Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச வலைக்குள் பேரினவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச வலைக்குள் பேரினவாதம்

-சி.இதயச்சந்திரன்-

சீனா, பாகிஸ்தான் என்ற இரு புள்ளி மையத்துடன் மூன்றாவதாக இலங்கை இணையும் போது முக்கோணம் உருவாகப் போகிறது.

பாகிஸ்தான் குவாடார், பங்களாதேஷ் சிட்டக்கொங், இலங்கை அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி வடிவில் சீனாவின் கால் ஆழமாகப் பதியப்படுகிறது. ஏற்கனவே மேற்குலகம் அவுஸ்திரேலியா, சீனா பாகிஸ்தான் மற்றும் தனித்துவ இந்தியா என்கிற ஏதாவதொரு அச்சில் இலங்கை இணைக்கப்படலாமென்று பல ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டது.

சீனா, ரஷ்யா, இந்தியா என்ற முச்சக்திக்கூட்டு ஏற்படுவதை தடுப்பதற்கு அமெரிக்க வல்லரசு தன்னால் இயன்ற சகல வழிகளையும் கையாளுமெனக் கணிக்கப்பட்டது.

அதேவேளை, இக்கூட்டு ஏற்படாதிருக்க, போர் ஒத்திகைகள், அணு ஆயுத ஒப்பந்தங்கள் ஊடாக இந்தியாவை தம்பக்கம் இழுக்க அமெரிக்க முயலுமென்பதும் எதிர்பார்க்கப்பட்ட விடயமே. அதற்கான இராஜதந்திர நகர்வுகளை அமெரிக்கா ஆரம்பித்து விட்டது.

வௌ;வேறு நலன்சார் நோக்கங்களைக் கொண்ட இந்த மூன்று சக்திகளையும் ஒரே நேரத்தில் கையாண்டு வந்த இலங்கைக்கு அதைக் கையாள முடியாத நிலையொன்று ஏற்படுகிறது.

வங்காள விரிகுடாவில் நடந்த பாரிய போர் ஒத்திகையில் அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் பங்குகொண்டாலும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய நாடு அவுஸ்திரேலியாவே.

அது மேற்குலகின் நிரந்தர நண்பன். ஆயினும் ஜப்பான் தேசமானது அமெரிக்காவின் பொருளாதாரக்கூட்டாளி. தன்னைச் சுற்றி சீனாவின் ஆயுத அச்சுறுத்தல் ஏற்படும்போது அமெரிக்காவின் பலம் தேவைப்படுகிறது.

தற்போது தென்னாசியப் பிராந்தியத்தின் குவிமையமாகவும், கடல்வழித் தலைவாசலாக திகழும் இலங்கையைச் சுற்றி புதிய வலைப்பின்னலொன்று மேற்குலகின் தலைமையில் உருவாக்கப்படுகிறது.

இவ்வகையான சதுரங்கக் காய்நகர்த்தல்கள் இலங்கையை மையப்படுத்தி நிகழாவிட்டாலும், அதன் பங்கும் இதில் முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கை எப்பக்கம் முழுமையாகச் சாயும் என்பதைப் பொறுத்தே இம் முக்கியத்துவம் தீர்மானிக்கப்படும்.

இந்நகர்வினால் உருவாகும் புதிய தென்னாசிய படைவலுச் சமநிலையில் சீனாவின் பக்கம் சாய இலங்கை விரும்பினாலும், விடுதலைப் புலிகளின் தமிழீழக் கோரிக்கையை அழித்தொழிக்க எல்லோருடைய அனுசரணையும் தேவைப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவுடன் நேரடியான முரண் நிலையை இலங்கை உருவாக்காது. அதன் பிரதிபலிப்பாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அண்மைய நேர்காணலை நோக்கலாம்.

இந்தியா நீண்டகால நட்பு நாடு. இந்தியாவிற்கெதிராகத் தளம் அமைக்க எவரையும் விடமாட்டோம். தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வரை அது நடக்காது என்று கூறுகிறார் ஜனாதிபதி மஹிந்த.

சீனாவுடன் தமது முழுமையான அடையாளத்தை இனங்காட்டினால் மேற்குலக இந்தியக் கூட்டு தமிழர் தாயகப் பக்கம் திரும்பி விடலாமென்பதே சிங்களத்தின் அச்சம்.

ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஆயுத இறக்குமதி தொடர்பான சீன சார்பு நிலை குறித்து வெளிப்படையாகவே தனது அதிருப்தியை இந்தியா தெரிவித்திருந்தது.

கண் தெரியாத குருட்டு ராடர்களை தந்து இந்தியா தம்மை ஏமாற்றி விட்டதென சிங்கள ஊடகங்களும் அரச மந்திரிகளும் சாடியதை இந்தியா வெறுப்புடனே நோக்கியது.

சீனா, பாகிஸ்தானைக் காண்பித்து, எத்தனை நாளைக்குத்தான் இந்திய ஆயுதங்களை இலங்கையால் பெற முடியும்? தென்னாசியப் பிராந்தியத்தில் சீனாவிற்கெதிரான பலமான மேற்குலகக் கூட்டு இந்தியாவிற்கு கிடைக்கும் வரை இந்த வெட்டி ஓடும் விளையாட்டு இரு தரப்பிலும் நிகழும்.

பேரினவாதச் சிந்தனையில் ஊறியுள்ள சிங்களத் தலைமைக்கு, சீன சார்பே பொருத்தமாக இருக்கிறது.

மனித உரிமை மீறல் குறித்து கண்டனம் தெரிவிக்கும் மேற்குலகும், போர் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதெனவும், கூட்டு கடல் ரோந்து ஒப்பந்தத்தில் இணைய முடியாதெனக் கூறும் இந்தியாவும், இலங்கை அரசாங்கத்துக்கு பொருத்தமான நாடுகளாக அமையாது. தான் செய்பவற்றை கேள்விக்கிடமற்று ஏற்றுக்கொள்ளும் பிராந்தியக் கூட்டே இவர்களுக்குத் தேவை. அதற்கு சீனா பாகிஸ்தானே பொருத்தமான தெரிவு.ஆயினும் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு இன்னொரு வகையான பிரச்சினையுண்டு. தமிழர் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் இருக்கக் கூடாது. அத்தோடு தென்னிலங்கையில் சீனா காலூன்றக் கூடாது.

யதார்த்தபூர்வமாக நோக்கினால், மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு சக்திகளையும் இந்தியாவால் நீக்கவும் முடியாது. விடுதலைப் புலிகளைப் பலவீனமாக்கி, இலங்கை அரசாங்கம் பலமாக மாறினால், அந்நிலை சீனாவிற்கே இறுதியில் சாதகமாக மாறலாம்.

ஆயினும் தமிழர் போராட்டம் வெற்றியடைந்தால், அதனால் ஏற்படும் களநிலை மாற்றம் இந்தியாவிற்கு சாதகமான சூழலையே உருவாக்குமென்பதை அவர்கள் உணர முடியாத நிலையில் உள்ளார்கள்.

தென்னிலங்கையில் தமக்கு எதிரான முரண்நிலை பூதாகரமாகும் வரை, விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களையும் தடைகளையும் தொடர்ச்சியாக பிரயோகிக்கவே மேற்குலக இந்தியக் கூட்டு விரும்புகிறது. அவ்வாறான முரண்நிலை தென்னிலங்கையில் அதிகரிக்க முன்பாக, தமிழர் தலைமையை தமது நலனிற்கும் பிராந்திய அபிலாஷைகளுக்கும் ஏற்றவாறு பதப்படுத்த வேண்டுமென்பதே இவர்களின் நடைமுறைச் செயற்பாடாகிறது.

சில கூட்டுக்களை உருவாக்கி, மாற்றுச் சக்தியொன்று இருப்பதான தோற்றத்தை மிதக்க விடுவதும், பேசாமல் தீர்க்க முடியாதென காலத்தை இழுத்தடிப்பதும், அதேவேளை மனித உரிமை மீறல் குறித்த கரிசனை தமக்கு உண்டென்று சில நகர்வுகளை திட்டமிட்டு மேற்கொள்வதும், புரியப்பட வேண்டிய விடயமாகிறது.

ஆரம்ப காலத்திலிருந்து சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம் வரை பயங்கரவாதமாகப் பரப்புரை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் போராட்டம், ஒப்பந்தத்திற்குப் பின்னரும் அவ்வாறே பார்க்கப்படும் நிலை தொடர்ந்தாலும் அரச பயங்கரவாதம் குறித்த பார்வையொன்றும் மனித உரிமை மீறல்களுக்கூடாக தோற்றம் பெறுவதை அவதானித்தல் வேண்டும்.

கடலடி நீரோட்டம் போன்ற அசைவு நிலையொன்று பார்வைக்குள் நேரடித் தரிசனம் இல்லாமல், தென்னாசிய பிராந்திய புதிய முகாம்களின் உறவு நிலையோடு முகிழ்ந்து வருகிறது.

அரச பயங்கரவாதப் பரிமாணங்கள் முதிர்ச்சியடையும் நிலையைத் தவிர்ப்பதற்கு, மனித உரிமைமீறல் அழுத்தங்களும் பொருளாதார நிதியுதவிகளை கட்டுப்படுத்துதலும் துணை புரியுமென மேற்குலகு எண்ணுகிறது.

அதேவேளை, ஆட்சி அதிகாரத்தை, மாற்றீடு செய்யக்கூடிய எதிரணிகளை ஒருங்கிணைத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாமா எனவும் சில புதிய முயற்சிகள் இவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

பரம்பரை அரசியலின் தற்காலக் குறியீடாக இருக்கும் இறுதி நபரான சந்திரிகாவின் மீள் வருகையூடாக ஆட்சி மாற்றத்தை உருவாக்க முயற்சிக்கப்படலாம்.

மேற்குலக இந்தியக் கூட்டுக்குள், ரணிலும், சந்திரிகாவும் அதிகார மையத்தைப் பெற இணைக்கப்படுவது கடினமான விடயமல்ல. ஆயினும் தனித்துவம் பேண இந்தியா விரும்பும் பொழுதே ரணில் சந்திரிகா இணைவு சாத்தியமற்றதாக அமையும்.

இருப்பினும் அதிகார ஆதிக்கக் கட்டுக்குள் மூழ்கியுள்ள படைத் தரப்பும் ஆளும் வர்க்கமும் புதிய அணி உருவாவதை அனுமதிக்க விரும்பாது.

ரணில் மஹிந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கட்சி உடைபட்டு பலவீனமான நிலைக்கு யூ.என்.பி. தள்ளப்பட்டதை நல்ல உதாரணமாகக் கொள்ளலாம்.

கிழக்குப் படை நடவடிக்கைகளின் பின்னர் எழுந்த போரிற்கான சிங்கள ஆதரவு எழுச்சி, ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக்கு 95 வீதமான வாக்குப் பலத்தினை உருவாக்கியுள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இந்நிலையில் போர்ப் பிரசாரம் தவிர்ந்த ஏனைய சமாதான பேச்சுக்களை முன்னிறுத்தும் எதிரணிகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனோநிலையில் சிங்கள மக்கள் இருப்பார்களாவென்று தெரியவில்லை.

போரின் ஊடாக புலிகளை வெல்லலாமென்கிற இனவாதப் போதையில் படைத்தரப்பும், தென்னிலங்கை மக்களும் அமிழ்ந்து போயுள்ளனர்.

அமைச்சரவையில் ஜே.வி.பி. இணைந்திருந்த காலத்தில் அநேக பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதால் அதற்கான அரச செலவினங்கள் கூடிய நிதிப்பற்றாக்குறையை உருவாக்கியுள்ளதாக அரச அமைச்சர் போர் விரும்பிகளுக்கு விளக்கமளிக்கிறார். ஒரு எறிகணையின் பெறுமதி, பத்து பேரின் வேலை வாய்ப்பை விழுங்குமென முன்னர் ஒருவர் கூறியது நினைவிற்கு வருகிறது. போர் நடத்தும்படி கருத்துக் கூறிய 95 வீதமான மக்களுக்கு அமைச்சரின் பதில் நிச்சயம் மகிழ்ச்சியை வழங்க மாட்டாது.

பௌத்த சிங்கள பேரினவாத மயக்கத்தை போர் வெற்றிகள் மூலம் தக்க வைத்து, அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளலாமென மஹிந்த ஆட்சி நடத்தும் ஆக்கிரமிப்புக்கள் நிரந்தரமானதல்லவென்று சிங்களம் உணரும் போது சகலதும் இழக்கப்பட்ட நிலை அம்மக்களுக்கு ஏற்படலாம்.

பேரினவாதம், போர் வெறி என்கிற புலிவாலைப் பிடித்தாகி விட்டது. அதிகார அத்திவாரமும் இவ்விரண்டு நிலைகளின் மீது கட்டப்பட்டுள்ளது. வாலை விட்டு, சமாதானம் பேசினால், இடத்தை நிரப்ப, அதிவேக சமாதான பந்து வீச்சாளர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

ஆகவே, பேரினவாதம் பற்றிப் புரியாத மாவோவின் வாரிசுகளிடம் சரணடைவதே போர் வெறிச் சிங்களத்தின் நிலையைத் தக்க வைக்கும். தென்னாசிய அணுசக்தி வல்லரசுகள் இருகூறாகும் சீனா முகாமிற்குள் இலங்கை இணையக்கூடும், அதுவரை இன அழிப்பிற்கு முகங் கொடுக்காமலும் தமிழர் தலைமையினை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தாமல் அசமந்தமாக இருந்தால், தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகள் நீர்த்துப் போகலாம்.

சர்வதேசமெங்கும் காத்திரமான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய காலத்தின் தேவையை இம்மாற்றங்கள் உணர்த்துகின்றன. விடுதலைப் புலிகள் இறுதிப் போரை ஆரம்பித்து நில மீட்பினை துரிதப்படுத்த வேண்டுமென எதிர்பார்ப்போர், தமிழர் தரப்பு நியாயப்பாடுகளை உலகிற்கு உரத்துக் கூற வேண்டிய காலமிது.

விடுதலைப் புலிகளின், போராட்டம் குறித்த சர்வதேச பார்வையும், சர்வதேச நாடுகளின் நலன் பற்றிய புரிதலும் உணரப்படும் வரை, புலிகளின் இராஜதந்திரத்தை எடைபோட முடியாது.

சமர்க்களத்தில் மட்டுமல்லாது, சர்வதேச அரசியல் களத்திலும் தமக்கு சாதகமான சூழல் உருவாகும் வரை புலிகள் பொறுமை காக்கிறார்கள்.

வங்காள விரிகுடா கடற்போர் ஒத்திகைகள் சில முக்கியமான செய்திகளை உணர்த்துகின்றன. இராஜதந்திரக் களத்தின் நுண்ணரசியலை புரிந்துகொள்ள, அதில் பங்குகொள்ளும் அணிகளுக்கிடையேயுள்ள முரண்பாடுகளையும், நீண்டகால மூல உபாயங்களையும் தெரிந்து கொள்ளல் வேண்டும்.

முரண்பாடுகளுக்கிடையே உருவாகும் பாதகமான கூறுகளே, அசாதாரண சூழ்நிலை நிலவுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (16.09.07)

செய்திகள் இங்கே.....

http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/17.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.