Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மது அருந்த வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிப்பதேன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மது அருந்த வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிப்பதேன்?

  • அனந்த் பிரகாஷ்
  • பிபிசி
 
மது அருந்த வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிப்பதேன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குளிர் அலை நிலவும் எனவும் வெப்ப நிலை மிகவும் குறையக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் டெல்லி என்.சி.ஆர், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியவையும் அடங்கும். இந்தப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

காலை வேளைகளில் திறந்தவெளி இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இது, தாழ்வெப்பநிலை (ஹைப்போ தெர்மியா) மற்றும் ஃப்ராஸ்ட் பைட் போன்ற கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

ஹைப்போ தெர்மியா என்பது, உடல் வெப்ப நிலை கடுமையாக குறையும்போது உடல் வேலை செய்வதை நிறுத்தும் நிலையாகும். ஃப்ராஸ்ட் பைட் என்பது உடலின் சில பகுதிகள், குறிப்பாக, கை, கால் விரல்கள், முகம், கண் இமைகளில் உணர்ச்சியற்ற தன்மை ஏற்படுவதை குறிக்கிறது.

வானிலை மையத்தின் முக்கிய எச்சரிக்கை

மது அருந்த வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிப்பதேன்?

பட மூலாதாரம்,SANCHIT KHANNA/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

வானிலை ஆய்வு மையம், தனது வழிகாட்டுதலில், மது அருந்த வேண்டாம் என்றும் கூறியுள்ளது. மது அருந்துவதால், உடல் வெப்பநிலை மேலும் குறைவதாக அது கூறுகிறது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்னறிவிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவாவுடன் பிபிசி பேசிய போது, இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஸ்ரீவாத்ஸவா, "டெல்லி என்.சி.ஆர் பகுதியில் இப்போது குளிர் அலை நிலவி வருகிறது. இதனால், வெப்பநிலை நான்கு டிகிரிக்கும் குறைவாகப் பதிவாகி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் காலை வேளையில் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில், நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், காலையில் மூடுபனி இருப்பதால் காட்சிகள் தெளிவில்லாத நிலை உருவாகிறது. இதுபோன்ற சமயங்களில், ஃபாக் லைட் பயன்படுத்தி வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டும். மேலும் இந்த நேரத்தில், மது அருந்துவதால், உடல் வெப்ப நிலை மேலும் குறைவதால், மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்", என்று விளக்குகிறார்.

மதுவைத் தவிர்க்க வேண்டியது ஏன்?

மது அருந்த வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிப்பதேன்?

பட மூலாதாரம்,DIBYANGSHU SARKAR/AFP VIA GETTY IMAGES

25ஆம் தேதி வெளியிடப்பட்ட தனது வழிகாட்டுதலில், மது அருந்த வேண்டாம் என்று வானிலை ஆய்வு துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

வானிலை ஆய்வுத் துறை ஏன் இத்தகைய எச்சரிக்கையை அளிக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து விளக்கமளித்த குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, "மருத்துவ நிபுணர்கள் இதுகுறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே, வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை வெளியிடுகிறது" என்றார்.

பத்து டிகிரி முதல் மைனஸ் இருபது, முப்பது டிகிரி வரை வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும் பல நாடுகள் உலகில் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் அதிக அளவில் மது அருந்தப்படுகிறது.

குறிப்பாக, ரஷ்யா, பெலாரஸ் மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகளில் மிகக் குறைந்த வெப்பநிலை நிலவுகிறது. ஆனால், உலகில் மது அருந்துவதில் இந்த நாடுகள் முன்னிலையில் உள்ளன.

மது அருந்துவதால் உடலில் வெப்பம் உண்டாகும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அப்படி இருக்கும் போது, குளிர்காலத்தில் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற வானிலை மையத்தின் இந்த எச்சரிக்கையில், எவ்வளவு உண்மை இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

குளிர்காலத்தில் மது அருந்திய பின் உடலில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில், மருத்துவத் துறை நிபுணர்களிடம் பிபிசி கருத்து கேட்டது.

அறிவியல் கூறுவதென்ன?

ஒரு மனித உடலின் இயல்பு வெப்பநிலை 37° C ஆகும். ஆனால் சுற்றுப்புற வெப்பநிலை குறையத் தொடங்கும் போது, உடல் அதன் அசல் வெப்பநிலையை பராமரிக்க உடலின் சக்தியை பயன்படுத்துகிறது. ஆனால் உடல் வெப்பநிலை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறையத் தொடங்கும் போது, ஹைப்போ தெரிமியா தாக்குதல் ஏற்படுகிறது.

வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கையின்படி, டெல்லி என் சி ஆர், ஹரியானா, பஞ்சாபில் தற்போது நிலவும் வெப்பநிலை மேலும் சில காலம் தொடர்ந்தால், அதற்கு நாம் ஆளானால், ஹைப்போ தெரிமியா ஏற்பட வாய்ப்புள்ளது. எளிமையாகச் சொல்வதானால், உடலின் மைய வெப்பநிலை ஒரு எல்லைக்கு மேல் வீழ்ச்சியடையத் தொடங்கும் போது, ஹைப்போ தெர்மியாவுக்கு ஆளாக நேரலாம்.

இப்போது குறைந்த வெப்பநிலை உள்ள போது, மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்பு பற்றிப் பார்ப்போம்.

டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் சி.எம்.ஓ டாக்டர் ரிது சக்சேனா, குளிருக்கும் மதுவுக்கும் இடையிலான தொடர்பை விளக்குகிறார்.

மது அருந்த வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிப்பதேன்?

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES

"நீங்கள் மது அருந்தும்போது, ஆல்கஹால் உங்கள் உடலுக்குள் சென்ற பிறகு, வாஸோ டைலேஷன் எனப்படும் ரத்தக் குழாய் விரிவடைவு ஏற்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் கை, கால்களின் இரத்த நாளங்கள் விரிவடைகின்றன, அவற்றில் அதிக இரத்தம் பாயத் தொடங்குகிறது. இதன் காரணமாக, நீங்கள் சூடாக உணர்கிறீர்கள். அதனால்தான் மேற்கத்திய நாடுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை இருப்பதால் மக்கள் அதிகமாக குடிக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள்."

"ஆனால் உண்மையில் ஆல்கஹால் காரணமாக, கைகளிலும் கால்களிலும் இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது, அதனால், வெப்பம் உணரப்படுகிறது. இந்த உணர்வின் அடிப்படையில், மக்கள் குளிர்கால ஆடைகளை மஃப்ளர்கள், ஜாக்கெட்டுகள், தொப்பிகள், ஸ்வெட்டர் போன்றவற்றை அகற்றுகிறார்கள். அதனால், அவர்களின் உடலின் மைய வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது. ஆனால், இது, நமது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை நிரூபிக்கும் தகவல்கள் இது வரை இல்லை" என்று அவர் கூறுகிறார்.

ஆனால் மதுவால் வெப்பம் அதிகரிக்கவில்லை என்றால், ஏன் வெப்பமாக உணர்கிறோம்?

மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையின் இணை இயக்குநர் டாக்டர் ரோமெல் டிக்கு, இந்த ஐயத்தைத் தெளிவுபடுத்தும் விதமாக, "அதிக மது அருந்துபவர்களுக்கு முகம் சிவந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆல்கஹால் காரணமாக, வெளிப்புற உறுப்புகளான முகம், கைகள், கால்கள் போன்றவற்றின் இரத்த தமனிகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது வெப்பத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இரத்தம் உடலின் உள் பகுதிகளிலிருந்து வெளிப்புறத்திற்கு பயணிக்கிறது, இதனால் உடலின் மைய வெப்பநிலை குறைகிறது" என்று கூறுகிறார்.

"எனவே, குளிர் காலத்தில் மது அதிகமாக அருந்தும்போது, உடலின் மைய வெப்பநிலை குறைகிறது. இரத்த ஓட்டத்தின் அதிகரிப்பு உடலில் வியர்வையை உண்டாக்குகிறது. அதனால் உடலின் வெப்பநிலை மேலும் குறைகிறது. இவ்வாறாக, குளிர் காலத்தில் மது அதிகம் அருந்துவது பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இப்போது குளிர்காலத்தில் மது அருந்துவதால் உயிருக்கு ஊறு விளையுமா என்ற கேள்வி எழுகிறது.

மதுவால் உயிருக்கு ஆபத்தா?

குளிர்காலத்தில் அதிகம் மது அருந்துவது, உயிருக்கு ஊறு விளைவிக்கலாம் என்று எச்சரிக்கிறார் டாக்டர் ரிது சக்சேனா.

"குளிர்காலத்தில் அதிகமாக மது அருந்தினால், முதல் விஷயம், சரியான பாதுகாப்பான உடை அணிவதைத் தவிர்ப்பார்கள். மூளையில் ஆல்கஹால் பாதிப்பு காரணமாக, நமது உடல் எந்த நிலையில் இருக்கிறது என்பது நமக்கே தெரியாது. இந்தச் சூழ்நிலையில், உடலின் வெப்பநிலை 37° C-க்கு கீழே செல்லும்போது, படிப்படியாக ஹைப்போ தெர்மியா தாக்கத் தொடங்கும். ஹைப்போ தெர்மியா ஒருவரை கோமா நிலைக்குக் கூட இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது. உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்" என்று அவர் கூறுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.