Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குநர் வஸந்த் பேட்டி: "எனக்கு நான்தான் வாத்தியார்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குநர் வஸந்த் பேட்டி: "எனக்கு நான்தான் வாத்தியார்"

  • வீ. விக்ரம் ரவிசங்கர்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வசந்த் இயக்குநர்

 

படக்குறிப்பு,

வசந்த் சாய், திரைப்பட இயக்குநர்

பெண்ணை ஆணின் கண்ணுக்கு விருந்தாகக் காட்சிப்படுத்துவது அல்லது பெண்ணை மையமாக வைத்துப் படமெடுப்பதாகச் சொல்லி, நாயகனின் சாகசங்களைத் தானும் செய்கிறவளாக வடிவமைப்பது. இந்த இரண்டைத் தவிர பெண்ணை பெண்ணாகவே காட்டி பெண்ணியம் பேசும் கதைகளைக் கையாளும் வெகு சில இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் வஸந்த் சாய்.

அவரது இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படமும் அப்படித்தான்.

வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்த மூன்று பெண்களின் மூன்று தனித்தனி கதைகளைச் சொல்லும் ஆந்தாலஜி வகைப் படம் அது. எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூவரும் எழுதிய சிறுகதைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் வஸந்த்.

ஆண்மை, பெண்மை என்று இந்தச் சமூகம் வகுத்து வைத்திருக்கிற கற்பிதங்களை இந்தப் படம் கேள்விக்குட்படுத்துகிறது. எதை ஆண்மை என நாம் கொண்டாடுகிறோமோ அது இவ்வளவு கேவலமானதா என்பதை 'பொட்டில் அடித்தது போல்' இயல்பாகச் சொல்கிறது.

 

2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்குத் தேர்வான படங்கள், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது, சிவரஞ்சனி கதாபாத்திரத்தில் நடித்த லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு சிறந்த துணை நடிகர் விருது, ஸ்ரீகர் பிரசாத்துக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது என, மூன்று தேசிய விருதுகளை வாங்குகிறது இந்தப்படம்.

படத்தின் இயக்குநர் வஸ்ந்துடன் பிபிசி தமிழ் நடத்திய நேர்காணலை, கேள்வி பதில்களாக இங்கே வழங்குகிறோம்…

சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பு- மூன்று தேசிய விருதுகள் கிடைத்திருக்கின்றன. இது நீங்கள் எதிர்பார்த்தது தானா? படம் எடுக்கும்போது, இத்தனை விருதுகள் கிடைக்கும் என்று நினைச்சீங்களா?

எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா? கண்டிப்பாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை விட, கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்னும் அதிகம் பேர் படத்தைப் பார்ப்பார்கள் என்பதால் எதிர்பார்த்தேன். அந்த வகையில், விருதுகள் கிடைத்ததில் மகிழ்ச்சி. பெண்களுக்காக எடுக்கப்பட்ட படத்தை இன்னும் நிறைய பேர் கூடுதலாகப் பார்ப்பதற்கு இந்த விருதுகள் காரணமாக இருக்கின்றன என்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த படம் வெளியாகும் முன்பே பல சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்திருந்தது. படம் உருவாகும்போது குறிப்பிட்ட பிரிவில், விருது உறுதி என்று நினைத்தீர்களா? அப்படியென்றால் அது எந்த பிரிவு?

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது முதல் படத்தில் இருந்தே, விருதுக்காக படம் எடுப்பதை நான் விரும்புபவனும் அல்ல. அதை நம்புபவனும் அல்ல. நோக்கம் அதில் இருக்கக் கூடாது. செய்வதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். செடியை வளர்க்க விரும்புபவன், தினமும் அந்தச் செடியைப்பிடுங்கி வளர்கிறதா என்று பார்த்தால், அது வளராது. ஏமாற்றம்தான் மிஞ்சும்.

எனக்குப் பிடித்ததை எடுக்கிறேன். எனக்குள் ஒரு சவாலை உருவாக்கிக்கொண்டு, அதை எவ்வளவு தூரம் எதிர்கொள்ள முடியும் என்று நானே சோதித்துப் பார்க்கிறேன், அவ்வளவுதான். அதுபோன்ற படைப்புகளை நானே தயாரிப்பதும் அதற்காகத்தான்.

 

இயக்குநர் வஸந்த் நேர்காணல்

உங்கள் படத்திற்கான கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கான கதைத்தேர்வு எப்படி நடந்தது?

நான் படத்திற்காக கதைகள் படிக்கவில்லை. கதைகளை எழுதுவதும், படிப்பதும் எனக்குப் பிடிக்கும். எனது அன்றாட நடவடிக்கைள் அவை. இந்தப் படத்திற்காக தேர்வு செய்த இந்த கதைகளும் நான் இப்போது படித்தவை அல்ல. எனது 20 வயதில் படித்திருக்கிறேன், 40 வயதில் படித்திருக்கிறேன், ஒவ்வொரு முறை படிக்கும்போதும் என்னுடைய முதிர்ச்சிக்கு ஏற்ற தாக்கத்தை இந்தக் கதைகள் ஏற்படுத்தின. எனது திருமணத்திற்கு முன் இந்தக் கதைகளை நான் படித்தபோது ஒரு தாக்கம் ஏற்பட்டது. திருமணத்திற்கு பின் படித்தபோது வேறொரு தாக்கம் ஏற்பட்டது. இப்படி, எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தை படமாக்கினேன்.

அதை முடிந்தவரை எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் படமாக்க ஒவ்வொரு முறையும் தொடர்ந்து முயற்சிக்கிறேன். என்னால் முடியுமா என்று நானே செய்து பார்க்கும் முயற்சிதானே தவிர, வேறொன்றுமில்லை. எனது பார்வையில், அப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில், `வாழ்` படத்தின் இயக்குநர் அருண் பிரபுவை நான் பாராட்டுகிறேன். அந்தப் படமும் இன்னும் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அருவி என்கிற படத்தைக் கொடுத்த அவர், அதற்கு அடுத்ததாக எடுத்த முயற்சிக்கு எனது பாராட்டுகள்.

 

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் பிரதான கதாபாத்திரங்களான, சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி மூவரும் காலத்தால் வேறுபட்டாலும் இரண்டாம் பாலினமாக ஒடுக்கப்படுவதில் ஒரே கோட்டில் நிற்கிறார்கள். ஆண்களுடன் வாழும் பெண்கள் அனைவரது நிலையும் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றுதானா?

அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. 'இந்த கேள்வி கேட்டால்' அதுதான் நீங்கள். இன்னும் இதுபோல், கதை சார்ந்தோ, கதாபாத்திரம் சார்ந்தோ என்னென்ன கேள்விகள் யார் யாருக்குத் தோன்றுகிறதோ, அது அவர்களது எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்குமே தவிர, அதை நான் சொல்வதாக ஆகிவிடாது. ஆதே சமயம், அவரவர் எண்ணங்களையும், கருத்துக்களையும் நான் மதிக்கிறேன். ஆனால், நான் நினைத்ததை படத்தில் சொல்லிவிட்டேன். அதுதான் அந்தப் படம். அதில் எல்லாம் இருக்கிறது. ஜெயகாந்தன் அருமையாகச் சொல்வார், ``கதையில் சொல்லாததையா நீங்கள் கேட்கும்போது சொல்லப் போகிறேன்`` என்று. அப்படித்தான் அது.

உங்கள் முதல் படமான கேளடி கண்மணி, ஆசை, அப்பு, ரிதம், சத்தம் போடாதே, நேருக்கு நேரில் 'அண்ணி' கதாபாத்திரம், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நாயகனின் 'தாயார்' கதாபாத்திரம் என, பெண்களுடைய உளவியல் சார்ந்த சிரமங்களை ஒவ்வொரு முறையும் இவ்வளவு அழுத்தமாக தொடர்ந்து பதிவு செய்வதற்கான காரணம் என்ன?

நான் அதை கவனித்ததுதான் காரணம். பெண்களின் வாழ்க்கையோ, நிலையோ அப்படி இல்லை என்று யாரும் சொல்ல முடியாதே… உங்கள் அம்மாவைப் பற்றிய காட்சிகள்தான் அவை, என் அம்மாவை பற்றிய காட்சிகள்தான் அவை. தினமும் காலையில் எழுந்து குழந்தைகளை கிளப்பி பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, கணவர் வேலைக்குச் செல்லும்வரை அவருக்கு தேவையானதைச் செய்வது, வீட்டு வேலைகளை கவனிப்பது, பெரியவர்களை கவனிப்பது என, இதிலேயே அவர்கள் சுழல்வதைப் பார்க்கையில், இதில் ஏதோ ஒன்று இருக்கு. காட்சிப்படுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றியது. எடுத்தேன், எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதில் கூட கைத்தட்டல்கள் வாங்க முடிகிறதே… இந்தப் படத்தில் கூட, இறுதிக்காட்சிக்கு முன் சிவரஞ்சனிக்கு கிடைத்த கைத்தட்டல்களை அப்படித்தான் நான் பார்க்கிறேன்.

திடீரென ஆந்தாலஜி பக்கம் திரும்பியது ஏன்? இந்தக் கதையை ஆந்தாலஜியாதா எடுக்கணும்னு நினைச்சதுக்கு காரணம் என்ன?

எல்லாத்தையும் முயற்சி செய்யுறது எனக்குப் பிடிக்கும். இந்தக் கதைகளை இணைத்து ஹைபர்லிங்க் படமாகக் கூட எடுத்திருக்க முடியும். நவீனமாகவும் கொடுத்திருக்க முடியும். அதையெல்லாம் தாண்டி, இதை ஒரு கிளாசிக் சினிமாவாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன், செய்தேன். அப்படிச் செய்யவேண்டும் என்று எனக்குள் இருந்த பிடிவாதம்தான் அதைச் செய்ய வைத்தது. இன்னும் சொல்லப்போனால், ஒரே கதையாகச் செல்வதைவிட, இந்த விஷயத்தை 3 கதைகளில் சொல்லும்போது தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நம்பினேன். அதோடு, எனக்குப் பிடித்த மூன்று எழுத்தாளர்களின் கதைகளும் கூட.

அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூன்று பேரின் கதைகளைத் தழுவிய திரைக்கதைதான் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். இந்த மாதிரி சிறுகதைகள், இலக்கியங்கள மெயின் ஸ்ட்ரீம்க்காக ஒரு முழுநீள படமா காட்சிப்படுத்துறதுல என்னென்ன சவால்கள் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

முழு நீள படமான்னு கேட்டால் இல்லை… காட்சிப்படுத்துறதுனாலே சவால்தான். ஏனென்றால் அது வேறு ஒருவர் எழுதிய கதை. இன்னொருவரின் கதையை காட்சிப்படுத்துவது என்றாலே சவால்தானே. என்னைப் பொறுத்தவரை, என்னால் எழுதாமல் படமெடுக்க முடியாது. ஒரு ரைட்டர் டைரக்டர் ஆகத்தான் என்னை நான் பார்க்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் பிடித்த கதைகளை எடுக்கத் தோன்றியது. என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு, ஒரு விஷயத்தை செய்யத்தூண்டுவது நானேதான். எனக்கு நானே வாத்தியார் என்கிற வகையில், எனக்குப் பிடித்த கதை படமாக வரவில்லை என்றால், என்னை நானே ஏன் என்று கேட்டுக்கொள்வதுண்டு, கோபப்படுவதும் கூட உண்டு. அந்தக் கேள்விக்கான விடையாகத்தான் படித்த பிடித்த கதைகளை எடுக்கிறேன். அதையும் பெர்பெக்டாக எடுக்க வேண்டும் என்று நானே என்னை வற்புறுத்துகிறேன். பெர்பெக்ஷன் என்பது என்னைப்பொறுத்தவரை பெர்சப்ஷன் தான். யாராவது ஒருவருக்கு அது புரியும். அந்த ஒருவருக்காக பெர்பெக்ஷன் அவசியப்படுகிறது.

உதாரணத்திற்கு கேளடி கண்மணி படத்தை கூறலாம். மொத்த கதையையும் இரண்டே ஷாட்டில் சொல்லியிருப்பேன். அதை நான் சொன்னால்தான் பலருக்குப் புரியும். அனாதை ஆசிரமத்திற்குச் சென்ற குழந்தைய அழைத்துவர எஸ்.பி.பி-யும், ராதிகாவும் ஒரு குடையில் செல்வார்கள். வரும்போது குழந்தையும், எஸ்.பி.பி-யும் மட்டும் குடைக்குள் இருப்பார்கள், ராதிகா தனியாக நிற்பார். யாராவது இருவர் மட்டுமே அந்தக் குடையில் இருக்க முடியும், இதுதான் அந்தப் படத்தின் மொத்தக் கதை. இதைச் செய்ய வேண்டும் என்று யாரும் என்னை கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. ஆனால், ஒரு மேடையில் இதைக் குறிப்பிட்டுப் பேசினார் பாரதிராஜா. அந்தத் தருணம்தான் எனக்குத் தேவைப்பட்டது.

 

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்

ஓடிடி தளங்கள் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து ஆந்தாலஜி வகை படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஒவ்வொருவருக்கும் ஒன்னொன்னு பிடிக்கும். அதில் ஆந்தாலஜி வகை என்பதும் ஒன்று, அவ்வளவுதான். இதை நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். நான் தனியாக மூன்று கதைகளை எடுத்திருக்கலாம். ஆனால், இந்த பார்மட்டில், நான்கைந்து பேர் சேர்ந்து ஆளுக்கொரு கதையாக படமெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. குறைந்த பொருட்செலவில் எடுக்க முடிகிறது. ஆனால், குறும்படத்திற்கும் ஆந்தாலஜிக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுக்கொரு ஷார்ட்பில்ம் பண்ணா ஆந்தாலஜி என்று எண்ணிவிடக் கூடாது. அந்தக் குறுங்கதையை எந்தளவுக்கு எபக்டிவ்வா சொல்ல முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டு. அப்போதுதான் சினிமாவின் தரத்தைப் பராமரிக்க முடியும்.

மூன்று தசாப்தங்களை கண்ட இயக்குர் நீங்கள்… இத்தனை ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் பார்வையில் வளர்ச்சி என்றால் என்ன?

நன்றாகவே வளர்ந்திருக்கிறது. வித்தியாசமான கதைகள் சொல்வதிலும், நம்ம ஊர் கதைகளைச் சொல்வதிலும் பலர் கவனம் செலுத்தி வருவது ஆரோக்கியமான விஷயம்தான். அதே சமயம், சினிமாத்துறை தொழில்நுட்ப ரீதியில் எந்தளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறதோ, அதற்கு ஈடுகொடுத்து, அதையெல்லாம் பயன்படுத்தி, அதன் மூலம் வித்தியாசமான கதைகளையும், நம்ம ஊர் கதைகளையும் சொல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-62294123

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய திரைப்பட விருதுகள் 2022-ல் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வென்ற Lakshmi Priyaa Chandramouli பிபிசிக்கு அளித்த நேர்காணல்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை பாதித்த சிவரஞ்சினி கதாபாத்திரம்: நடிகை லக்ஷ்மிபிரியா பேட்டி

  • ஹேமா ராக்கேஷ்
  • பிபிசி தமிழுக்காக
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சிவரஞ்சினி

 

படக்குறிப்பு,

லக்ஷ்மிபிரியா

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை லஷ்மிபிரியா சந்திரமௌலிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் தான் கடந்த வந்த பாதை மற்றும் அனுபவங்கள் குறித்து பிபிசி தமிழுக்காக பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் லக்ஷ்மிபிரியா சந்திரமௌலி.

கிட்டத்தட்ட 10 வருடங்கள் சினிமாவில் இருக்கீங்க? விருது அறிவிக்கப்பட்ட நெகிழ்ச்சியான தருணம் எப்படி இருந்தது ?

மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனக்கு மிகச் சிறந்த அங்கீகாரம் கூட. ஏதோ மற்ற நாள் போல அல்லாமல் இது என் வாழ்வின் சிறந்த நாள்.

"சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் " விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சிவரஞ்சினி கேரக்டர் எந்தளவிற்கு உங்களை ஈர்த்தது?

 

சிவரஞ்சினி என்னை போலவே இருந்த ஒரு கதாபாத்திரம். எனக்கு சிவரஞ்சினி போன்று பலரை தெரியும். எனக்கும் விளையாட்டு பின்னணி இருந்ததால் கூடுதலாக இந்த கதாபாத்திரத்தை பிடித்தது.இயக்குனர் வசந்த் அவர்களுக்கு இது முக்கியமான படம். நான் நினைத்தது அனைத்தும் இந்த படத்தில் கொண்டு வரப்போவதாக தெரிவித்திருந்தார். இந்த படத்தின் முக்கியத்துவம் மற்றும் இந்த படத்திற்கான உழைப்பை பார்க்கும் போது நான் இந்த படத்தில் இருப்பதே எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. இயக்குநரின் ஒரு 'கனவு படத்திற்காக' நான் எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன். அதனால் என் சினிமா வாழ்வில் "சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்" ஓர் முக்கியமான படம்.

இந்த படத்தில் நீங்கள் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை. இதற்காக சிறப்பு பயிற்சி எடுத்து கொண்டீர்களா?

எனக்கு சிறப்பு பயிற்சி எதுவும் தேவைப்படவில்லை. காரணம் நான் ஏற்கெனவே விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்திருந்ததால் எனக்கு அடிப்படைகளில் எந்த சிரமமும் இருக்கவில்லை. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் தேசிய அளவில் தடகள போட்டிக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர் இருந்தார், என்னுடைய பயிற்சிகளை பார்த்துவிட்டு, உங்களுக்கு சிறப்பு பயிற்சி ஏதும் தேவையில்லை என்று சொல்லி விட்டார்.

இந்த படத்தில் உங்கள் வாழ்க்கையை பிரதிபலித்த காட்சிகள் ஏதாவது இருந்ததா?

நிச்சயமாக. படத்தில் ஒரு காட்சி - லாங் ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும். சிவரஞ்சினி காலையில் என்னென்ன வேலைகளை செய்வார் என்ற காட்சி அது. அதில் முழுக்க என்னுடைய அம்மாவை பொருத்திப் பார்க்கிறேன். என் அம்மா அப்படித் தான் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பின்னர் அலுவலகம் புறப்படுவார். என் அம்மாவின் 30 வருட காலை பொழுதுகள் இப்படியாகத்தான் இருந்திருக்கின்றன. நான் இந்த காட்சியில் நடித்த போது தான் என் அம்மா எப்படி இருந்திருப்பார் என முழுமையாக உணர்ந்தேன்.

 

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்

நான் மோசமான முடிவுகளை எடுத்திருக்கிறேன் என இந்த உலகம் சொன்ன போது என் அம்மா என்னை முழுமையாக நம்பினார் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தீர்கள் ? அம்மா எந்த அளவிற்கு உங்களுக்கு பக்கபலமாக இருந்தார்?

100 சதவீதம் என் அம்மா எனக்கு பக்கபலமாக இருந்தார். நடிப்பு தான் என்னுடைய தொழில் என்று முடிவு செய்த போது எனக்கு அதற்கான பக்குவம் இருந்ததா என்று தெரியவில்லை. நீங்கள் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதற்குரிய pattern-படி நீங்கள் செயல்பட முடியும். முன்கூட்டியே நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என உங்களுக்கு தெரியும். ஆனால் சினிமா அப்படியல்ல. இங்கு நம் கையில் எதுவும் இல்லை. எனக்கும் என் குடும்பத்திற்கும் சினிமா குறித்த எந்த பின்னணியும் இல்லை. அதனால் எல்லாருமே விமர்சனம் செய்தார்கள். ஒரு கட்டத்தில் யாரும் என்னிடம் பேசாதவாறு எனக்கு அரணாக நின்றார்கள். அம்மா அனைவரிடமும் சொன்ன ஒரே வார்த்தை என் பெண் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அது அவளுடைய விருப்பம் என்று சொன்னார். அந்த நம்பிக்கையை இப்போது காப்பாற்றி இருக்கிறேன். அன்று பல கேள்விகளை கேட்டவர்கள் இன்று என் அம்மாவிடம் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள், என் அம்மா அவர்களிடம், நான் தான் அன்றே சொன்னேனே என் பெண் ஜெயிப்பாள் என்று பெருமிதத்துடன் சொல்கிறார். அதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

தேசிய விருது அங்கீகாரத்திற்கு முன்னர் நீங்கள் கடந்த வந்த பாதை எந்த அளவிற்கு கடினமாக இருந்தது?

கலைத்துறையில் நீங்கள் பல இடங்களில் மறுக்கப்படுவீர்கள், ஒதுக்கப்படுவீர்கள். உங்களை எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் 100 இடங்களுக்கு ஆடிஷன் போனால் 4 இடங்களில் மட்டும் தான் தேர்வு செய்யப்படுவீர்கள். மறுக்கப்படுவது என்பது உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிடும். இந்த துறையை பொறுத்தவரை யாராக இருந்தாலும், எப்படிபட்டவராக இருந்தாலும் இதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இதையெல்லாம் தாண்டி தான் நாம் வெற்றி பெற வேண்டும்.

துணை நடிகைகள் சிரமங்களை சந்திக்க கூடிய சூழல் இருக்கிறதா?

எனக்கு முன்னணி நடிகை, துணை நடிகை போன்ற பட்டங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. முதலில் அடிப்படையில் நான் ஒரு நடிகை. எனக்கு முன்னணி கதாபாத்திரம் கொடுத்தால் நான் முன்னணி நடிகை. துணை நடிகை கதாபாத்திரம் கொடுத்தால் துணை நடிகை. . கதாபாத்திரங்களில் தான் வித்தியாசமே தவீர மனிதர்களில் அல்ல. கேமரா முன் நிற்கும் போது அனைவரும் சேர்ந்து நடித்தால் தான் அந்த காட்சி வெற்றி பெறும். இந்த துறையில் பிரச்சனை எல்லாருக்கும் தான் இருக்கிறது.

 

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்

" சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் " படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தவர்களில் முக்கியமானவர்கள் யார்?

பல பேர் தொலைபேசி வாயிலாக வாழ்த்தினார்கள். நான் தான் அந்த சிவரஞ்சனி என அக்கா, அண்ணி, சித்தி என பல நிலையில் இருந்து பெண்கள் தெரிவிக்கும் போது, அந்த கதாபாத்தித்தை சிறப்பாக செய்ததற்கு மகிழ்ச்சியடைவதா அல்லது இன்னும் இத்தனை சிவரஞ்சிகள் இருக்கிறார்களே என்று கவலையடைவதா என்று தெரியவில்லை.. சிவரஞ்சினி கதாபாத்திரத்தை தத்ரூபமாக செய்திருக்கிறேன் எனறு பெருமை கொள்கிறேனே தவீர இத்தனை சிவரஞ்சினிகள் இருக்கிறார்கள் என்று கவலையாகத்தான் இருக்கிறது.

யாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது?

எனக்கு நடிகை ரேவதி, ஊர்வசி, பகத்பாசில், கனி, காளீஸ்வரி, பார்வதி ஆகியோருடன் நடிக்க ஆசை உள்ளது. ஏனென்றால் பலருடன் நடிக்கும் போது பல அனுபவங்களை நம்மால் பெற முடியும் மிக முக்கியமாக நடிகர் கமலுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட காலமாக இருக்கிறது.

உங்கள் வாழ்க்கை பயணம் மூலமாக இன்றைய பெண்களுக்கு சொல்லும் விஷயம்?

பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நான் சொல்லக்கூடிய மிக முக்கியமான விஷயம் உங்கள் உழைப்பு மற்றும் தனித்தன்மைக்கு என்றுமே ஒரு அங்கீகாரம் உண்டு.என்ன நடந்தாலும் அடுத்த நாள் காலை எழுந்து நம் வேலையை பார்க்க வேண்டும். எது நடந்தாலும் நம் உழைப்பை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். அர்ப்பணிப்போடு நம்முடைய வேலையை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் ஒரு நாள் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-62349276

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பேட்டியை படித்தது மகிழ்ச்சி........!  👍

நன்றி ஏராளன் ......!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.