Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாவம்ச மனோபாவம்: இலங்கையின் இன நல்லிணக்கம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாவம்ச மனோபாவம்: இலங்கையின் இன நல்லிணக்கம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்!

மகாவம்ச மனோபாவம்: இலங்கையின் இன நல்லிணக்கம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்!

—- எம். எல். எம். மன்சூர் —-

”புத்தரின் போதனைகளில் புனிதப் போர் என்ற கருத்தாக்கம் இல்லை; புத்த தர்மத்தையும், அதைப் பின்பற்றுபவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்குக் கூட போர் புரிவதற்கு அதில் அனுமதியில்லை. இந்தப் பின்னணியில், புத்த தர்மத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கென ஆட்களை கொலை செய்வதனை நியாயப்படுத்த வேண்டுமானால், புத்தரின் போதனைகளுக்கு வெளியில் ஒரு வலுவான புதிய அத்தியாயத்தைச் சேர்க்க வேண்டும்.”

”(பௌத்த) துட்டகைமுனுவுக்கும், (இந்து) எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற போரை, சிங்கள அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கென முன்னெடுக்கப்பட்ட ஒரு புனிதப் போராக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் மகாவம்ச ஆசிரியர் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.”

”இவ்விதம், கௌதம சித்தார்த்தரின் பௌத்த மதத்தை,  ‘புதிய சமயக் கிரந்தமான, ஐந்தாம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம்;  ‘சிங்கள பௌத்தமாக‘ மாற்றியமைத்தது” என்கிறார் திசரணி குணசேகர.

இந்தப் பின்னணியில், புராதன கால வீரர்கள் மற்றும் மன்னர்கள் குறித்து மகாவம்சம் முன்வைக்கும் புராணக் கதைகள் சிங்கள பௌத்த மக்களுக்கு மத்தியில் பின்வரும் விதத்திலான ஓர் உணர்வைத் தூண்டியிருந்தன: 

”ஓர் உண்மையான இலங்கையராக இருக்க வேண்டுமானால், ஒரு சிங்களவராக இருக்க வேண்டும்; உண்மையான ஒரு சிங்களவராக இருக்க வேண்டுமானால், ஒரு பௌத்தராக இருக்க வேண்டும்.”

விருந்தோம்புபவர்கள் (சிங்கள பௌத்தர்கள்) மற்றும் விருந்தாளிகள் (ஏனைய சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள்) என்ற கருத்தாக்கம் இந்தத் தொன்மத்திலிருந்தே தோன்றியது. அதன் பிரகாரம், ‘இந்தத் தீவு சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமானது; அவர்களே அதன் அசல் உரிமையாளர்கள்‘ என்ற கருத்து சிங்கள மக்களின் பிரக்ஞையில் ஆழமாக வேரூன்றியது.

இதுவே மகாவம்ச மனோபாவம் (Mahawamsa Mindset) என அழைக்கப்படுகிறது.  இதன் விளைவாக தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்கள கிறிஸ்தவர்களும் மற்றும் ஏனைய சிறுபான்மையினரும் ஒருபோதும் இலங்கையர்களாக இருந்து வர முடியாது என்ற நம்பிக்கை உருவாகியது.

இந்த நம்பிக்கையே இன்றைய சிங்கள தேசியவாதத்தின் சாராம்சமாக இருந்து வருகின்றது. 

”1939 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாவலப்பிட்டி நகரில் இடம்பெற்ற கூட்டமொன்றில்  சிங்கள இனத்தையும், பௌத்த மதத்தையும் மிக மோசமான விதத்தில் இழிவுபடுத்தி ஜீ ஜீ பொன்னம்பலம் நிகழ்த்திய உரை, பல நூற்றாண்டு காலம் இலங்கையில் இனங்களுக்கிடையில் நிலவி வந்த நல்லுறவை முற்றிலும் சீர்குலைத்தது” என எழுதுகிறார் சிங்கள தேசியவாதத்தின் தீவிர ஆதரவாளர் ஒருவர். 

”அதன் விளைவாக, சுதந்திரத்துக்குப் பின்பட்ட இலங்கையின் 75 வருட கால வரலாறு கண்ணீராலும், இரத்தத்தினாலும் எழுதப்பட வேண்டிய நிலை தோன்றியது” என அவர் முத்தாய்ப்பாகச் சொல்கிறார்.

ஆனால், 1920 களிலேயே சிங்கள பௌத்த சமூகத்துக்கு மத்தியில் இனவாத உணர்வுகளைத் தூண்டுவதற்கும், அவற்றை நிலைத்திருக்கச் செய்வதற்கும் அநகாரிக தர்மபால (1864 – 1933) முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.  அவருடைய எழுத்துக்களிலும்,   பேச்சுக்களிலும் அவர் தொடர்ந்தும் தமிழர்களையும், முஸ்லிம்களையும் சிங்கள இனத்தின் எதிரிகளாகவே கட்டமைத்து வந்தார்.

”Sri Lanka: War – Torn Island” (1998)  என்ற நூலில் Lawrence J  Zwier இப்படி எழுதுகிறார்: 

”தமிழர்களும், சிங்களவர்களும் சுமார் 2000 ஆண்டு காலமாக இலங்கையில் பரம வைரிகளாக இருந்து வந்துள்ளார்கள் என்ற தப்பெண்ணத்தை ஜனரஞ்சகப்படுத்திய மிக முக்கியமான தலைவர் அநகாரிக தர்மபால. அவர் பல சந்தரப்பங்களில் மகாவம்சத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்; அதில் எழுதப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களும் முற்றிலும் உண்மையானவை என்ற நிலைப்பாட்டிலிருந்தே அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்…. அவருடைய பெரும்பாலான பேச்சுக்களும், எழுத்துக்களும் இனவாத இயல்பிலானவை. சிங்களவர்கள் இன ரீதியில் தூய ஆரியர்கள் என்ற விடயத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிங்களவர்களின் பூர்வீகம் வேறு, தமிழர்களின் பூர்வீகம் வேறு என்பது அவருடைய நிலைப்பாடு. அதனால், தமிழர்கள் சிங்களவர்களிலும் பார்க்க தாழ்வானவர்கள் என்று அவர் கூறினார்.”

தர்மபாலவின் பரப்புரைகள் காரணமாக சுதந்திரத்துக்கு முன்னரேயே இந்த மகாவம்ச மனோபாவம் சிங்கள சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. இதற்கான சுவாரசியமான ஓர் உதாரணம் அசோகமாலா (1947) என்ற சிங்கள திரைப்படம். 

இரண்டாவது சிங்களப் படமான அசோகமாலா கோயம்புத்தூர் சென்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. T R கோபு என்ற தமிழர் அதன் இயக்குநர். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் அப்படம் திரையிடப்பட்டது. அக்கால சிங்கள பத்திரிகைகள் ‘அசோகமாலா‘ திரைப்படம் தொடர்பான விமர்சனங்களை கடும் இனவாதக் கண்ணோட்டத்தில் முன்வைத்திருந்தன. இது தொடர்பாக ‘சரசவி சந்தரஸ‘ என்ற பத்திரிகை எழுதிய ஆசிரியர் தலையங்கம் இது: 

”இப்பொழுது கொழும்பு திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டு வரும் ‘அசோகமாலா‘ என்ற திரைப்படம் ஒட்டுமொத்த சிங்கள இனத்தின் மீதும் அவதூறு பொழிந்துள்ளது. மாவீரனும், சிங்கள பேரரசனுமான துட்டகைமுனு ஒரு கோழையாக, பலவீனமான மனிதனாக சித்தரிக்கப்படுவதைப் பார்த்து எந்தவொரு சிங்கள மகனும் மௌனமாக இருக்க முடியாது….”

”….புத்த சாசனத்தையும், சிங்கள இனத்தையும், சிங்களத் தீவையும் தமிழர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் பிறந்தவன் தான் மாவீரன் துட்டகைமுனு…. அந்தக் கால கட்டத்தில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் ஒரு பாரிய பிளவு நிலவி வந்தது. அதற்குப் பதிலாக அக்காலத்தில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையில் ஒரு சகோதரத்துவம் நிலவி வந்ததாகக் காட்டுவதற்கு இப்படத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி வெட்கக்கேடான ஒரு அவதூறு; பொய்; வரலாற்றை திசைதிருப்புவதற்கான ஒரு முயற்சி”. 

ஆனால், மார்ட்டின் விக்ரமசிங்க (மயூரபாத என்ற புனைபெயரில்) எழுதிய விமர்சனம் இந்தப் பார்வைக் கோணத்தை முற்றிலும் நிராகரிக்கும் விதத்தில் வரலாறு குறித்த துல்லியமான ஒரு பார்வையை முன்வைத்தது: 

”…..சோழர் படையை முறியடித்த பின்னர் பௌத்த மதத்தின் கொடியின் கீழ் நாட்டை ஒற்றுமைப்படுத்திய மாவீரனாக இளவரசன் துட்டகைமுனுவை வரலாறு சித்தரிக்கின்றது. அவன் தமிழர்களுடன் நட்புறவைப் பேணுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் ஒரு கீழ்மட்ட படையதிகாரி துட்டகைமுனுவுக்கு எதிராக கலகம் செய்தான் எனக் கூறுவது வரலாற்று ரீதியில் பொருத்தமற்றது…. நாட்டையும், மக்களையும் அடிமைப்படுத்தியிருந்த சோழர்களின் அந்நியப் படைகளுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மகாவம்சத்தில் ஒரு சிங்கள – தமிழ் போராக குறிப்பிடப்படுகிறது.” 

”அந்த ஆக்கிரமிப்புக்குத் தலைமை தாங்கிய சோழ மன்னன் கொல்லப்பட்டு, அவனுடைய படை முறியடிக்கப்பட்ட பின்னர், இந்நாட்டில் வாழ்ந்து வந்த சிங்களவர்களுக்கும், திராவிடர்களுக்குமிடையில் எத்தகைய பிரிவினைகளும் நிலவி வரவில்லை. இளவரசன் துட்டகைமுனுவின் காலத்தில் இடம்பெற்ற சோழ மன்னனின் ஆக்கிரமிப்பின் போது சிங்கள பௌத்தர்களும், தமிழ் பௌத்தர்களும்  நசுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அந்தப் பிளவு தோன்றியது. அந்நிய இராணுவம் முறியடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் ‘தீர்த்து வைக்கப்பட வேண்டிய சிங்கள – தமிழ் பிரிவினையொன்று‘ இருந்து வரவில்லை.” 

1950 களில் செல்வநாயகம் போன்றவர்கள் முன்வைத்த சமஷ்டிக் கோரிக்கையையும், 1980 களில் எழுச்சியடைந்த தமிழீழ கோரிக்கையையும், அதனுடன் இணைந்த விதத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தையும் இந்த மகாவம்ச மனோபாவ  கருத்தியலை பரப்புரை செய்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் சிங்களத் தேசியவாதிகள். 

எனவே, ‘சுதந்திர இலங்கையின் எழுபத்தைந்து வருட கால வரலாறு ‘கண்ணீராலும், இரத்தத்தினாலும் எழுதப்பட்டமைக்கு‘ பொன்னம்பலத்தைப் பார்க்கிலும், தர்மபாலவும், அவர் போஷித்து வளர்த்த (இனவெறுப்பு) தேசியவாதத்தை அதே விதத்தில் முன்னெடுத்து வரும் (‘1956 இன் குழந்தைகள்‘ என தம்மை அழைத்துக் கொள்ளும்)  சிங்கள தேசியவாதிகளுமே பொறுப்புக் கூற வேண்டும்.

சமகால இலங்கை அரசியல் சமூகத்தில் இந்த மனோபாவம் எந்தெந்த வழிகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதில் மிக முக்கியமானது அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிவிசேட முக்கியத்துவம். அடுத்தது, அரச கரும மொழிகள் தொடர்பான அரசியல் யாப்பின் பிரிவு 18 (1) மற்றும் 18 (2) என்பவற்றில் தரப்பட்டிருக்கும் பின்வரும் விநோதமான வாக்கியங்கள்: 

18.  (1) இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும்.

 (2) தமிழும் அரசகரும மொழியாதல் வேண்டும்.

ஒரே வாக்கியத்தில் இதனை சொல்ல முடியாமல் போனது ஏன்? இதன் பின்னணியில் செயற்படும் நுட்பமான உளவியல் என்ன? 

ஓர் ஒப்பீட்டுக்காக அரச கரும மொழிகள் தொடர்பாக தென்னாபிரிக்க அரசியல் யாப்பு என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

தென்னாபிரிக்க அரசியல் யாப்பின் பிரிவு 6(1) ”குடியரசின் அரச கரும மொழிகள் Sepedi, Sesotho, Setswana….” எனத் தொடங்கி பதினொரு மொழிகளை வரிசைப்படுத்துகிறது. ஆனால், பெருந்தொகையான பழங்குடி மொழிகளைக் கொண்ட அந்நாட்டின் குடித்தொகையில் ஆகக் கூடிய சதவீதத்தினர் (23%) பேசும் Isi Zulu என்ற மொழி அந்தப் பட்டியலில் கடைசியில் அதாவது, பதினோராவது ஸ்தானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்களில் 16 சதவீதத்தினர் பேசும் இரண்டாவது பெரும்பான்மை மொழியான Isi Xhosa பத்தாவது இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 

இத்தகைய ஒரு நிலைமையை இலங்கையில் கற்பனை செய்து கூட பார்க்க முடியுமா?

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் பொழுது தோன்றும் எதிர்ப்புக்களும், ‘தமிழ் பௌத்தர்கள் இருந்து வந்துள்ளார்கள்‘ என வரலாற்று ஆதாரங்களுடன் கூறும் பொழுது தோன்றும் அதீத பதற்ற உணர்வுகளும் இந்த வகையைச் சேர்ந்தவை. ‘சிங்கள பௌத்தம் என்ற கருத்தாக்கம் கட்டமைத்திருக்கும் தமிழ் விரோத உணர்வு காரணமாக ‘தமிழ் பௌத்தம்‘ என்ற சொல்லே கடும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. 

2015 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான போது விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து:

”பெரும்பான்மை மக்களில் சிறு தொகையினரும், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையிலும் வாக்களித்து ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கிறார்கள்”. 

இலங்கைப் பிரஜைகளான தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வாக்குகளுக்கு (சிங்கள மக்களின் வாக்குகளுக்கு இருக்கும் அதேயளவிலான) மதிப்பு இருந்து வர முடியாது என்பதே அவர் இங்கு சொல்ல வரும் விடயம்.

”கோல்பேஸ் அறகலய பூமியில் தாராளமாக பிரியாணியும், வட்டலப்பமும் பரிமாறப்படுவதை நாங்கள் பார்த்தோம்” என்கிறார் நளின் டி சில்வா.

”விதிவிலக்கான விதத்தில் கணிசமான எண்ணிக்கையிலான முஸ்லிம் பெண்களும், மௌலிமாரும் அங்கு திரண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது” என்று எழுதுகிறார் மற்றொரு சிங்கள தேசியவாதியான சேன தோரதெனிய. 

”(சிங்கள) அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை முஸ்லிம்களுக்கு – குறிப்பாக, சிறுபான்மை சமூகத்தினருக்கு – இல்லை; அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது” என்பதே இத்தகைய கருத்துக்களுக்கு ஊடாக இவர்கள் பூடகமாக முன்வைக்க முயலும் நிலைப்பாடு. 

”சிங்கத்தின் மக்கள்: சிங்கள அடையாளம் மற்றும் வரலாற்றினதும், வரலாற்றியலினதும் கருத்தியல்” (1979) மற்றும் ”இனப் போராட்டம் நிகழ்ந்து வரும் ஒரு கால கட்டத்தில் வரலாற்றியல்: சம கால இலங்கையில் கடந்த காலம் கட்டமைக்கப்படும் விதம்” (1995) போன்ற விரிவான ஆய்வுக் கட்டுரைகளில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் லெஸ்லி குணவர்தன இந்த ‘மகாவம்ச மனோபாவம்‘ தொடர்பான சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

” பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘தம்ம பிரதீப்பிகாவ‘ என்ற காவியத்திலேயே முதன் முதலில் ”சிங்கள இனம் என்ற சொல் காணப்படுகிறது” என அவர் முன்வைத்த கருத்து கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது. 

”சிங்கத்தின் மக்கள்: சமகால இலங்கையில் சிங்கள இனத்துவ அடையாளம், கருத்தியல் மற்றும் வரலாற்றுத் திரிபுவாதம்” (1989) என்ற நீண்ட கட்டுரையில் அதற்கு எதிர்வினையாற்றினார் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிங்களத்துறை பேராசிரியரான கே என் ஓ தர்மதாச (ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடி, அந்த ஆங்கிலக் கட்டுரைகளை படிக்க முடியும்).

பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ‘கிரள சங்தேசய‘ மற்றும் ‘வடிக சட்டன‘ போன்ற சிங்கள காவியங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீதான வன்மம், கண்டி இராச்சியத்தில் அக்கால கட்டத்தில் நிலவி வந்த (சிங்கள – தமிழ் உறவுகள் தொடர்பான) முதன்மைக் கருத்தாக்கத்துக்கு நேர்மாறானது என்கிறார் லெஸ்லி குணவர்தன. 

ஆனால், அநகாரிக தர்மபாலவின் வாரிசுகளான குணதாச அமரசேகர, நளின் டி சில்வா, சேன தோரதெனிய மற்றும் வசந்த பண்டார போன்ற சமகால தேசியவாதிகள் தொடர்ந்தும் தமிழர்களையும், (ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர்) முஸ்லிம்களையும் சிங்களவர்களின் எதிரிகளாக கட்டமைக்க முயற்சித்து வருகின்றார்கள். 

சிங்கள சமூகத்தின் முதன்மைக் கருத்தியலாக அந்தச் சிந்தனைப் போக்கு நீடிக்கும் வரையில், உத்தேச புதிய அரசியல் யாப்பில் இலங்கையை ஒரு மதச்சார்பற்ற நாடாக (Secular Nation) பிரகடனம் செய்வது எப்படிப் போனாலும், சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபை அந்தஸ்தை பெற்றுக் கொள்வது கூட சாத்தியப்பட முடியாது. 

ஏனென்றால், அத்தகைய ஒரு சிறு நிர்வாக ஏற்பாட்டையும் கூட, ‘சிங்கள இனம் எதிர்கொள்ளும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக‘ சித்தரித்துக் காட்டி, அதற்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டும் காரியத்தை இன்றைய சூழலில் மிக எளிதில் மேற்கொள்ள முடியும்.

அந்தப் பின்புலத்தில், கரையோர அம்பாறை மாவட்டம் மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற அபிலாஷை மிக்க கோரிக்கைகள் தொடர்ந்தும் வெறும் கனவுகளாக மட்டுமே நீடிக்க முடியும்!
 

 

https://arangamnews.com/?p=10126

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.