Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடியும் வேளையில் இடம்பெறப்போகும் விளையாட்டுக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடியும் வேளையில் இடம்பெறப்போகும் விளையாட்டுக்கள்

 

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் அனைத்து தரப்பினரும்  அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றியும்  கட்சிகளின் சார்பில்  களமிறங்கப்போகும்  வேட்பாளர்கள்  தொடர்பாகவுமே  அதிகளவில்  ஆர்வம் செலுத்துகின்றனர்.  களத்தில் இறங்கப்போகும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் யார்?   எத்தனை  வேட்பாளர்கள் வரப்போகின்றார்கள்?  மும்முனை போட்டியா இருமுனைப் போட்டியா என்பது குறித்து  கடுமையான வாத,பிரதிவாதங்கள் அனைத்து தளங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

விசேடமாக  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பதிலேயே  அனைவரதும் கவனம்  குவிந்துள்ளது.     அரசியல் என்பது எப்போதும் விசித்திரமானதுதான். எதிர்பாராத விடயங்கள்  எதிர்பார்க்காதபோது நடைபெறுவது தானே அரசியல்? கடந்த 2015 ஆம் ஆண்டு  ஜனாதிபதி தேர்தலில்  மைத்திரிபால சிறிசேன எதிரணி சார்பில் களமிறங்குவார் என்று எவரும் எதிர்பார்க்கவுமில்லை. அவர் வெற்றிபெறுவார் என்று நினைத்திருக்கவுமில்லை.  அதுபோன்ற எதிர்பாராத விடயங்கள் நடைபெறுவதையே  அதிகமாக அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்றது.  

அந்தவகையில்  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் என்ன நடக்கப்போகின்றது என்று அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற நிலையில்  அதற்கேற்றவாறு நாட்டில் அரசியல் நகர்வுகளும் ஜனாதிபதி  தேர்தல் குறித்த காய் நகர்த்தல்களும் சூடுபிடித்துள்ளன.  அதன்படி தற்போதைய சூழலில்  ஜனாதிபதி  தேர்தல் முதலில் நடப்பதற்கான வாய்ப்பே அதிகம் காணப்படுகின்றது.   

காரணம்  பாராளுமன்ற தேர்தலானது அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம்  ஆகஸ்ட்  மாதமே நடைபெறவேண்டும்.  எனினும்  2020 ஆம் ஆண்டு மார்ச்  மாதம்  தற்போதைய பாராளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்கள் நிறைவுபெறுகின்ற பின்னணியில், அதன் பின்னர் எந்த நேரத்திலும் அப்போது பதவியில் இருக்கும்  ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக் கலாம். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இதுவே சாத்தியமானது. 

எனினும் அதற்கு முன்னரும்  பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவ தற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை.  அதாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற  225  பாராளுமன்ற உறுப்பினர்களில் 150  பேர் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மையானோர் ஒருமித்து பிரேரணை ஒன்றில் கைச் சாத்திட்டு அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் உடனடியாக பாராளு மன்றத் தேர்தலை நடத்த முடியும்.  தற்போது சில தரப்பினரால் அதிகம் விமர்சிக்கப்பட்டுவரும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின்படி    இதுவே    தெரிவாக உள்ளது. 

ஆனால் அவ்வாறு நடப்பதற்கு தற்போது சாத்தியம் மிகக்குறைவாகவே இருக்கின்றது. காரணம்  மஹிந்த தரப்பும்   மைத்திரி தரப்பும்  பாராளுமன்ற தேர்தலை விரும்பினாலும் ஐக்கிய தேசியக்  கட்சி அதற்கு ஆதரவு வழங்காது என்றே தெரிகின்றது.  எனவே 150                      எம்.பிக்களின் ஆதரவுடன் உடனடியாக பாராளுமன்றத்  தேர்தல் நடைபெறும் என்பதற்கான சாத்தியம்  மிகவும் குறைவாக இருப்பதால் பாராளுமன்ற தேர்தலானது அடுத்தவருடம்   மார்ச்  மாதத்துக்கு பின்னர் நடைபெறுவதற்கான சாத்தியமே அதிகமாக காணப்படுகின்றது.  

அப்படி பார்க்கும்போது முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறுவதற்கான சாத்தியம்  இருக்கின்றது.  டிசம்பர் மாதம்  8 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றாக வேண்டும். ஆனால் இங்கும் கவனம் செலுத்தப்படவேண்டிய ஒரு விடயம் உள்ளது. அதாவது ஜனாதிபதி தலைமை வகிக்கும் சுதந்திரக்கட்சியானது   ஜனாதிபதியின் பதவிக்காலம்  குறித்து  உயர்நீதிமன்றத்தின்   அபிப்பிராயத்தை கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    19 ஆவது திருத்தத்தின் பிரகாரம்  தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என்று உயர்நீதிமன்றம்  ஏற்கனவே தெரிவித்திருந்தது. எனினும் தற்போது  19 ஆவது திருத்தச் சட்டம்  எப்போது ஆரம்பிக்கின்றது என்ற விடயம் அதனூடாக ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்போது ஆரம்பிக்கின்றது என்ற விடயம் உள்ளிட்டவற்றை முன்வைத்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சுதந்திரக் கட்சி கோரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

ஆனால் தற்போது வரை அவ்வாறு எதுவும் கோரப்படவில்லை.  எனவே  டிசம்பர் மாதம் ஏழாம் திகதிக்குள்  ஜனாதிபதி  தேர்தல் நடைபெறும் என்ற அடிப்படையிலேயே  அரசியல் கட்சிகளின் நகர்வுகள்  இடம்பெற்றுவருகின்றன. 

அந்தவகையில் யார்யார் வேட்பாளர்கள்?  யார் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டை ஆளப்போகின்றவர் போன்ற விடயங்கள் உள்ளிட்ட பல கேள்விகள் மக்கள்  மத்தியில்  எழுந்துள்ளன. பலரின் பெயர்கள் மிகப் பிரபலமாக தற்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இறுதி நேரத்தில்  ஒரு சில  வேட்பாளர்களுடன்   பாரிய போட்டி காணப்படும். விடியும்போது  நல்ல நல்ல விளையாட்டுக்கள் இடம்பெறும் என்று கூறுவதுண்டு.  எனவே  அரசியலும்  அதில் நடைபெறுகின்றவையும் விசித்திரமானவை என்பதால்   ஜனாதிபதி  தேர்தல் நெருங்கும் போது நல்ல நல்ல  விளையாட்டுக்களைக் காணலாம். தற்போதைய சூழலில் பலரின் பெயர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன. ஐக்கிய  தேசியக்கட்சியைப் பொறுத்தவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் பெயர்கள்  பேசப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சிக்குள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் ஒரு தரப்பினரும்  பிரதமர் ரணிலை ஆதரிக்கும் ஒரு தரப்பினரும்  சபாநாயகர் கரு ஜயசூரியை ஆதரிக்கும் மற்றுமொரு தரப்பினரும் இருப்பதாகவே தெரிகின்றது.  இவர்களின் எந்த தரப்பு நியாயம் இறுதியில் வெற்றிபெறும்   என்பது இன்னும் புதிராகவே காணப்படுகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருக்கின்ற கூட்டு கட்சிகள் சபாநாயகர் கருஜயசூரியவை வேட்பாளராக  பிரேரிப்பதாகவே தெரிகின்றது. ஆனால் ரணில் மற்றும் சஜித்  ஆகியோருக்கும்  கணிசமான  ஆதரவு கட்சிக்குள் இருக்கின்றது. எனினும்  இன்னும் யார் என்பது முடிவு செய்யப்படாத நிலைமையே காணப்படுகின்றது.   இது தொடர்பில் உள்மட்ட பேச்சுவார்த்தைகள்  தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.   அரசியல் காய்நகர்த்தல்களும் இடம்பெறுகின்றன.   இறுதியில் எவ்வாறான  முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து கட்சியினர்   தொடர்ந்து இரகசியங்களை பேணிவருகின்றனர்.   

அதேபோன்று  முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின்  பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலும்    நீளமானது என்றே கூறவேண்டும்.  முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜ பக் க்ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ,   முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  உள்ளிட்டோரின் பெயர்கள் பேசப்பட்டுவருகின்றன.   சமல் ராஜபக்ஷவின் பெயர்  கடந்த சில வாரங்களாக சற்று அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றது.  எனினும் தற்போதைய சூழலில் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் வலுவடைய ஆரம்பித்துள்ளது. கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும்  பலரும்  மிகவும்  பகிரங்கமாக  கோத்தபாய ராஜபக்ஷவே அடுத்த வேட்பாளர் என்ற விடயத்தை  வெளியிட்டு வருகின்றனர். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும்   பொதுஜன பெரமுன கட்சியின்  சம்மேளனத்தில் கோத்தபாயவின் பெயர் உத்தியோகபூர்வமாக வெளி யிடப்படும் என்றும்  கட்சியினர் அறிவிக்கின்றனர். . 

அது மட்டுமன்றி  பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கூட்டுக்கட்சிகளும் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளன. “கோத்தபாய ராஜபக்க்க்்்க்ஷதான் வேட்பாளர் என்றால் கூறுங்கள் நாங்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியுள்ளது” என்று சில தினங்களுக்கு முன்னர் வாசுதேவ நாணயக்காரவும்  தெரிவித்துள்ளார். இதனூடாக  கோத்தபாயவே  வேட்பாளராக வரப்போகின்றார் என்ற விடயத்தை அரசியல் ஆர்வலர்களினால் ஊகிக்க முடிகின்றது. எனினும்  கூட்டு எதிரணியை பொறுத்தவரையிலும் இதுவரை   ஏகமனதான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றே  தெரிகின்றது. 

அதேபோன்று சுதந்திரக்கட்சியும் இந்த இடத்தில் தீர்மானிக்கும் சக்தியாகவே  இருக்கின்றது. சுதந்திரக் கட்சியின் தலைவர்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  கட்டாயம் கட்சியின் சார்பாக போட்டியிடவேண்டும் என்று கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்திருந்தனர். 

ஆனால் அதற்கு ஜனாதிபதி  இன்னும் பதிலளிக்கவில்லை.   மாறாக  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது  மும்முனைப் போட்டியாக அமையாது என்றும் தான் கௌரவமான தீர்மானம் ஒன்றை  எடுப்பதாகவும்  ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கூற்றின் ஊடாக  அவர் அடுத்த ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகின்றது. ஆனால் இறுதி நேரத்தில் எவ்வாறான தீர்மானமும் எடுக்கப்படலாம். அரசியல் விசித்திரமானது.   கடந்த புதன்கிழமை பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே   இந்த விடயத்தில் தீர்மானம் எடுப்பதாக கூறியிருந்தார்.  அரசியல் அல்லவா? எதுவும் நடக்கலாம். 

மறுபுறம், இம்முறை  மக்கள் விடுதலை  முன்னணியும்  தமது கட்சியின் சார்பில் வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக  தெரிவித்து வருகின்றது.   அத்துடன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,  தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் எவ்வாறான  முடிவை ஜனாதிபதி  தேர்தலில் எடுக்கப்போகின்றன என்பதும் முக்கிய காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதேவேளை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்னவும்   தான் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற்றே தீருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறு  ஜனாதிபதி  தேர்தல் குறித்த  விடயங்கள்  சூடுபிடித்துவிட்டன.  அது  தொடர்பான அரசியல் காய்நகர்த்தல்கள்    கட்சி அணுகுமுறைகள் தீவிரமடைந்துள்ளன. எனினும்  வேட்பாளர்கள் குறித்து மக்களுக்கு இன்னும்  தெளிவற்ற தன்மை நீடிக்கின்றது.  யார்யார் வேட்பாளர்களாக வரப்போகின்றனர் என்பதே  அனைவரதும் எதிர்பார்ப்பாகும். 

இன்னும் சில வாரங்களில்  ஜனாதிபதி தேர்தல் குறித்த விடயங்கள்  மேலும்  சூடுபிடிக்கும் என்பதனை எதிர்பார்க்கலாம்.  மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் வேட்பாளராக     கோத்தபாய வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று  ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகிய மூவரின்  பெயர்களும் உள்ளன.   அதனால் விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்களைப் பார்க்கலாம் என்பது  இங்கு பொருத்தமாக அமையும். 

தேர்தலுக்கான  எதிர்பார்ப்பு  அதிகரித்துவிட்டது. தலைவர்கள்            வெளிப்பட ஆரம்பித்துள்ளனர்.  ஒவ்வொரு ஐந்து வருடங்கள் அல்லது ஆறு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் விடயமாக இது உள்ளது.  தற்போதும் அதுவே நடக்கின்றது. ஆனால் நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே தான் செல்கின்றன.   பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.  2015 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் பாரிய  எதிர்பார்ப்பு காணப்பட்டது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் தமிழ்ப்பேசும்  மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.  காணாமல் போனோர் விவகாரம் தீர்க்கப்படும். காணிகள் விடுவிக்கப்படும், அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்படும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியில் வலுவூட்டப்படுவார்கள், கணவனை இழந்த குடும்ப தலைவிகள் பொருளாதார ரீதியில் ஊக்குவிக்கப்படுவார்கள், மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுக்கள் ஆராயப்படும், வேலையின்மை வறுமை என்பன குறைக்கப்படும், பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்படும், சமூக பிரச்சினைகள் தீர்க்கப்படும் என   பாரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அவை இன்னும் பிரச்சினைகளாகவே நீடிக்கின்றன.  2015 ஆம் ஆண்டு  பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய சாதனையாக 19 ஆவது திருத்தச் சட்டத்தைப் பார்க்கலாம்.  ஆனால் அதுவும் இன்று  விமர்சிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.  

எனவே  நாட்டின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்  பிரதான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து சிந்திக்கவேண்டும்.  தற்போது முன்வருகின்ற  தலைவர்களில் பலர் முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளனர். எனவே  ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வர துடிக்கின்றவர்கள் வந்த பின்னர் பிரச்சினைகளைத்  தீர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனரா? அல்லது  தீர்க்க முடியாதளவுக்கு அரசியல் சூழல் அமைகின்றதா? என்பது  ஆராயப்படவேண்டிய விடயமாகும். 

எப்படியும்  தேர்தல் திருவிழா ஆரம்பமாகப் போகின்றது. கட்சிகள் அரசியல் காய்நகர்த்தல்களுக்கும் நகர்வுகளுக்கும் தயாராகின்றன. வேட்பாளர்கள் தம்மை வெளிக்காட்ட ஆரம்பித்துவிட்டனர்.  பற்பல அரசியல் அரங்கேற்றங்களைக் களத்தில்  இனி பார்க்க முடியும். உண்மையில் விடியும் நேரத்தில்  நல்ல நல்ல  விளையாட்டுக்கள் இடம்பெறும் என்பது மட்டும் உண்மையாகும்.

ரொபட் அன்டனி

https://www.virakesari.lk/article/59374

 "2015 ஆம் ஆண்டு  பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய சாதனையாக 19 ஆவது திருத்தச் சட்டத்தைப் பார்க்கலாம்.  ஆனால் அதுவும் இன்று  விமர்சிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது." 

இதுதான் ஒரு ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் அரசால் சாதிக்க முடிந்தது என்றால் அது ஒரு தோல்வியாகவே தெரிகின்றது. 

வரும் தேர்தல் மும்முனை போட்டிதான் ! திருவிழாதான்  !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.