Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் முழக்கம்
            - சுப.சோமசுந்தரம்

               நியூசிலாந்து பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் வயது குறைந்த (21) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஹனா ரஹிதி மெய்பி கிளார்க்' என்ற பெண் அந்நாட்டின் தொல்பழங்குடி இனமான 'மவுரி' இனத்தைச் சார்ந்தவர்.  பழங்குடியினருக்கான சமூகச் செயற்பாட்டாளர். தம் இனத்தின் போர் முழக்கப் பாடலைப் பாடி பாராளுமன்றத்தில் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அவருடன் இணைந்து வேறு சிலரும் முழக்கத்தில் பங்கெடுத்தது சிறப்பு. தலைவிரி கோலத்தில், "இளங்கோவடிகளின் சிலம்பு எடுத்தியம்பும் கொற்றவையோ, தோழர் சு.வெங்கடேசனின் வேள்பாரிக் கொற்றவையோ,  உலகில் தீமையை அழிக்கும் கூற்றமோ !" என்று வியக்க வைக்கிறார் மெய்பி கிளார்க். "இன்னுயிர் ஈந்தும் உங்களது உரிமைகளை மீட்டெடுக்க முயல்வேன்" என்று தமது உரையில் நாட்டின் பூர்வகுடிகளுக்கு மேலும் உறுதி கூறினார். அப்போர் முழக்கமும் அவரது உரையும் இணைய தளங்களில் உலகெங்கும் பரவின.
                 வரலாறு அறிந்த நாள் முதல் நமது தமிழ்க்குடி தொன்மையான நாகரிகத்தில் வகைப்படுத்தப்பட்டதால், பழங்குடிப் பாடல் என்று தமிழுக்கு ஏதும் அமையவில்லை. தமிழ் நிலத்தில் வாழும் காணி, தோடர் போன்ற தொல்குடிகளுக்கு இருக்கலாம். போரில் வெற்றி பெற்றவரைப் பாடுவது பரணி எனும் சிற்றிலக்கியமாய்த் தமிழில் வகைப்படுத்தப்பட்டது. பரணியில் போர் மேற்கொண்டு செல்லுகையில் போர் முழக்கமும் உண்டு. நமக்கான முதல் பரணி இலக்கியமான கலிங்கத்துப்பரணியே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சார்ந்ததுதான். காலத்தால் அவ்வளவு சமீபத்தியது. முதலாம் குலோத்துங்க சோழனின் படைத் தளபதியான கருணாகர தொண்டைமான் தலைமையில் சோழர் படை அனந்தவர்மன் எனும் கலிங்க மன்னனின் படையை வெற்றி கொண்டதை செயங்கொண்டார் எனும் புலவர் பாடுவது கலிங்கத்துப் பரணி. இதில் போர் முழக்கம் உண்டு. நியூசிலாந்தின் மெய்பி கிளார்க் எழுப்பும் போர் முழக்கத்திற்கும் நமது செயங்கொண்டாரின் போர் முழக்கத்திற்கும் வேறுபாடு உண்டு. முன்னது தம் இன உரிமைக்கான முழக்கம்; பின்னது திறை செலுத்தத் தவறிய கலிங்க மன்னன் மீது படை எடுத்துச் சென்ற சோழனின் ஏகாதிபத்திய முழக்கம். முன்னது பெருமையுடன் பாட வல்லது; பின்னது தற்போதைய பண்பட்ட உலகத்தில் சிறுமை உணர்வு கொண்டது. உள்ளத்தை உறுத்தும் இப்பொருள் வேறுபாட்டைச் சற்றே மறந்து, இலக்கியம் என்ற வகையில் கலிங்கத்துப்பரணியின் போருக்கான அறைகூவலை மெய்பி கிளார்க்கின் உணர்வோடும் முகபாவனைகளுடனும் கற்பனை செய்வது ஓர் இலக்கியப் பார்வை. அவ்வளவே ! அப்பார்வை செல்லும் பாதையில் கலிங்கத்துப்பரணி பாடி சிறிது பயணித்துப் பார்ப்போமே !

"எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே"
                       - பாடல் 404.
பொருள் : '(படைக் கருவிகளை) எடும் எடும்' என விடுத்த மாறுபட்ட ஒலியானது (இகல் ஒலி) பொங்கியெழும் கடல் எழுப்பும் ஒலியை விட மிகுதியாகக் (இகக்க) கேட்பதாக ! குதிரை (பரி), யானைக் (கரி) கூட்டத்தினைக் (குழாம்) கட்டவிழ்த்து 'விடும் விடும்' என்று மிகுதியாய் ஒலிப்பதாக !

"வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே"
                        - பாடல் 405.
பொருள் : நன்கு கட்டமைக்கப்பட்ட வில்லில் (வரிசிலை) அச்சம் கொள்ளும் வகையில் (வெருவர) நாணிலிருந்து தெறித்த (தெறித்த நாண்) அம்பு சென்ற (விசைபடு) திசையே (திசைமுகம்) வெடிக்கட்டும் ! போரிடுவோர் (செருவிடை அவரவர்; செருதல் - போரிடுதல்) அதட்டும் ஒலியினால் (தெழி) உலகம் செவிடாகட்டும் (உலகுகள் செவிடெடுக்கவே) !

"எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே"
                        - பாடல் 406.
பொருள் : ஆர்ப்பரிக்கும் கடலோடு (எறி கடலொடு) கடல் மோதியது போல் (கிடைத்த போல்) இருதரப்புப் படைகளும் ஒன்றையொன்று எதிர்கொள்வதாக (எதிர் கிடைக்கவே) ! மடங்கி வரும் அலையோடு (மறி திரையொடு) அலை மோதியது போல், வருகின்ற குதிரைப்படையோடு (வரு பரியொடு) இங்கிருக்கும் குதிரைப்படை மோதுவதாக !

"கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே
இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே"
                      - பாடல் 407.
பொருள் : பருத்த மலையோடு (கன வரையொடு; வரை - மலை) மலை போரிட்டதைப் போல் மதம் பொழியும் யானைகளோடு (கட கரியொடு) யானைகள் போரிடுவதாக ! திரளான மேகங்களோடு (இன முகின்) மேகங்கள் (முகில்) எதிர்ப்பது போல் தேர்ப்படையினைத் தேர்ப்படை (இரதமொடு இரதம்) எதிர்ப்பதாக !

"பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே"
                      - பாடல் 408.
பொருள் : போரிடும் புலி (பொரு புலி; பொருதல் - போரிடுதல்) புலியோடு சினம் கொள்வது போல் (சிலைத்த போல்; சிலைத்தல் - இசைச் சொல் - ஓசைப் பொருண்மையுடைய சொல்) போர் வீரரோடு (பொரு படரொடு) போர் வீரர் சினம் கொள்வதாக ! சிங்கத்தோடு சிங்கம் (அரியினொடு அரியினம்) மோதிக் கடுமையாகத் தாக்குவது போல் (அடர்ப்ப போல்) படைத்தளபதிகளோடு தளபதிகள் தாக்குவதாக (அரசரும் அரசரும் அடர்க்கவே) !

 

 

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஒப்புவமை நன்றாக இருந்தது ஐயா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.