஜுல காப்பி அடிச்சத கண்டிச்சதுக்காக, ஒரு பொண்ணு துாக்குல தொங்கிருச்சு... புள்ளைங்கள்லாம் அவ்வளவு சென்சிட்டிவா இருக்குறாங்க...'' என்றவள், அறிவியல் ஆசிரியை பக்கம் திரும்பி, ''ஒரு சாதாரண, 'மிட் டெர்ம் எக்ஸாம்'ல காப்பி அடிச்சத நீங்களும் பெருசுபடுத்திட்டீங்க. காப்பி அடிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும், பேப்பர மட்டும் வாங்கி வச்சுட்டு, வேற பேப்பர குடுத்து பரீட்சை எழுத சொல்லியிருக்க வேண்டியது தானே...'' என்று கடிந்து கொண்டாள்.
''பரீட்சை முடியப்போற நேரத்துல தான் மீனலோசினி காப்பி அடிச்சுக்கிட்டு இருக்குறத பாத்தேன்,'' என்றாள், அறிவியல் ஆசிரியை.
''நேரம் முடிஞ்சிட்டால் என்ன, பேப்பர மட்டும் வாங்கி வச்சுகிட்டு பிள்ளைகளை அனுப்பி வச்சிருக்க வேண்டியது தானே...''
''சும்மா கண்டிச்சு அனுப்பட்டும்ன்னு தான் அவங்கள யாஸ்மின்கிட்ட கூட்டிட்டு போனோம்; அவங்க தான் ஓவரா, 'ரியாக்ட்' பண்ணிட்டாங்க...'' என்றாள், உதவி தலைமை ஆசிரியை.


''போங்க... அந்த புள்ளைங்க ரெண்டு பேரும் ஏடா கூடமா எதுவும் செய்யும் முன், அவங்கள காப்பாத்தி கூட்டிக்கிட்டு வாங்க... இல்லன்னா, நாளைக்கு நம்ம ஸ்கூல் பேரு பேப்பருலயும், 'டிவி'யிலயும் நாறி போயிடும்,'' என்று உடற்கல்வி ஆசிரியையிடம் உத்தரவிட்டாள், தலைமை ஆசிரியை.
உடற்கல்வி ஆசிரியை, சில மாணவியரை அழைத்துக் கொண்டு, வெளியே போனாள்.
ஆனால், பள்ளி முடியும் நேரத்தில் அவர்கள் திரும்பி வந்து, 'அவங்க வீட்டுக்கும் போகல... வேற எங்கயும், காணல...' என்று கை விரித்தனர்.
''அந்த புள்ளைங்க ஒண்ணு கெடக்க ஒன்னு பண்ணிக்கிட்டா, நீங்க தான் முழுசா பொறுப்பேத்துக்கணும்... என்னையும், ஸ்கூலையும் இதுல சம்பந்தப்படுத்திக்க வேணாம் சொல்லிட்டேன்,'' என்றாள், மிகவும் கடுமையாக தலைமையாசிரியை!
வீட்டிற்கு வந்த யாஸ்மினுக்கு இருப்பே கொள்ளவில்லை; அவளுடைய கணவனுக்கு போன் செய்து, உடனே வீட்டிற்கு வரும்படி சொன்னாள். அவனிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அழுதாள்.
''இதுல உன்னோட தப்பு என்ன இருக்கு... புள்ளைங்களோட நல்லதுக்கு தான கண்டிச்சு அடிச்சே... நாங்க படிக்கிற காலத்துல எல்லாம் வாத்தியாருங்க எங்கள அடிச்சு தொவைச்சு காயப் போட்டுருவாங்க... அப்படி கண்டிப்பா நடந்துகிட்டதால தான் ஒரு குக்கிராமத்துல பொறந்த நான், இப்ப, இன்ஜினியரா இருக்கேன். படிப்பே வராதுன்னு தண்ணி தெளிச்சு விட்டுருந்தா இந்நேரம், ஏதாவது ஓட்டலில் தட்டு கழுவி கிட்டு தான் இருப்பேன்,'' என்றான், சிரித்துக் கொண்டே!
''அதெல்லாம் நம்ம காலத்துலப்பா... இப்பல்லாம் புள்ளைங்கள திட்டக் கூடாதுங்கிறாங்க... டீச்சருங்க திட்டுனதால செத்துப் போறேன்னுட்டு லெட்டர் எழுதி வச்சுட்டு செத்துப் போயிடுறாங்க... வாப்பா, அவங்க வீட்டுக்கு போயி பார்த்துட்டு வந்துடலாம்,'' என்று அழைத்தாள்.
''ரொம்ப நேரமாயிடுச்சேம்மா... போன் பண்ணி பாரேன்,'' என்று கணவன் சொல்ல, அவ்வாறே தொடர்பு கொண்ட போது, போன், 'சுவிட்ச் ஆப்' என்று, வந்தது.
கும்மிடிப்பூண்டிக்கு அருகில், பிரதான சாலையிலிருந்து விலகி, உள்ளடங்கி இருக்கும் மாணவியரின் கிராமத்திற்கு போவதற்கு காலையில் ஒரு பஸ்; மாலையில் ஒரு பஸ் மட்டும் தான். வாடகை கார் பிடித்து, விசாரித்து, போனபோது, இருட்டி வெகு நேரமாகி இருந்தது.


அம்ருதா, மீனலோசினி இருவரின் வீடுகளும் அருகருகேதான் இருந்தன. ஆனால், இரண்டு வீடுகளுமே பூட்டிக் கிடந்தன. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, இருவரின் குடும்பமும் கும்மிடிப்பூண்டி, அரசு மருத்துவமனைக்கு போயிருப்பதாக தெரிவித்தனர்.
பதறியடித்து, யாஸ்மினும், அவளுடைய கணவரும் மருத்துவமனைக்கு போனபோது, அம்ருதா, மீனலோசினி இருவருமே அங்கிருந்தனர். அவர்களை பார்த்த பின்தான் யாஸ்மினுக்கு உயிரே வந்தது.
''என்னாச்சு பொண்ணுங்களா?'' என்று விசாரித்தாள்.


இருவரின் அம்மாக்களும், கட்டட வேலையில் சித்தாளாக பணிபுரிபவர்கள் சாரத்தில் நின்று, கான்கிரீட்டை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அம்ருதாவின் அம்மா தவறி விழுந்ததில், காலில் பலமாக அடிபட்டு விட்டது. அதனால், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.
''நீங்க எதுக்கு டீச்சர் அவ்ளோ துாரத்திலேர்ந்து, இந்த ராத்திரியில எங்கள தேடி வந்திருக்கீங்க...'' என்றாள், அம்ருதாவின் அம்மா.
''பரவாயில்லம்மா, உங்களப் பாத்துட்டு போக வந்ததா இருக்கட்டுமே...'' என்றாள் யாஸ்மின்.
''நாங்க, எங்க பிள்ளைகள அவ்வளவு கோழைகளா வளர்க்கல டீச்சர்... அவங்க மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சா, எதுத்துப் போராடுவாங்களே தவிர, தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க. நீங்க நிம்மதியா வீட்டுக்குப் போங்க,'' என்றாள், மீனலோசினியின் தாய் சிரித்துக் கொண்டே!
''இனிமே, அம்ருதா, மீனலோசினி ரெண்டு பேரோட படிப்பும் என் பொறுப்பு; அவங்கள நல்லா படிக்க வச்சு, ஒரு டாக்டராவோ, இன்ஜினியராவோ ஆக்கி உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்,'' என்றாள், யாஸ்மின்.
இரண்டு குடும்பங்களும், கண்ணீர் மல்க, டீச்சரைப் பார்த்து கை குவித்து வணங்கின.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44199&ncat=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.