Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?

1222572.jpg  
 

கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை.

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது.

“எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது.

படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.

இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது.

பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது.

பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது.

விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும்.

அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'!

ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆடுஜீவிதம்: அசல் மலையாள சினிமா

ஜெயமோகன்

adu.jpg

அண்மையில் திரையரங்கில் நான் தீவிரமான உணர்வெழுச்சியுடன் பார்த்தபடம் ஆடுஜீவிதம் (Goat Life) இதுதான் மெய்யான மலையாளப்படம். (தமிழில் மோசமான டப்பிங், ஆங்கிலத்தில் மோசமான சப்டைட்டில் என்று சொன்னார்கள். நான் பார்த்தது மலையாள மூலம்) 1954 ல் நீலக்குயில் என்னும் மலையாளப்படம் வெளிவந்தது. அதுதான் மெய்யான மலையாளப்பட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி. அந்தப்படத்தின் தாக்கத்தால் தமிழ் இலக்கியச் சூழலில் நீலக்குயில் என்னும் சிற்றிதழும் வெளிவந்தது.

அன்றிலிருந்து இன்று வரை மலையாள பொதுரசனைச் சினிமாவுக்கு ஒரு மரபு உள்ளது. பி.பாஸ்கரன், கே.எஸ்.சேதுமாதவன், ஏ.வின்செண்ட், பி.என் மேனன், எம்.டி.வாசுதேவன் நாயர், பரதன், பத்மராஜன், ஏ.கே.லோகிததாஸ், மோகன், ஐ.வி.சசி,சிபி மலையில் என ஒரு நீண்ட ஆளுமைநிரை அதிலுண்டு.

அவர்கள் உருவாக்கிய படங்கள் அனைத்துக்கும் பொதுவான ஒரு தன்மை உண்டு. அவை எளியவர்களின் வாழ்க்கையை நுணுக்கமாகச் சித்தரித்தவை. அன்றாடத்தின் இயல்புநிலையை மிகையில்லாமல் காட்டியவை. நாடகத்தனத்தை உதறி காட்சித்தன்மையை நோக்கிச் சென்றவை. மானுடவாழ்க்கையின் போராட்டம், அவலம், மானுடத்தின் உச்சநிலைகள், வெற்றிகள் ஆகியவற்றை பேசியவை அவை. அத்தகைய நூறு சிறந்தபடங்களை ஒரு நல்ல ரசிகன் சொல்லிவிடமுடியும் – நான் ஏற்கனவே ஒரு பட்டியல் இட்டிருக்கிறேன்.

கீழ்மையில் திளைத்து, கீழ்மையை கொண்டாடும் படங்களும் மலையாளத்தில் வந்ததுண்டு. அவை தமிழில் பெருவெற்றி பெற்றதுமுண்டு. ஆனால் அவை மலையாளப்படங்கள் அல்ல.  மலையாளப்படம் என்றால் அந்த நூறுதான்.

அந்த வரிசையில் வரும் படம் ஆடுஜீவிதம். அசலான படம். மகத்தான படம். இன்னும் பலதலைமுறைக்காலம் மலையாளச் சினிமாவின் செவ்வியல்படைப்புகளில் ஒன்றாக இது கருதப்படும். நான் முன்வைப்பது மலையாளத்துவம் என இப்படத்தில் நான் சுட்டிக்காட்டும் சில கூறுகள்தான். இதை உலக சினிமாப்பரப்பிலேயே மலையாளத்தின் அடையாளம் என்று முன்வைக்க முடியும்.

மலையாளத்துவம் என இந்தப்படத்தில் உள்ளவை எவை. மிக எளிமையாக மூன்று விஷயங்களைச் சுட்டிக்காட்டுவேன்.

அ.சமரசமற்ற யதார்த்தம். 

இன்று இந்திய சினிமாக்களில் மலையாளம் தவிர்த்து எதிலும் இந்தப் படம் காட்டுவதுபோல கலைரீதியான முழுமைகொண்ட  யதார்த்தத்தை எடுக்க முடியாது. முன்பு வங்கப்படங்களில் இந்த யதார்த்தம் இருந்தது. இன்று அந்த வங்கப்பட மரபு இந்தி ஆதிக்கத்தால் அழிந்துவிட்டது

இந்த யதார்த்தத்தை இன்று மலையாளம் தவிர பிறமொழிகளில் கொண்டுவர முயன்றால் ரசிகர்கள் ஏற்பார்களா என்ற ஐயம் விவாதநிலையிலேயே எழும். அந்த ஐயம் மிகமிக நியாயமானதும்கூட. எந்த யதார்த்தம் என்றாலும் அதில் கொஞ்சம் கேளிக்கையை கலந்தாகவேண்டும் என்னும் கட்டாயம் இங்கே உண்டு. சமநிலை அம்சம் (Balancing element) என்று அதை திரைக்கதை விவாதத்தில் சொல்வோம்.

அவ்வாறு இங்கே சேர்க்கப்படும் கேளிக்கை அம்சம் மூன்று. ஒன்று, காதல் அல்லது கிளுகிளுப்பு. அது நம் மெல்லுணர்வை சீண்டுவது. இரண்டு தீவிரமான நேரடியான சவால்விடும் காட்சியும் அதனுடன் இணைந்த வன்முறைமுறையும். அது நம் அட்ரினலை தூண்டுவது. மூன்று செயற்கையான சில திருப்பங்கள்.  அது நம் தர்க்கத்தை தூண்டிவிளையாடுவது. இவை ஏதும் இல்லாமல் கதையோட்டம் நிகழும் என்றால் ‘கதை ஒரே போல போய்க்கொண்டிருக்கிறது’ என நம் சாமானிய ரசிகன் நினைப்பான்.

இந்தப்படத்தை தமிழில் எடுத்திருந்தால், இரண்டாம் பகுதியின் இருபதாம் நிமிடத்தில் பார்வையாளன் எதிர்பாராத ஒன்று நிகழும். புதிய ஒரு கதாபாத்திரம் நுழையும். அது ஒரு முக்கியமான நடிகராகவும் இருந்தால் தமிழ் ரசிகன் இரண்டாம் பகுதி ‘பிக்கப் ஆகிவிட்டது’ என்று சொல்வான். ஆனால் கலைரீதியாக சினிமா அங்கே தோற்றுவிடும். படம் உணர்த்த முயல்வது எதுவோ அதிலிருந்து திசைதிரும்பிவிடும்.

ஆடுஜீவிதத்தை தமிழில் அல்லது தெலுங்கில் அல்லது எந்த இந்திய மொழிகளிலும் இப்படியே எடுக்கவே முடியாது. படம் சலிப்பூட்டுகிறது, ஒரே துக்கமாக இருக்கிறது, கதை பரபரப்பாக நகரவில்லை, இரண்டாம் பாதியில் புதியதாக ஒன்றும் நிகழவில்லை, பாலைவனத்தை மட்டுமே காட்டுகிறார்கள் என்றெல்லாம் தமிழ் ரசிகன் உடனே சொல்லிவிடுவான்.

ஒரு படத்தின் உண்மையான தொடர்புறுத்தல் என்பது கதைச்சம்பவங்கள் வழியாகவோ, திருப்பங்கள் வழியாகவோ நிகழ்வது அல்ல. காட்சிவழியாக, அதாவது பார்வையாளனின் கண்வழியாக நிகழ்வது. அவ்வாறு நிகழவேண்டுமென்றால் கதைச்சம்பவங்கள் பெரிதாக இருக்கலாகாது. திருப்பங்கள் நிகழக்கூடாது. அவை காட்சிகளில் இருந்து பார்வையாளனை வெளியே விலக்கிவிடும். ஆனால் கண்  வழியாக சினிமாவை உணரமுடியாத தொடக்கநிலை ரசிகன் காட்சிகளை நீண்டநேரம் பார்க்கமாட்டான், ஏதாவது நிகழவேண்டும் என எதிர்பார்ப்பான். ஏமாற்றத்தால் சலிப்புறுவான்

ஆனால் இந்த சமரசமே அற்ற யதார்த்தம்தான் உண்மையான மலையாள சினிமா.  இரண்டாம் பகுதியில் நம்மைச் சூழ்ந்துகொள்ளும் காட்சிகள் அளிக்கும் அழுத்தமும் அவை நம் கண் வழியாக கனவுக்குள் நுழைவதும்தான் மெய்யான சினிமா அனுபவம்.  நாம் உண்மையில் என்ன அனுபவத்தை அடைந்தோம் என்றே அப்போது உணரமாட்டோம், ஆனால் நீண்டநாள் நினைத்திருப்போம். 

ஆ. மானுடமேன்மை

இந்தப் படம் மானுடனின் வற்றாத அக ஆற்றலைச் சித்தரிப்பது. எத்தகைய சூழலிலும் தன்னுள் இருந்து உருவாகும் ஆற்றலால் மானுடன் வென்றெழுவதைக் காட்டுகிறது இது. நட்பினூடாக, தாக்குப்பிடிப்பதனூடாக உருவாகும் மகத்தான மானுடத்தருணங்களை சித்தரிக்கிறது. மலையாளப் பெரும்படைப்புகளில் அத்தகைய மகத்தான மானுடத் தருணங்கள் பல முன்னரும் வெளிவந்துள்ளன.

அந்த தருணத்தை நம்பி, அதையே உச்சகட்டமாக அமைத்து, அமைதியான முடிவுடன் படத்தை எடுப்பது இன்று மலையாளமன்றி இன்னொரு மொழியில் இயல்வதல்ல. எம்.டி வாசுதேவன் நாயர் மற்றும் லோகிததாஸின் கிளாஸிக்குகள் போல நிறைய மலையாளப்படங்கள் ஒரே வசனத்தில் படத்தின் உச்சம் நிகழ்பவை. இந்தப்படமும் அப்படித்தான். செயற்கையான இறுதிப் பரபரப்பு, மிகையான உணர்ச்சிவெளிப்பாடு ஆகியவை இல்லாத உச்சகட்டம் கொண்டது ஆடுஜீவிதம். மானுடம் வெளிப்படும் ஒரு மௌனத்தருணம், அவ்வளவுதான். அதுதான் படம்.

இ. தொழில்நுட்பம்

நம்மில் பலர் பெருஞ்செலவில் எடுக்கப்படும் பிற இந்தியத் திரைடங்களின் தொழில்நுட்ப நேர்த்தி குறைவான செலவுள்ள மலையாளப் படங்களில் இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள். அது உன்மை அல்ல. அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்ற கலைப்பட இயக்குநர்களின் மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களில்தான் ஒளிப்பதிவின் அற்புதங்கள், படத்தொகுப்பின் புதிய பாய்ச்சல்கள் நிகழ்ந்துள்ளன.

அத்துடன் மலையாள நடிகர்களின் ஊதியம் மிகக்குறைவு என்பதனால் படத்திற்குச் செலவழிப்பது மிகுதி. ஆகவே பெரிய நிபுணர்கள் பணியாற்றமுடியும். அத்துடன் அந்த தொழில்நுட்பத்தை ஆடம்பரத்தைக் காட்டுவதற்குப் பதிலாக யதார்த்தத்தை உருவாக்க பயன்படுத்துவார்கள்.

மலையாளப்படங்களில்  பணியாற்றிய ஒளிப்பதிவு மேதைகள், படத்தொகுப்பு மேதைகள், மகத்தான இசையமைப்பாளர்கள் பலர் உண்டு. (மார்க்கஸ் பட்லே, மெல்லி இரானி, பாலு மகேந்திரா, அசோக் குமார் முதல் சந்தோஷ் சிவன் வரையிலான ஒளிப்பதிவாளர்கள், ரிஷிகேஷ் முகர்ஜி முதலான படத்தொகுப்பாளர்கள்;  சலீல் சௌதுரி, பாம்பே ரவி போன்ற இசையமைப்பாளர்கள் ; தேவதாஸ், ரசூல் பூக்குற்றி போன்ற ஒலித்தொகுப்பாளர்கள், கிருஷ்ணமூர்த்தி போன்ற கலை இயக்குநர்கள்) மலையாளப்படம் இந்திய திரையுலகின் உச்சகட்ட தொழில்நுட்ப சாத்தியங்களை நிகழ்த்தியது என்பதே உண்மை.

ஆடுஜீவிதமும் அப்படிப்பட்ட படம்தான். ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, கலையமைப்பு என எல்லா தளத்திலும் இது ஒரு சாதனை. பிசிறற்ற தொழில்நுட்பம் துருத்திநிற்காமல் கதையுடன் இணைவதே சிறந்த சினிமாவை ஆக்குகிறது.

இதுதான் மெய்யான மலையாளப்படம். மலையாளிகளுக்கென ஓர் ஆளுமை உண்டு.  great explorers and survivers அவர்களைச் சொல்லலாம். அந்த உளநிலையை காட்டியமையால் ஒரு மகத்தான மலையாளப்படமாக திகழ்கிறது ஆடுஜீவிதம்.

https://www.jeyamohan.in/198730/

  • கருத்துக்கள உறவுகள்

அகன்ற திரையில் தமிழ் டப்பிங்கில் பார்த்தேன். மிகவும் அசலான மலையாள சினிமா. அத்துடன் தொழில்நுட்பமும் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது.

———

 

ஆடுஜீவிதம் - சுவாலையின் சுவை

தெய்வீகன்

 

மீட்சியற்ற கொடும் பொறியில் சிக்கிய அப்பாவிப் புலம்பெயரி ஒருவனின் விடுதலைக்கான போராட்டமும் அதன் பின்னணியில் அவன் அனுபவித்த வாதைகளையும் நுட்பமாக விவரித்த நாவல் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம்.

 
 
 
f959cb_f4e04d0f52244b64ac3824bfe0d9af17~
 
 

மலையாளத்தில் மாத்திரம் நூறு தடவைகளுக்கு மேல் பதிப்பிக்கப்பட்ட நாவல். ஐந்துக்கும் மேற்பட்ட பிறமொழிகளில் மொழிபெயர்கக்ப்பட்டது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலில் நிகழும் பல சம்பவங்களும் பாத்திரங்களின் மன அமைப்புக்களும் அவற்றின் முரண்களும் ஆடுஜீவிதம் என்ற புலம்பெயர் களத்தில் கதையுடைய பிரதிக்கு கூடுதல் பலம் சேர்ப்பவை.

சவுதியில் வேலை செய்வதற்காக கேரளத்திலிருந்து போயிறங்கும் நஜீப் என்ற இளம் குடும்பஸ்தன், கூடச்சென்ற ஹக்கீம் என்ற இளைஞனோடு விமானநிலையத்தில் வைத்து ஆட்டுப்பண்ணை நடத்துபவன் ஒருவனால் கூட்டிச்செல்லப்படுகிறான். பாலை நிலப் பண்ணையொன்றில் கொண்டுபோய் அடைத்தபிறகுதான், தான் அடிமையாகக் கொண்டுவரப்பட்டதை நஜீப் உணர்கிறான். ஆடு மேய்ப்பவனாக அவன் அனுபவிக்கின்ற தொடர் துயரத்திலிருந்து தப்புவதற்கு ஒரு வழி பிறக்கிறது. அருகிலிருந்த இன்னொரு பண்ணையில் அடிமையாக அடைக்கப்பட்டிருந்த அவனது தோழன் ஹக்கீமுடனும் புதிய அடிமை இப்ராஹிம் என்பவனோடும் அங்கிருந்து தப்புகிறார்கள். கதையின் நாயகன் நஜீப் எவ்வாறெல்லாம் நரக வாதைப்பட்டு, ஈற்றில் இந்தியா திரும்புகிறான் என்பது இந்த நாவிலின் சுருக்கம்.

நாவலின் முக்கிய பகுதிகளை கதைப்புள்ளிகளின் அடிப்படையில் வகுத்தால் -

  • நஜீப் மீதான அவனது அரேபிய முதலாளியின் கொடுமை

  • அடிமையாகப் பணிபுரியும் பண்ணையென்றாலும், நஜீபுக்கும் அவன் வளர்க்கும் ஆடுகள் - ஒட்டகங்களுக்கும் இடையான உறவின் இறுக்கம்.

  • பணனையிலிருந்து தப்பும்போது எதிர்கொள்ளும் கொடுந்துயரை, பாலை நிலத்தின் நுட்பமான அவதானங்களின் ஊடாக நில வரைவியல் சார்ந்து முன்வைப்பது.

  • நஜீபின் இறைபக்தி

இந்த உணர்வுபூர்வமான பகுதிகளைச் சுற்றித்தான் இந்த ஒட்டுமொத்த நாவலும் விரிகிறது. "ஆட்டுப் பண்ணையில் அடிமையாக வாழ்ந்த தனது வாழ்வும் அங்கிருந்த ஆட்டின் வாழ்வும் ஒன்றே. அங்கு தானும் ஒரு ஆடுதான்" - என்ற நஜீபின் வலிநுரைக்கும் வாக்குமூலத்தோடு நாவல் நிறைவுறுகிறது.

ஆடுஜீவிதம் நாயகன் மாத்திரமல்ல, உலகின் அத்தனை நாடுகளிலும் புலம்பெயரிகளாகத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தவர்கள் அனைவருமே, ஆடுஜீவிதத்தில் வருகின்ற ஆடுதான். இது புலம்பெயரிகள் ஒவ்வொருவருக்கும் தெரியும். அரேபியப் பண்ணையில் ஆண்மை சிதைக்கப்பட்டு, முடிந்தவரையில் பாலும் கம்பளியும் எடுக்கப்பட்ட பின்னர், தேர்ந்த ஆடுகள் இறைச்சிக்கு அனுப்பப்டுவதைப் போலவும் எஞ்சியவற்றின் இறப்புக்களுக்கு கணக்கே இல்லை என்பது போலவும்தான் புலம்பெயரி ஒவ்வொருவனுடைய வாழ்வுக்கும் சாவுக்கும் வெளிநாட்டு மண்ணில் எஞ்சியுள்ள பெறுமானம். இந்த உண்மையை ஒவ்வொரு நாடும், வெவ்வேறு கலைச்சொற்களால் போர்த்திக்கொல்லாம். ஆனால், உண்மை வேறானது.

ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வு இவ்வாறான பல லட்சம் ஆடுகளால் ஆனது. கரை சேர்ந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் தொண்ணூறுகளிலிருந்து கணக்கெடுத்தால், இவ்வாறான பல ஆடுஜீவிதத் தொடர்களை எழுதிவிடக்கூடிய கதைகளைக் கொண்டது. எயார் போர்ட் கதைகள், ஏஜென்ஸி கதைகள், படகுக் கதைகள், பழம்பிடுங்குவதற்கு ஏற்றிச்செல்லப்பட்டவர்களின் பண்ணைக் கதைகள் என்று பல்லாயிரம் திரைப்படங்கள் எடுத்துவிடப்போதுமானவை.

 
f959cb_655f9f3fe2c44afb9f6523cda441240c~
 

இந்தப் புலம்பெயர் வாழ்வின் கூட்டுவலியின் பிரதியாக ஆடுஜீவிதம் திரைப்படம் எம் முன் விரிகிறது. ஒரு புலம்பெயரியாக நாவலின் தீவிரத்தையும் நஜீபின் ஒவ்வொரு உணர்வையும் காட்சிக்குள் யதார்த்தபூர்வமாகப் பொருந்திக்கொண்ட கதையையும் ப்ரிதிவிராஜின் நடிப்பினையும் திரையில் மிகவும் ரசித்தேன்.

நாவலில் உள்ள அத்தனை காட்சிகளையும் நீட்டி முழக்கும் வசதியிருந்தால், ஒரு தொடராகவே ஆடுஜீவிதத்தை இன்னும் விரித்துக்கொள்ளலாம். ஆனால், இரண்டரை மணிநேரத் திரைப்படத்திற்குள் நாவலின் கதைமையத்தை எவ்வாறு நுட்பமாகப் பார்வையாளனிடம் கொண்டுசெல்வது என்ற சவாலை இயக்குனர் திறம்படக் கையாண்டிருக்கிறார்.

திரைப்படத்திற்காக நாவலிலிருந்து வெட்டிய நீக்கிய பகுதிகளை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது. அதுபோல, விரித்துச்சொல்லப்படவேண்டிய பல விடயங்களை அர்த்தபூர்வமான ஒற்றைக் காட்சிகளால் குறிப்புணர்த்திய இடங்களும் திரைக்கதைக்கு தீவிரத்தன்மையைக் கொடுத்திருந்தது. உதாரணமாக, மழைக்கு அஞ்சும் பண்ணை முதலாளி, அவனைச் சுடக்கூடிய வாய்ப்பிருந்தும் நஜீப் துப்பாக்கியைத் திருடாமல் விட்டுவிடுவது, ஆடுகளின் ஆண்மை நீக்கம் போன்ற பல காட்சிகள் கிட்டத்தட்ட இந்தத் திரைக்கதைக்குத் தேவையற்றவை. ஆனால், ஆடுகளுக்கும் நஜீபிற்கும் இடையில் காலப்போக்கில் உருவான உறவு மிகவும் நெருக்கமானது. தனது மகனுக்குச் சூட்டுவதற்காக எண்ணியிருந்த பெயரை புதிதாய் பிறந்த ஆட்டுக்குட்டிக்கு வைத்துக்கொண்டளவு ஆடுகளுக்கும் அவனுக்குமான பிணைப்பு வலியது. ஆனால், அந்த உறவின் பெறுமானத்தை, தப்பியோடுவதற்கு முன்னரும் ஆடுகளுக்கும் ஒட்டகத்திற்கும் தீவனம் போடுகின்ற காட்சியின் மூலம் ப்ரிதிவிராஜின் நடிப்பு இலகுவாக உணர்த்திவிடுகிறது. தப்பிச்செல்லும் பாலையின் கொடூரத்தை ஹக்கீம் பலியாகும் காட்சி ஆத்மார்த்தமாகச் சொல்லிவிடுகிறது. பாலையின் தன்மைகள் ஓரளவுக்கு சூடானியன் இப்ராஹிமின் வழியாக காட்சியாகின்றன. இவ்வாறு நாவலின் பல இடங்கள் யதார்த்தத்தை மீறாமலும் திரையின் இலக்கணத்தோடு ஒத்துப்போனதும் கச்சிதமாயிருந்தது.

'ஆடுஜீவிதம்' திரைப்படம், நாவலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு துளியிலிருந்து விரிவான கடல் அல்ல. நாவல் எனும் கடலையே ஏறக்குறைய தனக்குள் போதுமானளவு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

ஆடுஜீவிதம் - நிறைந்த அனுபவத்தை அருளிய திரைப்படம்.

 

https://www.theivigan.co/post/10009

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.