Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியார் திருமூலர்‌ - சுப.சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

        பெரியார் திருமூலர்

                ----  சுப.சோமசுந்தரம்

 

நண்பன் ஒருவன் புலனத்தில் (WhatsApp) செய்திருந்த பதிவில் உள்ள செய்தி பொதுவாக நமக்குத் தெரியாத ஒன்றில்லை. இருப்பினும் நமக்கு நல்லதாய்த் தோன்றுவதை வேறு ஒருவர் சொல்லிக் கேட்கையில் அகமகிழ்வது எல்லோருக்கும் நிகழ்வதே. அம்மகிழ்ச்சியில் அடியேனுக்குத் திருமூலரின் கூற்று நினைவில் வந்தது கூடுதல் சிறப்பு. இதோ அந்த நினைவு :

"படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே".
        -------- திருமந்திரம், பாடல் 1857.

முதற் குறிப்பு :-
திருமூலர் காலத்தில் கோயிலில்  சிற்பங்களுக்குப் பதில் சுவற்றில் வரைந்த இறைவனின்  ஓவியங்கள் (படங்கள்) வழிபடப்பட்ட நிலையும் இருந்தது.

பாடற் பொருள் :-
படமாடுங் கோயிலில் உறையும் இறைவர்க்கு (பகவற்கு) ஒன்றை அளித்தால், அது நடமாடுங் கோயிலான மனிதர்க்கு (நம்பர்க்கு) - வறியவர்க்கு - சென்று சேராது. நடமாடுங் கோயிலான மனிதர்க்கு அளித்தால், அது படமாடுங் கோயில் இறைவனைச் சென்றடையும்.

பின் விளக்கம் :-
இதன் மூலம் திருமூலர் இறை மறுப்பைப் போதிக்கவில்லை (அவர் சிவத்தில்  உருகியவர்). புற வழிபாட்டை விட அக வழிபாடே இறைவனைச் சென்றடையும் என வலியுறுத்துகிறார்.
" நலிவுற்ற எம் சகோதர சகோதரிகளுள்  ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எமக்கே செய்தீர்கள்" - (மத்தேயு 25:40) எனக் கிறித்துவத்திலும், "தம் பொருளை இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக பந்துக்களுக்கும்,  அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வோரே நன்னெறியாளர்கள், முத்தஹீன்கள் (இறை விசுவாசிகள்)" (திருக்குர் ஆன் 2:177) என்று இஸ்லாத்திலும் உள்ளவை இங்கு உணரத் தக்கவை.

திருமூலர் மேலும் நினைவூட்டினார் :

"தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!"
   --------------திருமந்திரம், பாடல் 3065.

பாடற் குறிப்பு :
புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான  எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்....

பாடற் பொருள் :
தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த  ஊனுடம்புக்குள்ளேயே ஈசன் ஒளிந்துள்ளான்.  அஃதாவது அழிந்து போகும் மனிதனுக்குள்தான் (அல்லது எந்த ஜீவனுக்குள்ளும்) அழியாப் பரம்பொருளான  இறைவன் ஒன்றறக் கலந்துள்ளான்; எனவே அங்கே தேடு என்பதே பொருள். சீவனில் சிவத்தைத் தேடு, Love thy neighbour, அன்பே சிவம் என்று பலவாறு சொல்லிக் கொள்ளலாம்.

பின் குறிப்பு : மெய்யெண்கள் கணத்தை (set of real numbers), (0,1) என்ற இடைவெளியில் (interval) இருவழிக் கோப்பின் (bijective map) மூலமாகப் பொருத்திய பின், என் கணிதப் பேராசிரியர் இத்திருமந்திரப் பாடலைச் சுட்டியது நினைவில் நிழலாடுகிறது. எல்லையில்லாத இறைவன்  எல்லையுள்ள மனிதனில் அடக்கம் - மெய்யெண் கணம் (0,1) என்ற இடைவெளியில் அடங்கியதைப் போல். எண் படித்தாலே எழுத்தும் வரும் போல.

அத்தோடு விட்டாரா திருமூலர் ? ஊனுக்குள் ஒளிந்துள்ள ஈசனைக் காட்டாமல் எப்படி நம்மைக் கடந்து போவார் ?

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே"
          -----திருமந்திரம், பாடல் 1823.

இத்தனை எழுதிய பிறகு மேற்குறிப்பிட்ட எளிமையான வரிகளையுடைய பாடலுக்காவது  விளக்கத்தை வாசிப்போர்க்கு விட்டு விடுகிறேனே ! ஒரு கணித ஆசிரியனாக, இரண்டு கணக்குகள் போட்டுக் காட்டிவிட்டு மூன்றாவதை மாணாக்கர்க்குப் பயிற்சியாகக் கொடுத்துதானே பழக்கம் !

உண்மையில் "கடவுளை மற, மனிதனை நினை" என்ற தந்தை பெரியார்தான் முதலில் நினைவுக்கு வந்தார். அதை முதலில் சொன்னால், 'வாசிப்பவர்களில்' சிலர் அத்தோடு நம்மைக் கடந்து சென்று விடுவார்கள் என்று நினைத்தேன்; திருமூலரைக் கேடயமாய் முதலில் நிறுத்தினேன். செய்திதானே போய்ச் சேர வேண்டும் என்பதில் பெரியாருக்கும் உடன்பாடு உண்டு.

நண்பன் வெகு சாதாரணமாக அனுப்பிய பதிவு எவ்விதக் கொந்தளிப்புமின்றி அமைதியான நினைவலைகளை ஏற்படுத்தியது. அந்த 'எளிய' பதிவு இதுதான் :-

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid024iW5hQyh6xwJTZyaSW8rwZXFR1svSovMa33PgByVPdEkN1wuUHDG3Ccac1PLhYr4l&id=100083780391980&mibextid=Nif5oz

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாக் காலத்திலும் அறிவூட்டல் நடந்திருக்கிறது.
உங்கள் எண்ணப் பகிர்விற்கு நன்றி ஐயா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.