Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் அவசர நிலை, சமூக ஊடகங்களுக்குத் தடை: ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அவசர நிலை, சமூக ஊடகங்களுக்குத் தடை: ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்குமா?

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கையில் அவசரச் சட்டம்

பட மூலாதாரம்,ISHARA S. KODIKARA/GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இலங்கையில் அவசரச் சட்டம் - காவலில் ராணுவத்தினர்.

இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தீவிரமாக உருவெடுத்த நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இது தவிர, 36 மணி நேர ஊரடங்கு சட்டமும் அமலில் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு முதல் இலங்கையில் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள இந்த சூழ்நிலையில், கடந்த 30ம் தேதி இரவு தன்னெழுச்சியாக கூடிய பெருந்திரளானோர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனால், சுமார் 3 கோடி ரூபாவிற்கும் அதிக சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றைய தினம் அவசர கால சட்டத்தை அமல்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

 

இளையதம்பி தம்பையா

பட மூலாதாரம்,THAMBAYA

 

படக்குறிப்பு,

மூத்த வழக்கறிஞர் இளையதம்பி தம்பையா

இந்த விடயம் தொடர்பில் மூத்த வழக்கறிஞர் இளையதம்பி தம்பையாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

இயற்கை அனர்த்தம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற நாட்டில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில், அரசாங்கத்தினால் சாதாரண சட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என கருதும் போது, அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்படும் என அவர் கூறுகின்றார்.

பாதுகாப்பு விடயங்கள், பொருளாதார விடயங்கள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற காரணிகளினால் அரசாங்கத்திற்கு சாதாரண சட்டங்களின் ஊடாக அதனை சமாளிக்க முடியாத நிலைமை வரும் போது, மேலதிகமான அடக்குமுறை சட்டமே, இந்த அவசரகால சட்டம் என அவர் குறிப்பிடுகின்றார்.

பொதுமக்கள் பாதுகாப்பு என்ற பெயரில்...

''பொதுமக்கள் பாதுகாப்பு என்ற பெயரில், அரசை பாதுகாப்பதற்கான சட்டமே இந்த அவசரகால சட்டம். இது இலங்கையில மட்டும் இல்ல. எல்லா நாடுகளிலேயும் இருக்கும். இந்தியாவை எடுத்துக்கொண்டால், 70ம் ஆண்டு காலத்தில் அவசர கால சட்டம் இருந்தது. இலங்கையிலும் 70ம் ஆண்டு காலப் பகுதியில் இருந்தது. 60களிலும் இருந்தது. 50களிலும் இருந்தது. 2012ம் ஆண்டு வரை இருந்தது.

பிரதானமாக சாதாரண சட்டத்தை கொண்டு நாட்டு மக்களை அமைதியாக வைத்திருக்க முடியாத ஒரு சூழ்நிலையில் தான் இந்த அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவது என்பது என்னுடைய பார்வை. ஆனால் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலை வரும் நேரத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கு கீழ அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்துவதாக அரச தரப்பு அல்லது ஆளும் தரப்பினர் சொல்வார்கள். அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்துவது என்பது, சாதாரண சட்டத்தில் நாட்டை ஆள முடியாத ஒரு சூழ்நிலையில் நடக்கிறது," என அவர் கூறுகின்றார்.

இது பாரதூரமான சட்டமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது பாரதூரமான சட்டம் என பதிலளித்தார்.

மக்களுடைய உரிமையை மறுக்கின்ற சட்டம் எனவும் அவர் விளக்கமளித்தார்.

 

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோட்டாபய ராஜபக்ஷ

ஒருவர் மீது நியாயமான சந்தேகம் ஏற்படுமானால், அவரை கைது செய்ய முடியும் என்ற சரத்து இந்த சட்டத்தில் உள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

யாருடைய சந்தேகத்தில் கைது செய்வது?

''நியாயமான சந்தேகத்தை யார் உருவாக்குவது என்றால், போலீஸ் அதிகாரிகள்தான். அவர்களுக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில போனதாக கூறுவார்கள். தகவல் சரியா பிழையா என்று விசாரிப்பது உடனே நடக்காது. ஆகவே இது சாதாரண நிலைமையை விட பாரதூரமான வாழ்க்கையில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும்" என இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் அடிப்படையில், அரசியலமைப்பின் ஏற்பாட்டின் அடிப்படையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு சட்ட ஆயுதம் தான் அவசரகால சட்டம் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த ஆயுதத்தையே ஆளும் தரப்பு தற்போது கையில் எடுத்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் இதற்கு முன்னர் அவசரகால சட்டம் அமலில் இருந்த காலக் கட்டத்தில் காணாமல் போனோர் விவகாரத்திற்கு யார் பொறுப்பு என்பது இன்று வரை நிரூபிக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

அவசரகால சட்டம் என்பது அரச பயங்கரவாதத்திற்கு இடமளிப்பதாக இருக்கும் என கூறும் அவர், அரசாங்கத்தின் பெயரில் வேறு சக்திகள் கூட இயங்குவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கிறார்.

எவ்வாறான சக்திகள் இயங்கினாலும், அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

இந்த அவசரகால சட்டத்தின் ஊடாக நன்மைகள் ஏதேனும் காணப்படுகின்றனவா என வழக்கறிஞரிடம், பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

 

வெறிச்சோடிய கொழும்பு நகர வீதி.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

வெறிச்சோடிய கொழும்பு நகர வீதி ஒன்று.

''என்னை பொறுத்தவரை அவசரகால சட்டம் நன்மை பயக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் கூட சாதாரண சட்டங்கள் போதுமானவை. அடக்கு முறை கூட கூடத்தான், புதுசட்டங்களும், சாதாரண சட்டங்களை விட விசேட சட்டங்களும் தேவைப்படும். பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் ஒரு கிழமைக்கு முன்புதான் திருத்தம் கொண்டு வரப்பட்டது. திருத்தம் கொண்டு வந்து, அது போதாமல் இந்த அவசரகால சட்டத்தை கொண்டு வருவது என்பது, திருத்தம் செய்ததும் போதாது என்பதைத்தான் காட்டுகின்றது" என அவர் கூறுகின்றார்.

இலங்கையில் மிக முக்கியமான அனைத்து இடங்களிலும் ராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மிக முக்கிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய ராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதுடன், மிக முக்கிய பொறுப்புகளுக்கு ராணுவ அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இலங்கையில் ராணுவ ஆட்சி கொண்டு வரப்படுவதற்கான சாத்தயம் உள்ளதாக பலரும் கூறி வருகின்ற நிலையிலேயே, அவசரகால சட்டம் அமல்படுத்தப்படுகின்றது.

 

சமூக ஊடகங்கள்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சமூக ஊடகங்களுக்குத் தடை.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை ராணுவ வீரராக கடமையாற்றிய ஒருவர் என்ற பின்னணியில், இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு இடம் உள்ளது என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில் ராணுவ ஆட்சி ஒன்று கொண்டு வர சாத்தியம் உள்ளதா என பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

ராணுவ உடையில் வந்தால்தான் ராணுவ ஆட்சியா?

''இது இலங்கைக்கு புது விஷயம் அல்ல. ராணுவ பாதை மறிப்புக்கள், பாதை சோதனைகள் என அவசரகால நிலைமைகளில் இல்லை. சாதாரண சூழ்நிலையில் கூட இருந்துட்டு இருக்கு. இலங்கையில் சட்ட ரீதியாக இல்லா விட்டாலும், நடைமுறையில பல திணைக்களங்கள் போன்ற விடயங்களில் தலைவர்களாக இருக்கிறார்கள். தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலாக இடமளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்த கொரோனா காலத்தில். அவர்கள் இலங்கையின் நிர்வாகத்தில் பிரிக்க முடியாத பங்காக வந்து விட்டார்கள்.

அரசாங்கம் அதற்குரிய ஏற்பாட்டை செய்துகொடுக்கிறது. சிவில் நிர்வாகத்தையும், ராணுவ நிர்வாகத்தையும் ஒன்றாக்கி விட்டார்கள். ஆகவே ராணுவத் தலைமை ஒன்று வந்ததால மட்டும் ராணுவ ஆட்சி வருமா? அல்லது வராமல் இருப்பதால் ராணுவ ஆட்சி இல்லையா? என நாம் பழைய வரைவிலக்கணங்களை வைத்துப் பார்க்கக் கூடாது. ராணுவ உடுப்போட ஒரு நாட்டுத் தலைவர் வந்து, நான்தான் தலைவர் என்று சொல்வது என்ற ஒரு சூழ்நிலை வந்தால் தான் ராணுவ ஆட்சி. இல்லை என்றால் ராணுவ ஆட்சி இல்லை என்று நாம் பார்க்க முடியாது. ஆனால் ராணுவ செயற்பாடுகள் கூடும்போது, ஜனநாயக ஆட்சி அல்லது சிவில் ஆட்சியில் குறைபாடு ஏற்படுகிறது. இதன்படி, இந்த அவசரகால சட்டத்தில் அவர்களுக்கு மேலும் இடமளிக்கப்படும்" என இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-60971163

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சமூக ஊடக முடக்கத்தை விமர்சித்த நாமல் ராஜபக்ஷ - உடனடியாக தளர்த்திய அரசு

6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை நெருக்கடி போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இலங்கையில் பொதுவாக ராணுவத்தினர் அமைதியை நிலைநாட்டும் பணியில் உள்ளூர் காவல்துறைக்கு உதவியாக இருப்பர். இம்முறை பொதுமக்களை படையினரே தடுத்து வைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த சமூக ஊடக சேவைகளை பயனர்கள் அணுகுவதற்கான வசதியை அரசு மீண்டும் வழங்கியிருக்கிறது.

முன்னதாக, இலங்கையில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களுக்கான அணுகுவதற்கு 36 மணி நேர கட்டுப்பாட்டை இலங்கை அரசு விதித்தது.

இது தொடர்பான ஊடரங்கு உத்தரவின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எழுத்துபூர்வ அனுமதியின்றி எந்தவொரு பொது வீதி, பூங்கா, ரயில்கள், அல்லது கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு சனிக்கிழமை மாலையில் அமல்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாட்டில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. வாட்ஸ்அப் செயலியும் பல இடங்களில் செயலிழந்தது. இவை "தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று ஒரு செல்பேசி பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை அரபு கால பாணி என்று சமூக ஊடக பயனர்கள் பரவலாக விமர்சித்தனர்.

இதில் முக்கியமானதாக இலங்கை அமைச்சரும் பிரதமரின் மகனுமான நாமல் ராஜபக்ச சமூக ஊடகங்களை முடக்கும் நடவடிக்கை விமர்சித்து வெளிப்படையாகவே தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான அவர், "முற்போக்கான முறையில் சிந்தியுங்கள்" என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "சமூக ஊடகங்களை முடக்கும் நடவடிக்கையை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே VPN வசதி இருந்தால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அது முற்றிலும் பயனற்றதாக்குகிறது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காகச் சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் சமூக ஊடகங்களில் பரவலான வரவேற்பைப் பெற்ற நிலையில், அது பகிரப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் சமூக ஊடக அணுகல் வசதியை இலங்கை தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை மீண்டும் வழங்கியது.

முன்னதாக, சமூக ஊடக அணுகலுக்கான வசதி முடக்கப்பட்டதை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக எதிர்த்தது. இது மக்களின் கருத்துச் சுதந்திரத்தின் "முக்கிய அம்சம்" என்றும், "பாரம்பரிய ஊடகங்களைப் போலவே முக்கியமானது" என்றும் கூறியது.

"பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின்" அடிப்படையில், சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துமாறு சேவை வழங்குநர்களைக் கோருவதற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு (TRCSL) "அதிகாரம் இல்லை" என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கருத்துச் சுதந்திரத்தை "நசுக்கும் வகையில்" அரசாங்கத்தின் செயல்பாடு இருப்பதாக கடுமையாக சாடினார்கள்.

ஜனாதிபதி வீடு அருகே வன்முறை

 

இலங்கை நெருக்கடி போராட்டம்

பட மூலாதாரம்,EPA

 

படக்குறிப்பு,

வியாழக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சாலைகளில் பலகைகளை எரிக்கும் போராட்டக்குழுவினர்

முன்னதாக, இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்குழுவைச் சேர்ந்த சிலர் தீக்கிரையாக்கினர். நாட்டின் எந்த பகுதியிலும் புதிய போராட்டங்களை தடுக்கும் நோக்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வீதிகளில் ராணுவம் நிலைநிறுத்தப்பட்டது. சந்தேக நபர்களை பிடியாணை இன்றி கைது செய்யும் அதிகாரம் ராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தீவிரமாகும் வன்முறை

 

இலங்கை போராட்டம் நெருக்கடி

பட மூலாதாரம்,NURPHOTO/GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கொழும்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் வாகனங்கள்

தீவு நாடான இலங்கை, தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமானது. மின் உற்பத்தி நிலையங்களில் தயாரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு மக்கள் அன்றாடம் அரை நாள் அல்லது அதற்கு மேல் மின்வெட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இத்துடன் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளுக்கும் நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்களின் கோபம், புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அவர்களின் போராட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்திற்கு வெளியே வியாழக்கிழமை அமைதியான முறையில் தொடங்கியது, ஆனால், காவல்துறையினர் போராட்டக்குழுவினரை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, இந்த மோதல்களின் போது குறைந்தது இருபத்து நான்கு காவல்துறையினர் காயமடைந்தனர்.

இந்த போராட்டம் மறுநாளான வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. அப்போது 53 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் ஐந்து செய்தி புகைப்படக்காரர்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

காவல்துறை மூலம் ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டபோதும் மக்களின் போராட்டங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி பதவி விலகக் கோரி பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு முழக்கமிட்டனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-60973776

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.