Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா யுத்தம்: தலைமையின்றி தடுமாறும் தமிழக அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா யுத்தம்: தலைமையின்றி தடுமாறும் தமிழக அரசு!

17.jpg

 

ராஜன் குறை 

உலகையே அச்சுறுத்தி நிலைகுலைய வைத்திருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலின்போது துரதிர்ஷ்டவசமாக தமிழகம் தலைமைப்பண்பற்ற பலவீனமான மனிதரால் ஆளப்படுவது பெரும் வருத்தத்திற்குரியது, விபரீதமானது. கடந்த சில தினங்களாக தமிழக அரசின் அறிக்கைகளும், நடவடிக்கைகளும் எந்த வித தெளிவும், தொலைநோக்கும் தலைமைப்பண்புமற்ற தடுமாற்றங்களையே காட்டுகின்றது. பிரச்சினைகளை சற்றே விரிவாகக் காண்போம். அதற்குமுன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சில அடிப்படைத் தகவல்களை நாம் கவனிக்க வேண்டும்.

16b.jpg

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தமிழக அரசியல் எந்த வித தலைமைப் பண்புமின்றி, அதற்கான ஒரு ஆற்றலோ அல்லது அருகதையோ இருப்பது குறித்த எந்த தடயமும் இன்றி முதலமைச்சர் ஆனவர் ஒருவர் உண்டென்றால் அது எடப்பாடி பழனிசாமி மட்டுமே. அதற்கு முன்னாள் குறுகிய காலம் பதவி வகித்த ஜானகி ராமச்சந்திரனை வேண்டுமென்றால் மற்றொரு முன்னுதாரணமாகக் கூறலாம். ராஜாஜி, காமராஜ், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய அனைவரும் கட்சி அரசியலில் ஈடுபட்டு, மக்கள் திரள்களை தங்கள் ஆளுமையால் கவர்ந்து அவர்கள் ஆதரவைப் பெற்று முதல்வர் பதவி ஏற்றவர்கள். ஓ.பன்னீர்செல்வம் கூட நிதியமைச்சராக இருந்து ஜெயலலிதாவிற்கு பினாமியாக மட்டும் முதல்வரானவர்.

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலா பினாமியாக பதவியேற்றவர். பின்னர் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலால் அந்த சசிகலாவிற்கே துரோகம் செய்தவர். முதல்வராவதற்கு முன்னாள் இப்படி ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பதே தெரியாத அளவு நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை அமைச்சராக ஆறாண்டுகள் பணியாற்றியுள்ளார். 1989 ஆம் ஆண்டு முதன்முதலாக ஜெயலலிதா அணியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்.

 

எதற்காக அவருடைய வரலாற்றையும், அவர் முதல்வரான விதத்தையும் நினைவு கூறவேண்டியுள்ளது என்றால், இந்த பேராபத்து சூழ்ந்த காலத்தில் தமிழக அரசு எவ்வித தெளிவுமில்லாமல் தடுமாறுவதை புரிந்துகொள்ளத்தான். அரசியலில் பக்குவப்படாத, தலைமைப்பண்பற்ற மனிதர்கள் முதலமைச்சராக பதவி வகிப்பது ஆபத்தானது அவரால் எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்க முடியவில்லை. சில முக்கிய உதாரணங்களைப் பார்ப்போம்.

பள்ளி, கல்லூரி விடுமுறை எதற்காக?

16d.jpg

கொரோனா தொற்று இந்தியாவில் பரவத்தொடங்கியவுடன் மார்ச் 10, 11 தேதிகளிலிருந்தே பலவிதமான எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கின. கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் சர்வதேச கருத்தரங்கங்கள் போன்றவற்றை ரத்து செய்தார்கள். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இதன் தாக்கம் கடுமையாகத் தொடங்கியவுடன் இந்தியாவிலும் அந்த நாடுகளிலிருந்து வந்தவர்கள், அங்கே சென்று வந்தவர்கள் தொற்றுடன் வந்திருக்கும் சாத்தியம் புலப்படத் தொடங்கியது. உடனே பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விடப்பட்டது. பொதுவாகவே எந்த ஒரு பதட்டமான சூழலிலும் சிறுவர்கள், இளைஞர்கள் பாதுகாப்பு கருதி முதலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். சமூக இயக்கத்தின் முக்கிய கேந்திரங்கள் அவை. பாதுகாக்கப் பட வேண்டியவை.

இங்கேயே எடப்பாடி அரசு தன் தடுமாற்றத்தை தொடங்கியது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டும் என்று கூறியது. இந்த நோயின் தன்மை என்ன, எதற்காக விடுமுறை என்பதைக் குறித்து எந்த புரிதலும் இல்லாததால்தான் ஒரு நிலபிரபுத்துவ மனப்பான்மையில் வகுப்புகள் இல்லாவிட்டாலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வரவேண்டும் எனக் கூறியது. மாணவர்களுக்கு வரக்கூடிய தொற்று ஆசிரியர்களுக்கு வராதா என்ன?

 

அதிலும் குறிப்பாக கல்லூரி ஆசிரியர்கள் பலரும் அவர்களே வெளிநாடுகளுக்கு சென்று வந்ததற்கோ அல்லது சென்று வந்தவர்களை சந்திப்பதற்கோ அதிக வாய்ப்புகள் உள்ளவர்கள். நானறிந்த தமிழக கல்லூரி ஒன்றில் இருபது பேராசிரியர்கள் உள்ள துறையில் எட்டு பேர் வெளிநாடு சென்று வந்தவர்களை கடந்த பத்து தினங்களில் சந்தித்துள்ளார்கள். இவர்களில் யாருக்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும் அந்த இருபது பேருக்கும் அவர்கள் மூலம் மேலும் பலருக்கும் பரவ ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் சென்ற ஒருவாரம் கல்லூரிக்கு வந்ததால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. ஆபத்து மட்டும்தான்.

 

அதே போல வகுப்புகள் இல்லாமல் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்குச் செல்வதால் என்ன பயன் என்பதிலும் தெளிவில்லை. இவர்கள் பலரும் பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துபவர்கள். தேவையில்லாமல் இவர்களை தொற்றுக்கு ஆட்படுத்தியும், இவர்கள் மூலம் தொற்று பரவவும் வழிவகை செய்தது தமிழக அரசு.

அத்தியாவசிய தேவைகள் என்ன?

அத்தியாவசிய தேவைகள் என்பவை என்ன? அவற்றை மக்கள் பெறுவதற்காக இயங்க வேண்டிய வசதிகள் என்ன என்பதைக் குறித்த எந்த விரிவான புரிதலையும் தமிழக அரசு கொண்டிருக்கவில்லை என்பதே கடந்த வார நடவடிக்கைகளை பார்க்கும்போது புரிகிறது. ஒன்று தமிழகத்தில் தொற்றே இல்லை என்று முடிவு செய்ய வேண்டும். அல்லது தொற்று தோன்றுகிறது, பரவுகிறது என்றால் அதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதில் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். தமிழகம் தாறுமாறாக தான்தோற்றித்தனமான முடிவுகளையே எடுக்கிறது. கிராமப்புற சந்தைகளை மூடுகிறது; நகர்ப்புற அங்காடிகளை அனுமதிக்கிறது.

16c.jpg

டாஸ்மாக் வருவாயை தன் இருப்பிற்காக சார்ந்துள்ள அரசு, மதுபானக் கடைகளை மூடுவதற்கு தயாராக இல்லை. தொற்று பரவத் தொடங்கினால் மதுபானக் கடைகள் மிகப்பெரிய தொற்று மையங்களாக மாறும் என்பது வெளிப்படையானது. அதைவிட பெரிய பிரச்சினை, அன்றாடக் கூலியை நம்பி வாழ்பவர்கள் வருமானம் பாதிக்கப்பட்ட நிலையில் பழக்கத்தின் காரணமாக தொடர்ந்து குடிப்பது அவர்கள் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும் என்பதை ஒரு அரசு உணர வேண்டும்.

மக்கள் செய்யும் தொழில்கள் என்ன, எவையெல்லாம் தேக்கமடையும், அதனால் அவர்கள் எவ்வகையான பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்பதையெல்லாம் குறித்து எந்த தீவிர ஆலோசனையும் தமிழக அரசு செய்வதாகத் தெரியவில்லை.

அண்டை மாநிலங்களில் நடப்பது என்ன? 

கேரளாவில் பினராயி விஜயன் மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டியாக நடவடிக்கை எடுத்துள்ளார். வருவாய் இழப்பை ஈடுசெய்ய, பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய இருபதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதி கூட கிடையாது கேரளா. ஆனால் பினராயி விஜயனால் துணிச்சலாக முடிவெடுக்க முடிகிறது. பள்ளி விடுமுறையானதால் மதிய உணவை வீட்டிற்கே கொண்டு தர முடிவு செயதுள்ளது கேரளா.

ஆந்திராவின் இளம் முதலமைச்சர் ஜெகன்மோகன் கூட வருவாய் இழப்பை ஈடு செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பினராயி விஜயனும், ஜெகன்மோகனும் தலைமைப்பண்புடனும், ஆட்சியாளர்கள் போலவும் பேசுகிறார்கள். ஆனால் எடப்பாடி பிரதமர் மோடியின் வாயையே பார்த்துக்கொண்டுள்ளார். அவர் எதையெல்லாம் அறிவிக்கிறாரோ அதைமட்டும் காப்பியடித்தால் போதும் என அடிமை மனப்பான்மையில் செயல்படுகிறார்.

இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவா?

பொதுவாக இரவு நேரத்தில் ஊர் அடங்கித்தான் இருக்கும். ஏனெனில் மனிதர்கள் இரவில் உறங்குவதையும், பகலில் பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதையும் பழக்கமாக வைத்துள்ளார்கள். கொரோனாவை எதிர்கொள்ள பொதுவாக அனைத்து தொழில்களையும், பொருளாதார நடவடிக்கைகளையும் நிறுத்துவதா என்ற குழப்பத்தில் பிரதமர் மோடி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு உத்தரவை பதினான்கு மணி நேரத்திற்கு அறிவித்தார். அதாவது காலை ஏழு முதல் இரவு ஒன்பது மணி வரை மக்களாக எங்கும் வெளியில் செல்லாமல் ஊரடங்கை கடைபிடிக்கும்படி கூறினார். ஒரு நாள் இதைச் செய்வதால் கொரோனா பரவலை தடுக்க முடியாது என்றாலும், ஒரு மன ரீதியான தயாரிப்பு நடவடிக்கையாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்றே பலரும் கருதினர். இதைத் தொடர்ந்து பல பகுதிகளில் மார்ச் 31 வரை முழு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் 31 ஆம் தேதிவரை ஊரடங்கை அறிவித்துள்ளார்.

எடப்பாடி அரசு ஒரு விநோதமான காரியத்தை செய்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கை நீட்டித்து ஞாயிறு இரவு ஒன்பது மணிமுதல் திங்கள் காலை ஐந்து மணி வரை ஊரடங்கை அறிவித்துள்ளார். இதன் பொருள் என்ன என்று எவ்வளவு யோசித்தாலும் புரியவில்லை. இரவு நேரத்தில் மக்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள்? ஏன் ஊரடங்கு? அதுவும் ஏன் ஓர் இரவு மட்டும்?

பதினொரு, பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சைகள்

இப்படி திங்கள் காலை ஐந்து மணி வரை ஊரடங்கை நீடித்த அரசு, திங்கள் காலை பதினொரு, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும் என்று கூறியுள்ளது. இது போன்ற ஒரு பொறுப்பற்ற, அறிவீனமான செயல்பாடு எதுவும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. உண்மையாக பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்டு செயல்படும் அரசு எப்படி பொதுத்தேர்வுகளை இத்தகைய சூழ்நிலையில் நடத்த முடியும் என புரியவில்லை. ஏன் ஏப்ரல் மாதமோ, மே மாதமோ தேர்வை நடத்த முடியாதா? என்ன குடி முழுகிப் போய்விடும்?

அது மட்டுமல்லாமல் அனைத்து மாநில தலைமைச்செயலர்களும் கூடி ஆலோசித்து பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அறிவிக்க முடிவு செய்துள்ளார்கள். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால் அரசு சென்னையில் ஐம்பது சதவீத பேருந்துகள் இயங்கும் என்று கூறுகிறது. பொதுத்தேர்வுகளை நடத்துகிறது.

 

கோழியின் தலையை துண்டித்த பிறகு அதன் உடல் விலுக், விலுக்கென்று துள்ளித் திரியும். இதன் காரணமாக ஆங்கிலத்தில் சரியான தலைமையின்றி, ஒருங்கிணைப்பின்றி, தாறுமாறாக செயல்படுவதை “ஹெட்லெஸ் சிக்கன்” அதாவது “தலையற்ற கோழி” போல சுற்றி வருவதாகக் கூறுவார்கள். தமிழக அரசு அப்படித்தான் செயல்படுகிறது.

 

 

https://minnambalam.com/public/2020/03/23/17/Corona-war-TamilNadu-government-to-stumble-without-leadership

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.