Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்வான் மோதல் - இலங்கைக்கு ஆபத்தா?

Featured Replies

-ஹரிகரன்

இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்திருக்கின்ற கைகலப்புச் சண்டைகள், இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் ஒரு நிகழ்வு தான். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவுகளைப் பேண முனையும் இலங்கையைப் பொறுத்தவரை, இது சங்கடமான சூழலை தோற்றுவித்திருக்கிறது.

இந்திய  சீன நாடுகளுக்கிடையில், போர் வெடித்தால் அது இலங்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. முதலில் இந்திய- சீன எல்லையில். என்ன நடந்தது என்று பார்த்து விட்டு, அந்தச் சம்பவம் இலங்கையில் விளைவுகளை ஏற்படுத்துமா என்று பார்ப்பதே பொருத்தம்.

இந்திய  சீன எல்லையில், கிழக்கு லடாக் பிரதேசத்தில், உள்ளது கல்வான் பள்ளத்தாக்கு. இமயமலையில், கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது இந்தப் பகுதி. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்ஷய் சின் பகுதியில் இருந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக் நோக்கி ஓடுகிறது 80 கி.மீ நீளமுள்ள கல்வான் நதி. அதற்கு இரண்டு நாடுகளும் உரிமை கோருவதால் தான் பிரச்சினை.

"கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு ...
கடந்த செவ்வாய்க்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில், நடந்த மோதல்களில், கேணல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்திருக்கிறது.

அதுபோல, சீனாவின் தரப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று, சீன அரசு ஊடகமான குளோபல் ரைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால், சீனத் தரப்பில் 43 பேர் வரை கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

45 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய- சீனப் படைகள் நடத்திய சண்டை ஒன்றில், ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு இதுவாகும்.

அண்மைக்காலமாக இந்திய - சீனா எல்லையில் நிலவி வந்த முறுகல் நிலையின் உச்சமாகவே இந்த மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது துப்பாக்கிகளைக் கொண்டு நடந்த மோதல்கள் இல்லை என்பது தான் முக்கியமான விடயம்.

கல்வான் பள்ளத்தாக்கில், இரண்டு தரப்பு படைகளும் ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு தடை உள்ளது. ஆயுதங்கள் இன்றி சீன காவலரணுக்கு அருகே சென்ற இந்திய இராணுவத்தின் 16 ஆவது பிகார் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த படையினரே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
கற்களாலும், முட்கம்பிகள், இரும்பு ஆணிகளால் சுற்றப்பட்ட கட்டைகளாலும் இந்தியப் படையினரைத் தாக்கியிருக்கின்றனர் சீனப் படையினர். இந்தியப் படையினரும் அதுபோலவே தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். கைகலப்பு சண்டையாகவே இது நடந்திருக்கிறது.

"ஆணியடிக்கப்பட்ட இரும்புக் ..."

இந்தச் சண்டையை இந்திய இராணுவத்தினர் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சீனப் படையினரின் திட்டமிட்ட தாக்குதலில் இருந்து தப்பிக்க கல்வான் ஆற்றில் குதித்திருக்கின்றனர். அப்போது லடாக் பூச்சியத்தை விட குறைவான- உறைநிலை வெப்பத்தில் இருந்தது. இதனால் காயமடைந்த இந்தியப் படையினரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தியா தமது பக்க இழப்புக்களை ஒப்புக் கொண்டிருப்பினும், சண்டை பற்றிய முழு விபரங்களையும் இன்னமும் வெளியிடவில்லை. சீனா சண்டை பற்றிய முழு விபரங்களை மாத்திரமன்றி, அதில் ஏற்பட்ட இழப்புகளையும் கூட வெளிப்படுத்தவில்லை.

இது இரண்டு நாடுகளும் பல விடயங்களை மறைப்பதற்கு முனைகின்றன, என்பதை எடுத்துக் காட்டுகிறது. சில விடயங்கள் வெளியே வருவதை இரண்டு நாடுகளும் விரும்பவில்லை. அந்த விடயத்தில் இரண்டு நாடுகளும் ஒருமித்த கருத்தில் இருக்கின்றன.

பழங்காலப் போர்களில் வாள்கள், ஈட்டிகள், வில், அம்பு, கதாயுதம் போன்றவற்றைக் கொண்டு போரிடுகின்ற முறை இருந்தது. அத்துடன், மல்யுத்தம் செய்யும் வழக்கமும் இருந்தது. தற்கால போர்ப் பயிற்சிகளில் மல்யுத்தம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளும் கூட, கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

ஆயுதங்கள் தீர்ந்து போனால், ஆயுதங்களில்லாமல் வேவு பார்க்கச் செல்வது போன்ற சந்தர்ப்பங்களில், எதிரிகளுடன் சண்டையிடுவதற்கு இத்தகைய தற்காப்பு கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அவ்வாறான ஒரு சண்டையைத் தான் இந்திய- சீன நாடுகளின் இராணுவங்கள் நடத்தியிருக்கின்றன.

இந்த மோதல்களை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில், விரிசல்கள் ஏற்படும் ஆபத்தும் தோன்றியிருக்கிறது.
இதுவே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போராக வெடிக்கப் போகிறது என்ற அச்சமூட்டும் கருத்துக்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவும் சீனாவும், மிகவும் சக்திவாய்ந்த போர்த்தளபாடங்களைக் கொண்டுள்ள நாடுகள்.

நவீன குறுந்தூர துப்பாக்கிகள் தொடக்கம், நெருந்தூர ஏவுகணைகள் வரை பயன்படுத்தி சண்டையிடக் கூடிய வல்லமை பெற்ற நாடுகளாக இருக்கின்றன. தேவைப்பட்டால் அணுவாயுதங்களைக் கூடப் பயன்படுத்தக் கூடிய நிலையில் தான், இந்த நாடுகள் இருக்கின்றன.

ஆனாலும், இரண்டு நாட்டுப் படைகளும் எந்த நவீன ஆயுதங்களையும் பயன்படுத்தாமல், சண்டையிட்டிருக்கின்றன. ஆதி மனிதன் போரிட்டதைப் போலத் தான், இரண்டு நாடுகளின் படைகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.

இரு தரப்புகளுக்கும் இடையில் பதற்ற நிலை மோசமாக இருந்தாலும், துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையை மீறவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

திட்டமிட்ட தாக்குதலாகவே இது நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் தான், முள்ளுக்கம்பிகள் சுற்றப்பட்ட பொல்லுகளை சீனப் படையினர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

திட்டமிட்ட ஒரு தாக்குதலில் கூட, துப்பாக்கிகளைப் பயன்படுத்த அவர்கள் எத்தனிக்கவில்லை. அதேவேளை இந்த மோசமான தாக்குதலுக்குப் பின்னர், இந்தியப் படைகளும் கூட, துப்பாக்கிகளால் சுட்டுக் கொள்ள முற்படவில்லை. இது தான், இங்கு முக்கியமான விடயம்.

இந்தியாவும், சீனாவும் அடிக்கடி முட்டிக் கொள்வது போல காட்டிக் கொண்டாலும், இரண்டு நாடுகளுமே ஒன்றுடன் ஒன்று போரிடத் தயாராக இல்லை.

"இந்தியா - சீனா - பலம் யாருக்கு? -
சீனாவுடன் போரிட்டால், இந்தியா கடுமையான பின்னடைவுகளைச் சந்திக்கும். ஏனென்றால் சீனாவிடம் உள்ள படை வலிமை அதிகம். சீனா அதி நவீன ஆயுத தளபாடங்களையும் அதிகளவில் கொண்டிருக்கிறது,

இதனால், சீனாவுடன் முழு அளவிலான போர் ஒன்றில் இறங்குவதை இந்தியா எப்போதும் விரும்புவதில்லை. 1962 போரில் கூட இந்தியா படுதோல்வியைத் தான் சந்தித்தது. மீண்டும் ஒரு தோல்வியை எதிர்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக இல்லை.

அதேவேளை, சீனாவுக்கும் அதே பிரச்சினை தான் இருக்கிறது. இந்தியாவுடன் போரில் இறங்கினால், சீனா தனது கனவுகள் பலவற்றைத் தொலைக்க வேண்டியிருக்கும். இப்போதைய நிலையில், உலகின் முதல் நிலை வல்லரசாக வேண்டும் என்பதே சீனாவின் எதிர்பார்ப்பு.

பொருளாதார ரீதியாகவும், படைபல ரீதியாகவும் அந்த நிலையை எட்ட வேண்டும் என்று விரும்புகிறது சீனா. உலகம் முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்காக, சீனா பல்வேறு உத்திகளைக் கொண்டு தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருகிறது.

இப்போது கொரோனா வைரசினால் பொருளாதார ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் சீனா பெரும் பின்னடைவைச சந்தித்திருக்கிறது. இவ்வாறான நிலையில், இந்தியாவுடன் முழு அளவிலான போர் ஒன்றில் சீனா இறங்கினால் அது பெரும் அழிவுகளை ஏற்படுத்தும். இந்தியாவிடமும் நவீன ஆயுதங்கள், இருக்கின்றன. எனவே போர் என்பது மிக தீவிரமானதாகவே இருக்கும்.

இராணுவ ரீதியாக இந்தியா வெற்றி பெற முடியாது போனாலும், சீனாவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர பலத்தை இந்தியாவினால் சிதைக்க முடியும். இது உலக வல்லாதிக்க சக்தியாக மாறுகின்ற சீனாவின் கனவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

எனவே இந்திய சீன எல்லையில் வெடித்திருக்கின்ற சண்டைகளை பெரும் போராக மாறும் என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது. அவ்வாறான ஒரு போர் வெடித்தால் கூட அது நீண்ட நாட்களுக்குத் தொடராது,

இவ்வாறான ஒரு களச் சூழலில், இந்தியாவுடனும், சீனாவுடனும் நெருங்கிய உறவை பேண முனையும் இலங்கைக்கு இந்த மோதல்கள் சோதனையாகவே இருக்கும்.

ஏனென்றால், எந்தப் பக்கமும் நியாயம் கூற முடியாது. யாருக்காகவும் வாய் திறக்கவும் முடியாது. அவ்வாறு திறந்தால் மறுதரப்பின் உதவிகள் ஒத்துழைப்புகளை இழக்க நேரிடும். எனவே இலங்கை இப்போதைய நிலையில் யாருக்காகவும் பரிந்து பேசாமல் இருக்கவே முனையும்.
அதேவேளை, இரண்டு நாடுகளும் மோதிக் கொள்ளும் என்றும், அது இலங்கைத் தீவையும் பிளவுபடுத்தும் என்றும் பகல் கனவு காண்பவர்களும் இருக்கிறார்கள்.

இப்போதைய நிலையில், இந்தியாவோ சீனாவோ ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள தயாரில்லை. அந்த நிலை நீடிக்கும் வரை, இவ்வாறான ஒரு நிலை இலங்கைக்கு ஏற்படாது.

ஆனால், பொருளாதார வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படுவது, இலங்கைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

https://www.virakesari.lk/article/84341

  • தொடங்கியவர்
10 minutes ago, ampanai said:

அதேவேளை, இரண்டு நாடுகளும் மோதிக் கொள்ளும் என்றும், அது இலங்கைத் தீவையும் பிளவுபடுத்தும் என்றும் பகல் கனவு காண்பவர்களும் இருக்கிறார்கள்.

ஐயா கலாம் அவர்கள் கனவு காண் என்றார், இங்கே இது அறிவியல் சம்பந்தம் இல்லாதது என்றாலும், இந்த கனவை காணும் மக்களில் நானும் ஒருவன். 

பல பலம் கொண்ட  நாடுகள் கூட சிதறுண்டன, உதாரணம் சோவியத்யூனியன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.