Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோட்ட மக்களை  குட்டி முதலாளிகளாக   சஜித் மாற்றுவார் - மனோ கணேசன் செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோட்ட மக்களை  குட்டி முதலாளிகளாக   சஜித் மாற்றுவார் - மனோ கணேசன் செவ்வி

 

ஐக்கிய தேசிய  முன்னணியின் வேட்பாளர் ஐ.தே.க. வின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்று கட்சி தலைவர் கூட்டத்தில் நான்தான்  முதலில் எடுத்துக்கூறினேன். இதனை நாங்கள்  தொடர்ச்சியாக வலியுறுத்தினோம் என்று   தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அரச கரும மொழிகள் தேசிய ஒருமைப்பாடு இந்து கலாசார அமைச்சருமான  மனோ கணேசன் தெரிவித்தார். 

கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.  செவ்வியின் முழு விபரம் வருமாறு 

கேள்வி : ஜனாதிபதி  வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணத்தை  விளக்க முடியுமா? 

பதில்: சஜித் பிரேமதாச நாங்கள் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர். அவர் புதியவர் அல்ல. அறிமுகமானவர். எமது முன்னணியில் உள்ள ஏனைய அரசியல் தலைவர்களைவிட  வயதில் குறைந்த இளம் தலைவர். எங்களுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இவ்வாறு பல காரணங்கள் உள்ளன. 

அத்துடன் 2010 இல் மற்றும் 2015 இல் கிடைக்காதது இம்முறை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு  ஐ.தே.க.வுக்கு இருந்தது.  ஐ.தே.க. வின் ஒருவர் வேட்பாளராக இருக்கவேண்டும் என்று  அனைவரும் எண்ணினர். இதனை நான் நன்றாக அறிந்துகொண்டேன். அதனால்   ஐக்கிய தேசிய  முன்னணியின் வேட்பாளர் ஐ.தே.க. வின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்று கட்சி தலைவர் கூட்டத்தில் நான்தான்  முதலில் எடுத்துக்கூறினேன். 

இம்முறையும் சிலர் திட்டமிட்டு வேட்பாளரை வெளியில் இருந்து இறக்குமதி செய்துவிடுவார்களோ என்ற சந்தேகம் காணப்பட்டது. அப்படி நடந்திருந்தால் ஐ.தே.க. என்ற பெரிய இயந்திரத்தை நாங்கள் தட்டி எழுப்பியிருக்க முடியாது. 

கேள்வி : வேட்பாளரை இம்முறையும் வெளியில் இருந்து கொண்டுவர யாராவது முயற்சித்தார்களா? 

பதில்: நிச்சயமாக அப்படி ஒரு முயற்சி இருந்தது. 

கேள்வி : யார் அந்த முயற்சியை செய்தது? 

பதில்: அதனை கூற முடியாது. ஆனால் அவ்வாறு  முயற்சி இருந்தது. நானும்  ஏனைய  கூட்டு கட்சிகளின் தலைவர்களும்  இணைந்து தடுத்தோம்.  

sajith.jpg

கேள்வி : ஜனாதிபதி வேட்பாளர் என்ற விடயத்தில் சஜித்திடம் நீங்கள் காணும் விசேடத்தன்மை என்ன? 

பதில்: சஜித்தின் அடையாளமாக நாங்கள் முக்கிய விடயத்தை பார்க்கின்றோம். அவர் சம்பிரதாயங்களுக்கு வெளியே வந்து செயற்படும் அரசியல்வாதியாக எதிர்கால ஜனாதிபதியாக இருக்கின்றார்.  தன்னை கௌரவ மாண்புமிகு போன்று அழைப்பதை அவர் விரும்பவில்லை. தன்னை சஜித் என்று கூறுவதையே விரும்புகின்றார்.  ஸ்மார்ட் தொலைபேசியை பயன்படுத்தி சமூக ஊடகங்களுக்குள் நுழைந்து செயற்படக்கூடிய   விடயங்களை  அறிந்த தலைவராக இருக்கின்றார்.  புதிய தலைமுறைக்கு  ஒத்துப்போகும்  வகையில் இருக்கின்றார். அத்துடன் இந்த நாட்டின் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஒடுக்கப்பட்டுள்ள சிறிய மனிதர்களின்  ( பொடி மினிசா) பிரதிநிதியாக சஜித்  இருக்கின்றார்.  

அவர் மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டையும்  நான் அறியவில்லை. மேலும் வீண்விரயம் குறித்த குற்றச்சாட்டு இல்லை. தவறான முகாமைத்துவம் அவரிடம் இல்லை. இந்த மூன்று விடயங்களும் அரசை தோற்கடிக்கும் விடயங்கள். அந்த மூன்றும்  சஜித்திடம் இல்லை. 

கேள்வி : தமிழ் மக்களை பொறுத்தவரை அரசியல் தீர்வு முக்கியமானது. சஜித் மீது இந்த விடயத்தில் உங்கள் நம்பிக்கை எவ்வாறு உள்ளது? 

பதில்:  பொறுங்கள்….  சஜித் என்ற கதாபாத்திரம் எவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் என்ற விடயத்திற்குள் பொருந்தியுள்ளது என்பது குறித்தே விளக்கமளித்தேன். மாறாக அவர் மிக சிறந்தவர் அற்புதமானவர் என்று கூறவில்லை. அது அப்படியல்ல. அவரும் பெரும்பான்மை கட்சி ஒன்றின் அரசியல்வாதிதான்.  

யதார்த்தத்தை புரியவேண்டும்.  நான் கனவு காண்கின்றேன். அப்துல் கலாம் இதனை கூறியுள்ளார். ஆனால் அதில் யதார்த்தம் ஒன்று உள்ளது என்பதனையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.  கனவுக்கும் யதார்த்த்தத்துக்கும் இடையில்  இடைவெளி இருக்கும். 

  இதேவேளை  இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாங்கள் ஒரு இடைவெளியை (space)  ஏற்படுத்தியுள்ளோம். அதனை பாதுகாப்பது அவசியம். ஜனநாயக போராட்டம் கதவடைப்பு எதிர்ப்பு ஊர்வலம் ஆர்ப்பாட்டம் எதிர்த்து குரல் கொடுத்தல் சண்டை போடுதல் ஆகியவற்றுக்கான  இடைவெளி தற்போது உள்ளது. அதனை பாதுகாத்துக்கொள்வது அவசியம். 

மனசாட்சி உள்ள அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள். இதனைவிட மாற்றுவழி இருந்தால் சொல்லுங்கள். மாற்று வழி என்ன? ஒன்று பாராளுமன்ற மற்றும்  தேர்தல் முறையை நிராகரித்துவிட்டு தெருவில் இறங்கி போராடலாம். அதன்மூலம் தீர்வைக்காணலாம்.  அல்லது அதற்கு அப்பால் சென்று காட்டுக்குள்ளே சென்று ஆயுதம் போராட்டம் ஆரம்பிக்கலாமா? இது  ஜனநாயகத்துக்கு ஒவ்வாதது. ஏற்றுக்கொள்ள முடியாதது. 

கேள்வி : சஜித் வென்றால் தேசிய பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா? 

பதில்: நிச்சயமாக அந்த நம்பிக்கை உள்ளது. ஆனால் நாங்களும் எங்கள் அபிலாஷைகள்  எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக உள்ள வழி முறைகளை மாற்றிக்கொள்ளவேண்டும்.  மீண்டும் புதிதாக சிந்திப்பது அவசியம். எமது தேவைப்பாடுகள் என்ன? என்பது குறித்து  புதிதாக சிந்திக்கவேண்டும்.  50 40 30 வருடங்களுக்கு முன்னால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கோட்டில் இருக்க முடியாது.  அதே வரையறைக்குள் இருக்க கூடாது. அரசியலை விடுங்கள். சமூக கலாசார துறைகளை பாருங்கள். எல்லா இடங்களிலும் இலக்குகள் வரையறைகள் மாறியுள்ளன.  புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. காலம் மாறுகின்றது.  நாங்களும் மாறவேண்டும். 

கேள்வி : அப்படியானால் தமிழர் தரப்பு ஏதாவது விட்டுக்கொடுப்பை செய்யவேண்டும் என்று கூற முற்படுகின்றீர்களா?

பதில்:அப்படியல்ல. உண்மையில் நான் கூறுவது உங்களுக்கு ஆச்சரியமாகவும் இருக்கும். வடக்கில் ஐந்து கட்சிகள் இணைந்து 13 அம்ச கோரிக்கைகளை  முன்வைத்துள்ளதை நான் வரவேற்கின்றேன். காரணம் தமிழர் தரப்பின் அடிப்படை கோரிக்கைகளை  அது மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கின்றது. நல்ல விடயம். ஆனால் அதுதான் கனவு. நடைமுறை என்பது வேறு. அந்தக் கனவை அப்படியே நாங்கள் கொண்டுவந்து மேசையில் வைத்து சஜித்துடனோ கோத்தாவுடனோ பேச முடியாது. ஆனால் இவ்வாறு கனவு உள்ளது என்பதனை வலியுறுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. அது இல்லாவிட்டால் தமிழருக்கு எது .தேவை அபிலாஷை என்ன எதிர்பார்ப்பு என்ன என்பது பற்றி  புரிதல் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். 

புலிகள் இருந்த காலத்தில் திம்பு கோட்பாடு உருவாக்கப்பட்டது வடக்கு கிழக்கை இணைத்தல்   தேசிய இனம் சுயநிர்ணய உரிமை இலங்கையில் பிறந்து வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் குடியுரிமை என்பனவே அவையாகும். இவற்றில் நான்காவது விடயத்தில் நன்மையடைந்தவர்கள் மலையகத் தமிழர்கள். உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவை  முக்கியமான கோட்பாடுகள். அவ்வாறான  விடயமாகவே  இந்த 13 அம்ச திட்டத்தையும் நான் பார்க்கின்றேன். 

கேள்வி : சஜித் தலைமையில் உங்கள் எதிர்காலத்தில் அமைந்தால் இந்த 13 கோரிக்கைகளை பரிசீலிக்குமா? 

பதில்: அவற்றை நாங்கள் பரிசீலிக்கலாம். கவனத்தில்  எடுக்கலாம்.  கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. காரணம் தேசிய இனப்பிரச்சினை என்பது பிரதான பிரச்சினையாகும்.  யார் என்ன சொன்னாலும் பிரச்சினைகளை வரிசைப்படுத்தினால் மனோ கணேசனை பொறுத்தவரை முதலில் வருவது தேசிய பிரச்சினைதான். அந்த எண்ணப்பாட்டில்தான் ஏனைய அனைத்து தமிழ் உள்ளதாக நினைக்கின்றேன். ஆனால் அது மட்டும் பிரச்சினை அல்ல.   இன்னும் முக்கியமான பிரச்சினை உள்ளது. 

கேள்வி : நல்லாட்சியில்  புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியாது என்று முதலில் கூறியவர் நீங்கள். அதனால் உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால்  தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா? 

பதில்:  புதிய அரசாங்கத்தில்   புதிய அரசியலமைப்பு முயற்சிகள் தொடரும். ஆனால் நான் சொன்னது அப்படியே அச்சொட்டாக நடந்திருப்பதை பார்த்து கவலையடைகின்றேன். கவலையடைகின்றேன் என்பதனை இதயபூர்வமாக சொல்கின்றேன். காரணம் அந்த தோல்விக்கு அரசாங்கத்தின் பக்கத்திலேயே  அரசியல் திடம் இல்லாமை ஒரு காரணமாகும். மறுபுறத்திலே இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு  தமிழ்க் கூட்டமைப்பு தவறிவிட்டது. புதிய  அரசியலமைப்பை உருவாக்கும்  வழிகாட்டல் குழுவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வந்திருக்கக்கூடாது. வெ ளியில் இருந்திருக்கவேண்டும். 

கூட்டமைப்பு  உள்ளே வந்து கலந்துரையாடி பேச்சு நடத்தி  வரைவை எழுதி வெ ளியிடுவதற்கான தேவைப்பாடு இருக்கவில்லை. கடந்தகாலங்களில் பல பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.   பண்டா செல்வா பிரேமதாசவின் வட்ட மேசை  மாநாடு ரணில் – பிரபா பேச்சு மஹி்ந்தவின் சர்வகட்சி போன்ற பல ஆவணங்கள் உள்ளன. சந்திரிகாவின் பொதி இருந்தது. அவற்றை எடுத்து கலந்தாலோசித்து ஒரு தீர்வு பொதியை  தயாரித்து  ஐக்கிய நாடுகள் சபையிடம் கொடுங்கள் என்று கூறியிருக்கலாம். அவர்களை உள்ளே இழுததுவிட்டிருக்கலாம். ஐ.நா.வும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் ஜெனிவாவில் அரசாங்கத்துக்கு பிணை வாங்கி கொடுத்துவிட்டு இங்கே வந்து  வழி காட்டல் குழுவில் அமர்ந்துவிட்டார்கள். கூட்டமைப்பு வெ ளியில் இருந்திருந்தால்  ஏதாவது செய்யவேண்டிய  நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும்.  வழி காட்டல் குழுவில் பங்கேற்ற சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் நேர்மையாக உழைத்தார்கள்.  சம்பந்தன் தனது வயதை மீறி மேசையில் அடித்து  பல நிமிடங்கள்  தொடர்ச்சியாக பேசினார். அவர் பேசும்போது பிரதமர் உள்ளிட்ட அனைவரும் அமைதியாக செவிமடுத்தோம். 

சுமந்திரன் தனது நண்பர் ஜயம்பதியுடன் இணைந்து கஷ்டப்பட்டு  வரைபை தயாரித்தார். அந்த உழைப்பை அவர் நீதிமன்றத்தில் செய்திருந்தால் பல இலட்சக்கணக்கான  பணத்தை உழைத்திருக்கலாம்.  ஆனால் சுமந்திரனை நாங்கள் சட்டத்தரணியாக பாராளுமன்றத்துக்கு கொண்டுவரவில்லை. அரசியல்  தலைவராகவே கொண்டுவந்தோம். ஆனால் சட்டத்தரணியாக இருந்துவிட்டார். இறுதியாக அவர் .செய்த உழைப்பே அவருக்கு எதிரியாகிவிட்டது. காரணம் பிரபாகரினினால் ஆயுதத்தால் முடியாததை  சம்பந்தன் சுமந்திரன் தந்திரமாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட எதிர்க்கட்சி சந்தர்ப்பம் கிடைத்தது. அது போலிக் குற்றச்சாட்டுதான். 

கேள்வி : இந்த அனுபவங்களைக்கொண்டு  சஜித் வென்றால் தீர்வைக்காண முடியுமா?  

பதில்: நிச்சயமாக முடியும்.  அனுபவங்களினால் பாடம் படிக்கின்றோம். 

கேள்வி : நீங்கள் இரண்டு வேட்பாளர்களையும் பார்த்து ஒருவரை தெரிவு செய்துள்ளீர்கள். சஜித்திடம் நீங்கள்…

பதில்: பொறுங்கள்.  நீங்கள் சஜித்துக்கு ஆதரவா இல்லையா என  பலர் என்னிடம் முன்னரே  கேட்டனர்.  என்ன நிபந்தனை வைக்கப்பட்டது என்றும் கேட்டனர். இதனை ஒரு அசந்தர்ப்பமான கேள்வியாக நான் பார்த்தேன்  காரணம் நாங்கள்தான் அராசங்கம். ஐக்கிய தேசிய  முன்னணி நாங்கள் தானே?  நாங்கள் தானே  சஜித்தை கொண்டுவருகின்றோம்.  ஐக்கிய தேசியகட்சியைவிட கூட்டுக் கட்சிகளாகிய நாங்களே  சஜித்தை பாடுபட்டு கொண்டுவந்தோம். இது ஐ.தே.க.வினருக்கும் தெரியும்.  எனினும் சம்பிரதாய பூர்வமான ஒரு பேச்சை நடத்தினோம். நாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் அபிலாஷைகளை எடுத்துக்கூறியிருக்கின்றோம்.  அத்துடன் பொறுப்புவாய்நத தேசிய கட்சி என்ற வகையில் நாட்டை பற்றிய எமது நிலைப்பாட்டை அவருக்கு எடுத்துக்கூறியுள்ளோம். 

கேள்வி : எதிரணி வேட்பாளர்  குறித்து பார்த்தீர்களா?

பதில்: எதிரணி வேட்பாளர் பக்கம் இருந்து எங்களுக்கு அழைப்புகள் வந்தன. கடந்த அரசியல் நெருக்கடியுடன் வந்தன. அந்த அழைப்புகள் வெறும் அழைப்புகளாக வரவில்லை. அவற்றுடன் சேர்ந்து பல விடயங்களும் வந்தன.  ஆனால் இன்று இந்த நாட்டில் உள்ள இடைவெ ளியை அதிகரிக்கவேண்டும். அல்லது   இருப்பதை பாதுகாக்கவேண்டும்.  மாறாக பின்னால் செல்ல முடியாது.  

கோத்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினத்தில் அவர் ஆற்றிய ஏற்புரையை எடுத்துப் பாருங்கள். தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் வரம்புகளை சம்பிரதாயங்களை மீறி சென்றுதான் பல விடயங்களை செய்தேன் என்று கூறினார்.  அதில் அவர்  பெருமையடைகின்றார்.  நான் ஆரம்பத்தில் சொன்ன சஜித் சம்பிரதாயங்களை தாண்டி செயற்படுவது வேறு. கோத்தா கூறுவது வேறாகும். சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டதாக கூறுகின்றார். இதனைதான் சட்டத்துக்கு புறம்பாக செயற்படுதல் என்று  கூறுவார்கள். அவர் ஜனாதிபதியானால் அவர் பொலிஸ் இராஜ்ஜியத்தை கொண்டு வருவார்.  நாங்கள் கொண்டுவர முயற்சிப்பது மக்கள் இராஜ்ஜியம். நாங்கள் அமைக்கப்போவது சஜித் ஆட்சியல்ல  மக்கள் ஆட்சி.  

கேள்வி :  சஜித் வென்றால் பிரதமர் ரணிலின் நிலை? 

பதில்: ரணில் தற்போது பிரதமராக  இருக்கின்றார். அவர்  தொடர்ந்தும் பிரதமராக இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் தற்போது ஜனாதிபதிக்கான தேர்தலே நடைபெறுகின்றது. ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம்.  யாருக்கு பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்று ஜனாதிபதி நம்புகிறாரோ  அவரை பிரதமராக ஜனாதிபதி நியமிப்பார். 

கேள்வி : எனினும் கூட்டுக் கட்சிகள் ரணிலை பிரதமராக வைக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனவா?

பதில்:  ஆம். எமது பயணம்  சமநிலைப்படுத்துவதாக இருக்கவேண்டும். அதுவே ஜனநாயமாகும். ஒரு  தனிநபரை நம்பி நாங்கள் களமிறங்க முடியாது. ரணிலுக்கும் ஒரு பாத்திரம் உள்ளது. சஜித்துக்கு பிரதான பாத்திரம் உள்ளது. நவம்பர் 17 க்கு பின்னர் ரணிலை  தலைமைத்துவ சபையின் முதல்வராகவே  பார்க்கப்போகின்றோம். அப்போது ஒரு சபைதான்  அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும். தற்போதைய ஆட்சியில் அப்படி இருக்கவில்லை.  இந்த ஆட்சியில் ரணில் தனக்கு உரித்தான சில எம்.பி. க்களைக்கொண்டு குழுவை அமைத்து  ஆட்சியை நடத்தினார். சமைலயறை  அமைச்சரவை என்று அதனை கூறுவார்கள்.  அதில் தவறு இருப்பதாகவும் நான் கருதவில்லை. 

கேள்வி : சுதந்திரக் கட்சி கோத்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?  

பதில்: அது எதிர்பார்த்ததுதான். ஆனால் சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி இதுவரை எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். 

கேள்வி : கடந்த முறை ஜே.வி.பி. உங்களுக்கு சாதகமாக இருந்தது.  இம்முறை  தனித்து களமிறங்கியுள்ளது. இது யாருக்கு பாதகம்? 

பதில்: இந்த விடயத்தில் சாதகம் பாதகம் இரண்டு நிலையிலும் பார்க்கலாம். ஒன்றை மறக்கக்கூடாது. இது ஜனாதிபதி தேர்தல். பாராளுமன்ற மாகாண உள்ளூராட்சி தேர்தல்கள் அல்ல. இவற்றில் வாக்களிப்பது வேறு. ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு போக்கு வேறு.  கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளைக்கொண்டு இந்தத் தேர்தலை கணித்தால்  அது  சரிவராது.  கடந்த தேர்தலில் 7 இலட்சம் வாக்குகள் கிடைத்ததால் இதில்  10 இலட்சம் வாக்குகள் கிடைக்கும் என்றால் அவர்களை பார்த்து கவலைதான் படவேண்டும். காரணம் ஜனாதிபதி தேர்தல் என்பது முழுநாடும்  ஒரே தொகுதியாக மாறும் நிலை இதில்தான் உள்ளது.  அதனால்தான் நாங்கள் அதனை ஆதரிக்கின்றோம்.  

கேள்வி : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நகர்வு எவ்வாறு அமையப்போகிறது? 

பதில்: பார்ப்போம்.  சந்திரிகா குமாரதுங்க முன்னாள் ஜனாதிபதி.  கடந்த காலங்களில் ஜனநாயக பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் காலததில் கொண்டுவரப்பட்ட  பொதி  பிரபலமானது. அதேநேரம் அவர் சமாதானத்துக்கான யுத்தம் என்ற யுத்தத்தையும் நடத்தினார்.  அது பிழையான வழி காட்டலை தந்துவிட்டது. அவற்றையெல்லாம் மீறி அவர் இன்று இனவாதமற்ற ரணிலைப்போன்ற ஒரு தலைவராக இருக்கின்றார். இருந்தாலும்  அவர் நேரடி அரசியலில் இல்லை.  அவர் என்ன செய்தாலும்  அது பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 

கேள்வி :   இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதே? 

பதில்: இது எதிர்பார்த்ததுதான். இது ஜனாதிபதி தேர்தல். பாராளுமன்ற தேர்தல் அல்ல.  35 பேர்  போட்டியிடுவதாக ஒரு பட்டியல் உள்ளது. எனினும் அது சுருங்கி இறுதி சுற்றில் இருவர் இருப்பார்கள். 

கேள்வி : இ.தொ.கா. சஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்  அவர்களை வராவிடாமல் உங்கள் தரப்பு தடுத்ததாகவும் கூறப்படுகின்றதே? 

பதில்: அப்பட்டமான பொய். நான்தான் கூட்டணியின் தலைவர். எனது முகநூலில் அதிகாரபூர்வமாக இ.தொ.கா. இணையவேண்டும் என்று கூறியிருந்தேன். இ.தொ.கா.  வரக்கூடாது என நிபந்தனை விதிக்கவேயில்லை. பிசாசுடனாவது கூட்டணிவைத்து வெற்றிபெறவேண்டும் என்பது எமது நோக்கமாகும். ஜனாதிபதி தேர்தல் என்பது ஒரு பெரிய சித்திரமாகும். எனவே  தேசத்தின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.    இதில் எமக்கு முதிர்ச்சி உள்ளது. ஆனால் கடந்த காலங்களில் அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டுள்ளார்கள். எனது வாழ்க்கையை பாருங்கள். நான் கடந்த பொதுத் தேர்தலில்  70000  வாக்குகளை கொழும்பில் பெற்றேன். கொழும்பில் ஒரு தமிழ் எம்.பி. பெற்ற கூடிய வாக்குகள் இதுதான். ஆனால் என் ஆரம்பம் எவ்வாறு இருந்தது? 1999 ஆம் ஆண்டு மாகாண சபை 3000 வாக்குகளை பெற்றேன். பின்னர் 2001 ஆம்  ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுடன் கூட்டணியமைத்து கொழும்பில் போட்டியிட தீர்மானித்தேன். ஆனால் அந்த நேரம் இ.தொ.கா.வின் எம்.பி. க்களான யோகராஜன் மற்றும் செல்லாச்சாமி ஆகியோர் மனோ கணேசனை உள்வாங்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தனர்.  என்னை உள்வாங்கினால் நுவரெலியாவில்  ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடமாட்டோம் என்று கூறினார்கள். பட்டியல் முடிந்துவிட்டது. வேட்பு மனு தாக்கல் செய்யும் தினம் காலை என்னை ஐ.தே.க.வின் அப்போதைய செயலர் காமினி அத்துகோரள அழைத்து வேட்பு மனுவில் கைச்சாத்திட சொன்னார். ஏற்கனவே இருந்த பேரை அழித்து எனது பெயரை எழுதினார். அந்தத் தேர்தலில் நான் வெற்றிபெற்றேன். காரணம் அனைத்து பெயர்களும் எழுதப்பட்டால்தான் தாங்கள் கைச்சாத்திடுவோம் என  அவர்கள் இருவரும் நிபந்தனை விதித்திருந்தனர். இதுதான் வரலாறு . ஆனால் நாங்கள் அப்படியல்ல. 

கேள்வி : 1000  ரூபா சம்பள அதிகரிப்பு பிரச்சினை உள்ளது. அதனை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. உங்கள் தரப்பு வேட்பாளர்  1500 ரூபா தருவதாக கூறியுள்ளாரே? இது சாத்தியமா? 

பதில்: சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக வரப்போகின்றார். எனவே தனது  எண்ணப்பாட்டை வெ ளிப்படுத்தியுள்ளார். 2000 ரூபா தந்தாலும் பரவாயில்லை.  ஆனால் என்னை பொறுத்தவரையில் 1000 மற்றும்  1500 என்ற விடயத்தைவிட அதிகமாக கருதும் விடயம் உள்ளது. இது தொடரபில் நாங்கள் சஜித்துடன் ஒரு புரிதலுக்கு வந்துள்ளோம். 

தோட்டத்துறை மறுசீரமைக்கப்பட்டு வௌிக்கள உற்பத்தி என்ற முறையில் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட காணி ஏக்கர்கள் குத்தகைக்கு வழங்கவேண்டும். அந்த முறையில் சென்றால் .தொழிலாளர்கள் சிறுதோட்ட குத்தகைகாரர்களாக மாறுவார்கள். அத்துடன்ங கால்நடை வளர்ப்பு  சந்ஙதர்ப்பம் கிகை்கின்றது. இதன்மூலம்மாக தோட்டத் தொழிலாளி கிராமவாசியாக மாறுகிறார். 

அத்துடன் தொழிலாளர்களுக்காக விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்குவதாகவும்  சஜித் எங்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். இவையே  முக்கியமாகும். இவையே நிரந்தர தீர்வாகும். தொழிலாளர்களாக மக்களை குட்டி முதலாளியாக்குவேன் என்று சஜித்  எனது மேடையில் கூறினார். அவர் சொன்னது எனது தொலைசேயில் உள்ளது. 

கேள்வி: 50 ரூபா விவகாரம் என்ன நடந்தது? 

பதில்: அதில் ஒரு சிக்கல் ஒன்று இருந்தது.தோட்டத் தொழிலாளர்கள் அரச ஊழியர்கள் அல்ல. தனியார் ஊழியர்கள். 140000 பேர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு வரவு செலவுத்திட்டம் மூலம் நிதி ஒதுக்க முடியாது. அவ்வாறு செய்தால் அரச அதிகாரிகள் சிக்கலுக்குள்ளாவார்கள். அதுவே காரணம். நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுதான் சிக்கலாக இருந்தது. 

கேள்வி : 50 ரூபாவை புதிய  அரசில் வழங்குவீர்களா? 

பதில்: நிச்சயமாக செய்வோம். வேறு பல திட்டங்களும் உள்ளன. ஜனாதிபதி  செயலணியும் விரைந்து செயற்படும். 

கேள்வி : 1000 ரூபாவும் பெற்றுக்கொடுக்கப்படுமா?

பதில்: முடியும் என்று நம்புகின்றேன். 

கேள்வி : உறுதியளிக்க முடியாதா? 

பதில்: அத்தகைய அரசியலுக்குள் விழ நான் விரும்பவில்லை. அதனைவிட நான் நீண்டகால நியாயமான தீர்வை பெறவே அக்கறைகொண்டுள்ளேன். 

கேள்வி : எதிர்த்தரப்பின் நான்குமுனை  தநதிரம் என்று நீங்கள் பேசியிருந்தீர்கள். அது குறித்து? 

பதில்: எதிரணி தந்திரமாக சில திட்டங்களை முன்னெடுக்கின்றனர். தமிழ் முஸ்லிம மக்களில் பெரும்பாலானோர் தமக்கு வாக்களிக்கப்போவதில்லை என்பது அவர்களுககு தெரியும்.  ஆகவே நான்குமுனை திட்டம் ஒன்றை  அவர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். இந்த திட்டத்தை அயல்நாட்டிலிருந்து வந்துள்ள தேர்தல் உத்திகளை கையாளக்கூடிய ஒரு விளம்பர நிறுவனம் செய்கிறது. எங்களுக்கு எல்லாம் தெரியும். மேலதிக விபரங்களை  தேர்தலுக்கு பின்னர் சொல்வோம். வடக்கு கிழக்கு மலையகத்துக்குள்ளே ஊடுருவி சென்று தங்கள் அரசியல்வாதிகளை அனுப்ப சிறு சிறு குழுக்களை தேடிப்பிடித்து தங்களுக்கு ஆதரவை பெறுவது முதலாவது தந்திரமாகும்.   தமிழ்  முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கு  சொல்வது இரண்டாவது தந்திரமாகவுள்ளது. சஜித் அற்ற ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க சொல்வது மூன்றாவது திட்டமாகும். நான்காவது தேர்தலை பகிஷ்கரிக்கவேண்டும் என்று பிரசாரம் செய்கின்றனர். இதுவே அவர்களின் நான்குமுனை தந்திர திட்டமாக உள்ளனர். சமூக ஊடங்களில் பரிச்சியமானவர்களை  கண்டுபிடித்து  இதற்கு பயன்படுத்துகின்றனர்.  

நேர்காணல் – ரொபட் அன்டனி

 

https://www.virakesari.lk/article/68030

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.