Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக்கிய அதிகாரிகள் மாற்றம்: அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆடிய ஆடுபுலி ஆட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய அதிகாரிகள் மாற்றம்: அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆடிய ஆடுபுலி ஆட்டம்!

 

spacer.png

தமிழ்நாடு அரசின் முக்கியமான 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நவம்பர் 6ஆம் தேதி மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். வழக்கமாகவே ஆட்சி மாறியதும் முக்கியமான அதிகாரிகள் மாற்றப்படுவதும் தொடர்கதைதான். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்கள் வரை கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு தீவிரமாக இருந்ததன் காரணமாக வழக்கமான மாற்றல் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கழித்து தமிழ்நாடு அரசின் முக்கியமான அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

மாநில அரசாங்கத்தின் முக்கியமான அங்கங்களாகச் செயல்படுவது தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர். இந்த மூவரும்தான் அரசாங்க இயந்திரத்தை நடத்துகிறார்கள்.

இவர்களில் ஒருவரான நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் இப்போதைய மாற்றத்தில் இடம்பெற்ற அதிகாரிகளில் முக்கியமானவர்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் திமுக ஆட்சியிலும் அதே பதவியில் தொடர்ந்தார். ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே கிருஷ்ணன் பற்றி சில தகவல்கள் முதல்வரின் கவனத்துக்குச் சென்றன.

“1989இல் திமுக ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு காரணமாக இருந்தது அப்போது ஐபி தலைவராக இருந்தவர் கொடுத்த ரிப்போர்ட் தான். அந்த அதிகாரியின் மகன்தான் கிருஷ்ணன். அவரை உயர் பதவியில் இன்னமும் வைத்திருக்கலாமா?” என்று முதல்வரிடம் சிலர் உரிமையோடு கேட்டிருக்கிறார்கள். அதற்கு முதல்வர் ஸ்டாலின், “அதெல்லாம் பழைய கதை. இப்போது நடப்பதைப் பார்ப்போம்” என்று சொல்லி இருக்கிறார்.

இன்னொரு பக்கம் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் துறை ரீதியாக சில விஷயங்களைக் கவனித்துவிட்டு... “கடந்த ஆட்சியில் தமிழ்நாடு அரசுக்குப் பெறப்பட்ட கடன் பற்றி ஆய்வு செய்தபோது வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்குவதற்காக நியமிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணனின் உறவினர்கள் என்று தெரியவந்திருக்கிறது. இதற்காக அவர்களுக்குத் தனியாக கட்டணம் வழங்கப்பட்டிருக்கிறது” என்று முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

இதேபோல தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது துறை செயலாளரான முருகானந்தம் பற்றி சில புகார்களை முதல்வரிடம் கொண்டு சென்றுள்ளார்.

தங்கம் தென்னரசு தனது தொழில் துறையில் ஓர் அதிகாரிக்குப் பதவி உயர்வு அளிக்குமாறு துறை செயலாளருக்குப் பரிந்துரைத்திருக்கிறார். துறைச் செயலாளர் முருகானந்தம் குறிப்பிட்ட அந்த அதிகாரிக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு பதிலாக அவரை சஸ்பென்ட் செய்கிறார். அதிர்ச்சி அடைந்த அமைச்சர் இதுகுறித்து துறை செயலரிடம் கேட்டபோது அதை நியாயப்படுத்தியும் பேசுகிறார் முருகானந்தம். இதோடு தனது விருதுநகர் மாவட்டத்திற்கு சில தொழிற்சாலைகளைக் கொண்டு செல்வதற்கு அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் துறைச் செயலாளர் முருகானந்தம் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்திருக்கிறார். இதையெல்லாம் மனதில் வைத்துதான் முதல்வரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது துறை செயலாளரை மாற்றும்படி கோரிக்கை வைத்திருந்தார். இது நடந்து சுமார் இரண்டு மாதங்கள் இருக்கும்.

இந்த நிலையில்தான் தொழில் துறைச் செயலாளர் முருகானந்தத்தை நிதித்துறை செயலாளராக மாற்றி... நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணனை தொழில்துறை செயலாளராக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர்.

இந்த அதிகாரிகள் மாற்றத்தில் இன்னொரு முக்கியமான மாற்றம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளராக இருந்த கோபால் அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டு போக்குவரத்துத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தின் பின்னாலும் அமைச்சரின் புலம்பல் இருக்கிறது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் சமீபத்தில் முதல்வர் அலுவலகத்தில் முக்கிய அதிகாரி ஒருவரைச் சந்தித்து இருக்கிறார். “எனது துறையின் செயலாளராக இருக்கும் கோபால் எனக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அவரோடு இணைந்து என்னால் பணியாற்ற முடியவில்லை. அதனால் முதல்வரிடம் தெரியப்படுத்தி அவரை துறை மாற்றம் செய்யுங்கள்” என்று கேட்டிருக்கிறார் பெரிய கருப்பன். அதற்கு முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த அந்த அதிகாரி, 'அவரை ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் உங்கள் துறையை மாற்றி வேறு துறைக்கு அமைச்சராகிக் கொள்ளுங்கள்' என்று பதில் அளிக்க அதிர்ச்சியாகி விட்டார் அமைச்சர் பெரியகருப்பன். வேறு பல வழிகளில் இந்தத் தகவலை முதல்வரிடம் கொண்டு சென்றுள்ளார் அமைச்சர் பெரியகருப்பன்.

எப்படி போக்குவரத்துத் துறையில் அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகனை மையமாக வைத்து சர்ச்சைகள் எழுகின்றதோ அதேபோல பெரியகருப்பனின் துறையில் அவரது சம்பந்தி கண்ணன் என்பவரின் தலையீடுகள் இருப்பதாக சலசலப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில்தான், ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து கோபால் மாற்றப்பட்டுள்ளார். ஆனால், அந்த இடத்தில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து மீண்டும் தமிழகப் பணிக்கு வந்துள்ள அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். அமுதாவை ஊரக வளர்ச்சித் துறைக்கு நியமிக்கலாம் என்று தலைமைச் செயலாளரே முதல்வரிடம் கூறியிருக்கிறார். 'கோபாலை பற்றியே புகார் சொன்ன பெரிய கருப்பன், அவரை விட மிகவும் கடினமான அதிகாரியான அமுதாவுடன் எவ்வாறு பணியாற்றப் போகிறார்?' என்று கோட்டை வட்டாரத்தில் பேசுகிறார்கள்.

ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து கோபாலை, போக்குவரத்துத் துறைக்கு மாற்றியதற்கு முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார்கள்.

“கடந்த 6 மாதங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக புகார்கள் சென்றிருப்பது போக்குவரத்துத் துறை பற்றிதான். போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு தீபாவளி ஸ்வீட் கொள்முதலில் நடக்க இருந்த முறைகேடுகள் பற்றி மின்னம்பலம் விரிவாக செய்தி வெளியிட்டது. இதை எதிர்க்கட்சிகளும் குறிவைத்து அரசை விமர்சித்தனர். இதனால் போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பன் மீது கோபத்தில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பனின் கோரிக்கையை ஏற்ற அதே நேரம் கடினமான அதிகாரியாகக் கருதப்படும் கோபாலை போக்குவரத்துத் துறைக்கு நியமித்து கண்ணப்பனுக்கு செக் வைத்துவிட்டார்.

spacer.png

கைத்தறித் துறை அமைச்சர் காந்தி அண்மையில் முதல்வரிடம், தனது துறைச் செயலாளராக இருக்கும் அபூர்வா, தான் சொன்னது எதையும் கேட்பதில்லை என்றும் அவரை மாற்றிவிட்டு ஒரு குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்குமாறும் முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அப்போது அவரிடம் முதல்வர், ‘ஒரு அதிகாரியை மாத்துங்கனு சொல்லுங்க. அதை பரிசீலிக்கலாம். ஆனா இன்னாரை நியமிங்கன்னு சொல்லாதீங்க. அதை நான் பாத்துக்கறேன்’ என்று காந்தியிடம் கூறி அனுப்பியிருக்கிறார். காந்தியின் கோரிக்கையில் பாதியை நிறைவேற்றிய முதல்வர் கைத்தறித் துறை செயலாளர் அபூர்வாவை மாற்றி இளைஞர் நலன் விளையாட்டுத் துறைக்கு நியமித்திருக்கிறார். அதேநேரம் இப்போது கைத்தறித் துறைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஒரு டஃப்பான அதிகாரி என்கிறார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிர்வாகத்தில் வரும் எரிசக்தித் துறைச் செயலாளராக இருந்தவர் தர்மேந்திர பிரதாப் யாதவ். மின்சார வாரிய தலைவராக இருக்கும் ராஜேஷ் லக்கானியையும், தன் துறைக்குள் வரும் எரிசக்தித் துறையின் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ்வையும் மாற்ற வேண்டும் என்று செந்தில் பாலாஜி முதல்வருக்கு கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துவந்தார். ஆனால், ராஜேஷ் லக்கானி மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் செந்தில் பாலாஜியின் ஒரு பகுதி கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, தர்மேந்திர பிரதாப் மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு ரமேஷ் சந்த் மீனா கொண்டுவரப்பட்டுள்ளார்.

இந்த மாற்றங்களிலேயே அமைச்சரும் விரும்பி நடந்திருக்கும் மாற்றம் என்றால் அது எ.வ.வேலுவின் பொதுப்பணித் துறையில் நடந்திருக்கும் மாற்றம்தான். பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா, நீர்வளத் துறை செயலாளராகவும், போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த தயானந்த் கட்டாரியா, பொதுப்பணித் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தயானந்த கட்டாரியா பெயரைக் குறிப்பிட்டு அவர் தனக்கு வேண்டும் என்று அமைச்சர் வேலு கோரிக்கை வைத்திருக்கிறார். கட்டாரியா 96 திமுக ஆட்சியில் முதல்வர் கலைஞருக்குச் செயலாளராக இருந்தவர். வேலு கேட்டபடி அவரையே பொதுப்பணித் துறை செயலாளராகக் கொடுத்திருக்கிறார்கள். இந்த பத்து அதிகாரிகள் மாற்றத்தில் ஓர் அமைச்சரின் விருப்பம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால் அது வேலுவுக்குத்தான் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

மற்றபடி ஊடகங்கள் அறிந்த இன்னொரு அதிகாரியான பீலா ராஜேஷும் இந்த மாற்றப் பட்டியலில் இருக்கிறார். கைத்தறி மற்றும் ஜவுளி ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, நில சீர்திருத்தத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரின் வருவாய் துறைக்குள் வரும் முக்கியமான பதவிக்கு பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு பத்து அதிகாரிகள் மாற்றத்தின் ஒவ்வொரு இழையும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே கோட்டையில் நிலவிய தட்பவெப்பத்தின் அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால்... சில சீனியர் அமைச்சர்கள் தங்கள் துறையில் இருக்கும் முக்கியமான அதிகாரிகளை மாற்றக் கோரி முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இந்த மாற்றத்துக்குள் வரவில்லை. தங்கள் கோரிக்கை எப்போது நிறைவேறும் என்று சீனியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செக் வைக்கும் விதமாக ஆடுபுலி ஆட்டம் போல இந்த அதிகாரிகள் மாற்றத்தை நடத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

https://minnambalam.com/politics/2021/11/08/8/important-officers-transfer-ministers-mkstalin-Secretariat-tamilnadu-government

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.