Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை"

jaisankardk8.jpg

சி. ஜெய்சங்கர் - மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ‘மூன்றாவது கண்' என்கிற உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி வருகிறார். ‘மூன்றாவது கண்' என தமிழிலும், ‘தேர்ட் அய்' என ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய துணைவியார் வாசுகி ஓவியராக இருப்பதுடன், பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.

1965 டிசம்பரில் யாழ்ப்பாணம் மற்றும் கோண்டாவில் என்கிற கிராமத்தில், அரசு ஆயுர்வேத மருத்துவரான சிவஞானம் - யோகேஸ்வரி தம்பதியருக்கு ஜெய்சங்கர் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். இதில் இருவர் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். தொடக்கக் கல்வியை கிராம பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ் கல்லூரியிலும் முடித்தார்.

குழந்தை மா. சண்முகலிங்கம் அவர்களைத் தனது முதன்மை ஆசானாகக் கருதும் இவர், யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது, நிலாந்தன், செல்வி, சிவரமணி, வைதேகி, மனோகரன், வாசுகி, அருந்ததி, அகிலன், சத்யன், வில்வரத்தினம், கருணாகரன், ராமேஸ்வரன், கோபிதாஸ், கண்ணதாசன் ஆகியோருடன் இணைந்து குழுவாக நாடகம் மற்றும் கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் ‘தலித் முரசு'க்கு அளித்த சிறப்புப் பேட்டி. சந்திப்பு : ரா. முருகப்பன்

ஈழம் வடக்கு, கிழக்கு என இரு பிரதேசங்களாக உள்ளன. வடக்கில் யாழ்ப்பாணமும், கிழக்கில் மட்டக்களப்பும் மிக முக்கியமான பகுதிகள். இவை இப்போது எப்படி இருக்கின்றன?

உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் காணப்படுவது போன்றே இலங்கையில் வாழ்கின்ற சிங்களர், தமிழர் இடையிலும் பிரதேச ரீதியான வேறுபாடுகளும், ஒருமைப்பாடுகளும் காணப்படுகின்றன. இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களுக்கு இடையேயும் - ஒத்துப்போகக் கூடியதும்; வித்தியாசப்படுவதுமான பண்பாட்டு அம்சங்கள் நிலவுகின்றன. இரண்டுக்குமிடையே மொழிரீதியான ஒரு பொதுத்தன்மை காணப்படுகிற அதே நேரம், பிராந்திய மொழிவழக்கில் வேறுபாடுகளும் இருக்கவே செய்கின்றன. கிழக்கில் உள்ள மட்டக்களப்பில் படுவான்கரை, எடுவான்கரை என்கிற இரு பகுதிகளுக்கும் இடையே வித்தியாசங்களைக் காண முடியும். அதே போல யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளுக்குள்ளும் பண்பாட்டு வித்தியாசங்களைக் காண முடியும். வடக்கு, கிழக்கின் பொதுத்தன்மை என்பது வித்தியாசங்களுடன் கூடியது. முக்கியமான அடிப்படையான வித்தியாசமாக இருப்பது சமூக, பொருளாதார நிலைமைகள்தான்.

ஈழம் பற்றி சிந்திக்கும்போது, கிழக்குப் பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பிலுள்ள படுவான்கரை என்பது முக்கியமான, பாரம்பரியமான, சமூக பண்பாட்டு மய்யமாக விளங்கி வருகிறது. ஆனால், கெடுவாய்ப்பாக படுவான்கரை இன்று மக்கள் புலம் பெயர்ந்த பிரதேசமாக இருந்து வருகிறது. அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து எடுவான்கரை என்ற இடத்தில் புலம்பெயர்வு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படுவான்கரை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று சொன்னால், பாரம்பரியமான உள்ளூர் அறிவுத்திறன் களஞ்சியமாக அது இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள் பலமான சமூகமாக வாழ்வதற்கான ஆதாரங்கள் பல அங்கே காணப்படுகின்றன. இன்றைய யுத்தமும், அதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற இடப்பெயர்வும், குறிப்பாக தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பாக இருக்கின்றன. இந்த இடப்பெயர்வு அந்த மக்களைப் பாரம்பரிய அறிவுசார் முறையிலிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது; அப்புறப்படுத்தியிருக்கிறது. உள்ளூர் அறிவுத் திறனைக் கொண்ட ஒரு சமூக, பொருளாதார கட்டமைப்பு நோக்கில் பார்க்கும்போது, இதை ஒரு மிக மோசமான இழப்பாகக் கருதுகிறோம்.

அரசியல் மொழியில் சொன்னால், வடதமிழீழம், தென் தமிழீழம் என்பது, சமூக - பண்பாட்டு - பொருளாதார ரீதியாக பொதுத்தன்மைகளும் வித்தியாசங்களும் கொண்டவை. அதே நேரம், எல்லா சமூகங்களுக்கும் உள்ளது போல் அந்தப் பிராந்தியங்களில், பிராந்தியங்களுக்கிடையில் காணப்படுகின்ற ஆதிக்க நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.

ஈழத்தில் முகாம்களிலும், வெளிநாடுகளில் அகதிகளாகவும் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தொடர்ச்சியான போரும், இடப்பெயர்வும் எம்மக்களின் வாழ்விடங்களை, வாழ்வாதாரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு, ஓர் அன்னியப்படுத்தப்பட்ட நிலையில் தங்கி வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இது, எங்களை மிக ஆபத்தான தொரு சமூக, பொருளாதார நிலைக்கு இட்டுச் செல்கிறது. மேலும், தாராளமயம் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு - உள்ளூர் முரண்பாடும், அதன் காரணமாக எழுந்த போரும் பயன்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இந்த இடப்பெயர்வு என்பது, உற்பத்தி சக்தியாக இருந்த எங்களை தங்கி வாழும் ஒரு சமூகமாக மாற்றி, குறைந்த ஊதியத் தொழிலாளர்களாக மாற்றும் நிலைமைகளையும், வெறும் நுகர்வு சக்திகளாக வாழ்கின்ற நிலைகளையுமே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில் பெண்கள் எத்தகைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்?

வரலாற்றுக் காலம் முழுக்க, உலகில் போரின் முதல் பலி உண்மை என்று சொல்வார்கள். அதற்கு சமமாக நாங்கள் சொல்ல வேண்டியது - போரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மிக்க உக்கிரமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். குடும்பச் சுமையைத் தாங்கி வீட்டிற்குள் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்த பெண்கள், யுத்தம் காரணமாக இடப்பெயர்வு நிகழும் நிலையில், அவர்கள் அம்பலத்தில் வெட்டவெளியில் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இது ஒன்றே, இந்தப் போரில் பெண்கள் நிலையைப் புரிந்து கொள்ள பொருத்தமாக இருக்கும். அம்பலத்தில் குடும்பத்தை நடத்துவது என்பது, பெண்களுக்கு எத்தகையதொரு மோசமான சூழல் என்பது சிந்திக்கத் தெரிந்த எவருக்கும் விளங்கும். போர் நடைபெறும்போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது, ஒரு வெளிப்படையான உரையாடலுக்குரியதாகவும், எதிர்ப்புக்குரியதாகவும் இருப்பது என்பதைக் காண முடிகிறது. இது மட்டுமில்லாமல் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.

போர் சார்ந்த நடவடிக்கைகளால் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகின்ற அதே நேரம், சமூகத்தில் பெண்கள் அவர்கள் வாழ்கிற குடும்பத்துக்குள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது என்கிற விஷயம், பேசாப் பொருளாக அல்லது மறந்து போகிற விஷயமாக ஆகியிருப்பது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அது குறித்து ஓர் உரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். இது பற்றிய சிந்தனைகளில் அடிப்படை மாற்றம் தேவை என்பது மிக முக்கியமாகும்.

சமூக விடுதலை என்பதை, அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடாகவே பார்க்க வேண்டும். ஒவ்வொன்றாக தனித்தனியாக அல்லது ஒன்று முந்தியது, மற்றது பிந்தியது என்று பார்ப்பதென்பது பொருந்தாது. ஏனெனில், இத்தகைய நிலைகள் சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்ற சூழலில் - சமூகங்களால் புறத்திருந்தும், அகத்திருந்தும் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள் பற்றி ஒரே நேரத்தில், ஒரே தளத்தில் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியது என்பதுதான் - எதார்த்தமானதும், இயல்பானதும், பொருத்தமானதும் என்பதை நாங்கள் சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது.

இந்த வகையில் ஈழத்தில் பெண்கள் அமைப்புகள் போரினால் ஏற்படும் வன்முறைகளை எதிர்கொண்டும்; குடும்ப சமூக வன்முறைகளை எதிர்கொண்டும்; சமூகத்தின் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் தடைகளையும் சவால்களையும் கடந்து செயற்பட்டு வருவது சாதகமானதொரு நிலைமையாகும்.

சிறுவர்கள் அங்கு இயல்பாக இருக்க முடிகிறதா? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

போரின் எதிர்காலத்தை முன்னெடுப்பவர்களாக இந்த சிறுவர்களே எல்லோராலும் முன்னிறுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, ஆக்கப்பூர்வமான சக்திக்காக உள்வாங்கப்பட வேண்டிய சிறுவர்கள், போரின் அழிப்பு செயல்பாட்டு சக்தியாக உள்வாங்கப்பட்டு முன்வைக்கப்படுவதென்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. வளர்ச்சி இல்லை என்பதற்கும் மேலாக அழிவு நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காண நேரிடுகிறது. இதனால் சிறுவர்களது, இளைஞர்களது உழைப்புச் சக்தி வீணடிக்கப்படுகிறது. இது, இரட்டிப்பு பாதகமான நிலையாகக் காணப்படுகிறது. சிறுவர்கள் காண்கிற இயல்பு வாழ்க்கை வன்முறை சார்ந்ததாக உள்ளது. எனவே, அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பதும் வன்முறை சார்ந்ததாகவே இருக்கும் என்பதற்கான சாத்தியப்பாடுகள்தான் காணப்படுகின்றன. இது, மிகவும் ஆபத்தான நிலை.

ஏவுகணைத் தாக்குதல்கள், ராணுவ சுற்றிவளைப்புகள் என்ற சூழலில் வாழ்கிற சிறுவர்களுக்கு தங்களைப் போராளிகளாக நினைத்துக் கொள்வதைத் தவிர, வேறு எந்தத் தெரிவும் அவர்களுக்கு இல்லை என்பதை நாங்கள் மறுக்க முடியாது. மேலும், இப்போதுள்ள சூழலில் நிலைமை என்னவெனில், வெறுங்கையுடன் சாதாரணமாக அவலமாகச் சாவதா அல்லது போராளியாகப் போரிட்டுச் சாவதா என்கிற இருவகையான சூழலுக்குள் - வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால், தென்னிலங்கையின் அரசியல் நிறுவனங்கள் மற்றும் அதிகார மய்யங்கள் மத்தியில், சுற்றுலா மய்யங்களில் நடைபெறும் சிறுவர்களது பாலியல் தொழில் என்பது, இணையத்தளங்களில் பிரசித்தமாயிருக்கின்ற நிலையில் அதிக கவனத்தில் கொள்ளப்படாமல் உள்ளது.

சிறுவர்கள் வடகிழக்கா அல்லது தெற்கா என்பது முக்கியமில்லை. இவர்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்பதுதான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். சிறுவர்கள் படையில் சேர்வதை தவிர்த்தல் என்பதில் நாங்கள் உண்மையில் அக்கறை உடையவர்களாக இருக்கிறோமா என்பதற்கு முதல் நிபந்தனையாக, எந்தவித நிபந்தனையும் இன்றி யுத்தத்தை நிறுத்த வேண்டும். இதுதான் அடிப்படையான விஷயம். அதைச் செய்வதற்கு நாம் எவருமே தயாரில்லாமல், பாதகமான நிலைமைகள் எல்லாவற்றையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

போர்ச் சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?

போர்ச்சூழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது; மறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாகக் கூறினால், ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால், மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கின்ற கோயில்தான். உயிர் பிழைக்க ஓடி கோயிலில் தஞ்சம் புகும்போதுகூட, சாதிப்படி நிலை வெளிப்படும். ஓடி தஞ்சமடையும்போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.

இன்னொன்றையும் சொல்கிறேன். கூத்து குறித்து ஒரு அண்ணாவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பறையறிவிப்போன் குறித்து அந்தப் பேச்சு நீண்டது. அரசருடைய செய்திகளையும் உத்தரவுகளையும் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற பணியை செய்கின்றவன் பறையறிவிப்போன். அரசன் வரவை அறிவிக்கும் கவுரவமான கட்டியக் காரன் போல, அரச செய்தியைச் சொல்லும் பறை அறைவோனும் கவுரவமாகவே பணியாற்றுவது எதார்த்தமாக இருக்கும் என்றேன். அதற்கு அந்த அண்ணாவி, பறை அறைவோனை பாரம்பரியக் கூத்தில் உள்ளது போல் குடிகாரனாக, முடவனாக, அறிவில்லாதவனாக, கூடாத வார்த்தைகள் பேசி வருபவனாக அல்லாமல் கவுரவமான பாத்திரமாகக் கொண்டு வருவது பிரச்சினையில்லை. அது நல்லதுதான். ஆனால், அரசர் பிரதானிகளுடன் பறையறைவோன் கொலுவில் வர முடியாது. அதை ஏற்க மாட்டார்கள் என்றார். இப்படி ஒரு புதிய கருத்து எனக்கு அப்போதுதான் புரிந்தது. உரையாடல் களம் இருப்பதால்தான் இப்படி புதிது புதிதாய் புரியவும், உணரவும் முடிகிறது. பிறகு பேசினோம். கட்டாயம் நாம் அடுத்ததொரு கூத்தில் மன்னன் கொலு வரவில் பறையறிவிக்கும் பறையனை கட்டாயம் இடம் பெறச் செய்யும் வகையில் புதிய கூத்து எழுதப்பட வேண்டும். எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இதுவரையில் அத்தகையதான கூத்துப் பற்றிக் கேள்விப்படவில்லை.

விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களின் பங்கு எந்த அளவில் உள்ளது?

எங்களின் விடுதலைப் போராட்டத்தில் கலை வடிவங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. எல்லா கலைகளும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, விடுதலை இயக்கம் சார்ந்த கலைப்படைப்புகள் ஒரு வகையாகவும், விடுதலை இயக்கம் சாராத சமூக, மக்கள் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற கலைஞர்களது ஆக்கங்கள், படைப்புகள் ஒரு வகையாகவும் என இரு தளங்களில் நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் விடுதலை இயக்கங்களின் கலை படைப்புகள், அரசியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன. இது இன்று மேலோங்கியுள்ளது.

கலைகளில் எவை பேசப்பட்டுள்ளன, எவை பேசப்படவில்லை என்பது பற்றி ஒரு மதிப்பீடு செய்கின்றபோது, எங்களுடைய அரசியல் சூழ்நிலையில் கலைவெளிப்பாடு எவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். பிரச்சார நோக்கில் பார்க்கும்போது, எல்லா கலைச்சாதனங்களுமே மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.