Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்டார்டிகாவில் அதிவேகமாக உருகும் பனி - பூமி ரேடியேட்டராக மாறப் போகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நிபுணர்கள் எச்சரிக்கை

பட மூலாதாரம்,DR ROBBIE MALLET

படக்குறிப்பு,

பனிக்கட்டிகள் அதிவேகமாக உருகி வருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட், பெக்கி டேல் மற்றும் எர்வான் ரிவால்ட்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இருக்கும் பனி, இதற்கு முந்தைய குளிர் காலத்தில் இருந்ததை விட மிகவும் குறைவாக உள்ளது என்பதை செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. ஒரு காலத்தில் புவி வெப்பமடைதலைத் தடுக்கும் விதத்தில் இருந்த ஒரு பகுதி குறித்த கவலையளிக்கும் தகவலாக இது பார்க்கப்படுகிறது.

"இது இதுவரை நாம் பார்த்த எந்த ஒரு தரவையும் விட மோசமான தரவாக உள்ளது. உண்மையில் இது பெரும் கவலையளிக்கும் தரவாகவே பார்க்கப்படுகிறது," என அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பனி மற்றும் அது குறித்த தரவு மையத்துடன் கடல் பனியை கண்காணிக்கும் வால்டர் மெயர் கூறுகிறார்.

ஒரு நிலையற்ற அண்டார்டிகா பனிக்கண்டம், நீண்ட கால அடிப்படையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்திருப்பதாக துருவப் பகுதிகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிக்கட்டி, பூமியின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்திவருகிறது. ஏனெனில் அதில் உள்ள வெண்மையான மேற்பரப்பு சூரியனின் ஆற்றலை மீண்டும் வளிமண்டலத்திற்குப் பிரதிபலிக்கிறது என்பதுடன் அதன் கீழும், அருகிலும் உள்ள தண்ணீரை குளிர்வித்துக்கொண்டிருக்கிறது.

அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனி, பூமியைக் குளிர்விக்க முடியாமல் போனால், அக்கண்டம் பூமியின் குளிர்சாதன பெட்டி என்ற நிலையில் இருந்து மாற்றமடைந்து, பூமியின் ரேடியேட்டராக மாறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அண்டார்டிக் பெருங்கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பனிக்கட்டி இப்போது 17 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. அதாவது செப்டம்பர் மாத சராசரியை விட 1.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பனி குறைவாக உள்ளது. மேலும் முந்தைய குளிர்காலத்திலேயே மிகவும் குறைந்த அளவு இருந்தாலும், அதைவிட தற்போது குறைவாக உள்ளது.

இது பிரிட்டிஷ் தீவுகளை விட ஐந்து மடங்கு பெரிய பனிக்கட்டியின் ஒரு பகுதி என்பது கவனிக்கத்தக்கது.

 
நிபுணர்கள் எச்சரிக்கை
படக்குறிப்பு,

அண்டார்டிகா கடல் பகுதியில் உள்ள பனிக்கட்டிகளின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

இது போன்ற சூழ்நிலையில், ஏற்கெனவே உருகி தண்ணீராக மாறிவிட்ட பனி கணிசமான அளவிற்கு மீண்டும் உருவாகும் என்று டாக்டர் வால்டர் மெயர் நம்பத் தயாராக இல்லை.

இந்த ஆண்டு கடல்-பனி இந்த அளவுக்குக் குறைந்ததற்கான அனைத்து காரணிகளையும் அடையாளம் காண ஆய்வாளர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அண்டார்டிகா பகுதியில் என்ன நடந்து வருகிறது என்பதையும், அதன் போக்குகளையும் தெரிந்துகொள்வது வரலாற்று ரீதியாக சவால் மிக்க ஒன்றாக இருக்கிறது.

ஓராண்டில் உலக அளவில் பரவியிருக்கும் வெப்பம் குறித்து இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், கடல் பனி குறித்து மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என சில விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

அண்டார்டிக் தீபகற்பத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவரும், மனிடோபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராபி மாலெட் கூறுகையில், "இது எவ்வளவு எளிதாகப் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது," என்றார்.

ஏற்கெனவே ஒரு குழுவுடன் அன்டார்டிகாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இப்படி பனி உருகி, குழுவினருடன் அவர் தங்கியிருக்கும் பகுதி மிகவும் இலேசாக மாறியுள்ளது என்றும், இதனால் அவர் வசிக்கும் பகுதி அக்குழுவினருடன் சேர்ந்து கடலில் மூழ்கிவிடும் ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இது அவரது குழுவின் பணியை மேலும் கடினமாக்கியுள்ளது. "அந்த பனிப்பகுதி உடைந்து எங்களுடன் கடலுக்குச் செல்லும் அபாயம் உள்ளது," என்று டாக்டர் மாலெட் கூறினார்.

 
நிபுணர்கள் எச்சரிக்கை

பட மூலாதாரம்,DR ROBBIE MALLET

படக்குறிப்பு,

காற்று மிகக்குறைந்த வேகத்தில் வீசும் போது, நிலாஸ் எனப்படும் இதுபோன்ற மிக மெல்லிய பனிக்கட்டிகள் உருவாகின்றன.

கோடையில் பெருமளவில் அண்டார்டிகா கண்டத்தின் பனி உருகும் முன் அங்கு நிலவும் குளிர்காலத்தில் (மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை) கடல்-பனி உருவாகிறது. மேலும் இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்பின் ஒரு பகுதியாக மாறுகிறது. இது பனிப்பாறைகள், நிலப் பனி மற்றும் பெரிய பனிக் கட்டிகளையும் கொண்டுள்ளது - கடற்கரையிலிருந்து வெளியேறும் நிலப் பனிக்கட்டிகள் பின்னர் தண்ணீரில் மிதக்கும் பனிக்கட்டிகளாக மாறுகின்றன.

கடல்-பனி நிலத்தை மூடியிருக்கும் பனிக்கட்டிக்கு ஒரு பாதுகாப்பு உறைபோலச் செயல்படுகிறது என்பதுடன், கடல் வெப்பமடைவதைத் தடுக்கிறது.

பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கரோலின் ஹோம்ஸ், கடல்-பனி சுருங்கி வருவதால் ஏற்படும் பாதிப்புகள் கோடைகாலம் வரும்போது தெளிவாகத் தெரியலாம் என்றும், அப்போது பனி உருகுவதைத் தடுக்க முடியாததற்கான காரணம் குறித்து மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்றும் கூறினார்.

மேலும் கடல்-பனி மறைந்துவிடுவதால், அது கடலின் இருண்ட பகுதிகளை வெளிக்காட்டுகிறது. இது சூரிய ஒளியை பிரதிபலிப்பதற்கு மாறாக அதை உறிஞ்சுகிறது. அதாவது வெப்ப ஆற்றல் தண்ணீரில் சேர்க்கப்படுகிறது. இது மேலும் அதிக பனியை உருகச் செய்கிறது. விஞ்ஞானிகள் இதை பனி-ஆல்பிடோ விளைவு என்று அழைக்கிறார்கள்.

இது பூமியை அதிக வெப்பமடையச் செய்யலாம். இதன் விளைவாக, உலகளாவிய வெப்பநிலையை ஒழுங்குபடுத்திவரும் அண்டார்டிகாவின் வழக்கமான செயல்கள் சீர்குலையும்.

 
நிபுணர்கள் எச்சரிக்கை
படக்குறிப்பு,

பனிக்கட்டியாக உறைந்துகிடக்கும் அண்டார்டிகாவைச் சுற்றிலும் கடல் பனிக்கட்டிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன.

"உறங்கிக்கொண்டிருக்கும் அண்டார்டிகா என்ற ராட்சசனை நாம் எழுப்புகிறோமா?" என்று எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் பேராசிரியர் மார்ட்டின் சீகெர்ட் கேள்வி எழுப்புகிறார். இது "உலகிற்கு ஒரு முழுமையான பேரழிவாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார்.

அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என ஏற்கனவே உலகம் அச்சத்துடன் உற்று நோக்கிவருகிறது என்றும், இந்த மோசமான சூழ்நிலை இனி, மேலும் மோசமாகும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்றும் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞானி பேராசிரியர் அன்னா ஹாக் கூறுகிறார்.

1990 களில் தொடங்கி, அண்டார்டிகாவில் இதுவரை பனிக்கட்டிகள் உருகியதால் கடல் மட்டம் 7.2 மில்லி மீட்டர் உயர்ந்துள்ளது.

கடல் மட்டங்களில் மிதமான அதிகரிப்புகள் கூட, கடலோர சமூகங்களை அழிக்கக்கூடிய அபாயகரமான, அதி உயர அலைகளை உருவாக்கும். கணிசமான அளவு நிலப் பனி உருகத் தொடங்கினால், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அதன் தாக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தும்.

நீரால் சூழப்பட்ட ஒரு தனிப் பனிக்கண்டமாக விளங்கும் அண்டார்டிகா, அதற்கென்று தனியான வானிலை மற்றும் காலநிலை அமைப்பைக் கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு வரை அண்டார்டிகாவின் குளிர்கால கடல்-பனி உண்மையில் வளர்ந்து வந்தது.

ஆனால் மார்ச் 2022 இல் கிழக்கு அண்டார்டிகாவை ஒரு தீவிர வெப்ப அலை தாக்கியது. இதனால், வெப்பநிலை -50C க்கு அருகில் இருக்க வேண்டும் என்ற நிலையைக் கடந்து, -10C வரை அதிகரித்தது.

"30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அண்டார்டிகாவைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கிய போது, அங்கு தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் நடக்கலாம் என்று நாங்கள் நினைக்கவே இல்லை," என்கிறார் பேராசிரியர் சீகெர்ட்.

இந்த ஆண்டு உள்பட கடந்த ஏழு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளின் போது கடல்-பனி கோடையில் வரலாறு காணாத அளவுக்கு உருகியது.

சில விஞ்ஞானிகள் இந்த அளவுக்கு பனிக் கட்டிகள் உருகுவது, அக் கண்டத்தில் ஒரு அடிப்படை மாற்றம் நிகழும் என்பதைக் குறிக்கலாம் என்று நம்புகிறார்கள் - இது அந்த பிராந்தியத்தின் தனித்துவத்தை மாற்றியமைக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

அண்டார்டிகா பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் போதுமான அளவுக்கு அறிந்துகொள்வதில், அதன் தொலைவு பெரிய தடைக்கல்லாக இருக்கிறது.

டாக்டர் ராபி மாலெட்டின் கூற்றுப்படி, அறிவியல் அடிப்படையில் இப்பகுதி இன்னும் யாரும் எளிதில் அடையமுடியாத பகுதியாகவே இருக்கிறது.

கடல்-பனி உருகி எவ்வளவு தூரம் பரவுகிறது என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஆனால், அது எவ்வளவு தடிமனாக இருக்கிறது என்பது தெரியாது. அந்தப் பனி உருகி அதன் தடிமன் வெளியாகும் போது, அந்த பிராந்தியத்திற்கான காலநிலையை தீவிரமாக மாற்றும்.

 
நிபுணர்கள் எச்சரிக்கை

பட மூலாதாரம்,DR ROBBIE MALLET

படக்குறிப்பு,

அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பொழிவை அளவிட டாக்டர் மாலெட்டும் அவரது குழுவினரும் தினமும் வெளியே செல்கிறார்கள்.

அண்டார்டிகாவில் அறிவியல் ஆராய்ச்சிகள் நடைபெறும் தளமான ரோதெராவில், டிஃபையன்ட் எனப்படும் சர்வதேச ஆராய்ச்சி திட்டத்திற்காக டாக்டர் மாலெட் கடல்-பனியின் தடிமன் குறித்து ஆய்வு செய்ய ரேடார் கருவிகளைப் பயன்படுத்திவருகிறார்.

அவரும் மற்ற ஆய்வாளர்களும் இன்னும் குளிர்கால பனியின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

"இது இயற்கையான மாறுபாடுகளின் மிகவும் விசித்திரமான வெளிப்பாடாக இருக்க வாய்ப்பு உள்ளது," என்று அவர் கூறுகிறார், அதாவது ஏராளமான இயற்கை காரணிகள் ஒரே நேரத்தில் உருவாகி அந்தப் பிராந்தியத்தைப் பாதிக்கின்றன.

இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சூடான பெருங்கடல்களின் நீரோட்டங்கள் இது போல் பனி உருகுவதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர் - கடல் நீர் சூடாக இருப்பதால் அதன் உறையும் தன்மை குறைந்திருக்கும்.

மேலும் கடல் நீரோட்டங்கள் மற்றும் காற்றின் சுழற்சி அண்டார்டிக் பனிக்கண்டத்தின் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையும் இருக்கிறது.

தற்போது பசிபிக் பகுதியில் உருவாகி வரும் எல் நினோ வானிலை நிகழ்வு, அது பலவீனமாக இருந்தாலும், கடல்-பனியை உருக்கும் ஆபத்துகள் இருக்கின்றன.

"கவலைப்படுவதற்கு மிகவும் பெரிய காரணங்கள்" இருப்பதாக டாக்டர் மாலெட் கூறுகிறார்.

"அண்டார்டிகாவில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத காலநிலை மாற்றம் தற்போது மிகவும் ஆபத்தான அறிகுறியாக இருக்கிறது என்பதே உண்மை. இப்போது தான் அங்கு காலநிலை மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது."

https://www.bbc.com/tamil/articles/c515wx9xello

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.