Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போருக்குப் பின்னரான வடக்கில் உடல், உள நலம் வீழ்ச்சி

Editorial / 2019 ஜனவரி 09 புதன்கிழமை, பி.ப. 05:03 

image_011286051e.jpg

- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
(படப்பிடிப்பு: யோஷிதா பெரேரா)

முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் வடக்கின் ஏனைய சில பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், அப்பகுதிகள் மீதான தேசிய ரீதியிலான கவனத்தை அதிகரித்திருக்கின்றன என்று சொன்னால், மிகையாகாது. வெள்ளத்தின் நேரடிப் பாதிப்புகள் இப்போது குறைவடைந்து, அனர்த்தத்துக்குப் பின்னரான பாதிப்புகள் பற்றிக் கவனஞ்செலுத்த வேண்டிய நிலையில், அவ்வாறு கவனஞ்செலுத்த வேண்டிய முக்கிய விடயப்பரப்பாக, வைத்தியத்துறை காணப்படுகிறது.

விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தமிழ் மிரர், டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், இலங்கை விமானப்படை ஆகியவற்றுடன் இணைந்து, உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன், மருத்துவ முகாம்களை, கடந்தாண்டு இறுதியில் நடத்தியிருந்தன. மக்களின் அவசர தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாம்கள், முல்லைத்தீவின் சில பகுதிகளில், மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியிருந்தன. அப்போது கிடைக்கப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் தான், இக்கட்டுரையின் முதற்பகுதி, கடந்த வாரம் (02) வெளியாகியிருந்தது. வெள்ளத்தின் பாதிப்புகளைப் பற்றி அப்பகுதி கவனஞ்செலுத்தியிருக்க, மருத்துவ ரீதியிலான பிரச்சினைகளை, இப்பகுதி ஆராய்கிறது.

முல்லைத்தீவு அல்லது கிளிநொச்சி என்ற பெயரைச் சொன்னவுடன், இறுதிக்கட்ட யுத்தமும் அதன் அழிவுகளும் தான், பலருக்கும் ஞாபகம் வருகின்றன. அவ்விரு மாவட்டங்களையும், இறுதி யுத்தத்தோடு தொடர்புபட்டே கதைப்பது, சிலருக்கு நெருடலாக இருக்கலாம். ஆனால், ஆயுத வழியில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகளும் 6 மாதங்களும் முடிவடைந்த நிலையிலும், அதன் பாதிப்புகள் அங்கு இருப்பதைப் பார்க்கும் போது, அவ்விரு மாவட்டங்களையும் யுத்தத்துடன் தொடர்புபடுத்தாமலிருப்பது தான் தவறு எனத் தோன்றுகிறது.

ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாம்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டாலும், குறிப்பிட்ட தொகையிலான மக்கள், நீண்டநாள் நோய்களுடன் வைத்தியர்களை அணுகியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஒரு மாதமாக உடலில் வலி; இரண்டு மாதங்களாகக் கண்களில் இருந்து நீர் வடிகிறது; இரண்டு மாதங்களாக மூட்டு வலி; மூன்று மாதங்களாக முள்ளந்தண்டு வலி; ஆறு மாதங்களாகக் கண்ணில் ஏதோ வளர்கிறது, அதனால் கடுமையான வலி; குழந்தைக்குப் பல வாரங்களாகக் காய்ச்சல் வருவதும் போவதுமாக இருக்கிறது என்று, நீண்டநாள் வலிகளும் நோய்களும் ஏராளம் ஏராளம்.

“வைத்தியசாலைக்குச் சென்றீர்களா?” என்று கேட்டால், “ஒரு வருசத்துக்கு முதல் போனனான்” என்ற பதில்களும், “போறதெண்டா, வவுனியாவுக்குத் தான் போகோணும். அதுக்கு வசதியில்ல”, “பிள்ளையக் கூட்டிக்கொண்டு, கொழும்புக்குத் தான் போகோணும். அங்க போறது, அங்க தங்கி நிக்கிறது, அதுக்கெல்லாம் எங்களுக்கு வசதியில்ல. பிள்ளையின்ர அப்பாவுக்கு வருத்தம்” என்ற பதில்களும் தான் கிடைக்கின்றன.

image_826697564a.jpg

இந்த நிலைமை தொடர்பாக, அங்கு வந்திருந்த வைத்தியர் ஒருவருடன் உரையாடிய போது, வைத்தியசாலைகளுக்கான அணுக்கம் என்பது அங்கு பிரச்சினையாக உள்ளது என்பதையும், இம்மக்களுக்கான சுகாதாரங்களுக்கான சவாலாக, அது தான் முக்கியமாக உள்ளது என்பதையும் கூறியபோது, அதை அவர் ஏற்றுக்கொண்டார். வைத்தியசாலைகளுக்கான அணுக்கத்தை இலகுவாக்க வேண்டுமானால், அதிகமான வைத்தியசாலைகள் தேவை. அதேபோன்று, போக்குவரத்து வசதிகளும் மேம்பட வேண்டும்.

உதாரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டானிலுள்ள கெருடமடு என்ற இடத்தைச் சேர்ந்த மக்களுடன் கலந்துரையாடிய போது, வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டுமானால், மாஞ்சோலையில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். இரண்டு இடங்களுக்குமான தூரம், கிட்டத்தட்ட 28 கிலோமீற்றர் ஆகும். பொதுப் போக்குவரத்தை நம்பி இப்பகுதிகளுக்குச் செல்வதென்றால், மிகப்பெரிய சிக்கலாகவே உள்ளது.

மறுபக்கமாக, ஓரளவுக்குச் சிறிய வைத்தியசாலையான முல்லைத்தீவில் தீர்க்கப்படாத வைத்தியச் சிக்கல்கள், சுமார் 63 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வவுனியாவிலோ அல்லது 110 கிலோமீற்றருக்கும் மேற்பட்ட யாழ்ப்பாணத்திலோ தான் தீர்க்கப்பட வேண்டும். இவற்றுக்கான செலவு, நேர விரயம், பயணத்தின் இலகுதன்மையின்மை போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது, சிகிச்சைக்குச் செல்வதற்கு ஆர்வமற்ற ஒரு நிலைமை போன்று எமக்குத் தென்படுகின்ற விடயம், அம்மக்களுக்கான யதார்த்தமான தெரிவாக உள்ளதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, முல்லைத்தீவு மாவட்டத்தில், மிகப்பெரிய வைத்தியசாலையை அமைத்துக் கொடுப்பதற்கு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அண்மையில் (29) அங்கு சென்று உறுதி வழங்கிவிட்டு வந்திருக்கிறார். அதேபோல், சுதந்திரபுரம் மக்களுக்கு, வாராந்த மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவர் உறுதிமொழி வழங்கியிருக்கிறார். உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எம்மால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மருத்துவ முகாமில், சிரேஷ்ட வைத்தியர்கள் 5 பேர், கொழும்பிலிருந்து கலந்துகொண்டிருந்தனர். விமானப்படையைச் சேர்ந்த வைத்தியரொருவரும், இணைந்திருந்தார். இவர்களுக்கு மேலதிகமாக, கனிஷ்ட நிலை வைத்தியர்கள் சுமார் 20 பேர் கலந்துகொண்டனர். இவ்வளவு மிகப்பெரிய குழாம் இதில் கலந்துகொண்டமை, அம்மக்களுக்கான மிகப்பெரிய நன்மையாக அமைந்தவுடன், அவர்கள் அனைவருமே, இம்மருத்துவ முகாமில் பங்குகொள்ள முடிந்தமை தொடர்பில், தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓரிரு கனிஷ்ட வைத்தியர்களைத் தவிர ஏனைய அனைவருமே, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், நோயாளர்களுடன் நேரடியாக உரையாட முடியாமல், மொழிபெயர்ப்பாளர்களின் உதவியோடு கலந்துரையாட வேண்டியிருந்தது. ஆனால், நோயாளர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு, மொழியொன்றும் மிகப்பெரிய தடையில்லை என்பதை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

image_213bdd7aa4.jpg

இந்த வைத்தியர் குழாமுக்குத் தலைமை தாங்கிய வைத்தியர் மதுர ஜயவர்தன, இம்முகாமில் பங்குபற்றியமை தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட காயங்கள், சிகிச்சைக்குட்படுத்தப்படாமை குறித்த கவனத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, இவ்வாறான தொற்றுகள், சிகிச்சைக்கு உட்படுத்தப்படாது விடப்படுமாயின், பாரிய தொற்று ஏற்பட்டு, அவயவங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலைமை ஏற்படுமென எச்சரித்தார். அதிலும் குறிப்பாக, இளையவர்களுக்கான காயங்களை விட, வயது முதிர்ந்தோருக்கான காயங்கள் குறித்துக் கவனம் எடுக்கப்படுவது அவசியமானது என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்த முகாமில், இன்னொரு முக்கியமான விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. அங்கிருந்த குறிப்பிட்ட சதவீதமானோருக்கு, தோல் நோய்கள் காணப்பட்டன. இத்தோல் நோய்கள், வெள்ளத்துக்கு முன்னரேயே ஏற்பட்டிருந்தன என, அம்மக்களிடமிருந்து அறிய முடிந்தது. அதேபோல், அங்கு சிகிச்சைகளைப் பெற்ற பலருக்கு, காய்ச்சலின் இரண்டாவது அல்லது மூன்றாவது நாளாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. இப்படியான நேரங்களில், முழு இரத்தச் சோதனை நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனத் தெரிவித்த, இம்முகாமில் பங்குபற்றிய மற்றுமொரு சிரேஷ்ட வைத்தியரான இந்திக்க லியனகே, டெங்குவும் லெப்டோஸ்பிரோசிஸும் ஏற்படும் ஆபத்து உள்ளதெனவும் எச்சரித்தார். வைத்தியர் இந்திக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில், விரிவுரையாளராகவும் இருக்கிறார்.

image_32e26b17cc.jpg

மருத்துவ முகாம் இடம்பெற்ற பகுதிகளில் மக்கள், தங்களது நீண்டகால நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெற வந்தமை தொடர்பில் அவரிடம் கேட்ட போது, அதற்கான வித்தியாசமான விளக்கமொன்றையும் அவர் வழங்கினார். “இதைப் போன்ற சுகாதார ரீதியான முகாம்கள், மக்களுக்கு அதிக விருப்புடையனவாக இருப்பதோடு, தங்களது பிரச்சினைகளை அவர்கள் இயல்பாக வெளிப்படுத்தும் வாய்ப்புக் காணப்படுகிறது. ஏனெனில், அங்கு செல்லும் வைத்தியர்கள், அம்மக்களுக்கு உதவும் ஒரே நோக்கத்துடன் தான் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவர்” என்று, வைத்தியர் இந்திக்க தெரிவித்தார்.

போதிய போஷாக்கு இல்லாத சிறுவர்கள், போதிய புரதம் உட்கொள்ளாத நிலைமை, தொடு உணர்வு இழப்பைச் சந்தித்த ஆண்கள் என்று, பல்வகையான நோயாளர்களைச் சந்தித்த வைத்தியர் இந்திக்க, வைத்தியசாலைகள் தூரமாக இருக்கின்றன என அம்மக்கள் கூறியதை ஞாபகப்படுத்தினார். இம்மக்களின் இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், போதிய ஆளணியுடனும் வசதிகளுடனும் கூடிய வைத்தியசாலைகள் தேவையாக உள்ளன என, அவர் வலியுறுத்துகிறார்.

இந்த சவால்களுக்கு மேலதிகமாக, இன்னொரு முக்கியமான பிரச்சினையையும் அம்மக்கள் எதிர்கொள்கிறார்கள். அதைப் பற்றிய கவனம், அங்கும் ஏனைய பகுதிகளிலும் அரசியல்வாதிகளாலும் செலுத்தப்படவில்லை என்பது தான், கவலைக்குரியது. யுத்தம் முடிவடைந்து, 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியுள்ள போதிலும், அதன் பாதிப்புகள் இன்னமும் தீரவில்லை. உடல் ரீதியான பாதிப்புகள், பொருளாதார ரீதியான பாதிப்புகள் ஒரு பக்கமாகவிருக்க, உளரீதியான பாதிப்புகள் பற்றிப் போதியளவு கவனஞ்செலுத்தப்படாத ஒரு சூழலைப் பார்க்க முடிகிறது. மருத்துவ முகாம்களுக்கு வந்திருந்த மக்களுடன் உரையாடும் போது, அது தொடர்பில் தெளிவான சில விடயங்களைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

image_594fa1df2f.jpg

பல நேரங்களில், வாழ்க்கையில் ஒரு வகையான விரக்தி மனநிலையுடன், மக்களில் சிலர், தங்கள் வாழ்க்கையைக் கொண்டுசெல்கின்றனர். “போரில் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். அதற்குப் பின், இந்த உடலில் என்ன நோய் வந்தால் எமக்கென்ன?” என்ற மனப்பாங்குடன் சிலர் காணப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்களது உடலில், நீண்டகால நோய்கள் காணப்பட, அவற்றுக்கான மருந்துகளைத் தேடாத அல்லது ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் மாத்திரம் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு, அதன் பின்னர் வைத்தியசாலைக்குச் செல்லாத ஒரு நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது. வறுமை ஒரு பக்கம், விரக்தி மறுபக்கமென, போருக்குப் பின்னரான பாதிப்புகள், அம்மக்களை வாட்டியெடுக்கின்றன.

குறிப்பாக, போர்க் காலத்தில் சிறிய பிள்ளைகளாக இருந்த இப்போதைய சிறுவர்களுக்கும், போர்க் காலத்தில் தாயின் கர்ப்பப்பைக்குள் இருந்த இப்போதைய சிறுவர்களுக்கும், போரின் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் வி. ஜெகரூபன் போன்றோரின் உளவியல் பணிகள், சர்வதேச அளவில் அதிக பாராட்டைப் பெற்றாலும், உளவியல் துறைக்குள் போதுமான கவனஞ்செலுத்தப்படவில்லை என்பதே உண்மையானது.

வைத்தியர் ஜெகரூபனின் பணிகள் பற்றி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் அண்மையில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்த கருத்துகளை மீளப்பதிப்பிப்பது பொருத்தமானது:

“வீதிகளை நிர்மாணிப்பதிலும் வீடுகளைக் கட்டுவதிலும் வைத்தியசாலைகளை அமைப்பதிலும், போருக்குப் பின்னர் அனைவரும் கவனஞ்செலுத்துகின்றனர். மிகக்குறைவான மக்கள் தான், உயிர்கள் பற்றியும், மகிழ்ச்சியை மீளக்கொண்டு வருவதற்கு உதவுவது பற்றியும் கவனஞ்செலுத்துகிறார்கள். அது, இலகுவானதல்ல” என, அவர் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் காணப்படும் உளவியல் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால், 2008ஆம் ஆண்டில், அதாவது, மாபெரும் அழிவுகள் ஏற்பட்ட இறுதிக்கட்டப் போருக்கு முன்னதாக, மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியொன்றில், 30 சதவீதமான சிறுவர்களில், போரின் காரணமாக மனநிலைப் பாதிப்புகள், உளவியல் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன என்று வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஜேர்மனியைச் சேர்ந்த நான்கு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள், இறுதிக்கட்டப் போருக்குப் பின்னரான உளவியல் பாதிப்புகள் எந்தளவில் இருக்குமென்பதை வெளிப்படுத்துகின்றன.

இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தபோது, அதை ஏற்பாடு செய்வதில் களத்தில் நின்று உதவிகளை வழங்கியிருந்த தமிழாசிரியர் வே. முல்லைத்தீபன் சொன்ன விடயம் தான், இதில் ஞாபகம் வருகிறது: “இந்தச் சனத்துக்கு, வெள்ளம் வந்தாலென்ன, வராவிட்டாலென்ன, உதவிகள் தேவைப்பட்டது. வெள்ளம் வந்ததால, உதவிகள் வந்திருக்குது”. அதேபோல், வைத்தியர் மதுர ஜயவர்தன, “என்னைப் பொறுத்தவரை, அவர்களுக்கு, வெள்ள நிவாரணத்தையும் விட வேறு உதவிகள் தேவைப்படுகின்றன. சுகாதார வசதிகளுக்கான அணுக்கம், வேலைகள், பணம் உள்ளிட்டவை தேவைப்படுகின்றன” என்று தெரிவித்தார். யதார்த்தமான வார்த்தைகள்; ஆனால் எங்களையெல்லாம், முக்கியமாக அரசியல்வாதிகளையெல்லாம், வெட்கித் தலைகுனிய வைக்க வேண்டிய வார்த்தைகள். வைக்குமா?

image_ccc99c481d.jpg

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/போருக்குப்-பின்னரான-வடக்கில்-உடல்-உள-நலம்-வீழ்ச்சி/91-227747

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.