Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூடப்படும் கதவுகளும் நெடுந்தீவு அதிர்வுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூடப்படும் கதவுகளும் நெடுந்தீவு அதிர்வுகளும்

-சி.இதயச்சந்திரன்-

மேற்குலகானது, இலங்கைக்கான ஒரு கதவை மூடியபடி, இன்னொரு வாசலைத் திறந்து வைத்துள்ளது. ஆயினும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை சகல வழிகளையும் அடைத்தவாறு, கதவைத் தட்டும்படி கேட்கிறது.

அதாவது தடைகள், அழுத்தங்களூடாக பயங்கரவாத கோட்பாட்டுக் கதவுகளை நிர்மாணித்து விடுதலைப் புலிகளின் சர்வதேசத்திற்கான பாதைகளை மூடியுள்ளது.

இவையனைத்தும் சர்வதேச மத்தியஸ்த சமாதான பேச்சுவார்த்தை காலத்திலேயே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இரட்டை வேடம் போல் தோற்றமளிக்கும் ஒரு வழிப்பாதையாகவே இதனைக் கருத வேண்டும்.

ஆனாலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களை சமன் செய்ய பிரித்தானியா, ஜேர்மனி போன்ற மேற்கு நாடுகள் ஊடாக அரசிற்கு வழங்கும் கடனுதவிப் பாதை மூடப்பட்டுள்ளது.

41 மில்லியன் பவுண்களை இடைநிறுத்தியவாறு 70 மில்லியன் பவுண்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களை பிறிதொரு வாசலைத் திறந்து அதனூடாக வழங்குகிறது பிரித்தானியா. ஒன்றை மூடி, இன்னொன்றைத் திறப்பதானது பிரச்சினையைத் தீர்க்க உதவுமா என்பதை மேற்குலகத்தாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது அசட்டுத்தனமாக அமையும்.

அளவையியல் (Logic) தத்துவத்தில், அரைவாசி திறந்திருக்கும் கதவு பற்றி இருவிதமான பார்வையுண்டு. அதாவது அக்கதவு அரைவாசி மூடப்பட்டுள்ளதென்றும் கூறலாம். அல்லது அரைவாசி திறந்துள்ளதென்றும் விளக்கமளிக்கலாம்.

அறையின் உள்ளே இருப்பவர்களுக்கு திறந்தது போன்றும், வெளியே நிற்பவர்களுக்கு பாதி மூடப்பட்டது போன்றும் தோற்றமளிக்கும்.

இந்நிகழ்வுகள் இரண்டையும் மூன்றாம் மனிதராக பார்வையிடும் தமிழ் மக்களிற்கு நிஜமுகம் தெளிவாகத் தெரியும்.

இவ்வகையான மயக்கமான தள உருவாக்கம், மூன்றாவது சக்திகளின் நலன்களை, பின்புலத்தில் மிக நேர்த்தியாக நகர்த்திச் செல்ல உதவுகிறது.

அரசியல் தீர்வொன்றிற்கான பிரித்தானியா போன்ற நாடுகளின் பிரசன்னம், இச்சூழலில் மிதப்பு நிலையை அடைய ஏதுவாக அமைகிறது. வட அயர்லாந்து தீர்வுக் கொடியினை கையிலேந்தியபடி உள்நுழைவதற்கு முன்பாக, முன்னாள் ஐ.ஆர்.ஏ. இன் போராளியும் வட அயர்லாந்தின் தற்போதைய உதவி முதலமைச்சருமான மார்ட்டின் மெக்கின்ஸை இலங்கைக்கு அனுப்பி, சில அடிப்படைத் தயாரிப்புக்களையும் பிரித்தானியா மேற்கொண்டது.

நாடாளுமன்றத்தில் இலங்கை பற்றிய விவாதமும் நான்கு மணி நேரமாக நடத்தப்பட்டு, சர்வ கட்சிக் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

இக்குழு இலங்கைக்குச் சென்று, தேங்கிக் கிடக்கும் பேச்சுவார்த்தை தளத்திற்கு உயிரூட்ட முனைந்தாலும், ஓமந்தை வாசலைத் தாண்டி கிளிநொச்சி செல்வது கடினமான காரியந்தான். கொழும்பிற்குப் பயணம் செய்யும் மேற்குலகத்தாரும், அங்கு நிலைகொண்டிருக்கும் அவர்களின் தூதுவர்களும் ஓமந்தையைக் கடக்க முடியாதவாறு, அடிக்கடி 'ஷெல்" வீச்சுக்கள் நடத்தி மோதல் நிலை நீடிப்பது போன்றொரு தோற்றப்பாடு திணிக்கப்படுகிறது.

உயிர்ப் பாதுகாப்பிற்கு தம்மால் உத்தரவாதம் அளிக்க முடியாதென்பதை, செயற்கையாக உருவாக்கப்பட்ட நிகழ்வுகளினூடாக உறுதிப்படுத்தி, புலிகளுடன் சர்வதேசம் ஏற்படுத்த முனையும் தொடர்புகளை முளையிலேயே கிள்ளி எறிய அரசு முயற்சிக்கின்றதெனப் பலர் கருதுகின்றனர்.

ஒரு விதத்தில் இப்பார்வை சரியானதாகவிருந்தாலும் அரசின் மனப் பிறழ்வின் எதிர்வினைச் செயலாகவும் கருத இடமுண்டு.

இந்நிலையில் வருகை தரும் பிரித்தானியாவின் விசேட குழு, கொழும்பிலே முடங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இந்தியா விரும்புவதும் இதைத்தான். மேற்குலகின் அணுகுமுறைக்கு எதிர்மாறான நிலைப்பாட்டையே அண்டைய நாடான இந்தியா கொண்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் நாராயணனின் கூற்றிலிருந்து இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்கிறார்.

கடற்புலிகளும், வான் புலிகளும் ஆபத்தானவர்களென்று கட்டியம் கூறுகிறார். இலங்கைக் கடற்படையோடு கூட்டுச் சேராமல், ஒருங்கிணைந்த கடற்கண்காணிப்பில் ஈடுபடுவோமென விரும்புகிறார். ஆயினும் விடுதலைப் புலிகளோடு பேசி, மயக்கமுற்றுள்ள பேச்சுவார்த்தைக்கு நீர் தெளித்து, அசைவுறச் செய்ய அவர்கள் விரும்பவில்லை. 'றோ"வால் சோடிக்கப்பட்ட மீனவர் கடத்தல் விவகாரத்தால், தமிழக மக்கள் விடுதலைப் புலிகளுக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்களென்று கற்பனையில் மிதந்து, தமது கடும் போக்கிற்கான காரணத்திற்கு வலுச்சேர்க்க முனைகிறது இந்தியா.

தென்னிலங்கை வான் பாதுகாப்பிற்கு அரசு அழைப்பு விடுத்த நிலையிலும், பாக்கு நீரிணையில் கடல் பாதுகாப்புப் பற்றியே குறியாகவுள்ளது. நெடுந்தீவுப் பனை மரத்தில் புலி அடித்தால், கன்னியாகுமரியில் நெறிகட்டுகிறது. யாழ். குடாவில் விடுதலைப் புலிகள் தொடுக்கும் வான், கடல் தாக்குதல்கள் தமக்கு அதிருப்தியை அளிப்பதாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கவலையடைகிறார்கள். வான் புலிகளின் சுற்றுப்பயணம் திரும்பவும் குடாநாட்டை நோக்கித் திரும்பலாமென்பதே அவர்களின் ஊகம்.

நீண்டகால இடைவெளியின் பின், நெடுந்தீவு மீது கடற்புலிகளின் ஈரூடகப் பாய்ச்சல் சொல்லும் செய்தியும், அதிகரிக்கும் குடாநாட்டுத் தாக்குதல்களும் விடுதலைப் புலிகளின் பார்வை யாழ். மீது விழுந்துள்ளதோவென அனுமானிக்கும் இந்தியா, வட கடலில் தனது காய்நகர்த்தல்களை முடுக்கி விட்டுள்ளது.

தீவுப்பகுதிகள் உள்ளடங்கலாக, முழு யாழ். குடாப் பிராந்தியமும் விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டால் பாக்கு நீரிணையில் கடற்புலிகளின் ரோந்தினை எதிர்கொள்ளும் தர்மசங்கடமான நிலை தனக்கு ஏற்படலாமென்று கருதுகிறது. ஆதலால் யாழ். குடாநாடு, விடுதலைப் புலிகளின் கைகளில் அகப்படாமல் இருப்பதற்கு தன்னாலான சகல முயற்சிகளையும், அச்சுறுத்தல்களையும் இந்தியா செயற்படுத்தியபடியும், வெளிப்படுத்தியபடியும் இருக்கும்.

ஏனெனில் தென்பகுதி வான் பாதுகாப்பை விட, குடாநாட்டின் பாதுகாப்பே இந்தியா முன்னுள்ள முதல் தெரிவாக அமைகிறது. ஆனையிறவு தளச் சமரின் பின்னரான, குடாநாடு நோக்கிய புலிகளின் நகர்விலும் இந்திய எதிர்ப்பினை உணரக் கூடியதாகவிருந்தது. அண்மையில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்ட மூலோபாயக் கருத்து விளக்கத்திலும், வடபகுதி மீதான தாக்குதல் உத்தி தவிர்க்கப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தொடுத்து வடக்கை இழந்தால், அண்டை நாட்டை ஆட்டிப் படைக்க உதவும் பிடிமானம் தளர்வுறலாமென்பதே சொல்லப்படாத செய்தி.

இராணுவ மூலோபாயத்தை வெளிப்படையாக அறிவித்த முதல் இலங்கை தளபதி இவராக இருந்தாலும் மறைக்கப்படும் மூலோபாயத்தின் அரிச்சுவட்டை புரிந்துகொள்ளமுடியும். மடு நோக்கிய இராணுவ நகர்வு முயற்சிகள், வடமாகாணத்தின் மேற்கிலமைந்த மன்னார் கடற்பரப்பையும், அதன் பெரும்பான்மையான நிலப்பரப்பையும் தம்வசமாக்கும் நிகழ்ச்சி நிரலிற்கு வலுவூட்டவே மேற்கொள்ளப்படுகின்றன.

குடாநாட்டு முற்றுகைக்கு, விடுதலைப் புலிகள் பிரயோகிக்கவுள்ள நகர்வு மையங்களில், முதன்மையாகவுள்ள மன்னார் பிரதேசத்தை, விரைவாகத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியே மடு நோக்கிய நகர்வாகும்.

ஆனாலும், நெடுந்தீவுத் தாக்குதல், இராணுவ உத்தியில் சறுக்கலையும், இந்திய மூலோபாய நலனில் தாக்கத்தையும் ஏற்படுத்தி விட்டது.

இந்தியாவிற்குச் சென்ற கோத்தபாய ராஜபக்ஷ, வான் பாதுகாப்பிற்கான ஆயுதத் தளபாடங்களை இலங்கைக்கு வழங்குமாறு கேட்டாலும், வடகடலின் பாதுகாப்புக் குறித்தே இந்தியா அதிக கவனம் செலுத்துகிறது.

தெற்கின் பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கான பாதுகாப்பு சார்ந்த முன்னுரிமையை கோத்தபாய இராணுவம் கையிலெடுத்தாலும், அவை இந்திய நலனிற்கு இசைவாக அமையவில்லையென்பது தெளிவாகிறது.

ஆகவே, பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல மீண்டும் கூறுவது போன்று, இரு வாரங்களிற்குள் சமாதான ஒப்பந்தம் குறித்து அரசு எடுக்கப் போகும் முடிவு எதுவாக அமையுமென்று அவரின் ஊகத்திற்கே விட்டு விட வேண்டும்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (03.06.07)

http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/04.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.