Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"எனக்காக பிறந்தவள்"


"இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் 
குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் 
திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால்  
வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால் 
அரம்பை தேசவில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள்
கடல் கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள்
துடிக்குள்அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன இடையினாள்
துட்டன் அரண்மனைக்குக் கட்டும் கதலிவாழைத் தொடையினாள்
[ குற்றால குறவஞ்சியில் நாயகியின் வர்ணனை]


நான் வேலை செய்யும் பணிமனையில், எனக்கு ஒரு உதவியாளராக  ஒரு பெண் நாளை தனது பதவியை ஏற்பார் என்றும், அவர் ஒரு பல்கலைக்கழக பட்டதாரி என்றும், இது அவரின் முதல் வேலை என்றும், ஆகவே அவருக்கு வேலையை பற்றிய அறிமுகமும், பயிற்சியும் வேண்டும் என்றும், அதற்கான ஒழுங்கை செய்யும் படி எனக்கு அமைச்சில் இருந்து கடிதம் வந்து இருந்தது. அதில் அவரின் படம், மற்றும் சில விபரங்களும் இருந்தன. வழமையாக எனக்கு கீழ் வேலை பார்க்கும் அணி தலைவரிடம் கொடுத்துவிடுவேன். நான் அதில் நேரடியாக பங்குபற்றுவதில்லை. ஆனால், அவளின் படம், வயது, படிப்பு 
எனோ என்னை இம்முறை கவர்ந்து விட்டது. 


நான் பொறியியலாளர் என்றாலும், பொழுது போக்காக இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவன் என்பதால், அவளின் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க, குற்றாலக் குறவஞ்சி ஞாபகம் தான் வந்தது. என் கற்பனையில், எனக்காக ஒருவள் கட்டாயம் பிறந்திருப்பாள், அவள் எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்தேனோ, அதைவிட, குற்றாலக் குறவஞ்சியை விட,  அவள் உயர்வாக தெரிந்தாள். 'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி' யாய் .. 'பணைத் தோள், பாவை அன்ன வனப்பினள் இவள்' என இருந்தாள்!


முதல் முதலாக அன்று இரவு முழுவது அந்த, அவளின் படம் தான் கண்ணில் வந்து கொண்டே இருந்தது. இது என்ன கொடுமை ? எனக்கு புரியாத ஒரு உணர்வு ? அது என்ன ? அவள் யார் ? அந்த படமும், சிறு குறிப்பும் ஒருவரை அறிய கட்டாயம் காணாது, அப்படி என்றால் ஏன் என் மனம் அதை நம்பவில்லை,  'அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்' அப்படி ஒன்றும் இன்னும் நடை பெறவில்லையே, மனதை தேற்றிக்கொண்டு கொஞ்சம் உறங்க முயன்றேன். 

"உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து , 
இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் 
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,"


புது நிலவு நிகழும் பெரு நாட் பொழுதிலே; கதிரவனும் அந் நிலவும் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு; அவற்றுள் ஒன்று துயர் தரும் மாலைப் பொழுதில் மலைக்கப்பால் சென்று மறைந்தது போல, என்னை திடீரென வாட்டும் இந்த எண்ணமும் மறையட்டும் என்று போர்வையை இறுக மூடிக்கொண்டு கொஞ்சம் அயர்ந்து தூங்கினேன். 


"சிறு கண் யானை உறு பகை நினையாது,
யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப,
அருள் புரி நெஞ்சம் உய்த்தர 
இருள் பொர நின்ற இரவினானே." 


சிறு கண்களை உடைய மதம் கொண்ட யானை பற்றி பொருட் படுத்தாது, பூ மாலை அணிந்த அன்பு உள்ளம் உடையவளே, எப்படி நீ என்னை காண இந்த கரும் இருட்டில் வந்தாய்? என கேட்டபடி, ஆனால், திடீரென அவள் எதிரே வந்துநின்றதால், எனக்கு கைகால் பதறி. மேலும் பேசுவதற்குச் சொற்கள்  வராமற்போகத்தான் தெரிந்தது இது கனவென்று, எனக்கே என் மேல் கோபம் கோபமாக வந்தது. நேரத்தை பார்த்தேன் காலை ஆறு தாண்டி விட்டது. 


அவசரம் அவசரமாக, காலைக்கடன் முடித்து, நேற்று வாங்கி மிகுதியாக இருந்த இரண்டு பாண் துண்டுகளை வாழைப் பழத்துடன் அருந்தி, சுடச் சுட ஒரு காபி குடித்துவிட்டு, என்னிடம் இருந்த உடுப்புகளில், சிறந்த ஒன்றை தெரிந்த்தெடுத்து கம்பீரமாக பணிமனைக்கு என் மோட்டார்வண்டியில்  கொஞ்சம் முந்தியே சென்றேன்.


"இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?"


சீக்கிரம் சொல். உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் இதழோடு இதழ் சேர்த்து, என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!’ என்று அவளை வரவேற்று சொல்ல வேண்டும் போல் இருந்தாலும், அவளுக்கு எப்படி என்னை தெரியும், என் உருவமோ, வயதோ, படிப்போ அவளுக்கு தெரியாதே ! அவள் என்னையோ, என் படத்தையோ பார்த்தது இல்லையே ? அவளுக்கு ஆண் நண்பர் இருக்க இல்லையா, அது கூட எனக்கு தெரியாதே? நான் என்னையே நொந்தேன். என்றாலும் என் நெஞ்சு அவள் எனக்காக பிறந்தவள் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது.


"சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ"


கண்களில் இருந்து வெளிப்படுகின்ற ஒளி இரண்டும் சூரிய கதிர்கள் போலும், குளிர்ந்த நிலாவொளி போலும் ஒளிர்கிறதே! தூய்மையான, கருமையான வானம் போலே வட்ட வடிவில் அழகிய கருமையான கண் விழிகளுடன் அவள் அன்ன நடை நடந்து, புது இடம், புது மனிதர்  என்பதால் அச்சம், நாணம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் சாதாரணமாக எமது பணிமனையின் வரவேற்பில் காத்து நின்றாள். எதோ அவர்களுடன் கதைப்பதும், அவர்கள் என் அறையை காட்டுவதும் எனக்கு தெரிந்தது. என்றாலும் ஏதும் தெரியாதது போல், என் கோப்புகளை எடுத்து, அதில் மூழ்கி இருப்பது போல இருந்தேன். என்றாலும் கண் என்னை ஏமாற்றிக்கொண்டே இருந்தது.  


"மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின்
சாயர் கிடைந்து தங்கான் அடையவும்

அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து
நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும்"  


கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று விட்டனவோ?. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறந்தனவோ? என மனதில் என்னை அறியாமலே கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தன. 


வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்,
மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப,
கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட"


மூங்கில் போல் திரண்டிருக்கும் தோளினையும். மணத்தால் வெறியூட்டும், ஐம்பால் ஒப்பனை செய்யப்பட்ட, வளர்ந்த கூந்தலையும்,  மான் பார்வையை வென்ற மருண்ட பார்வையையும் . மயில் போன்ற சாயலையும், நடக்கும்போது ஒளி வீசி இமைக்கும் அணிகலன்களையும், கொடியா, மின்னலா, அணங்கா என்று எண்ணும்படித் தோன்றித் தோன்றாத, கண நேரத்தில் யாதென்றே தெரியாத, அந்த மெல்லிய இடையாளை கண்கள் நாடி சென்றன   
 

என் கண் கோப்புக்குள் இருந்ததால், போலும் வரவேற்பில் சிறிது நேரம் காத்திருக்க சொல்லி இருக்கவேண்டும். அவள் எம் பணிமனைக்கு முன்னால் இருந்த தோப்புக்குள் மேய போய்விட்டாள். நான் வண்டு என்றால் அங்கு போயிருப்பேன். என்ன செய்ய ? என்ன கொடுமை? நானும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் ? இதைத்தான் விதி என்பதோ ? யான் அறியேன் பராபரமே!


என் ஒரு ஊழியர் உங்களுக்கு ஒரு கடிதம் என்று அந்த நேரம் கொண்டுவந்து தந்தார். அது அம்மாவின் கடிதம். ஒவ்வொரு முறையும் யாரோ ஒரு பெண் பற்றி, இப்ப கொஞ்ச நாளாக வரும். மகனே பார்த்து சொல்லு என்று. அத்துடன் ஒரு புலம்பலும் இருக்கும், எனக்கும் வயது போகிறது. இம்முறையானது சரி என்று சொல்லாயோ என்று ஒரு அதட்டலுடன்.  சரி அதை அவள் வரும் மட்டும் பார்ப்போம் என்று அதை திறந்தேன். என்ன ஆச்சரியம்  அதற்குள் இருந்தது அவளின் இரு படங்களே! அவள் குடும்பத்தை பற்றிய சிறு குறிப்புடன், அவள் பல்கலைக்கழகம் முடித்து, இப்ப வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள் என்றும் அதில்   இருந்தது. அது வாசித்து முடிய, அவளும், என் ஒரு ஊழியர் சகிதம் உள்ளே வர சரியாக இருந்தது. நான் விதியை, அதிர்ஷ்டத்தை நம்புபவன் அல்ல. என்றாலும் அவள் வருகையும், அம்மாவின் கடிதமும், அதில் அவளின் படமும் எனோ ஒன்றாக அமைந்து விட்டது.  


அவள் வந்து அமர்ந்ததும், என் ஊழியர் தன வேலைக்கு திரும்பிவிட்டார்.  நான் அமைதியாக அவளிடம் சிலகேள்விகளை கேட்டு, எம் வேலைகளைப் பற்றியும் அதில் அவளின் பங்கு பற்றியும் தெளிவு படுத்தினேன். அவளும் ஆவலாக கேட்டது மட்டும் அல்ல, பல கேள்விகளும் கேட்டு மேல் அதிகமாக அறிந்தாள். அது வரவேற்கத் தக்க ஒரு நடத்தையாக இருந்தது. பிறகு பணிமனையை சுற்றி காட்ட  மற்றும் சக ஊழியர்களை அவளுக்கு அறிமுகப்படுத்த என் அணித்தலைவருடன் அனுப்பவேண்டியதே மிகுதி, என்றாலும் அதற்கு இடையில் சிறு ஓய்வு எடுத்து, அவளுக்கு காப்பி, பிஸ்கட் பகிர்ந்து நானும் அருந்தினேன். 


அந்த இடைவெளியில் அவளின் அம்மா அப்பா பற்றி, முன்னமே அம்மாவின் கடித்ததால் அறிந்து இருந்ததால், எதோ அவர்களை முன்னமே தெரிந்தது போல் சில கேள்விகள் கேட்டேன். அவள் திடுக்கிட்டே விட்டாள். அந்த நேரம் பார்த்து, அம்மாவின் கடிதத்தை எடுத்து, அவளின் படத்தை வெளியே எடுத்தேன். தன் படம் என்று அறிந்துவிட்டாள். நானும் விபரமாக அம்மாவின் கடிதத்தை கூறினேன். அவள் கண்களில் எங்கிருந்தோ ஒரு ஒளி பிரகாசித்தது. கூடவே நாணமும் அவளை கவ்வியதை கண்டேன். அது அவளின் சம்மதத்தின் அறிகுறி. இனி கட்டாயம் அவள் எனக்காக பிறந்தவளே! என் உள்ளம் எதோ ஒரு மகிழ்ச்சியில் திளைத்தது. அவளை பார்த்தேன், அவள் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது !!  


"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]  
 

  • கருத்துக்கள உறவுகள்

க(வி)தை அருமை கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.