Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொட்டி மீன்கள்: நலிவடைந்த இலங்கை தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் குறும்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டி மீன்கள்: நலிவடைந்த இலங்கை தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் குறும்படம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,யூ.எல். மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 13 ஜனவரி 2023
மணிவாணன்

'தொட்டி மீன்கள்' எனும் குறுந்திரைப்படம் - எல்லைகள் கடந்து பல்வேறு தரப்பினரின் கவனங்களையும் ஈர்த்திருக்கிறது. இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள இந்தப் படத்தை நடராஜா மணிவாணன் இயக்கியிருக்கிறார்.

தேசியளவில் சிறந்த திரைப்படமாகத் தேர்வாகியுள்ள 'தொட்டி மீன்கள்', 'மதுரை சர்வதேச குறுந்திரைப்பட விழா' உள்ளிட்ட பல தளங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மணிவாணன் - ஆரம்பத்தில் வானொலி ஊடகவியலாளராகப் பணியாற்றினார். அப்போது சில வரையறைகள் காரணமாக - தமது ஊடகத்தில் சொல்வதற்கு முடியாமல் போன கதைகள் அவரிடம் இருந்தாகக் கூறுகிறார். அவற்றை சுதந்திரமாக வெளியிடுவதற்கு ஒரு தளம் அவருக்குத் தேவைப்பட்ட போது, குறுந்திரைப்படத்துறையை அவர் தேர்வு செய்தார்.

'தேஞ்ச செருப்பு' என்கிற குறுந்திரைப்படத்தை 2010ஆம் ஆண்டு முதன்முதலாக மணிவாணன் உருவாக்கினார். தமது அடையாளத்திற்காகப் போராடும் படைப்பாளிகள் சந்திக்கின்ற - அனைத்து விதமான இன்னல்களையும் எதிர்கொண்ட மணிவாணன், இப்போது 'தொட்டி மீன்கள்' என்னும் - இன்னொரு படைப்பைத் தந்திருக்கிறார்.

 

இலங்கை சினிமாத்துறை

இலங்கையின் தமிழ் திரைப்படத்துறை - கிட்டத்தட்ட முழுவதுமாக நலிவடைந்துவிட்டது. எப்போதாவது ஓரிரு படங்கள் வெளியாவதுண்டு. அவையும் பெரிதாகக் கவனம் பெறுவதில்லை.

ஆனால், ஒரு காலத்தில் - இலங்கையின் தமிழ் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தோட்டக்காரி (1963), நான் உங்கள் தோழன் (1978), வாடைக் காற்று (1978), அனுராகம் (1978) உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்னும் நினைத்துப் பேசப்படுபவை.

இந்திய தமிழ் சினிமாப் பாடல்களுக்கு நிகராக, இலங்கை தமிழ் திரைப்படப் பாடல்கள் - 'இலங்கை வானொலி'யில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டன. மக்களும் அவற்றை விரும்பிக் கேட்டனர்.

மறுபுறமாக இலங்கை - இந்திய கூட்டுத் தயாரிப்பிலும் சில தமிழ் திரைப்படங்கள் உருவாகின. தீ (ரஜினிகாந்த் கதாநாயகன்), நங்கூரம் (முத்துராமன்), பைலட் பிரேம்நாத் (சிவாஜி கணேசன்) போன்றவை - அவற்றில் சில. 'நங்கூரம்' திரைப்படத்திற்கு இலங்கையின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் பிரேமசிறி கேமதாச, வி. குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்திருந்தனர்.

பிற்பட்ட காலங்களிலும் அவ்வப்போது இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் உருவாகின. ஆனால், அவை சோபிக்கவில்லை. தரமில்லாமை, இந்திய சினிமாக்களின் நகலாக இருந்தமை, நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை போன்றவை - அதற்குப் பிரதான காரணங்களாக அமைந்தன.

இன்னொருபுறம் 'இந்திய தமிழ் சினிமா' என்னும் பிரமாண்டத்தை மீறி, இலங்கை தமிழ் படங்கள் - தமக்கான கவனத்தைப் பெறுவதென்பதும் மிகக் கடினமானதாகவே இன்னும் இருக்கிறது.

ஆனால், சிங்கள திரைப்படங்களின் நிலை அப்படியல்ல. அவற்றுக்கு குறிப்பிடத்தக்க பார்வையாளர் தளமொன்று இலங்கைக்குள்ளேயே இருக்கிறது. அது மட்டுமன்றி, சிங்கள திரைத்துறை தனக்கென்று ஒரு தனித்துவத்தையும் உருவாக்கி வைத்துள்ளது.

மேலும், உலகளவில் கவனிப்புக்கு உள்ளாகும் வகையிலான சிங்கள திரைப்படங்களும் வெளியாகியுள்ன. இயக்குநர் பிரசன்ன விதானகே போன்றவர்களின் திரைப்படங்கள் - சர்வதேச விருதுகள் பலவற்றைப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

இப்படியான பின்னணியில்தான் - இலங்கையில் தமிழ் திரைத்துறைப் படைப்பாளிகள் - தங்கள் படங்களை உருவாக்குவதற்கும், தமக்கான அடையாளங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் போராடிக் கொண்டு வருகின்றனர்.

மணிவாணன்

யார் இந்த மணிவாணன்?

இவ்வாறான படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் நடராஜா மணிவாணன். தனது படைப்புகளை எந்தவித சமரசங்களுக்கும் இடமளியாமல் தனித்துவத்துடன் வெளிக்கொண்டு வருவதற்காக நீண்டகாலம் இவர் போராடி வருகின்றார்.

பண்டாரளையை சொந்த இடமாகக் கொண்ட மணிவாணன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். திரைப்பட உருவாக்கம், அது தொடர்பான தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் பரந்த அறிவுடையவர். ஊடகம், திரைத்துறை, ஒளிப்பதிவு போன்றவற்றில் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

2003ஆம் ஆண்டு வானொலியொன்றில் அறிவிப்பாளராக இணைந்து கொண்டதன் மூலமாக மணிவாணனின் ஊடகப் பயணம் ஆரம்பித்தது. 2007ஆம் ஆண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றில் இணைந்து, யுத்தப் பகுதிகளில் பணியாற்றியபோது, இவர் கண்ட பல விஷயங்களும், கேட்ட கதைகளும் இவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தொட்டிமீன்கள் படப்பிடிப்பு தளம்

'நிம்மதி என்ன விலை' - இவரின் இன்னொரு குறும்படம். 2011ஆம் ஆண்டு வெளியானது. தொழில் ரீதியாக - சில ஆவணப்படங்களையும் இவர் உருவாக்கியுள்ளார்.

விவாதத்திற்குரிய விஷயமொன்றை கருவாகக் கொண்டு, 2016ஆம் ஆண்டு 'முதற்கனவே' எனும் வெப் சீரிஸ் (Web series) ஒன்றையும் மணிவாணன் இயக்கினார். 12 அங்கங்களாக அது வெளிவந்தது.

கோவிட் காலப்பகுதியில் பமிலி பக்கேஜ் (Family Package) எனும் பெயரில் குறும்படமொன்று இவரின் படைப்பாக வந்தது. இப்போது மணியின் இயக்கத்தில் 'தொட்டி மீன்கள்' வெளிவந்திருக்கிறது.

தொட்டி மீன்கள்

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் மட்டுமே 'தொட்டி மீன்கள்' ஓடுகிறது. கோவிட் காலத்தில் - வீட்டினுள்ளே அடைந்து கிடக்கும் ஒரு பிள்ளை, பரபரப்பான வாழ்க்கைக்குள் சுழன்று கொண்டிருக்கும் பெற்றோரிடம், தனக்கான அரவணைப்பைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதை "தொட்டி மீன்களாக" உருவாக்கியுள்ளார் மணிவாணன்.

படத்தில் அம்மா, அப்பா, அவர்களின் பெண்பிள்ளை மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் என்று நான்கு பாத்திரங்கள் மட்டுமே உள்ளன. முடிவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது குறியீட்டு பாத்திரத்தின் ஊடாக, மணியின் அபாரமான படைப்பாற்றல் வெளிப்பட்டிருக்கிறது.

'தொட்டி மீன்களில்' செயற்கைத்தனங்கள் இல்லை. படம் முடியும்போது, நம் வீட்டுப் பிள்ளைகளை அள்ளியெடுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல் - ஓர் உணர்வு எழுகிறது.     

ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. ஒவ்வொருவரும் இயல்பாக நடித்துள்ளார்கள். அதிலும் பிரதான கதாபாத்திரமான பெண் பிள்ளை 'ஆரண்யா'வின் நடிப்பு மிக நன்றாக உள்ளது. அம்மா, அப்பாவாக நவயுகா, கேதீஸ்வரன் ஆகியோரும், பக்கத்து வீட்டு சிறுவனாக ஆர். அக்ஷயனும் நடித்துள்ளார்கள். பாத்திரங்களை விடவும் காட்சிகள் பார்வையாளர்களுடன் அதிகம் பேசுகின்றன.

படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் பத்மயன் வழங்கியுள்ள பின்னணி இசை.

விருதுகள்

தொட்டி மீன்கள் படப்பிடிப்பு தளம்

சிறந்த குறும்படங்கள், அவற்றுடன் தொடர்புபட்ட படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை இலங்கையில் பாராட்டி, கௌரவிக்கும் 'அஜன்டா 14' (Agenda 14) விருது வழங்கும் விழாவில், 'தொட்டி மீன்கள்' - இரண்டு விருதுளைப் பெற்றிருக்கிறது.

'வருடத்தின் சிறந்த குறுந்திரைப்படம்' (Best Film Of The Award) எனும் விருதுடன், பிரதான கதாபாத்திரத்தில் நடித்த ஆரண்யாவுக்கு சிறப்பு விருதும் (Special Mention for Performance Award) வழங்கப்பட்டுள்ளது.

'அஜன்டா 14' (Agenda 14) விருது வழங்கும் விழாவின் இறுதிச்சுற்றுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவான 35 திரைப்படங்கள் தேர்வாகியிருந்தன. அவற்றிலிருந்தே 'தொட்டி மீன்கள்' விருது பெற்றிருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற' அந்த விழாவில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அஜன்டா 14' (Agenda 14) விருதுகளை வழங்கி வைத்தார்.   

இது இவ்வாறிருக்க, 'மதுரை சர்வதேச குறுந்திரைப்பட விழா'விலும், கடந்த டிசம்பர் மாதம் 'தொட்டி மீன்கள்' திரையிடப்பட்டது.    

"கணிசமான படங்கள் பிரசார தன்மை கொண்டவை"

தன்னுடைய சினிமா கனவுகள், அதற்கான பயணம் மற்றும் அனுபவங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்ட இயக்குநர் மணிவாணன், தனித்துவத்துடனும் சமரசங்கள் இன்றியும் தனது படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளதாகக் கூறினார்.

இலங்கை தமிழ் திரைப்படங்கள் குறித்துப் பேசிய அவர், ”இங்கு வெளியான படங்களில் கணிசமானவை பிரசாரத் தன்மை கொண்டவை" என்கிறார். மேலும், யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளில் சுதந்திரமான சினிமாக்கள் உருவாக்கப்படுவதற்கு சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்பினர் தடையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

எந்தவித வரம்புகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், தனது படைப்புகளைச் சுதந்திரமானவையாக உருவாக்க வேண்டும் என்பதே மணிவாணனின் விருப்பமாக இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cv24wye5vrxo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.