Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி?

1196502.jpg  
 

ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம், அந்த எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம்.

இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்தீன் பாய் (ரஜினிகாந்த்) மகன் சம்சுதீனும் (விக்ராந்த்) அவரது நெருங்கிய நண்பரின் மகன் திருவும் (விஷ்ணு விஷால்) சிறுவயது முதலே எலியும் புலியுமாக இருக்கின்றனர்.

கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சிறு மோதல், பெரிய கலவரமாக வெடித்து அண்ணன், தம்பிகளாக பழகிவந்த இந்து - முஸ்லிம் மக்களிடையே பெரிய பிளவு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா தடுக்கப்படுகிறது. இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவியதா, தேர்த் திருவிழா நடந்ததா, இதில் மொய்தீன் பாயின் பங்கு என்ன என்பதை பேசுகிறது ‘லால் சலாம்’.மதங்களை முன்னிறுத்தி விவாதங்கள் தொடர்ந்து எழும் சூழலில் இப்படியொரு கதைக்களத்தை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மனதார பாராட்டலாம். மதநல்லிணக்கத்தை வலியுறுத்துகிறேன் என பிரச்சார நெடியுடன் வலிந்து திணிக்காமல் காட்சிகளுக்கு தேவையான வசனங்களின் மூலம் முக்கியமான கருத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்.

படத்தின் முதல் பாதி முழுவதும் முரார்பாத் கிராமத்தில் வாழும் மக்களை பற்றியும், விஷ்ணு விஷால் - விக்ராந்த் இடையிலான பகைமை, விளையாட்டில் தூவப்படும் வெறுப்புணர்வு மெல்ல எப்படி ஒரு கிராமத்தையே பாதிக்கிறது உள்ளிட்ட விஷயங்கள் நான்-லீனியர் முறையில் சொல்லப்படுகிறது. கலவரத்தைத் தொடர்ந்து சிறைக்கு சென்று வெளியே வரும் விஷ்ணு விஷால், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இடையில் ஒரு காதல் பாட்டு என சற்றே தொய்வுடன் தொடங்கும் படம், ரஜினியின் என்ட்ரிக்கு பிறகு சூடு பிடிக்கிறது.

சமீப வருடங்களில் வெளியான ரஜினி படங்களையே தூக்கி சாப்பிடும்படியாக ரஜினிக்கு ஒரு மாஸ் இன்ட்ரோ காட்சி. கூடவே ரஹ்மான் குரலில் ‘ஜலாலி ஜலாலி’ பாடல் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் செம விருந்து. அதற்கு நியாயம் செய்யும் வகையில் ரஜினியின் கதாபாத்திர வடிவமைப்பும் சிறப்பு.

 

 

 

ஷார்ப் ஆன வசனங்கள், வயதுக்கு ஏற்ற பக்குவமான கேரக்டர் என தன்னுடைய திரை ஆளுமையால் மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார். சிறப்புத் தோற்றம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஏறக்குறைய முழு படத்திலும் ரஜினியின் ஆதிக்கம்தான். மதநல்லிணக்கம் தொடர்பாக ரஜினி பேசும் வசனங்கள் அனைத்துக்கும் அரங்கம் அதிர்கிறது. குறிப்பாக, கிரிக்கெட் மைதானத்தில் மைக்கில் பேசுபவரை அழைத்து பேசுவது, இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே அமைதியை ஏற்படுத்த நடக்கும் கூட்டத்தில் ரஜினி பேசுவது ஆகிய காட்சிகள் கூஸ்பம்ப்ஸ் ரகம்.

படத்தின் பிரச்சினையே முதல் பாதி நான்-லீனியரில் சொல்லப்படுவதுதான். நிகழ்காலம், கடந்த காலம் இரண்டுமே ஆறு மாத இடைவெளியில் நடப்பவை என்பதால் இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது. போரடிக்காத வகையில் காட்சிகள் அடுத்தடுத்து நகர்ந்தாலும் இலக்கில்லாத வகையில் எங்கெங்கோ செல்வதால் எந்த இடத்திலும் படத்துடன் ஒன்றமுடியாத நிலை ஏற்படுகிறது.

ஸ்போர்ட்ஸ் கதைக்களம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படத்தில் மிகச் சிறிய அளவே கிரிக்கெட் தொடர்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றிலுமே எந்தவித பரபரப்போ, அழுத்தமோ இல்லை. படத்தின் மையக்கரு தேர்த் திருவிழாவா அல்லது கிரிக்கெட்டா என்று தெளிவாக சொல்லமுடியாமல் தடுமாறியுள்ளனர். எடிட்டிங்கில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம். பல காட்சிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவையாக இருக்கின்றன.

ரஜினி தவிர்த்து விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா, விவேக் பிரசன்னா, மூணாறு ரமேஷ் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக வரும் அனந்திகா சனில்குமார் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் உதவியிருக்கிறார். படத்தில் முக்கியக் கதாபாத்திரம் என்று சொல்லப்பட்ட தன்யா பாலகிருஷ்ணாவின் காட்சிகள் பெரிதாக இல்லை (வெட்டப்பட்டனவோ?) சமூக வலைதள சர்ச்சை காரணமா என்று தெரியவில்லை. இறுதிக் காட்சியில் ஓரிரு நிமிடங்கள் வந்தாலும் ஈர்க்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. தேவாவின் குரலில் வரும் ‘அன்பாளனே’ பாடல் இதயத்தை உருக வைக்கிறது. தேர்த் திருவிழா பாடல், மறைந்த ஷாஹுல் ஹமீதுவின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியிருக்கும் ஒரு பாடல் ஆகியவை சிறப்பு.

படத்தில் பல இடங்களில் எமோஷனல் காட்சிகள் நன்றாக கைகொடுத்துள்ளன. குறிப்பாக, செந்தில் தனது மகன் குடும்பத்தை பற்றி பேசும் காட்சி, மருத்துவமனையில் இருக்கும் தனது மகனை நினைத்து ரஜினி ‘அல்லாஹ்’ என்று கதறி அழும் காட்சி ஆகியவை நெகிழச் செய்கின்றன.

சமூக வலைதளங்களில் மதங்களை முன்வைத்து ஒருவர் மீது ஒருவர் வீசும் வன்மக் கணைகளுக்கு நடுவே ஒரு முக்கிய கருத்தை, ரஜினி என்ற ‘பிராண்ட்’ உடன் சுமந்து வந்திருக்கும் ’லால் சலாம்’ படத்தை தாராளமாக வரவேற்கலாம். திரைக்கதையை மெருகேற்றி, காட்சிகளில் அழுத்தம் கூட்டியிருந்தால் இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும்.

லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி? | Rajinikanth starrer Lal Salaam Review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

இது யாருக்கான ’வணக்கம்’? – லால் சலாம் விமர்சனம்!

ManjulaFeb 10, 2024 13:44PM
Lal-4.jpg

ரசிகர்களுக்குப் பிடித்துப்போன விஷயங்களைப் பற்றி திரைப்படங்கள் எடுத்தால், அவை பெரிய வரவேற்பைப் பெறும். இதனை முன்வைத்தே, ‘ட்ரெண்ட்’ என்கிற வஸ்து திரையுலகில் கோலோச்சி வருகிறது.

அந்த வகையில் கிரிக்கெட், சூப்பர்ஸ்டார் ரஜினி, மதவாதம் என வேறுபட்ட அம்சங்களைத் திரையில் காட்டுகிறதோ என்ற எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது ‘லால் சலாம்’ ட்ரெய்லர். தற்போது படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா, செந்தில், விவேக் பிரசன்னா உட்படப் பலர் நடித்துள்ளனர்.

அதையெல்லாம் மீறி, ரஜினிகாந்த் இதில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதே இதன் யுஎஸ்பி. அது திரையில் சரியாக ‘வொர்க் அவுட்’ ஆகியிருக்கிறதா? என்பதை இங்கே பார்க்கலாம்.

Lal Salaam Twitter Review

தடம் புரட்டும் சம்பவம்

ஒரு ஊரே கிரிக்கெட் போட்டியால் இரண்டுபடுகிறது. மதங்களின் பெயரால் பிளவுபடுகிறது. அதுவரை சகோதர பாசத்தோடு பழகியவர்கள் ஒருவரையொருவர் தாக்குகின்றனர்.

அதற்கெல்லாம் காரணகர்த்தா என்று ஒரு நபர் கைகாட்டப்படுகிறார். அவரது பெயர் திருநாவுக்கரசு (விஷ்ணு விஷால்).

கடலூர் வட்டாரத்திலுள்ள மூரார்பாத் ஊரைச் சேர்ந்தவர் திரு. அவரது தந்தை (லிவிங்ஸ்டன்) இறந்துபோக, தாய் (ஜீவிதா) மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். திருவின் தந்தையும் மொய்தீனும் (ரஜினிகாந்த்) நெருங்கிய நண்பர்கள்.

சிறு வயதில் மொய்தீன் மகன் ஷம்சுதீன் (விக்ராந்த்) உடன் சேர்த்துத் தன்னை வெளியூரில் உள்ள பள்ளியொன்றில் படிக்க வைத்தது, திருவின் மனதில் அவருக்குள் காயத்தை ஏற்படுத்துகிறது.

வளர வளர அது மொய்தீன் குடும்பத்தின் மீதான வெறுப்பாக மாறுகிறது. திருவின் குடும்பத்திற்கு மொய்தீன் பண உதவி செய்வது, ஊரில் சிலர் கேலி பேசவும் காரணமாகிறது.

மூரார்பாத்தில் 3 ஸ்டார், எம்சிசி என்று இரண்டு கிரிக்கெட் அணிகள் உண்டு. இரண்டுமே மதங்களின் பெயரால் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

எம்சிசியின் கேப்டனான திரு, அந்த வட்டாரத்திலேயே பெரிய கிரிக்கெட் ஆட்டக்காரராக இருக்கிறார். அவரைத் தோற்கடிக்க, பம்பாயில் இருந்து மொய்தீன் மகன் சம்சுதீனை வரவழைக்கிறது 3 ஸ்டார் குழு.

ஒரு ஆட்டத்தில் 3 ஸ்டார் அணி தோற்கிறது. அதனால், சந்தனக்கூடு திருவிழாவையொட்டி இன்னொரு ஆட்டம் ஆட வேண்டுமென்று வற்புறுத்துகிறார் சம்சுதீன்.

அந்த நேரத்தில், அவர் ரஞ்சி டிராபி போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவது மொய்தீன் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

IVilQVgB-rk-1.jpg

ஆனால், 3 ஸ்டார் மற்றும் எம்சிசி இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் ஏற்படும் தகராறு ஊரையே இரண்டாக்குகிறது. மோதலின்போது, சம்சுதீன் கையில் காயம் ஏற்படுத்துகிறார் திரு.

உள்ளூர் மருத்துவமனையில் அதற்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், அவரை வெளியூருக்குக் கூட்டிச் செல்கின்றனர். அங்கு, ‘கால தாமதம் ஆனதால் கையை வெட்டி எடுக்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.

கையை இழந்த வேதனை சம்சுதீனை அலைக்கழிக்கிறது. அந்த வழக்கில் கைதாகிச் சிறை செல்கிறார் திரு. பெயில் கிடைத்து வெளியே வரும் அவரை ஒரு கும்பல் தாக்குகிறது.

தாயோ, உறவினர்களோ, ஊர் மக்களோ அவரை ஏற்கத் தயாராக இல்லை. அவரால்தான் ஊருக்குள் பிரிவு வந்ததாகத் தூற்றுகின்றனர் மக்கள்.

அதேநேரத்தில், திருவை எதிரியாகக் கருதும் எம்.எல்.ஏ. மருமகன் மகராஜன் (விவேக் பிரசன்னா) ஊர் மக்கள் அம்மன் கோயிலில் திருவிழா கொண்டாடும்போது கலாட்டா செய்கிறார்.

நான்கு ஊர்களின் கோயிலுக்குப் பொதுவாக விளங்கும் தேரை மூரார்பாத்தில் இருந்து இழுத்துச் செல்கிறார்.

ஏற்கனவே மொய்தீனுடன் பகை ஏற்பட்டதற்காகத் திருவைக் கரித்துக் கொட்டும் ஊரார், தேர் திருவிழா நடைபெறாமல் போனதற்கும் அவரே காரணம் என்று தூற்றுகின்றனர்.

அதன்பிறகாவது தன் மீதுள்ள களங்கங்களைத் திரு துடைத்தெறிந்தாரா? மீண்டும் தேர் திருவிழாவை நடத்தினாரா? மொய்தீன் மற்றும் அவரது மகனுடனான பகையைக் களைந்தாரா என்று சொல்கிறது ‘லால் சலாம்’ படத்தின் மீதி.

ஊர் மக்களின் ஒற்றுமையைத் தடம் புரளச் செய்த ஒரு கிரிக்கெட் ஆட்டத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது ‘லால் சலாம்’ படக் கதை. ஆனால், அதனை மறந்துவிட்டு வேறெங்கோ திரைக்கதை செல்வது ஏமாற்றம் தருகிறது.

Lal-2.jpg

முதுமையிலும் அழகு

ஏறக்குறைய இளமைப்பொலிவை ஒப்பனையால் ஏற்படுத்திவிட முடியுமென்ற காலகட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டார் ரஜினிகாந்த்.

அதனால், வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்றால் போதும் என்ற இடத்தை அடைந்திருப்பதும் சிறப்பு. ஆனாலும், அவரை ‘ஸ்டண்ட்’ காட்சிகளில் நடிக்க வைத்தால் தான் ஹீரோயிசம் என்று தப்புக்கணக்கு போட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

முதுமையிலும் ஒரு அழகுண்டு என்று காட்ட முயன்றிருந்தால், சூப்பர்ஸ்டார் மகள் என்ற பெருமையை இன்னும் ருசித்திருக்க வாய்ப்புண்டு. இதுவே, படத்தில் ரஜினியின் இருப்பு எத்தகையது என்று சொல்லிவிடும்.

விஷ்ணு விஷால் இந்த படத்தின் நாயகன். அவருக்கே நிறைய முக்கியத்துவம். அதற்கேற்ப திருவாகத் தோன்றியிருக்கிறார். விக்ராந்த், இதில் ரஜினியின் மகனாகத் தோன்றியிருக்கிறார்.

முக்கியமானதொரு பாத்திரம். அதனைச் சரியாகச் செய்திருக்கிறார். அழுது மூக்கைச் சிந்துவதே வேலை என்றிருக்கிறார் ஜீவிதா. அவருக்கும் லிவிங்ஸ்டனுக்கும் அதிகக் காட்சிகள் இல்லை.

நிரோஷா இதில் ரஜினியின் மனைவியாக வந்து போகிறார். தம்பி ராமையா, செந்தில், நந்தகுமார், ஆதித்யா மேனன், பாண்டி ரவி, மூணார் ரமேஷ் என்று பலர் இதில் முகம் காட்டியுள்ளனர். கே.எஸ்.ரவிக்குமாரும் இதில் உண்டு.

விஷ்ணு விஷாலின் ஜோடியாக அனந்திகா ஒரு பாடல் காட்சிக்கு வந்து போயிருக்கிறார். தங்கதுரை உட்பட நால்வர் கூட்டணி ஓரிரு காட்சிகளில் நகைச்சுவையூட்டுகிறது.

படத்தில் வில்லனாக விவேக் பிரசன்னாவும், அவரது மனைவியாக ஒரேயொரு காட்சிக்குத் தான்யாவும் வந்து போயிருக்கின்றனர். இத்தனை பாத்திரங்கள் இருப்பது இப்படத்திற்குப் பலமாக மாறியிருக்க வேண்டும்.

ஆனால், எதற்கும் திரைக்கதையில் சரிவர இடமளிக்காதது படத்தைப் பலவீனப்படுத்தி இருக்கிறது. இது போக, கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இரண்டு காட்சிகளில் ’கௌரவமாக’ தலைகாட்டியிருக்கிறார்.

விஷ்ணு ரங்கசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரை முழுக்க மனிதர்களும் பொருட்களும் நிறைந்து ஏதேனும் ஒரு வண்ணம் மிகுந்திருக்க வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்.

RK.jpg

ஒவ்வொரு பிரேமும் செறிவுடன் அமைந்திருக்கிறது. ராமு தங்கராஜின் தயாரிப்பு வடிவமைப்பு படத்திற்குப் பலம் கூட்டுகிறது. ரங்காவின் டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல விஷயங்கள் திரையை வண்ணமயமாக மாற்றியிருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் விஷ்ணுவே இப்படத்திற்குக் கதை, வசனமும் எழுதியிருக்கிறார். ‘வாழ்க்கைய எப்படி தொடங்குறோம்கறது முக்கியமில்ல; எப்படி முடிக்கிறோம்கறதுதான் முக்கியம்’, ‘திருவிழா வர்ற ரெண்டு நாளுக்காகத்தான் ஒரு வருஷத்தையே நான் வாழுறேன்’ என்பது போன்ற வசனங்கள் நம்மை ஈர்க்கும்.

படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் பிரவீன் பாஸ்கர், திரைக்கதையில் பதில்களைத் தர வேண்டிய சில காட்சிகளை வெட்டி எறிந்திருக்கிறார். தேவையற்ற காட்சிகளைப் புகுத்தியிருக்கிறார்.

திரைக்கதை ஒரு வடிவத்தில் அடங்கவில்லை என்று தெரிந்தும், சிதறிக் கிடக்கும் காட்சிகளைக் கோர்வையாக அடுக்கத் தவறியிருக்கிறார்.

முதலில் கேட்கும்போது ‘ப்பா..’ என்று அசூயைப்பட வைத்தாலும், திரையில் பார்க்கும்போது ‘ஏ புள்ள..’, ‘தேர் திருவிழா’, ‘ஜலாலி’ பாடல்கள் கவர்கின்றன. பின்னணி இசை பழைய ஏ.ஆர்.ரஹ்மான் படங்களை நினைவூட்டுகிறது.

அதனைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம். அதேநேரத்தில், ஒட்டடையின் பலத்தில் நிற்கும் சிதைந்த கட்டடம் போலப் பல காட்சிகளைக் காப்பாற்றவும் அதுவே உதவியிருக்கிறது.

Lal-3.jpg

யாருக்காக இந்தப் படம்?

இந்து, முஸ்லிம் ஒற்றுமை குறித்து ‘லால் சலாம்’ ரொம்பவே அழுத்தமாகப் பேச முயன்றிருக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள் எந்த இடத்திலும் யாரையும் காயப்படுத்தி விடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை உணர்ச்சிவயப்பட வைப்பதோடு, மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதாக உள்ளது. எல்லாமே சரிதான்! ஆனால், இந்த படம் யாருக்கானது என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.

ஏனென்றால், இரு தரப்பு மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அச்சு அசலாகப் பதிவு செய்திருக்க வேண்டிய இத்திரைப்படம் ரொம்பவே மேலோட்டமாக அதைப் பேசியிருக்கிறது.

அரைகுறையாகப் பார்க்கும் ரசிகர்கள் அதனால் கதையைத் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புகளும் இருக்கின்றன. ஒரு திரைப்படமாகவும் சில இடங்களில் பின்தங்கியிருக்கிறது ‘லால் சலாம்’.

இடதுசாரிகள் சொல்லும் ‘சிவப்பு வணக்கம்’ என்ற சொல்லை ஏன் இக்கதைக்கு டைட்டிலாக வைக்க வேண்டும். தெரியவில்லை.

படத்தின் முதல் பாதியில் கிரிக்கெட் ஆட்டமும், மொய்தீன் குடும்பமும் திரைக்கதையின் மையமாக இருக்கின்றன.

இரண்டாம் பாதியை தேர் திருவிழாவும் மகாராஜனின் வில்லத்தனமும் ஆக்கிரமிக்கின்றன. கே.எஸ்.ரவிக்குமார் பாத்திரம் முதல் காட்சியோடு காணாமல் போகிறது.

லிவிங்க்ஸ்டன் – ரஜினி நட்போ, ரஜினி மீது விஷ்ணு விஷால் காட்டும் வெறுப்போ, விக்ராந்த் பாத்திரம் தன்னைச் சுற்றியுள்ளவர்களை அணுகும் விதமோ, இத்திரைக்கதையில் முழுமையாக வெளிப்படவில்லை.

சில காட்சிகள் ‘கட்’ செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவை எதற்காக நீக்கப்பட்டன என்று தெரியவில்லை. ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு விதமாக ‘ரியாக்ட்’ செய்கின்றன.

ஒவ்வொரு காட்சியும் அழுத்தமானதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை ஒன்றாகக் கோர்த்ததில் தெளிவு சுத்தமாக இல்லை.

முக்கியமாக, இரு தரப்பும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி விலாவாரியாகக் காட்டப்பட வேண்டிய அவசியமென்ன என்கிற கேள்வி நம்மை அலைக்கழிக்கிறது.

அனைத்து பின்னடைவுகளையும் ‘ரஜினி’ என்ற ஒற்றை வார்த்தையால் சரி செய்திட முடியும் என்று இயக்குனர் ஐஸ்வர்யா நினைத்திருந்தால், ‘வெரி சாரி’ என்றே சொல்லியாக வேண்டும். அதுவே, யாருக்கானது இந்த வணக்கம் என்பதையும் சேர்த்துச் சொல்லிவிடும்!

உதய் பாடகலிங்கம் 

 

https://minnambalam.com/cinema/lal-salaam-movie-review-aishwarya-rajinikanths-impressed-her-attempt/

 

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா வியாபாரத்திற்கு பாய்! பிழைப்புக்கு சங்கி!

-சாவித்திரி கண்ணன்
fzb_1698927555785_1698927573199-Copy-2.j

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ படத்தில் மத நல்லிணக்கம் பேசப்பட்டுள்ளது. இது அதிசயமல்ல, தமிழ் மண்ணில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தாத படம் வியாபாரம் ஆகாது! அதே சமயம், ‘பாஜகவின் காவி அரசியலுக்கு கை கொடுப்பதில்’ நிஜ வாழ்க்கையில் சமரசமே இல்லாத பயணத்தை ரஜினி உறுதிபடுத்தி வருகிறார்;

ரஜினியே சொன்னது போல சினிமா என்றால் காசு, பணம்,டப்பு வரணும் என்ற கணக்கில் தான் அவர் மகள் ஐஸ்வர்யா லால்சலாம் படம் எடுத்துள்ளார்!

முன்னதாக லால் சலாம் விழாவில் பேசிய ஐஸ்வர்யா, ”என்னுடைய அப்பாவை சங்கி என்று எல்லோரும் சொல்லும் போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன், என்னுடைய அப்பா சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால், அவர் என்னுடைய ‘லால் சலாம்’ படத்தில் நடித்திருக்க மாட்டார். அவர் மனிதநேயவாதி. இந்த படத்தில் அவரை தவிர அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள்”என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த பேச்சு குறித்து ரஜினியும் ஒரு விளக்கம் தந்து இருந்தார்; ”சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை. என்னுடைய மகள் சரியாகத்தான் பேசுகிறார். அப்பா ஆன்மீகவாதி அவரை ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்பது தான் என்னுடைய மகளின் ஆதங்கம்” என்று கூறி இருந்தார்.

aishwarya-rajini2712024m.jpg

லால் சலாம் படத்தில் காதர் மொய்தீன்பாய் ஒரு மனித நேயவாதியாக காட்டப்படுகிறார்! அப்படி இருக்க அந்த கேரக்டரில் நடிக்க ரஜினியைத் தவிர யாருமே அவ்வளவு தைரியமாக நடித்து இருக்க மாட்டாங்க என ஐஸ்வர்யா பேசுவதன் உளவியல் சிக்கலை நாம் பார்த்தால்.., இன்னைக்கு இருக்கும் சூழலில் ஒரு முஸ்லீம் பாயாக நடிப்பதே ஒரு சவாலான விஷயமாக அவர் பார்க்கிறார் என்று தான் தோன்றுகிறது. ஐஸ்வர்யாவே இங்கு ஒரு சங்கியின் மன நிலையில் குறிப்பாக தன் சார்ந்த பார்ப்பன சமூக மன நிலையில் இப்படி யோசித்து அந்தப்படியே பேசி இருக்கிறார். உண்மையில் இது படு அபத்தமான பேச்சு! இந்த கேரக்டரில் நடிக்க அனேகமாக எந்த தமிழ் நடிகருமே அச்சப்படமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, மிகவும் விரும்புவார்கள்! இந்த அடிப்படை புரிதல் கூட ஐஸ்வர்யாவுக்கு இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

rajinikanth-salary-in-laal-salaam-movie_

ரஜினிக்கே இந்த கேரக்டரில் நடித்தற்காக ஏதோ ஒருவித பதற்றம் அடிமனதில் இருந்திருக்குமோ என்ற சந்தேகத்தை அன்றைய அவரது பேச்சு நமக்கு தோற்றுவித்தது! ஏனென்றால், அவர் வழக்கத்திற்கு மாறாக இந்து மதம் என்றால் என்ன என்பதற்கு வியாக்கியானம் தருகிறார். சனாதனம், புராதனம், வேதம், உப நிஷத்து, பகவத் கீதை, பரமாத்மா, ஜீவாத்மா என்றெல்லாம் பேசியதன் பின்னுள்ள உளவியலை நாம் கவனிக்க வேண்டும்.

இயற்கையிலேயே அவர் ஒரு ஆன்மீகத் தேடல் உள்ளவரென்றாலும்  ஏதாவது குரு, சாமியார், சீடர் கதையைத் தான் பேசுவார்! ஆனால், சர்ச்சைக்குரிய சனாதனத்தை நியாயப்படுத்தும் விதத்தில் அவர் பேச முன்வந்ததை நாம் கவனிக்க வேண்டும்.

ரஜினி பேச்சை அப்படியே தருகிறேன்;

எல்லா மதங்களுக்கும் ஸ்தாபகர்கள் இருக்காங்க. ஆனா இந்து மதத்திற்கு மட்டும் ஸ்தாபகர்கள் கிடையாது. ஏனென்றால், இது சனாதனம், சனாதனம் என்றால், புராதனம்! அதாவது பழசு. ஆதி! அப்ப வந்து ரிஷிகள் வந்து மெடிடேசன் இருந்தாங்க. அப்ப அவங்க ஒரு டாச்க்கில இருந்த போது, அவங்களுக்கே தெரியாமல் சில சவுண்ட்ஸ் வருது! அது தான் வேதம்.

பிராக்குரிதி என்றால்  நேச்சுரல். (இயற்கை) அந்த நேச்சுரலுக்குள் இறைவன் ‘புருஷா’ என்ற மனிதனை வைத்தான். அவனுக்கு ‘பஞ்ச இந்திரியங்களை’ கொடுத்தான். அதை அனுபவிக்க ‘மனசு’ என்ற புத்தியை வைத்தான். இது தான் வேதங்களில் இருக்கு… இதை புரிஞ்சுக்கிறது அவ்வளவு ஈசி கிடையாது. வேதத்துடைய ‘எசென்ஸ்’ தான் உப நிஷத்து! ‘தத்துவமசி’. ‘அதாவது, நீ ஒரு இந்த உடல் இல்லை, இந்த புத்தி இல்லை. அந்த பரம்பொருளின் அங்கம். அந்த யூனிவர்ஷலில் ஒருவன்’ இந்த உப நிஷத்தை புரிந்து கொள்வதும் அவ்வளவு எளிதல்ல, அதனால அதன் சாரம்சமாக வந்ததே பகவத் கீதை!

கிருஷ்ணா என்பது ஒரு உருவமல்ல, டிவைன்! சூப்பர் கான்ஷியஸ். அர்ச்சுனா என்பது கான்சியஸ். பரமாத்மா ஜீவாத்மாவுடன் பேசுவது தான் பகவத் கீதை! அதுல பக்தி யோகா, கர்ம யோகா, ஞான யோகா..என பல பாதைகள் இருக்கு.

கவனித்தீர்களா? ஒரு முஸ்லீம் பாயாக நடித்ததற்கு பிராயசித்தமாக ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் அதாவது, ஒரு சங்கி என்ன பேசுவாரோ.., அந்தக் குரலாக ஒரு திரைப்பட விழாவில் கோடானு கோடி மக்களுக்கு பேசி பரப்புரை செய்துள்ளார் ரஜினி.

”அவர் பேசியது ஆன்மீகம் தானே! இதுல, எங்க சங்கியோட குரல் இருக்கு?” எனச் சிலர் கேட்கலாம்.

‘இதுல எது ஆன்மீகம்? எது சங்கியின் குரல்’ என்பதை பார்ப்போம்;

முதலாவதாக எந்த ஒரு மதமுமே ஆன்மீகத்திற்கான பாதையல்ல. மதம் என்பது பக்திக்கானது. ஆன்மீகம் என்பது மதங்களை கடந்த ஒரு அனுபவமாகும். ஆன்மீகத்தை அவரவரும் தன் சொந்த ‘அனுபூதி’ என்ற அனுபவத்தின் மூலமே உணர முடியும்.

‘மதம்’ என்பது பக்தியின் வழியே  இறை குறித்த ஒரு அச்சத்தை உருவாக்கி சமூக தளத்தில் மனிதனை ஒழுங்குபடுத்துவது அவ்வளவே! அதே சமயம் நடைமுறையில் அந்த மதத்தை வழி நடத்துவதன் மூலமும், சில கற்பிதங்களை உருவாக்குவதன் மூலமும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தன் பிழைப்பையும், தன் சமூக அதிகாரத்தையும் உருவாக்கி, உறுதிபடுத்திக் கொள்கிறது.

அந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் எண்ணற்ற மதங்கள், இறைவழிபாடுகள் உள்ளன! சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளமாரம், காணபத்யம் இன்னும் சில இனக் குழுக்கள் மற்றும் பழங்குடிகளின் மதங்கள்.. என பல மதங்கள் உள்ளன! அதில், ஒரு இனக் குழுவான பிராமணர்கள் மட்டுமே பின்பற்றிய மதம் தான் சனாதனம் என்ற ஒன்று. எப்படி கர்நாடகத்தின் லிங்காயத்துகள் தங்கள் மதத்தை இந்து மதமல்ல, எங்களுடையது தனி மதம் என்கிறார்களோ..’ அது போல பிராமணர்களும், ”நாங்கள் இந்துக்கள் அல்ல, சனாதன தர்மத்துக்குரியவர்கள்” என்று 60வது, 70 வது வருடங்கள் முன்பு வரை சொன்னது தான் வரலாறு!

தற்போது அனைத்து இந்திய மதங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்து மதம் என்பது உறுதியான நிலையில், இந்து மதத்தையே ‘சனாதனம்’ எனச் சொல்லி ஒட்டு மொத்தமாக தங்களுடையதாக்கப் பார்க்கிறார்கள் பிராமணர்கள்!

yagya-subscription.jpg

இல்லை, இந்து மதம் என்பது யாக வேள்விகள், ஹோமங்கள் செய்யும் சனாதன மதமல்ல. அவரவர்களுக்கு பிடித்த ஒரு உருவத்தையோ அல்லது சூரியன் அல்லது குறிப்பிட்ட மரம் போன்ற இயற்கையையோ வழிபடும் மதம் என்பதே யதார்த்தம். சனாதனத்தில் சிவன் ,சக்தி, முருகன், பிள்ளையார், பெருமாள்..போன்ற எந்த தெய்வமும் இல்லை.

அப்படியிருக்க, ‘சனாதனம் தான் இந்து மதம்’ என்றும், ‘இந்து மதத்திற்கு  வேதங்கள், உப நிஷத்துக்கள், பகவத் கீதை ஆகியவையே அத்தாரிட்டி’ என்றும் ரஜினி கூறுவது அவரது சொந்தக் குரல் அல்ல, அவரை பேச வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ் – பிராமண சமூகத்தின் குரலே அது. வேதங்களாலும், பகவத் கீதையாலும் யாரும் ஆன்மீகத்தை பெற்றதாக வரலாறே இல்லை. அந்த அனுபவத்திற்கு அதில் இடமில்லை! யாகங்கள், வேள்விகள், ஹோமங்கள் நடத்துவது போன்ற சடங்குகள் ஆன்மீகமே அல்ல, அது தான் சனாதனம்!

images-3.jpg வேள்வி, யாகங்கள்,ஹோமங்கள்..என்ற சடங்குகளே சனாதனம்!

இஸ்லாமிய பாயாக நடிப்பது சினிமா வியாபாரத்திற்காக என்றால், நடைமுறை வாழ்க்கையில் பிழைப்பையும், இருப்பையும் தக்க வைக்க சங்கி வேடம் போட்டுக் கொண்டுள்ளார் ரஜினி! இந்த விழாவில் ரஜினியின் பேச்சு முழுக்கவே பார்ப்பனர்களின் ஊது குரலாகவே ஒலித்தது. ஆக, நிஜ வாழ்க்கையில் ‘டபுள் ஆக்‌ஷன்’ வேடத்தில் கலக்குகிறார் ரஜினி!

நன்றாக கவனியுங்கள், அந்த லால் சலாம் விழாவில் ரஜினி பேசுகிறார்; ஒரு ஒற்றையடிப் பாதையாம். இருவர் பயணிக்கிறார்களாம்! நல்லவர் இருவரும் எதிர் எதிரே வரும் போது, அந்தப் பாதை ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து மூன்று வழிப் பாதையாகிறது. அந்த ஒருவரில் ஒருவர் மட்டும் நல்லவராக இருக்கும் போது அந்தப் பாதை இரண்டு வழி பாதையாகிறது. இருவருமே பிடிவாதம் பிடிக்கையில், அங்கே அந்தப் பாதை யாருமே போகாமல் மூடப்பட்டு விடுகிறது. இன்றைக்கு இது தான் நடந்து கொண்டு இருக்கிறது! (அதாவது கடைசியில் சொன்னது. இவ்வாறு ரஜினி பேசி முடித்ததும் அந்தக் கூட்டத்தில் இருந்த நாமம் தரித்த பிராமணர் ஒருவர் கையை பலமாகத் தட்டியதை குளோசப்பில் காட்டினார்கள்.) ”அவரவர் பாதையில் அவரவர் போவோம் என இருந்தால் பிரச்சினை ஏது?” என ரஜினி முடித்தார்!

”பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்குவோம்” என சங்கீகள் கலவரங்கள் நடத்தி ஆயிரமாயிரம் உயிர்கள் பலியான போது நீங்கள் பேசவில்லை. இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட போதும், நீங்கள் பேசவில்லை. அங்கே ராமர் கோவில் கட்டப்பட்டதும் போகிறீர்கள்!

தற்போது வாரணாசியில் ஞானவாபி மசூதியை கேட்கிறார்கள்! இந்துக்கள் உள்ளே நுழைந்து பூஜைகளும் நடக்கின்றன! நீங்கள் வாய் திறக்கவில்லை. அங்கே மசூதி இடிக்கப்பட்டு சிவன் கோவில் கட்டப்பட்ட்டதும் போவீர்களோ என்னவோ!  அதே போல மதுராவிலும் மசூதியை குறிவைத்து கிருஷ்ணர் கோவில் கட்ட முயற்சிகள் நடக்கின்றன! ”இவை வேண்டாம். அவரவர் பாதையில் அவரவர் செல்வோம்” என நடைமுறை வாழ்க்கையில் உங்களால் சொல்ல முடிந்தால் மட்டுமே நீங்கள் உண்மையான ஆன்மீகவாதி!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/16625/lalsalam-rajini-hindu-political-voice/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.