Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுக்கப்பட்ட உரிமைகளை தமிழருக்கு வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறுக்கப்பட்ட உரிமைகளை தமிழருக்கு வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை'

[26 - April - 2007]

* பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட வேண்டும் ஜே.வி.பி. பிரசார செயலாளர் விமல் வீரவன்ச

தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், ஆயுதமேந்திய பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. அது அழித்தொழிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச, இன,மத, ரீதியாக நாட்டை துண்டாடும் நிபுணர்களின் யோசனைகளால் உண்மையான சமாதானத்தை அடைய முடியாதென்றும் தெரிவித்தார்.

"சமாதான முன்னெடுப்புக்கான வர்த்தக முயற்சி என்ற தலைப்பில் " வர்த்தக சம்மேளனமும் இலங்கை கைத்தொழில் சம்மேளனமும் இணைந்து கொழும்பு ஜெய்க் ஹில்டனில் நடத்திய கூட்டுக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே விமல் வீரவன்ச எம்.பி.இதனைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்கும் இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கும் மத்தியில் சிக்கியிருக்கும் "தமிழ்" மக்களுக்கு எதையும் நினைத்துப் பார்க்கக் கூட அவகாசம் இல்லை.

வாகரையிலிருந்து வெளியேறிய மக்கள் தம்மை மீண்டும் தாம் வாழ்ந்த கிராமங்களில் மீளக் குடியமர்த்துமாறே கேட்கின்றனர். அரசியல் தீர்வையோ, நீண்ட கால யோசனைகளையோ கேட்கவில்லை.

ஆனால், அமைச்சர் திஸ்ஸ விதாரண இனத்துவ ரீதியில் நாட்டை பிரிக்கும் யோசனைகளை முன்வைத்துள்ளார். இதன் மூலம் நிலையான சமாதானம் கிடைக்குமா? ஒரு போதும் கிடைக்காது.

ஏனென்றால், அமைச்சரின் யோசனையில் மலையகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மக்களும் "இனத்துவ ரீதியில் சிந்திக்கும்" மனோபாவத்தை உருவாக்கியுள்ளது. காரணம் மலையகத்திற்கும் தனிப்பட்ட நிர்வாக அலகு தேவையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான யோசனைகளால் நாடு இனத்துவ ரீதியில் பிரிக்கப்பட்டு தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்களிடையே தீர்க்கப்பட முடியாத குரோதத்தையே உருவாக்கும். அதன் பின்னர் நாட்டில் தினமும் பிரச்சினை தான். எனவே தற்போது நினைப்பதற்குக் கூட அவகாசம் இல்லாமல் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை படிப்படியாக வழங்க வேண்டும். உதாரணமாக, தமிழ்மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நாடு முழுவதும் அமுல்படுத்தப்படுகிறதா? இல்லை. இதனால், தமிழ் மக்கள் தாம் ஒதுக்கப்படுவதாக எண்ணுகின்றனர். அதனை மாற்ற வேண்டுமெனில் தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்க வேண்டும்.

ஆயுத பாணிகளான பிரிவினைவாத பயங்கரவாதம் பலமாக உள்ளவரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்க முடியாது. எனவே, அது ஒழிக்கப்பட வேண்டும்.

எமது நாட்டிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதே தெரியாது. ஆனால், வெளிநாட்டு சக்திகளின் தேவைக்காக தமிழர் பிரச்சினையை வியாபாரம் செய்கின்றனர்.

நாட்டிற்கு சமாதானம் தேவை.ஆனால், இறைமை, சுயாதிபத்தியத்தை விற்பனை செய்யும் சமாதானம் தேவையில்லை. பர்கோப் போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் டொலர்களில் உயிர் வாழும் நம் நாட்டிலுள்ள சிலர் இன,மத ரீதியான பிரிவுகளை உருவாக்கும் யோசனைகளை தயாரித்து வெளியிடுகின்றனர்.

நீண்ட கால தீர்மானங்களையே மேற்கொள்ள வேண்டும். அதைவிடத்து புலிகளை சந்தோஷப்படுத்தும் குறுகிய காலத் தீர்வுகளுக்கு முன்னுரிமை வழங்குவோமானால் தமிழீழத்தை - புலி ஈழத்தை வழங்க வேண்டிய நிலைமை உருவாகும்.

யுத்தத்தால் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உலகம் பூராவும் பல நாடுகளில் இன மோதல்கள் அல்லது ஏதோ ஒரு ரீதியில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இதற்கு காரணம், பல நாடுகளிலுள்ள வளங்களை கொள்ளையடிப்பதற்காக பலம் வாய்ந்த நாடுகள் உள்நாட்டு மோதல்களை உருவாக்குகின்றார்கள். பின்னர் அதனை தடுத்து சமாதானத்தை நிலைநிறுத்தப் போகிறோமெனக் கூறிக்கொண்டு நாடுகளுக்குள் புகுந்து பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.

இவ்வாறு தான் நோர்வே சூடானையும் கிழக்கு தீமோரையும் பிரித்து அங்கு நிரந்தரமான இன, மத மோதல்களை ஏற்படுத்தி எண்ணெய் வளத்தையும் தேயிலை வளத்தையும் சூறையாடுகிறது.

எமது நாட்டின் பொருளாதாரம் சீர்குலைய யுத்தம் காரணமல்ல. வெள்ளைக்காரர்களால் தயாரிக்கப்பட்டு எமக்கு வழங்கப்பட்ட யோசனைகள், வியூகங்கள் அத்தோடு எமது அரசியல் தலைவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு வழி நடத்தியமை பின்னர் உருவான ஊழல், மோசடி, வெளிநாடுகளிடம் வகைதொகையின்றி கடன் பெற்றமை போன்றவற்றின் காரணமாகவே வெள்ளைக்காரர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றோம்.

எமது நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதற்கு சுயமாக எம்மால் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாதுள்ளது. கடனுக்குள் எம்மை வெளிநாட்டுக்காரன் சிக்கவைத்துள்ளான்.

அதாவது, "கோழிப் பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு நல்ல தீவனம் வழங்கி வளர்க்கப்படும். அதுவும் சந்தோஷமாக வாழும். ஆனால், அதற்கு தெரியாது தான் எப்போதாவது கொலை செய்யப்படுமென்பது" உணவு கொடுத்தவனே இறுதியில் கொலை செய்கிறான்.

இது போலத் தான் சர்வதேச நாடுகளும் நிதி அமைப்புகளும் நாம் கேட்கும் கடன் தொகையை விட அதிகளவில் கடனை வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கி இன்று எம்மை சுய தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் இறுக்கியுள்ளனர்.

எனவே, எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாமே சுயமாக எடுக்கும் நிலைமை உருவாக வேண்டும். அத்தோடு பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகுமெனத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி.யிடம் வர்த்தகப் பிரமுகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்;

கொள்கை ரீதியான சில முரண்பாடுகளாலேயே அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளோம். ஆனால், அரசின் சரியான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்.

தமிழ் மக்கள் புலிகள் சார்பாக தள்ளப்படும் நிலைமையை தவிர்ப்பதற்காக திட்டங்களை அரசாங்கமும் படையினரும் முன்னெடுக்க வேண்டும். வட, கிழக்கும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அம் மக்கள் தனித்து விடப்பட்டதான மனோநிலையை கலைக்க வேண்டும்.

அதைவிடுத்து அரசியல் தீர்வு, அதிகாரப் பரவலாக்கல் என்ற திட்ட யோசனைகளை தயாரிப்பதால் பிரபாகரனுக்கு பலம் அதிகரிக்கும்.

தமது பெற்றோரை மதிக்காத சிலர் இன்று தமிழ் மக்கள் மீது அளவு கடந்த அன்பை செலுத்துகின்றனர். கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு அம் மக்கள்படும் இன்னல்கள் தெரியாது. என்ன தேவையென்பதும் தெரியாது. இந் நிலையிலேயே அன்பை வெளியிடுகின்றனர். இதன் பின்னணியில் இருப்பது தமிழரின் பெயரை விற்று டொலர்களை சம்பாதித்து சுகபோகமாக வாழும் வியூகமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கான இறுதித் தீர்வு எவ்வாறு அமைய வேண்டுமென்ற ஜே.வி.பி.யின் எழுத்து மூலமான திட்டம் மிக விரைவில் வெளியிடப்படும்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு அமைய தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கருத்து தெரிவித்துள்ளார். "நினைப்பதற்குகூட அவகாசமின்றித் தவிக்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்னவென்று அமெரிக்கத் தூதுவருக்கு என்ன தெரியும்?.

வடக்கு,கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஜனநாயகத்தை அனுபவிக்கையில், தேசிய கட்சிகளுக்கே வாக்களித்தனர். தமிழர் கூட்டணிக்கோ, வேறெந்த தமிழ் கட்சிகளுக்கோ ஆதரவு வழங்கவில்லை. எனவே, அம் மக்களின் கருத்துகளுக்கு செவி மடுக்க ஜனநாயகத்தை வழங்க வேண்டும்.

இலங்கையில் ஜே.வி.பி.ஆட்சி உருவாகும். அதன்போது பயங்கரவாதம் இருந்தால் திட்மிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து அதனை தோல்வியடையச் செய்வோம். அத்தோடு, வடக்கு,கிழக்கில் வாழும் மக்களும் இந் நாட்டு மக்களே என்ற உணர்வை ஏற்படுத்துவோம்.

சட்ட ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கடமை நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதாகும். அதற்காகவே அரசாங்கம் யுத்தம் புரிகிறது.இதுவும் அரசியல் தீர்விற்கான ஓர் அம்சமே தவிர தனிப்பட்டதொன்றல்ல.

நாட்டைப் பிரிக்க முனையும் மேற்குலக சக்திகளினதும் உள்ளூரில் அவர்களுக்கு உதவும் சக்திகளையும் இனங்கண்டு தோல்வியடையச் செய்ய வேண்டும். தன்னலம் கருதாது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எமது முடிவுகளை நாமே எடுக்கும் சுய நிலைக்கு திரும்ப வேண்டுமென்றும் விமல் வீரவன்ச எம்.பி.தெரிவித்தார்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.