Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எப்போதும் எதிர்க்கவில்லையா? விமர்சனங்கள் வலுப்பது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எப்போதும் எதிர்க்கவில்லையா? விமர்சனங்கள் வலுப்பது ஏன்?

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

எட்டு வழிச்சாலை திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்ச்சைக்குரிய சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எட்டு வழிச்சாலை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு ஏப்ரல் மாத சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் திட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டாலும், அந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் அறிவிப்பு வந்தால், அதற்கு எதிராக குரல்கள் ஒலிக்கத் தயாராக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

சமீபத்தில் சென்னை நகரத்திற்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க சென்னை புறநகர் பரந்தூர் பகுதியில் ஆய்வு நடத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு, பரந்தூரில் உள்ள விவசாயிகளின் கருத்துகளைப் பெற்ற பிறகுதான் திட்டம் செயல்படுத்துவது குறித்துப் பேசப்படும் என்று தெரிவித்தார். அதேநேரம், சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தும் போது எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது அதே திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலு, எட்டு வழிச்சாலை திட்டத்தில் வரம்புகள் மீறி விவசாயிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் திமுக எதிர்ப்பு தெரிவித்தது என்றும் சாலை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு திமுக என்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பேசினார். அதோடு, எட்டுவழிச்சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட்டதை ஏற்கெனவே சட்டமன்றத்தில் அமைச்சர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தைப் பற்றிய விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

எட்டு வழிச்சாலை திட்டம்

முந்தைய அதிமுக ஆட்சியின்போது 2018-இல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ், சுமார் ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் என்றும் 277 கிமீ சாலை அமைக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.

ஆறு மாவட்டங்களில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழகம் முழுவதும் அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், மேல்முறையீடு செய்தபோது, தமிழக அரசு சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்த ஆதரவான தீர்ப்பு வந்தது.

பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டபோது, விவசாயிகள் ஊடகங்களில் கதறி அழுது தங்களது விவசாய நிலங்களை அழிக்கக்கூடாது என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர், அதில் சிலர் கைதாகினர். அப்போது, அதிமுக அரசின் செயல்பாடுகளை திமுக கண்டித்துப் பேசியது. தற்போது, அந்தத் திட்டத்தை ஆறுவழிச்சாலை திட்டமாகச் செயல்படுத்த முன்வந்துள்ளதுதான் சர்ச்சையாகியுள்ளது.

 

சிவப்புக் கோடு

 

விவசாயிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

 

படக்குறிப்பு,

2020ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் 8 வழிச் சாலைக்காக நில அளவீடு செய்யப்பட்ட பாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி நடத்திய ஆர்ப்பாட்டம்

திமுகவின் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது?

திமுகவின் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி பட்டியலில், விவசாய நிலங்களை விவசாயிகளின் ஒப்புதலின்றி கையகப்படுத்தி வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது தடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குறுதி எண் 43இல், ''விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளை நிலங்கள் பாதுகாக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னை- சேலம் விரைவுப் பாதை திட்டத்தைச் செயல்படுத்த நினைத்தாலும், முழுமையான முறையில் விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது.

 

சிவப்புக் கோடு

சென்னை -சேலம் விரைவுப் பாதைக்கு எதிரான வழக்கு

எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசத்திடம் பேசினோம். எட்டுவழிச்சாலை திட்டத்தில் பல நீர்நிலைகள், வயல்கள் மற்றும் பல இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்படும் என்பதால் வழக்கு தொடர்ந்ததாகக் கூறுகிறார்.

''2020இல் நான் சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் பகுதிகளின் தகவல்களைக் கொண்டு வழக்கு போட்டேன். மீண்டும் நாம் உருவாக்க முடியாத இயற்கை வளங்களைக் காப்பாற்ற வேண்டும். விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த சாலை திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். நீதிபதி சிவஞானம் அளித்த தீர்ப்பில், சுற்றுச்சூழல் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்ட பின்னர்தான் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தற்போது அந்தத் திட்டம் ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதிக்காத வகையில்தான் சாலைகள் அமைக்கப்படும் என்றால் நான் அந்த திட்டத்தை எதிர்க்க வாய்ப்பில்லை,'' என்கிறார்.

மேலும், ''வளர்ச்சி திட்டங்கள் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் தேவைதான். அவற்றைக் கொண்டு வரும்போது, பொதுமக்களின் ஒப்புதலுடன், அவர்களை விரட்டியடிக்காமல், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் சாலைகள் அமைந்தால் நன்மைதான். விவசாயிகளின் நிலங்கள் அவர்களிடம் இருந்து அராஜகமான முறையில் கையகப்படுத்தப்படுவதற்கு என்றும் எதிர்ப்பு உள்ளது,'' என்கிறார்.

 

திருவண்ணாமலை அருகே 8 வழிச் சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

 

படக்குறிப்பு,

2020ஆம் ஆண்டில் திருவண்ணாமலை அருகே 8 வழிச் சாலைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம்

விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

சேலத்தைச் சேர்ந்த விவசாயி மாரியம்மாள் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தற்போதும் அந்த எதிர்ப்பை மனதில் உறுதியாக வைத்திருக்கிறார். ''இங்குள்ள விவசாய பூமி எங்கள் குடும்ப சொத்து. இந்த நிலத்தை நாங்கள் இழக்க முடியாது. பலமுறை நஷ்டம் ஏற்பட்டபோதும் கூட இந்த நிலத்தில் தொடர்ந்து நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எட்டுவழிச்சாலை ஆறுவழிச்சாலையாக மாறினாலும் எங்கள் நிலத்தை நாங்கள் தருவதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம். இந்தத் திட்டம் எங்களுடைய நிலம் வழியாக வருவதை ஏற்க மாட்டோம். ஒருவேளை மாற்றுப் பாதைகள் அமைத்து, விவசாய நிலங்கள் பாதிக்கப்படவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளலாம். எங்கள் சொந்த மண்ணை நாங்கள் இழக்கத் தயாராக இல்லை,'' என்கிறார் விவசாயி மாரியம்மாள்.

அதேநேரம், திமுகவின் தோழமை கட்சியான சிபிஎம் கட்சியில் சென்னை - சேலம் விரைவுச்சாலைக்கு எதிர்ப்பு இருப்பதை அறியமுடிகிறது. எட்டு வழிச்சாலை திட்டம் ஆறு வழிச்சாலையாக மாறினாலும் அங்குள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்கிறார் திமுகவின் தோழமை கட்சியான சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

 

விவசாயிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

''சென்னை - சேலம் விரைவுச்சாலை திட்டத்தை திமுக கொண்டு வருமா என்பது சந்தேகம்தான். முதலில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள திமுக, இந்தத் திட்டத்தை முன்னெடுக்க வாய்ப்பில்லை. இதுவரை அதிகாரபூர்வமாக அந்தத் திட்டம் பற்றிய எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை என்பதால், அது ஓர் ஊடக விவாதம் என்ற நிலையில்தான் உள்ளது,'' என்கிறார் பாலகிருஷ்ணன். மேலும், அந்த சாலை திட்டம் ஒன்றிய அரசின் திட்டம்தான் என்றும் அதை உடனடியாகச் செயல்படுத்தும் வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.

''எட்டுவழிச்சாலை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து ஆறுவழிச்சாலையாக மாற்றினால்கூட, விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு இருக்கும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது என்பதால், அதை முன்னெடுக்காது என்பது எங்களின் ஊகம். ஆனால் அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், விவசாயிகளின் எதிர்ப்பு பலமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது,'' என்கிறார் அவர்.

ஆனால், முதலில் சென்னை - சேலம் விரைவுச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது அதே திட்டத்தைக் கொண்டு வருகிறது என்றும் முன்னர் எதிர்ப்பு தெரிவித்ததாக திமுக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ''எட்டு வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று இப்போது திமுக அரசு உணர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களிடம் அவிழ்த்துவிட்ட பொய்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்று தனது அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-62706067

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேலம் எட்டு வழிச்சாலை சர்ச்சை: 'இந்த நிலத்தில் எங்களின் ரத்தம் இருக்கிறது' - விவசாயிகளின் குரல்

  • நந்தினி வெள்ளைச்சாமி
  • பிபிசி தமிழ்
6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

போராட்டம்

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

"இந்த நிலம் எங்களின் பூர்வீக உயிர். எங்கள் வியர்வையை ரத்தமாக இந்த நிலத்தில் கொடுத்திருக்கிறோம். சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் வந்தால் இந்த பூர்வீக உயிரை பறிகொடுத்தது போல் உணர்வோம்".

சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை குறித்து அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு எதிர்வினையாக பெண் விவசாயி ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு குறித்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் எ.வ.வேலு, "திமுக சாலை போடுவதற்கு எதிரியல்ல. விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களுக்கு என்ன தேவை எனப் புரிந்துகொண்டு பிரச்னையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள், அல்லது மாற்று வழி காணுங்கள் என்பதைத்தான் திமுகவின் கொள்கையாக வைத்திருந்தோமே ஒழிய எட்டு வழிச்சாலையைப் போடக்கூடாது என்று திமுக எந்தக் காலத்திலும் சொல்லவே இல்லை" என்று பேசியுள்ளார்.

எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டதை ஏற்கெனவே சட்டமன்றத்தில் அமைச்சர் பதிவு செய்துள்ளார். இருப்பினும், முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக இதை முழுமையாக எதிர்த்ததா இல்லையா என்ற விவாதத்தை அவருடைய இந்தப் பேச்சு தொடங்கி வைத்துள்ளது.

 

திமுகவின் முரசொலி நாளிதழில் குறிப்பிட்டுள்ளதன்படி, 2018, ஜூலை மாதம் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவுகள், சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை சரிபார்த்ததன் அடிப்படையில், திமுக இத்திட்டத்தை எதிர்த்ததும், ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படாது என வாக்குறுதி அளித்ததும் உண்மை என நிரூபணமாகியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு, 2018-ம் ஆண்டில் இத்திட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாய மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இத்திட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடிய சில விவசாயிகளிடம் பிபிசி தமிழ் பேசியது. திமுக இத்திட்டத்தைக் கொண்டு வர முயற்சி எடுத்தால் போராட்டம் முன்பிருந்ததைவிட தீவிரமாக இருக்கும் என்கின்றனர் இவர்கள்.

"இந்த நிலம் எங்களின் பூர்வீக உயிர்"

சேலம் மாவட்டம் சின்னகவுண்டாபுரம் பஞ்சாயத்தில் உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவகாமி என்பவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "விவசாயம்தான் எங்களின் பிரதான வாழ்வாதாரம். இந்த திட்டம் வந்தால் எங்களின் இரண்டு ஏக்கர் பரம்பரை நிலம் பறிபோய்விடும். நான்கு தலைமுறைகளாக எங்கள் நிலத்தில் விவசாயம் செய்தியிருக்கிறோம். நானே 20 ஆண்டுகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்திருக்கிறேன். விவசாயம் மூலம் தான் எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம்.

இத்திட்டம் வந்தால் எங்களின் ஊரில் பாதி அழிந்துவிடும். எங்களின் பிள்ளைகளின் வாழ்க்கையே இதனால் பாதிக்கப்படும். இனி நாங்கள் வேறு எந்த வேலைக்காவது எங்களால் செல்ல முடியுமா?" என்கிறார் சிவகாமி.

ஆடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சிவகாமியின் கணவருக்கு விபத்து ஏற்பட்டு காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவிக்கும் சிவகாமி, தங்கள் குடும்பத்தினர் அனைவருடைய பிரதான தொழிலாக விவசாயமே இருப்பதாக தெரிவிக்கிறார்.

 

சேலம் எட்டு வழிச்சாலை

 

படக்குறிப்பு,

விவசாயி கவிதா

"எங்கள் நிலத்தில் சோளம், வேர்க்கடலை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகிறோம். நாங்கள் விவசாயத்தை நம்பி பிழைப்பவர்கள். இதில் 10 பேருக்கு வேலையும் தருகிறோம். இத்திட்டம் வந்தால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்" என தெரிவித்தார் சிவகாமி.

மேலும், "எங்களின் நிலம் சாலையோரத்தில் வருவதால் அதன் மதிப்பு குறைந்துவிடும். 2018இல் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் இன்னும் போகவில்லை. எங்களைவிட இத்திட்டத்தால் வீடுகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். இத்திட்டத்தால் வீடுகள் போய்விட்டால் என்ன செய்வதென்று தெரியாத பலரின் குடும்பங்களில் பேசி முடிக்கப்பட்ட திருமணங்கள் பல நின்று போயிருக்கின்றன" என கூறுகிறார் சிவகாமி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தெளிவுபட விளக்கம் சொல்லாதது இன்னும் மன உளைச்சலாக இருப்பதாக சிவகாமி கூறுகிறார்.

"இந்த நிலத்தை எங்களின் பூர்வீகமான உயிராக நினைக்கிறோம். என் மாமனார், மாமியாருக்கு 75-80 வயதாகிறது. இன்னும் இந்நிலத்தில்தான் உழைக்கிறார்கள். எல்லோரும் எங்கள் வியர்வையை ரத்தமாக இந்த நிலத்தில் கொடுத்திருக்கிறோம். எங்கள் ஒவ்வொருவரின் ரத்தமும் அந்த நிலத்தில் இருக்கிறது. தேவையான சாலையாக இருந்தால் நாங்களே ஒத்துழைப்போம். சாலைகளை அகலப்படுத்தும்போது நாங்கள் எதிர்க்கவில்லை. தேவையில்லாத சாலை என்பதால் தான் இவ்வளவு போராட்டங்கள் நடத்துகிறோம்" என முடிக்கிறார், சிவகாமி.

"சிட்டிசன் அத்திப்பட்டி போன்று ஆகிவிடும்"

 

சேலம் எட்டு வழிச்சாலை

 

படக்குறிப்பு,

குடும்பத்தினருடன் கவிதா (வலது ஓரம் இருப்பவர்)

ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த கவிதா என்ற விவசாயி கூறுகையில், "எங்களின் ஏழரை ஏக்கர் நிலம் இத்திட்டம் வந்தால் பறிபோய்விடும் ஆபத்து உள்ளது. இதில்தான், எங்கள் மாமனாரின் உடன் பிறந்த 4 சகோதரர் குடும்பங்களும் சேர்த்து விவசாயம் செய்துவருகிறோம்.

எங்கள் ஊரில் 250 வீடுகள் இருக்கின்றன. இந்த திட்டம் வந்தால் 'சிட்டிசன்' படத்தில் அத்திப்பட்டி என்ற ஊர் காணாமல் போனது போன்று ராமலிங்கபுரம் என்கிற எங்கள் ஊர் காணாமல் போய்விடும்.

அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்தை ஆதரித்து முதலமைச்சர் எதுவும் சொல்லாததால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். இத்திட்டத்தைக் கையிலெடுத்தால் முன்பு நடைபெற்ற போராட்டங்களைவிட தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்போம்" என தெரிவித்தார் கவிதா.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

"தள்ளிப்போகும் திருமணங்கள்"

எட்டுவழிச்சாலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரான சேலம் பூலாவரி கிராமத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் கூறுகையில், ""இத்திட்டத்திற்கு எதிராக திமுகவே முந்தைய ஆட்சியில் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. சேலத்தில் திமுக துணைச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். சேலம் முதல் காஞ்சிபுரம் வரை எட்டுவழிச்சாலை வரும் மாவட்டங்களில் உள்ள எம்.பிக்களை வைத்து கூட்டம் நடத்தினோம். அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.இதனால்தான் திமுக வெற்றி பெற நாங்கள் பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதற்காக விவசாயிகள் நாங்கள் பணியாற்றினோம்.

திட்டம் வந்துவிட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டு கட்டுமான வேலைகளை பாதியில் நிறுத்திவைத்திருக்கிறேன். பல விவசாயிகள், அவர்களின் குடும்பங்களில் உள்ள ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண்ணே கிடைப்பதில்லை. நிலம் போய்விட்டால் என்ன செய்வார்கள் என்று பெண் வீட்டார் யோசிக்கின்றனர். நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு விவசாயியும் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறோம்" என்றார்.

சேலம் ஆச்சங்குட்டப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் என்ற விவசாயி கூறுகையில், "நானும் திமுககாரன் தான். ஆனால், இத்திட்டத்தை திமுக அரசு முன்னெடுத்தால் நிச்சயம் எதிர்ப்போம். போராட்டங்கள் கடுமையானதாக இருக்கும்" என்றார். 

https://www.bbc.com/tamil/india-62718154

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.