Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணுறை முதல் டயர் வரை: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுறை முதல் டயர் வரை: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு

21 ஜூலை 2020, 10:09 GMT

 

ஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தியின் குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு

Getty Images

கடன்கள் மற்றும் தொடர் தோல்விகளின் மேகம் சூழ்ந்த அமெரிக்காவின் கண்ணோட்டத்திலேயே ரப்பரின் வரலாறு பார்க்கப்படுகிறது. காரணம், ரப்பரை கடினப்படுத்தும் செயல்முறையை அந்நாடுதான் கண்டுபிடித்தது.

சார்ல்ஸ் குட் இயர் என்ற ஓர் அறிவியலாளரின் இந்தக் கண்டுபிடிப்பால்தான் பின்னர், வாகனங்கள், விமானம் மற்றும் பிற இயந்திரங்களுக்கும் டயர் பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது.

சார்ல்ஸின் குடும்பப் பெயரான குட் இயர் உலகப் புகழ் அடையக் காரணம், பன்னாட்டு நிறுவனமான 'த குட் இயர் டயர் அண்ட் ரப்பர் கம்பெனி'( The goodyear tyre and rubber company) ஆகும்.

குட் இயருக்கு முன்னர் ரப்பர் என்ற பொருள் பற்றி உலகில் அறியப்படவில்லை என்றும் கூறமுடியாது. தென்னமெரிக்காவின் பூர்வ குடிகள் முன்னரே இது குறித்து அறிந்திருந்தனர்.

ஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தியின் குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு

Getty Images

1490ஆம் ஆண்டுகளில் இந்தப் பூர்வ குடிகள் மரத்திலிருந்து ஒரு வகை மெழுகை உருவாக்கினார்கள். மரங்களில் கீறுவதால் ஒரு வகை பால் வெளிவர, அதைக் கொண்டு மெழுகு தயாரிக்கப்பட்டது.

இந்தப் பால் கெட்டியான ஒரு பசையாக இருந்தது. அந்த மரத்தின் பெயர், ஹெவியா ப்ராசிலியென்சிஸ். இதற்கு ரப்பர் என்ற பெயர் வந்ததற்கும் ஒரு கதை உண்டு.

அமேசான் காட்டுப் பகுதிக்கு வந்த பிரெஞ்சுக்காரர்கள், பூர்வ குடிகள் இம்மரத்தை "காவுசோவுக்" (கண்ணீர் சிந்தும் மரம்) என்று அழைப்பதைக் கண்டார்கள். 

ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ரப்பர், உலகத்தால் அதிக அதிகமாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது.

ஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தியின் குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு

Getty Images

"50 things that made the modern economy" (நவீன பொருளாதார வளர்ச்சிக்கு உதவிய 50 பொருட்கள்) என்ற ஒரு தொடரை பிபிசி செய்தியாளர் டிம் ஹர்ஃபோர்ட் தயாரித்தார். அதில், பொருளாதார வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்திய பல கண்டுபிடிப்புகள் பற்றிப் பட்டியலிடப்பட்டிருந்தது.

 

 

சார்ல்ஸ் குட் இயரின் கண்டுபிடிப்பு

 

1820-களில் ரப்பர் குறித்த உலகின் ஆர்வம் வேகமாக அதிகரித்தது. பிரேசில் தொடங்கி ஐரோப்பா வரை இதன் தயாரிப்புகள் பெருமளவில் புழக்கத்திற்கு வந்தன.

ஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தியின் குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு

Getty Images

காலணிகள், தொப்பிகள், கோட்டுகள், லைஃப் ஜாக்கெட்டுகள் ஆகியவை ரப்பரிலிருந்து தயாரிக்கப்பட்டன. இந்த லைஃப் ஜாக்கெட்டுகளில் காற்று நிரப்பப் பயன்படும் இன்ஃப்ளேட்டர் ட்யூப் கண்டுபிடிக்கும் முதல் முயற்சியில் சார்ல்ஸ் குட் இயர் தோல்வியடைந்தார். 

ஆனால் இந்த இன்ஃப்ளேட்டர் ட்யூப்கள் குளிர்காலங்களில் மிகவும் கடினத்தன்மையும் கோடைக் காலங்களில் நெகிழ்வுத் தன்மையும் கொண்டிருந்தன.

"கோடை வெப்பத்தில் தன்னுடைய கண்டுபிடிப்பு உருகுவதையும் அதிலிருந்து துர்நாற்றம் வருவதையும் குட் இயர் கண்டார்", என்கிறார் டிம் ஹர்ஃபோர்ட்.

ஆனால், இந்தத் தோல்வியையும் ஒரு நல்வாய்ப்பாகவே குட் இயர் கருதினார். அடுத்த ஐந்தாண்டுகளை அவர், ரப்பரைக் கடினமாக்கும் செயல்முறையைக் கண்டுபிடிப்பதில் செலவிட்டார்.

அவருக்கு வேதியியல் பொறியியல் குறித்த நிபுணத்துவம் இல்லாதது ஒரு குறையாக இருந்தது. இதனால் கடன் அதிகமாகி, பல முறை சிறை செல்லவும் நேரிட்டது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

இறுதியாக, 1839ஆம் ஆண்டு, சார்ல்ஸ் குட் இயர், ரப்பரைக் கடினமாக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.

ரப்பர், சல்ஃபர் மற்றும் நெருப்பைக் கொண்டு அவர் கண்டுபிடித்த அந்தப் புதிய முறை, நவீன உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இன்னொரு கண்டுபிடிப்புக்கான முயற்சியும் அப்போது நடந்து கொண்டிருந்தது. 1880களின் இறுதியில், ஸ்காட்லாந்து அறிவியலாளர் ஜான் பாயட் டன்லப் முயற்சியால் அதுவும் நிறைவேறியது. அந்தப் புதிய கண்டுபிடிப்புதான் டயர்.

 

ரப்பர் இன்றியமையாததானது

 

சைக்கிள், கார் டயர் தயாரிப்பு தவிர, தொழிற்சாலைகளில் தானியங்கி தொழில்நுட்பத்துக்கான பட்டைகள் உற்பத்தியில் ரப்பர் பயன்பாட்டுக்கு வந்தது.

ஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தியின் குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு

Getty Images

இது மின்சாரம் கடத்தும் தன்மை அற்றதானதால், மின் கம்பிகளின் வெளிப்புறம் பயன்படுத்தப்பட்டது. இது ஆணுறை தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

இப்படி, பல பொருட்களுக்கு ரப்பர் தேவைப்படுவதோடு மட்டுமல்லாமல், தவிர்க்க முடியாததாகவும் ஆகிவிட்டது. திடீரென்று தேவை அதிகரித்து, விலை உயர்ந்ததால், ஐரோப்பிய நாடுகள், உலகம் முழுவதும் ரப்பரைத் தேடத் தொடங்கின.

இந்தத் தேடலின் விளைவாக, ஆசியாவில் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு ரப்பர் மரங்கள் (ஹேவியா ப்ராசிலியென்சிஸ்) வளர்க்கப்பட்டன.

ஆனால், இந்த மரங்கள் வளர்ந்து பலன் தர பல ஆண்டுகள் ஆகின. மேலும் குறைந்த அளவில் ரப்பர் தரும் பிற வகை மரங்களும் கண்டறியப்பட்டன.

மேற்கத்திய நாடுகளின் அன்றாடத் தொழில்துறைக்கு ரப்பர் தவிர்க்கமுடியாத ஒரு பொருளாகிவிட்ட நிலையில், ஆப்ரிக்காவில் இதன் வளம் பெருமளவில் உள்ள ஒரு பகுதியை அவை அறிந்தன. அது இன்றைய காங்கோ ஜனநாயக குடியரசு.

"ஆனால், மேற்கத்திய நாடுகளின் முன் எழுந்த கேள்வி என்னவென்றால், மிக விரைவில் மிக அதிக அளவிலான ரப்பரைக் கையகப்படுத்துவது எப்படி என்பதுதான்", என்கிறார் டிம் ஹர்ஃபோர்ட்.

"நீதி என்பதைப் புறம் தள்ளிவிட்டுப் பார்த்தால், இதற்கான நேரடியான விடை, ஆயுதமேந்திய வீரர்களை ஒரு நகரத்திற்கு அனுப்பி, பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்தி, அப்படியும் போதுமான ரப்பர் கிடைக்கவில்லை என்றால், கைகளைத் துண்டித்து அல்லது அவரின் உறவினரின் உயிரைப் பறித்தாவது இதைச் செய்வது தான்."

இந்தக் கொடூரமான திட்டத்தின் தலைவர், வரலாற்றில் மிக இழிவான பெயரெடுத்த மன்னர்களுள் ஒருவரான பெல்ஜியம் நாட்டின் மன்னர் இரண்டாம் லியோபால்ட் தான்.

 

பயங்கரவாத ஆட்சி

 

காங்கோ அப்போது 'காங்கோ ஃப்ரீ ஸ்டேட்' (ELC) என்று அழைக்கப்பட்டது. காங்கோ ஃப்ரீ ஸ்டேட்டின் ஆட்சியாளர் காலனிய ஆதிக்கத்துக்குக் கட்டுப்படுபவராக இல்லை.

இது பெல்ஜியம் இரண்டாம் லியோபோல்ட் மன்னரின் தனிப்பட்ட சொத்தாகவே இருந்தது.

ஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தியின் குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு

Getty Images

"ஈ.எல்.சி சுதந்திரம் மற்றும் செழிப்புக்கான ஒரு மாதிரியாக உலகுக்கு வழங்கப்பட்டது. ஆனால் படிப்படியாக காங்கோ மக்கள் உண்மையில் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்கள் பயங்கரவாதத்தால் ஆளப்படுகிறார்கள் என்பதையும் உலகம் அறிந்தது. காங்கோவில் ஏராளமான தாமிரம், யானைத் தந்தங்கள், மற்றும் ரப்பர் வளம் இருந்தது," என்று வரலாற்றாசிரியர் சியான் லாங் பிபிசி கட்டுரை ஒன்றில் எழுதுகிறார்.

"ஒருபுறம், லியோபோல்ட் மன்னர் காங்கோவைக் கொள்ளையடிக்கத் தொடங்கினார்; மறுபுறம், காங்கோ மக்கள் தண்டனை, சித்ரவதை மற்றும் சுரண்டலிலிருந்து தப்பிக்க, கூலி வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேவையான அளவுக்கும் குறைவான ரப்பரை சேகரித்த அல்லது தப்பியோட முயன்ற தொழிலாளர்களின் கை, கால்களை வெட்டுவது பொதுவான தண்டனைகளாக மாறியது. சில நேரங்களில் கிராமத்தில் உள்ள குடும்பத்தினர், மொத்த வம்சம், அல்லது முழு கிராமங்களே கூட அழிக்கப்பட்டன. "

2004ஆம் ஆண்டில், கின்ஷாசாவில் பிபிசி செய்தியாளராக இருந்த மார்க் டமேட் ஒரு அறிக்கையில், "கிங் லியோபோல்ட் தனது காங்கோ ஃப்ரீ ஸ்டேட்-ஐ மிகப் பெரிய தொழிலாளர் முகாமாக மாற்றியிருந்தார். இங்கிருந்து ரப்பர் சேகரிப்பதன் மூலம் ஏராளமான செல்வங்களைச் சேகரித்தார், ஆனால் இங்கே அவர் சுமார் ஒரு கோடி அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளார்." என்று எழுதினார்.

ஒரு கோடி என்ற எண்ணிக்கையில் சற்று வித்தியாசம் இருக்கலாம். ஆனால் இந்த மன்னனின் கொடுங்கோல் ஆட்சி குறித்து இரண்டாவது கருத்தே இருக்க முடியாது.

 

காடுகளின் அழிப்பு 

 

இன்று உலகில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரில் பாதிக்கும் மேற்பட்டவை கண்ணீர் சிந்தும் அந்த மரங்களிலிருந்து தயாரிக்கப்படுவதில்லை. அனேகமாகச் செயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ரப்பர்தான் புழக்கத்தில் இருக்கிறது.

செயற்கை ரப்பர் இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்டது. இது மலிவானது, சில சந்தர்ப்பங்களில் இயற்கை ரப்பரை விடவும் கூடச் சிறப்பாகச் செயல்படுகிறது.

உதாரணத்திற்கு, சைக்கிள் டயர்களில் பயன்படுத்தப்படும் செயற்கை ரப்பர் அதிக சிறப்பானதாகவே கருதப்படுகிறது.

ஆனால், ஹேவியா ப்ராசிலியென்சிஸ் மரங்களிலிருந்து பெறப்படும் ரப்பர் மட்டுமே பயன்படுத்தப்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் சில தொழில்கள் உள்ளன.

இந்த மரங்களிலிருந்து வரும் ரப்பரில் முக்கால்வாசி பகுதி வாகன டயர் உற்பத்திக்குத்தான் பயன்படுகிறது.

எந்த அளவுக்கு நாம் வாகன மற்றும் விமானங்கள் உற்பத்தியை அதிகரிக்கிறோமோ, அந்த அளவுக்கு ரப்பரின் தேவையும் அதிகரிக்கும். இதன் கொள்முதல் சர்ச்சைக்குள்ளாவதும் தவிர்க்கமுடியாததே.

2015ஆம் ஆண்டில் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை ஓர் ஆய்வு மேற்கொண்டது.

டயர்களுக்காகப் பயன்படுத்தப்படும் ரப்பரின் உலக அளவிலான தேவை அதிகரித்ததால், தென் கிழக்காசியக் காடுகள் பெருமளவில் அழிக்கப்படுவதாக இந்த ஆய்வின் முக்கிய ஆய்வாளர் ஏலியானோர் வாரென் தாமஸ் குறிப்பிடுகிறார்.

"2024ஆம் ஆண்டு வரை தேவையான ரப்பர் கொள்முதலை உறுதிப்படுத்திக்கொள்ள, 4.3 முதல் 8 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் புதிய ரப்பர் செடிகளைப் பயிரிட வேண்டிய தேவை ஏற்படும். இதனால், ஆசியாவின் பெருமளவிலான காடுகள் அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் வன விலங்குகளுக்கும் ஆபத்து அதிகரிக்கும்" என்று அவர் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

 

https://www.bbc.com/tamil/global-53473792

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.