Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி மாஸ் ஹீரோக்கள் டம்மிபீஸ்களா... OTT வளர்ச்சியால் மாற்றம் காணும் சினிமா உலகம்... யாருக்கு நன்மை?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மே மாதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த மாதம் நாம் ஓடிடியில் பார்த்த படங்கள் என்னென்ன? இதில் எத்தனை நாம் தியேட்டர்களுக்கு விரும்பிச் சென்று பார்க்கும் நடிகர்களின் படங்கள், எத்தனை வேற்று மொழிப்படங்கள், மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, மாஸ் ஹீரோக்களின் பில்ட் அப் காட்சிகளை ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, இடையில் வரும் பாடல்களை ரசிக்கிறோமா, ஓடிடியில் படம் பார்க்கும்போது நம்முடைய தேர்வு கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா அல்லது நடிகர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா?! இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் பட்டியிலிட்டாலே சினிமா என்னவாக மாறிக்கொண்டிருக்கிறது, இனி என்னவாக மாறும் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம்.

 

ஹீரோக்கள் இனி டம்மி பீஸ்களா?!

சினிமா வியாபாரம் என்பது தற்போது மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு நடக்கிறது. 1. தியேட்டர் வியாபாரம் 2. டிவி வியாபாரம் 3. டிஜிட்டல் வியாபாரம். இந்த மூன்று வியாபாரங்களுமே அந்தப்படத்தில் நடித்திருக்கும் ஹீரோவின் மார்கெட் வேல்யூவை பொருத்ததே. ஒரு படத்தின் 60 சதவிகித வருமானம் தியேட்டர் வியாபாரம் மூலம் மட்டுமே நடக்கிறது. மீதி 40 சதவிகிதம்தான் டிவி, டிஜிட்டல் மற்றும் பிற மொழி உரிமங்கள் மூலம் கிடைக்கிறது.

தமிழ் சினிமா ஹீரோக்கள்
 
தமிழ் சினிமா ஹீரோக்கள்

சிஹீரோவைப் பொருத்துத்தான் அந்தப்படத்தின் முதலீடும், கமர்ஷியல் வெற்றியும் இருக்கிறது. இந்திய சினிமாக்கள் தொடர்ந்து கதாநாயகனை மையப்படுத்தியே எடுக்கப்படுவதற்கான அடிப்படைக் காரணம் இதுதான். இதனால் ஒரு படத்தில் ஹீரோவின் சம்பளம்தான் உச்சம். அந்த ஹீரோவை ஒட்டித்தான் கதை, நாயகியின் தேர்வு, இயக்குநர் என எல்லாமே இருக்கும். தயாரிப்பாளர்கள், நடிகர்களைத் தேர்வு செய்த காலம் போய், நடிகர்கள்தான் இப்போது தயாரிப்பாளர்களை தேர்வு செய்கிறார்கள்.

தயாரிப்பாளர் என்பவர் ஹீரோக்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களுக்கேற்றபடி வளைந்துகொடுத்தால் மட்டுமே அந்தப்படம் திட்டமிட்டபடி வெளியாகும். இல்லையென்றால் அந்தப்படம் பாதியில் கைவிடப்படும் அல்லது வேறு வகையிலான இழப்புகளை சந்திக்கும். அப்படி ஹீரோவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்திய சினிமா துறையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டிருக்கிறது கொரோனா காலத்தால் ஏற்பட்டிருக்கும் ஓடிடி வளர்ச்சி.

இனி ஒரு ரசிகனை சினிமா பார்க்க வைப்பதற்கு போஸ்டர்கள், கட் அவுட்கள், பேனர்கள் எல்லாம் தேவையில்லை. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் ஒரு படத்தைப் பற்றி ஒரு பயனர் ஷேர் செய்யும் வீடியோ, புகைப்படங்களே ஒரு படத்துக்கான பப்ளிசிட்டியாக இருக்கின்றன. மலையாள திரையுலகம் இன்ஸ்கிராமில் ஒரு படத்தை ப்ரமோட் செய்வதற்கென்றே தனி ப்ரமோஷன் டீம்களை உருவாக்கியிருக்கின்றன.

 

‘சினிமா பண்டி' என்கிற ஒரு தெலுங்கு படம் கடந்த மே 14-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. பெரிய ஹீரோவோ, ஹீரோயினோ, இயக்குநரோ என எதுவுமே இல்லை. ஆனால், இந்தப்படம்தான் சமூக வலைதளங்களில் ஒரு வாரம் பேசுபொருளாக இருந்தது. இந்தப்படத்தைப் பற்றிய புகைப்படங்கள், மீம்கள், ஹேஷ்டேக்குகள் பகிரப்பட்டன. இதனால், இந்தப்படத்தைப் பார்த்தவர்களின் எண்ணிக்கைக் கூடியது. படம் ஓடிடி-யில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

திரையரங்கில் இந்தப்படம் வெளியாகியிருந்தால் இந்தக் கதாநாயகன், நாயகி, இயக்குநருக்கு இப்படி ஒரு விளம்பரமும், புகழும் நிச்சயம் கிடைத்திருக்காது. ஆனால், ஓடிடி அதனை சாத்தியமாக்கியிருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு படம் பார்த்தால் நடிகர்களின் நடிப்பு, இயக்குநரின் திறமையை தாண்டி பல விஷயங்கள் ஒரு சாமான்ய ரசிகனால் பேசப்படாது. ஆனால், ஓடிடி ஒவ்வொரு படத்தையும் மிக நுணுக்கமாக ஆராயும் திறனை ஒவ்வொரு சாதாரண ரசிகனுக்குள்ளும் கொண்டுவந்திருக்கிறது. படத்தின் மேக்கிங் பற்றி, கேமரா கோணங்கள் பற்றி, எட்டிங் பற்றி, சவுண்ட் மிக்ஸிங் பற்றி எனப் பல விஷயங்களையும் அலசி, அதில் ஒரு சிறு குறையிருந்தாலும் அந்தப்படத்தை தவிர்க்கும் பழக்கத்தை ஓடிடி உருவாக்கியிருக்கிறது.

ஒரு ஹீரோ இதுவரை தன்னுடைய தனிப்பட்ட புகழையும், பெருமையையும் பறைசாற்றிக் கொள்ள சினிமாவைப் பயன்படுத்தினார். தனிப்பட்ட ஒரு நடிகரின் நம்பிக்கைகள், அவரது அரசியல் கருத்துகள், போட்டி நடிகர்களுக்கு அவர் சொல்லும் பன்ச் வசனங்கள் என படம் முழுக்க அந்த ஹீரோவை சார்ந்தே இருக்கும். ஆனால், ஓடிடியில் ஒரு நடிகர் தன்னை முன்னிலைப்படுத்தி சினிமாவை உருவாக்கிவிட முடியாது. அப்படி எடுக்கப்படும் படங்கள் இடதுகையால் புறந்தள்ளப்படும் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன.

இந்தாண்டு தியேட்டரில் வெளியாகி அடுத்த 15 நாட்களுக்குள் ஓடிடிக்கு வந்த விஜய்யின் ‘மாஸ்டர்' ஓடிடியில் எதிர்பார்த்த அளவு கொண்டாடப்படவில்லை. இந்தப் படம் குறித்த கருத்துகளோ, விமர்சனங்களோ, மீம்களோ எதுவும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவில்லை. ஆனால், தியேட்டர்களில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஓடிடிக்கு வந்த ‘கர்ணன்' படத்தைப் பற்றிய விமர்சனங்கள், கருத்துகள், அதுபற்றிய விவாதங்கள் எல்லாம் தியேட்டரில் ரிலீஸான நேரத்தை காட்டிலும், ஓடிடியில் ரிலீஸான போது அதிகம் இருந்தது. மொழி எல்லைகளைக் கடந்து இந்தப்படம் கொண்டாடப்பட்டது, விமர்சிக்கப்பட்டது.

வரும் ஜூன் 18-ம் தேதி வெளியாகும் ‘ஜகமே தந்திரம்’ படம் அதிக எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தனுஷ் இதில் நடித்திருக்கிறார் என்பதற்காக அல்ல, இந்தப்படத்தின் கதையும், மேக்கிங்கும் எப்படியிருக்கிறது என்று விமர்சிப்பதற்காக! மாஸ் ஹீரோ விஷயங்கள் படத்தில் தூக்கலாக இருந்தால் இந்தப்படமும் ஓடிடி பயனர்களால் நிராகரிக்கப்படும் என்பதே உண்மை நிலையாக இருக்கிறது.

நாயகனுக்கு ஆரத்தி எடுப்பது, ஆளுயர மாலை போடுவது, பால் அபிஷேகம் செய்வது என்பதெல்லாம் இனி இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. இனி படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்பவது கன்டென்ட்டும், மேக்கிங்கும், நடிகர்களின் நடிப்பும் மட்டுமே!

 

சினிமாவுக்குப் போட்டி?!

நாடகத்தில் இருந்து சினிமா உருவானது. அப்படி சினிமாவின் அடுத்த கட்டமாக இனி வெப்சீரிஸ்கள் இருக்கப்போகிறது. பார்ட் 1, பார்ட்-2, ப்ரீக்வெல், சீக்வெல் சினிமாக்கள் இனி இருக்காது. ‘மிர்ஸாபுர்’, ‘தி ஃபேமிலி மேன்’ போன்று வெப்சீரிஸ்கள் இனி தமிழிலும் வரிசைக்கட்டி வரும் என எதிர்பார்க்கலாம். ‘வடசென்னை’ படத்தை முழுவதுமாக எடுத்துமுடித்தபோது கிட்டத்தட்ட 5 மணி நேர கன்டென்ட் வெற்றிமாறனிடம் இருந்ததாகச் சொல்வார்கள். தியேட்டர் வியாபாரத்துக்காக அது இரண்டே முக்கால் மணி நேர சினிமாவாக சுருக்கப்பட்டது. இப்போதைய லாக்டெளன் சூழலில் ‘வட சென்னை’ எடுத்து முடிக்கப்பட்டிருந்தால் அது தமிழின் மிக முக்கியமான வெப்சீரிஸாக கொண்டாடப்பட்டிருக்கும்.

 

அமேஸான் நிறுவனம் தனது ஓடிடி தளத்தை 2006-ம் ஆண்டே தொடங்கிவிட்டது. அமேஸான் ப்ரைம் இந்தியாவில் 2011-ம் ஆண்டில் இருந்தே இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் 2016 முதல் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கிறது. ஹாட்ஸ்டார் 2015-ம் ஆண்டில் இருந்து இருக்கிறது. ஆனால், தரமான வெப்சீரிஸ்கள் இந்தத் தளங்களில் வெளியாக ஆரம்பித்தப்பிறகுதான் இந்திய ரசிகர்கள் இதன்மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகால லாக்டெளன், ஓடிடி தளங்கள் மீது சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

இனி மல்ட்டிப்ளெக்ஸ், திரையரங்குகள் தேவையா?!

திரையரங்குகளின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. அது இன்னமும் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம். அடுத்து மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் எண்ணிக்கையும் குறையும். குடும்பத்துடன் ஒன்றாக நேரம் செலவழிக்க, பிடித்த நடிகரின் படத்தை கொண்டாட்டத்தோடு பெரிய திரையில் பார்க்க என மல்ட்டிப்ளெக்ஸ்களின் தேவை தொடர்ந்து இருக்கும் என்பது போல தோன்றலாம். ஆனால், உண்மையில் மல்ட்டிப்ளெக்ஸ்கள் அதிக செலவு வைக்கும் இடங்களாக இருக்கின்றன. பார்க்கிங் தொடங்கி, டிக்கெட் கட்டணம், ஸ்நாக்ஸ்களின் விலை என எல்லாமே நியாயப்படி இல்லாததால் மல்ட்டிப்ளெக்ஸ்களின் மேல் ஒரு சாமான்யனுக்கு ஒவ்வாமை இருக்கிறது. அந்த ஒவ்வாமையை நீக்கும் இடமாக ஓடிடி இருப்பதால் இனி மல்ட்டிப்ளெக்ஸ்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?
 
மீண்டும் மீளுமா தமிழ் சினிமா?

தெருவுக்குத்தெரு இருந்த ட்ராவல்ஸ் கம்பெனிகளை, கால் டாக்ஸிக்கள் காலி செய்தன. கால் டாக்ஸிக்களை ஓலா, ஊபர்கள் காலி செய்ததுபோலத்தான் ஓடிடி தளங்கள் சினிமா திரையரங்களையும், மல்ட்டிப்ளெக்ஸ்களின் தேவைகளையும் இல்லாமல் செய்துவருகின்றன. இப்போதும் டிராவல்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. அப்படி திரையரங்களும் இருக்கும். ஆனால், அவை இப்போதைய செல்வாக்கோடு இருக்காது.

 

கடந்த ஆண்டு நேரடி ஓடிடி ரிலீஸை திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். நடிகர் சூர்யா, திரையரங்குகளின் வில்லனாக சித்தரிக்கப்பட்டார். ஆனால், இப்போது சூர்யாதான் தமிழ் சினிமாவுக்கு புது வழியைக் காட்டியதாகக் கொண்டாடப்படுகிறார்.

ஒரு சினிமாவை ஒரு தயாரிப்பாளர் எடுத்தப்பிறகு அதை விநியோஸதர்கள் வாங்கி, அவர்கள் திரையரங்குகளுக்கு விற்று, அங்கே சரியான முறையில் லாபம் பகிர்ந்தளிக்கப்படுகிறதா என்பதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய வேலையையே இல்லாமல் செய்துவிட்டது ஓடிடி. ‘மாஸ்டர்' படம் 15 நாட்களில் ஓடிடியில் ரிலீஸானதற்கு காரணமே, தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் விற்பனையின் உண்மை நிலவரத்தை மறைத்தார்கள், தயாரிப்பாளருக்கு சேரவேண்டிய பங்கு தொகையைக் குறைத்தார்கள் என்பதுதான்.

இந்த எந்தப் பஞ்சாயத்தும் ஒரு தயாரிப்பாளருக்கு ஓடிடியில் விற்கும்போது இல்லை. இடையில் வேறு ஒருவருக்கு கமிஷன் தரவேண்டும் என்பதோ, வேறு ஒருவரால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்போ இல்லாமல் செய்துவிட்டது ஓடிடி. 15 கோடிக்கு படம் எடுக்கும் தயாரிப்பாளர் ஓடிடிக்கு 25 கோடிக்கு விற்றால் நேரடியாக 10 கோடி லாபம். டிவி உரிமம், டப்பிங் உரிமம், மற்ற மொழி உரிமம் எல்லாம் தனி.

 

வேலை இழப்புகள்!

அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு சினிமா துறை மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகளை சந்திக்கும். தியேட்டர் ஊழியர்கள் தொடங்கி, ஒரு சினிமா எடுப்பதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் பல்வேறு வேலைகள் இல்லாமல் போகும். அதனால் சினிமா ஊழியர்களின் எண்ணிக்கையும் குறையும்.ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைக்கு அதிகமான கூட்டம் இப்போது இருக்கிறது. அது வருங்காலத்தில் இல்லாமல் போகும்.

மிக முக்கியமாக பாடல்கள், தேவையற்ற சண்டை காட்சிகள் எல்லாம் ஓடிடி-க்காக எடுக்கப்படும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் இருக்காது என்பதால் நடனம் மற்றும் சண்டைப் பயிற்சி துறை மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா மிகச் சவாலான காலகட்டத்தில் இருக்கிறது. தற்போதைய தமிழ் சினிமா துறை எப்படி இயங்குகிறது, இப்போது தமிழ் சினிமா உலகை இயக்குபவர்கள் யார், வியாபாரம் எப்படி நடக்கிறது, ஓடிடி தளங்களில் சினிமா வியாபாரம் எப்படி நடக்கிறது, ஓடிடி-க்களின் எதிர்காலம்... அடுத்தடுத்த அத்தியாயங்களில்!

இனி மாஸ் ஹீரோக்கள் டம்மிபீஸ்களா... OTT வளர்ச்சியால் மாற்றம் காணும் சினிமா உலகம்... யாருக்கு நன்மை?! | How OTT and this lockdown are changing the Tamil Cinema business? (vikatan.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.