Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 "அன்பின் வெகுமதி"


இலங்கை திருகோணமலை மூன்று மலைகள் சூழ்ந்த வளம் மிக்க திரிகோணம் எனப் பெயர் பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட, பண்டைய நூல்கள் சிலவற்றில்  'கோகண்ண' எனவும் [தீபவம்சம், மகாவம்சம்], திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் சில தேவாரப் பாடல்களில் 'கோணமாமலை' ["குரைகட லோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே"] எனவும் அழைக்கப்பட்ட இடம் ஆகும். இந்த அழகிய கடற்கரை நகரத்தில், அடர்ந்த நீல நிறமுடைய அலைகள் தங்கக் கடற் கரை மேல் நடனமாடியபோது, அதன் ஆழத்தைத் தழுவத் துணிந்தவன் போல், ஆனால் பணிவான மீனவனாக ரவி, தன் சிறிய படகில் இருந்தபடி கடல் அன்னையைத் இரசித்துக்கொண்டு, புத்தி கூர்மையும் உடல் வலிமையும் ஒருங்கே பெற்ற, சூரியன் தினம் முத்தமிட்ட  முறுக்கேறிய தோல் மற்றும் நீலக்கல் வானத்தை பிரதிபலிக்கும் கண்களுடன், அவன் அசைக்க முடியாத ஆர்வத்துடன் தனது அன்றைய மீன் பிடிப் பயணத்தை தொடங்கினான்.  


அவன் எண்ணம் எல்லாம் இன்று, வழமைக்கு மாறாக, தான் பிடிக்கப் போகும் மீன்களைப் பற்றி இல்லாமல், அவன் கடந்து வந்த அந்த சந்தையின் ஒரு மூலையில் இருந்த உள்ளூர் கைவினைஞர் ஒருவளின் மட்பாண்ட கடைப் பக்கமே இருந்தது. பட்டை தீட்டப்பட்ட புருவம், கூரிய கண்கள், ஆண்மைக்கே உரிய மீசை, முரட்டுத்தனமான அவனுடைய அதரம், அவனைப்போல அடங்காத அவன் சிகை, அவன் முகத்தில் எப்போதும் ஒரு திமிர் இருக்கும். ஆனால் இன்று அந்த திமிரைக் காணவில்லை. 


அமரா, கண்ணை உறுத்தாத அழகு, மாநிறதேகம், வில் போன்ற புருவம், மிரட்சியான கண்கள், மொத்தத்தில் அவள் ஒரு அமைதி பூங்கா என்றாலும் தன் கண்ணுக்குள் கடல் ஆழத்தின் மர்மங்கள் போல, என்னென்னவோ எல்லாம் வைத்திருந்தாள். அவள் களிமண்ணை நுட்பமான தலைசிறந்த படைப்புகளாக வடிவமைத்ததால், ஒவ்வொன்றும் அதன் கதையைச் சொல்லாமல் சொல்கிறது. சந்தையின் சலசலப்புக்கு நடுவே, கரைக்கு எதிரான அலைகளின் தாள முழக்கத்தில் அவள் சிலவேளை கவிதைகளும் எழுதி, அதையும் சிறு புத்தகமாக பார்வைக்கு வைத்திருந்தாள். அதில் ஒரு கவிதையும், நிர்வாணமான சிந்துவெளி நடன மாதுவை ஒத்த நுட்பமான வேலைப்பாடு கொண்ட அந்த களிமண் உருவமும் தான் அவனின் இன்றைய மாற்றத்துக்கு காரணமாக இருந்தது. 


இந்த ஒய்யார களிமண் வார்ப்பு ஒரு கருத்த பழங்குடி பெண் ஒன்றை சித்தரிக்கிறது என்றாலும் அது அவனுக்கு அமராவின் பிரதி போலவே தென்பட்டது.  அவள் உடையில்லாது தனது நீண்ட  தலை முடியை கொண்டை போட்டு உள்ளாள். இடது கையை வளையல்கள் முற்றாக அலங்கரிக்க, வலது கையின் மேற் பகுதியை ஒரு காப்பும் ஒரு தாயத்தும் அலங்கரிக்கிறது. அவளது கழுத்தை சுற்றி ஒரு வகை சிப்பி அட்டிகை இருக்கிறது. வலது கையை இடுப்பிலும் இடது கையை இறுக்கமாக பிடித்திருப்பதும், அவளின் இடுப்பு கவர்ச்சி யூட்டக் கூடியதாக முன்தள்ளி [முன்பிதுங்கி] இருப்பதும், அவனுக்கு பல எண்ணங்களைப் ஏற்படுத்தியது போலும்! 


அடுத்தநாள், எதிர்பாராத கனமழை திடீரென காற்றுடன் கொட்டியது. எனவே ரவி அமராவின் களிமண் பாத்திரக் கடையில்  ஒதுங்கி, அந்த சிலையை கையில் எடுத்து இரசித்துக்கொண்டு இருந்தான். அமரா அவனையே உற்றுப்பார்த்தபடி, அவன் அருகில் வந்து, அந்த சிலையின் கதையைக் கூறி, அதன் விலையையும் கூறினாள். ஆனால்  அவர்களின் கண்கள் சந்தித்தபோது, பிரபஞ்சம் இடைநிறுத்தப்பட்டு, அவர்களின் ஆத்மாக்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத, இனி நடக்கப்போகும் அவர்களின் விதியின் இழைகளை ஒன்றாக நெய்தது போல் இருந்தது.


"எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்!"


ரவியினது பார்வை அமரா மேல் செல்ல. அவள் கண் ரவி மேல் பாய், இருவரது மனவுணர்ச்சியும் ஒன்றுபட்டு ஒரு தனித்துவமான காதலைக் இருவரும் அவர்களுக்கு தெரியாமலே, விதியின் சதியால் பகிர்ந்தனர்  அன்று முதல், நாளுக்கு நாள், அவர்களின் சந்திப்புகள் மெல்ல மெல்ல அதிகரித்து அடிக்கடி நிகழ்ந்தன,.


மாறுபட்ட சமுதாயத்தில் இருவரும் பிறந்து வாழ்ந்து வந்தாலும், அவர்களது காதலுக்கு எல்லையே இல்லை. அவர்கள் ஒருவருக் கொருவர் மற்றவரில்  ஆறுதல் கண்டனர், வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வு மற்றும் கட்டுப்பாடுகள் மத்தியில் தங்களுக்கு கிடைத்த தருணங்களில் அன்பின் வலிமையைப் ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டனர். அவர்களின் காதல், இருவருக்கும் இடையில் வருங்கால  நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியது, அவர்களின் இதயத்தின் இருண்ட மூலைகளை எல்லாம் பிரகாசமான நாளைய உறுதிமொழியுடன் ஒளிரச் செய்தது.


ஆயினும் கூட, அவர்களின் காதல் மலர்ந்தபோது, அவர்களைக் பிரிக்க அச்சுறுத்தும் கொந்தளிப்பான அலைகளைப் போல சவால்கள் வெளிப்பட்டன. சமூக விதிமுறைகள் மற்றும் குடும்ப எதிர்பார்ப்புகளின் கிசுகிசுக்கள் அவர்களின் உறவின் மீது சந்தேகத்தின் நிழல்களை ஏற்படுத்தின. பாரம்பரியத்தில் வேரூன்றிய அமராவின் குடும்பம், ஒரு மீனவருடன் அவளின் உறவின் சாத்தியக் கூறுகளை கேள்விக் குள்ளாக்கியது, அதே நேரத்தில் ரவியின் குடும்பத்தனரும் வேறு சமூக அடுக்குகளை நேசிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்தனர்.


ஆனால் காதல், கடல் போல இடைவிடாது, சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஆளாக மறுத்தது. அமரா மற்றும் ரவி உறுதியுடன் இருந்தனர், அவர்களின் இதயங்கள் அமராவின் மட்பாண்டங்களை அலங்கரிக்கும் சிக்கலான வடிவங்களைப் போல பின்னிப்பிணைந்தன. தளராத உறுதியுடன், புயலில் நங்கூரமாக மாறிய காதலை கைவிட மறுத்து அலையை எதிர்த்து நின்றார்கள்.


இதமான காற்று, மிதமான போதை அவர்களுக்கு துணைபோக, மொழியில், வார்த்தைகள் தீராதது போல, அவர்களது கொஞ்சல் பேச்சும் நீண்டு, எல்லா சவால்களையும் மீறி தொடர்ந்தது. அவர்கள் எப்போது இரவில் உறங்கினார்கள் என்பது அந்த இரவுக்கு மட்டுமே தெரியும். கற்பனை அவர்களிடம் உறக்கத்தில் தங்கு தடையின்றி சிறகடித்து பறந்தது. இதுதான் இந்த காதல் பயணத்தின் இனிமையான நேரம் என்பதை அப்போதே அவர்கள் உணர தொடங்கினார்கள். இதுவே இளமை வாழ்வின் மறக்கமுடியாத தருணம் என்பதையும் உணர்ந்தார்கள்.


அமராவுக்கு சில கவிதைகள் தோன்றின. அந்த பாறையை தொட்டுக் கொண்டு இருந்த தண்ணிரிலேயே எழுதினாள். ஆனால் அலைகள் அவைகளை அபகரித்து சென்று விட்டது. கடல் எப்போதாவது, அதை பிரசுரிக்கும். எங்களைப் போல வருபவர்கள் வாசிக்கட்டும் என்றாள். கவிதை எழுத, தெரிந்து எடுத்த இனிய காதல் வார்த்தைகள் மட்டும் மனதில் நின்று கண்களை வம்புக்கிழுத்தன. அவள் நீரில் மிதந்தாள், நிலத்தில் மிதந்தாள், காற்றில் மிதந்தாள், எதை அடைந்தாள், எதை இழந்தாள், அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை? 


ஏன் அவன்கூட எதோ கற்பனையில், பாறையில் இன்னும் ஒரு உடைந்த சிறு சுண்ணாம்பு கல்லால் ஒரு கவிதை வரைந்து கொண்டு இருந்தான், அது அழியவில்லை, திருப்ப திருப்ப அதை வாசித்து மகிழ்ந்து கொண்டு இருந்தான். 


"உப்பு சாப்பிட்ட மென் காற்று 
உதடுகளை முத்தமிட்டு செல்கிறது! 
உள்ளம் வருத்தும் காந்த விழிகளில் 
உயிரைப் பறிகொடுத்துச் சாகிறேன்!" 


"பஞ்சுப் பாதங்களை நனைக்க மனமின்றி 
பருத்த அலையும் கடலுக்கு திரும்புது! 
பள்ளம் மேடு தோண்டும் நண்டுகளும்
பதுமை இவளென விழியுர்த்தி பார்க்கின்றன!" 


"அமராவின் எழிலில் கோபம் கொண்டு 
அழகிய நிலாவும் முகிலில் மறையுது! 
அடர்ந்த கூந்தலின் வாசனை முகர்ந்து  
அடைக்கலம் தேடினேன் அவளின் மடியில்!"


எதிர்ப்புகளை எதிர்கொண்டாலும், இருண்ட இரவுகளில் அவர்களை வழிநடத்தும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கைப் போல, அவர்களின் காதல் வழி அமைத்து வலுவடைந்தது. கடுமையான புயல்களை தாங்கள் எதிர்கொண்டு விட்டதாக அவர்கள் நினைத்த போது, அவர்களின் அன்பின் இறுதி சோதனையை விதி அவர்களுக்கு வழங்கியது. நாளை பெப்ரவரி 14 , மீண்டும் சந்திப்போம் என்று பிரிய மனமின்றி  அவள் விடைபெற்றுச் சென்றாள். ஆனால் அவனுக்கு  பெப்ரவரி 14 ஒன்றும் பெரிதாக்கத் தெரியவில்லை, என்றாலும் 'கட்டாயம்' என்று கூறி அவனும் தன் வீடு நோக்கி புறப்பட்டான்.  


அமரா அவன் திருப்ப திருப்ப இரசிக்கும் அந்த நடன மாது சிலையையும் அத்துடன் சிவப்பு ரோஜாக்களின் ஒரு மலர்க் கொத்தையும் எடுத்துக் கொண்டு நேற்று இருவரும் அமர்ந்து இருந்த அந்த பாறைக்கு தேவதை போல், தெரிந்து எடுத்த அழகான உடையில் வந்தாள். அவன் ஏற்கனவே காடுகளிலும் மற்றும் பாதைகளிலும் காணப்படும் ஒரு வெள்ளை நிற காட்டு ரோஜாவுடன் மட்டும், சாதாரண, ஆனால் சீரான உடையில் அமர்ந்து இருந்தான். அவனைப் பொறுத்தவரை, அன்பிற்கு வெகுமதி இல்லை. அன்பு அன்பிற்காகவே செய்யப்படுகிறது! 


"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்'


நேசிப்பது கொடுக்கல் வாங்கல் அல்ல, அதனால் தான் அவன் வெறும் காட்டு ரோஜாவுடன், ஆனால் வெள்ளை மனத்துடன் அங்கு காத்திருந்தான். காதல் வாழ்க்கை - அன்பின் பெரிய வெகுமதிகள்! பலர் தவறாகப் புரிந்து கொள்வது போல் காதல் அது உணர்வு அல்ல. அன்பு ஒரு கட்டளை. அன்பின் மிகவும் விரும்பப்படும் பரிசு வைரங்கள் அல்லது ரோஜாக்கள் அல்லது சாக்லேட் அல்ல. இது ஒருவர் மேல் தனிக் கவனம் செலுத்துதல் ஆகும். இதுவே அவனின் தத்துவம்!


ஆனால், அமரா அன்பை, காதலை அவனை மாதிரி நினைக்கவில்லை. அன்பை, பரந்து விரிந்து பெருங்கடலுடனும், கோபத்தை ஊதும் போது பெரிதாகி பட்டென்று வெடித்து விடும் பலூனுடனும் பலர் ஒப்பிடுவார்கள். அப்படித்தான் அவள் இருந்தாள். அவன் உண்மையான பாசத்துடன் கொடுத்த அந்த வெள்ளை ரோசாவின் ஐந்து இதழ்களையும் பிடிங்கி எடுத்து கசக்கி கடலின் அலைக்குள் தூக்கி வீசினாள். அவன் அப்படியே மலைத்துப்போய் மௌனமாக அவளைப் பார்த்த படியே இருந்தான். 


அவள் அக்கம் பக்கம் எங்கும் பார்த்தாள். தான் கொண்டு வந்த காதலர் தின பரிசை இன்னும் அவளே வைத்துக்கொண்டு இருந்தாள். ஒரு பேரழிவுகரமான சுனாமி போல அந்த கடலோர நகரத்தின் கடற்கரையை தன் கண்ணால் வலம் வந்தாள். அங்கே கொஞ்சம் தள்ளி, அவளின் சொந்த மச்சானும் பிரசித்திபெற்ற கணித ஆசிரியருமான 'கவி' கடல் அலையை இரசித்த வண்ணம் இருப்பதைக் கண்டாள். கோபத்தின் திடீர் எழுச்சியில், அவள் தன்னை மறந்தாள். அழிவைத் தரும் குழப்பம் மற்றும் விரக்தியின் மத்தியில், தான் என்ன செய்கிறேன் என்பதை மறந்தாள். ரவியை உடனடியாக விட்டு விலகி கவி நோக்கி அந்த காதல் பரிசுடன் புறப்பட்டாள். ரவி ஒன்றும் சொல்லவில்லை. நடப்பது நடக்கட்டும், கிடைப்பது கிடைக்கட்டும் என்று அப்படியே இருந்துவிட்டான்!    


'அன்பு' என்பது வேறு; 'அன்பு காட்டுவது' என்பது முற்றிலும் வேறு என்பதை முற்றாக புரிந்தவன் அவன்! நிபந்தனையின்றி அன்பைக் கொடுக்கும் போது, நாம் ஏற்கனவே வெற்றி பெறுகிறோம். அதாவது, அன்பின் உணர்வு, அதை வேறொருவருக்குக் கொடுக்கத் தேர்ந்தெடுக்கும் போது நமக்கு ஏற்படுகிறது. அன்பின் அனுபவம் அதைக் கொடுக்கும் போது ஏற்படுகிறது. வேறொருவர் நம்மைப் உண்மையில் புரிந்து பிடிக்கும் வரை அல்லது உண்மையில் நேசிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நம் அன்பைக் கொடுப்பதற்காக அது நடக்கும் வரை நாம் காத்திருந்தால், நாம் நிபந்தனையுடன் நேசிக்கிறோம். இப்படித்தான் அவன் மனம் அவனுக்குள் வாதாடிக் கொண்டு இருந்தது. அவன் உண்மையில் பாசத்துடன் அமராவை புரிந்து காதலிக்கிறான். அதனால்த் தான் அவளின் செய்கையை அவன் பொருட்படுத்தவில்லை. 


"அன்பின் வெகுமதி, பெருமதி எல்லாம் புன்னகையுடன் சேர்ந்த அன்பின் கருணையே!"


ஆனால் அந்த கோபம் என்ற பலூன் மதியை அடையும் முன் வெடித்து சிதறிவிட்டது. அவள் அங்கிருந்து திரும்பி ரவியை பார்த்தாள், அவன் இன்னும் அவள் கசக்கி எறிந்த காட்டு ரோஜாவின் இதழ்களை ஒன்று ஒன்றாக அலைகளில் இருந்து பொறுக்கி எடுத்து ஒன்றாக சேர்த்து பார்த்துக் கொண்டு இருந்தான். அவளிடம் இப்ப அவனின் காதலில் முழு உறுதி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது , அவள் மீண்டும் ரவியுடன் இணைவதற்கான பயணத்தைத் திரும்பித் தொடங்கினாள், அவளின் ஒவ்வொரு அடியும் உண்மையான அன்பின் வெகுமதியை நினைவூட்டியது. 


அதே பாறையின் மேல் கைகோர்த்து, அவர்கள் ஒரு புதிய விடியலினை நோக்கி நின்றார்கள், இது உண்மையில் அவர்களின் காதல் பக்தியின் நீடித்த சக்திக்கு ஒரு சான்றாகும். ஏனென்றால், திருகோணமலையின் இதயத்தில், அலைகள் காதலின் வெற்றியின் கதைகளை கிசுகிசுத்தன, அமராவும் ரவியும் அவர்களின் மிகப் பெரிய வெகுமதியைக் கண்டனர் - இது நேரம், இடம் மற்றும் கடலின் ஆழங்களைக் கடந்த காதல்! 


அந்த பெரும் மகிழ்வில், ரவி, அவனுக்கு பிடித்த அவளின் கவிதையை கடல் அலைகளின் மற்றும் மீன்களை பிடிக்க வட்டமிடும் நாரை, கொக்கு போன்ற புள்ளினங்களின் ஓசையுடனும் சேர்ந்து அவளுக்கு கேட்கக் கூடியதாக முணுமுணுத்தான். அவளும் அவனுடன் சேர்ந்த தன்னுடைய கவிதையை ராகத்துடன் பாடினாள்.   


"ஒவ் ஒருவர் வாழ்விலும்  ஒவ் ஒரு கதை,
உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே!"

"அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறது,
அங்கே நிம்மதி கிடைக்கிறது, இங்கே வேதனை வலிக்கிறது, அன்பே!"

"யார் யாரோ, ஒவ் ஒருவருக்கும், ஒரு கதை
சில வலியை கூறும், சில சிறப்பை கூறும், அன்பே!"

"எவரடி பூமியில் இன்று, பயம் கொள்ளா மனிதன்? 
சிலர் அழுவார், சிலர் அழுதுகொண்டே சிரிப்பார் அன்பே!"

"வெவ் வேறு கட்டத்தில், எம்மை திட்டி சாணமும் பூசுவார்கள்.
வெவ்வேறு கட்டத்தில், போற்றி பதக்கமும் தருவார்கள், அன்பே!"

"எங்களுக்கும் ஒரு காலம் வரும், ஒரு வாழ்வு வரும்,
மேலே உயர்ந்து நாம் வானத்தையும் தொடுவோம், அன்பே!"

"காலம் கைவிட்டால், தொட்டது எல்லாம் வசை பாடும்,
தோல்வியின் கால் அடியில் குப்பற விழுவோம், அன்பே!"

"ஒவ் வொருவர் வாழ்விலும் இன்பமும் துன்பமும், 
அது ஒரு கனப் பொழுது, எம்மை ஆட்டிப் படைக்கும் அன்பே!"

"ஒவ் வொரு கதைக்கும், தொடக்கமும் முடிவும் உண்டு,
அது நேராக அல்லது வளைந்து செல்லும், அன்பே!"

"உனது கதை எந்த வழி, நீ அறிவாய் 
புளிப்பும் இனிப்பும் கலந்த கலவையடி அன்பே!"  


நன்றி


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.